பம்பலபிட்டிச்சந்தி. அதிலிருந்து வெள்ளவத்தை பக்கம் கொஞ்சம் நடந்தா வஜ்ரா பிள்ளையார் கோயில் வரும். வலு விசேசமான கோயில். அங்கே தென்னம்பாலையில் எல்லாம் பிள்ளையார் எழுந்தருளுவார்.
அந்தக் கோயில் வாசலில் ஒரு சாலையோர ஓவியன் இருக்கிறான். பெயர் மணியன், ஓவியன் மணியன். ஓவியக்கல்லூரியில் உபகாரச்சம்பளத்தில் படித்தவன், பள்ளி மூடப்பட்டதால் டிகிரி இல்லாமல் தெருவுக்கு வந்தவன். இப்போது கோவில் வாயில் வளைவின் சீமெந்து நிலத்தில் அவ்வப்போது படம் வரைகிறான். கலைஞன், செய்வதை நேர்த்தியா செய்வான். அவன் பக்கத்திலேயே ஒரு டப்பாவும் கொஞ்சம் சில்லறையும் இருக்கும். மணியன் ஒண்டும் கதைக்க மாட்டான். அமைதியானவன். எப்பவாவது ஒன்றிரண்டு சனம் அவன் வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்தோ அல்லது பாவமெண்டொ சில்லறைகளைப் போட்டிட்டுப் போவினம். அவன் தாங்க்ஸ் கூட சொல்லமாட்டான். அவனுக்கு பக்கத்தில ஒன்றிரண்டு சில்லறைப் பிச்சைக்காரரும் இருப்பினம். அவையள் ஒண்டும் செய்யமாட்டினம். காசு வந்தா ஓகே. இல்லாட்டியும் ஓகே. ஆனா அவங்களுக்கு மணியனை விடக் கூட சில்லறை கிடைக்கும். மணியன் அலட்டிக்கொள்ளமாட்டான். அவன் ஒரு கடின உழைப்பாளி. ஐ மீன் "ஹார்ட் வர்க்கர்".