சந்திரனின் தகப்பன் காசிப்பிள்ளையர் ஒரு கடை முதலாளி.
ஞாயிற்றுக்கிழமை காசிப்பிள்ளையர் வீட்டிலே நிற்கின்ற நாளென்பதால் காலையிலேயே மொத்த வீடும் அதகளப்படத்தொடங்கிவிடும். கடை வேலையாட்கள் விடிய வெள்ளனயே வந்து தோட்டத்தில் பாத்தி மாற்றிக்கொண்டிருப்பர். ஒன்பது மணிக்கே சங்கரப்பிள்ளை ஆடு அடித்து முதற்பங்கோடு இரத்தத்தையும் வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவார். அழுக்கு உடுப்புகளை எடுத்துப்போகவந்த நாகம்மாக்கிழவி வீட்டு வாசலில் உட்கார்ந்து யார் கேட்கிறார்களோ இல்லையோ, ஊர்த்துலாவாரங்கள் பேசத்தொடங்கிவிடும். அன்னலிங்கத்தார் மூத்த மகளோடு மா இடிப்பதற்காக வந்துவிடுவார். கிணற்றிலே தண்ணி இறைத்து தொட்டிலில் நிரப்புவதற்கென புக்கை வந்துவிடுவார். காயப்போட்ட புழுங்கல் நெல்லை மில்லுக்கு கொண்டுபோகவென ஒருவர் வந்துநிற்பார். தேங்காய் பிடுங்க இன்னொருவர். காசிப்பிள்ளையருக்கு ஸ்பெஷல் கள்ளு கொண்டுவர வேறொருவர். கணக்குப்பிள்ளை இன்னொருபக்கம்.
சந்திரனும் ஞாயிற்றுக்கிழமையானால் காலையிலேயே எழுந்து கால் முகம் கழுவி தயாராக நிற்பான். ஏழரை மணியானவுடனேயே படலைக்கும் வீட்டுக்குமாய் இருப்புக்கொள்ளாமல் ஓடித்திரிவான். காரணம் சண்முகம். சண்முகத்தின் தகப்பன் காசிப்பிள்ளையரின் முடி திருத்துனர். ஒவ்வொரு ஞாயிறும் எட்டரைக்கு சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு அவர் சந்திரனின் வீட்டுக்கு வருவார். மாமரத்தடியில் மேசை நாற்காலி ஒன்றில் காசிப்பிள்ளையர் வெற்று மேலுடன் அமர்ந்து பேப்பர் வாசிக்க, சண்முகத்தின் தந்தையார் காசிப்பிள்ளையரின் தலைமயிர் வெட்டி, முகத்தை கிளீன் ஷேவ் எடுத்து, உடம்பை எண்ணை தேய்த்து மசாஜ் பண்ணுவார். இது கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் இடம்பெறும்.
அந்த இரண்டு மூன்று மணிநேரம்தான் சந்திரனுக்கு சொர்க்கம்.
மேலும் வாசிக்க »