
யாழ்ப்பாணம். திருநெல்வேலிச்சந்தியிலிருந்து கிழக்கே ஆடியபாதம் வீதியால் ஒரு அரைக்கட்டை சென்றதும் இடதுபக்கம் வருவது கலாசாலை வீதி. அந்தவீதியால் உள்ளே ஒன்றிரண்டு கட்டைகள் வளைந்து வளைந்து சென்றால் முத்துத்தம்பி மகா வித்தியாலயம் வரும். அதற்கு இரண்டு வீடுகள் முன்னே இருக்கிறது சைவ வித்தியா விருத்திச் சங்கம்.
இறங்கி உள்ளேபோய்க் கேட்கிறேன்.
“சோ.ப சேர் இருக்கிறாரா?”
“ஊற்றுக்கண்” என்று ஒரு கவிதை இருக்கிறது. நம்மூர்ப்பொங்கல் பற்றியது. நினைவு தெரிந்த நாள்முதலே கொண்டாட்டம் என்றால் அது நமக்குப்பொங்கலையன்றி வேறில்லை. பொங்கல் என்றதும் புக்கைக்கு அடுத்ததாகக் கூடவே ஞாபகத்துக்கு வருவது சீனன்வெடி.
“பொடியள்
வெடி சுடத் தொடங்கிவிடுவார்கள்
வெடிகளில் எத்தனை வகை!”
என்று ஆரம்பித்து ஒவ்வொரு வெடியாகக் கவிதை வரிசைப்படுத்தும்.
நூறு வெடிகளைக்கொண்ட ஆனைமார்க் வட்டப்பெட்டி. மான்மார்க் வெடி. இருபது வெடிகளைக்கொண்ட புத்தகவெடி. சின்னச் சின்ன கொச்சி வெடிகள். கந்தகத்தை நிரப்பி அடிக்கும் கோடாலி வெடி. ஈர்க்கு வானம். இப்படி வரிசையாக வெடிகள் விளக்கப்படும். “எத்தனை கோடி இன்பம்” என்று வெடி வெடிப்பதைக் கவிதை விளிக்கும். வெடிகளின் மீதான ஆர்வம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? ஒரு சீனன் வெடியின் திரி உஸ்ஸ் என்று பற்றும்போதும் ஏன் அடிவயிறு நெருடுகிறது? அது பேப்பர்த்துண்டுகளைத் துப்பியபடி வெடித்துச்சிதறும்போது எங்கிருந்து ஒரு சிறுவனுக்குப் பரவசம் ஏற்படுகிறது? வெடிகளின் சத்தத்தில் அப்படி என்னதான் ஒரு ஈர்ப்பு? விளையாட்டுப்பொருள் அங்காடியில் பொம்மைத்துப்பாக்கிகளுக்கு என்ன வேலை? சிறுவர்களுக்கு அறிமுகமே செய்யக்கூடாத ஒன்றை எப்படி பொம்மைகளாக விற்பனை செய்கிறோம்? ஒவ்வொரு நல்லூர்த் திருவிழாவுக்கும் துவக்குத்தான் வேண்டும் என்று நான் ஏன் அடம்பிடித்து வாங்கினேன்? அப்பாவும் எப்படி வாங்கிக்கொடுத்தார்?
கவிதை நீள்கிறது. அந்தப்பொங்கலுக்கு மாமா மனமிறங்கி ஆனைவெடிப்பெட்டி ஒன்றை வாங்கிக்கொடுக்கிறார். மருமகனுக்கோ அள்ளுகொள்ளையாய்ச் சந்தோசம்.
“ஓட்டைப்பானைக்குள் ஒரு வெடி
தண்ணீர்த்தொட்டிக்குள் ஒரு வெடி
அடிவளவில் நிற்கும்
நாவல் மரப்பொந்துக்குள் ஒரு வெடி
கொளுத்தி வேகமாக உயர வீசி
அந்தரத்தில் வெடிக்க வைக்கும்
அற்புதம் மற்றொண்டு”
காட்சி விரிகிறது. சீனன்வெடியின் திரியைப்பற்றவைத்து ஓங்கி உயரமாக வீசினால் பனைமர உயரத்திலே அது வெடித்து அத்தனையும் பறக்கும். அந்தநாளில் ஹெலி எரிகுண்டு வீசினாலும் அப்படித்தான். வானத்திலேயே அது எரியத்தொடங்கிவிடும். சீனன் வெடி வானத்தில் பறந்து வெடித்தால் குட்டி குட்டி பேப்பர் துகள்கள் எல்லாம் ஊரடங்குக்கால நோட்டிஸ் துண்டுகள்போல வெள்ளிச்சிதறல்களாய்ப் பறக்கும். அதைப்பார்த்த பெரியம்மா சொல்லுகிறார்.
“மாபாவி, தேடியதெல்லாம்
ஆகாசமாகப் போகுதடா!”
அவ்வளவுதான். கவிதை முடிபுற்றது. “சோ. ப”வினுடைய “சுவடெச்சம்” கவிதைத்தொகுப்பிலிருக்கும் கவிதை இது.
மேலும் வாசிக்க »