Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 494

கந்தசாமியும் கலக்சியும் - ரோசி கஜன்

$
0
0
மனைவி மகன்களை கனடா அனுப்பிவிட்டு யாழில் தனிமையில் வாழும் கந்தசாமி எனும் வயோதிபர்!

ஒரு சில மணித்தியாலங்களில், பூமி பஸ்பமாகப் போவது தெரியாது நடைபெறும் நிகழ்வுகள்!

இப்படி, சுவாரஸ்சியமாக ஆரம்பிக்கின்றது ‘ஜேகே அவர்களின் கந்த சாமியும் கலக்சியும்’.

பூமியின் கதை அவ்வளவுதானா என்ற ஏக்கம் மறைய முன்னரே கமகம வாசத்தோடு(என்ன சாப்பாடா என்று கேட்க நினைப்பவர்கள் கதையை வாசித்து அனுபவிக்க வேண்டுமாக்கும்.) பிரபஞ்ச வெளியில் கைபிடித்து அழைத்துச் செல்கின்றது கதை.

சுமந்திரன் கந்தசாமியை அழைத்துக்கொண்டு எப்படிக் களவாக மகிந்தர்களின் ‘காற்று’க்குள் புகுந்தார்களோ, அப்படியே நானும் கைகாவலாக ஒரு துவாயை எடுத்துக்கொண்டு பயணபட்டுவிட்டு வந்தேன் .

பயணத்தில் சந்தித்தவை சில இடங்களில் புரியாத நிகழ்வுகள்.(நம்ம கொம்புயூட்டர் ஒழுங்காக அப்டேட் பண்ணப்படாதது) ‘ஆ!’ என்று பார்க்க மட்டும் செய்தேன். ஆனாலும் மிகவும் சுவாரஸ்சியம் குறையாது இருந்தது.

கதைக்குள் செல்ல முன்னரே, ‘இதைச் சொல்லியே ஆகவேண்டும்’ என்று ஆரம்பித்து, முழுக்க முழுக்க கற்பனையே என்று கண்டிக் கதிர்காமரில் கதாசிரியர் ஆணையிட்டிருந்தாலும் பூமி அழித்தல் படலம் கண்முன்னால் விரிகையில், என மனம், நிஜங்களோடு ஒப்பிட முனைந்ததையும் அடுத்தடுத்த படலங்களிலும் அப்படியே ஒப்பிட்டுப் பார்த்ததையும் மறுக்க முடியாது.

பூமியின் அறிமுகம்; மனித உயிரினத்தை எடை போட்டது; இருவகைப் புத்திசாலிகளின் விளக்கம் என்று ஆரம்பித்து லூசுக் கூட்டத்தில் ஒருவனாக கந்தசாமியை அறிமுகப்படுத்தி, அவரோடு சேர்ந்து எங்களையும் பிரபஞ்சத்தை சுற்றி வரவைத்து...

கந்தசாமி, பாடசாலையில் பிரதம விருந்தினர் உரைக்காக ஒத்திகை தொடங்க முகத்தில் பலமாக ஒட்டிக் கொண்ட முறுவல், அப்பப்போ பெரும் நகைப்பாகி, திடீரென்று அருகில் கரும்பொருள்வாசிகளின் நடமாட்டம் உணர்ந்து அவர்களுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லி...

‘கணனி பற்றி உனக்கு அவ்வளவு தெரியாது என்ற கவலையே உனக்கு வேண்டாம். ஏனென்றால் நீயே ஒரு கணினியாக்கும்.’ என்று என்னை நானே தட்டிக் கொள்ளவும் வைத்து...

மைதிலிக்காக மனம் நொந்து, ‘காலைச் சாப்பாடு இப்படி சாப்பிட்டால் எப்படிப் படிப்பாய்?’ என்று ஆதங்கப்பட்டு, கண்ணிமைக்கும் பொழுதில் அவளோடு சேர்ந்து மொத்தமும் காணாமல் போனதும், என்ன காரணத்துக்காக அவள் வந்தாள், எதைச் சொல்ல முயன்றாள் என்று குழம்பி, கடைசியில் அவள் மீண்டும் வர ‘அடடா’ என்று இருந்தது .

“பிள்ள கொஞ்சம் பொறுமையாக கேள்வியைக் கண்டு பிடித்திருந்தால் பூமி இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்குமோ?” என்றும் எண்ண வைத்தது.

நம்ம சோதியரும் குமரனும் மிக்ஸரும்... ‘ஹா..ஹா.., ‘சபாஷ்’ போட வைத்தாலும் அதுவெல்லாம் நாம் கால்பதிக்க வேண்டிய இடமாக்கும் என்ற எண்ணமும் வந்தது. வருங்கால நிஜமாகட்டும்.

சுமந்திரன் வரவில் கற்பனை பறக்க ஆயத்தமானாலும் பறக்கவே செய்தாலும் ஏனோ நிஜத்தின் தொந்தரவு இருந்து கொண்டேதான் இருந்தது.

இதுவரை நான் வாசித்து, என் கருத்துகளோடு கதை முன்னோட்டம் சொன்ன கதைகள் அனைத்துமே கணனியில் வாசித்தவை.

அவற்றில் சிலதுகள் புத்தகமாக வாசிக்கக்கிடைக்கவில்லையே , எப்படியும் வாங்கி இன்னொரு முறை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியும் இருக்கின்றது.

‘கந்தசாமியும் கலக்சியும்’ மிகுந்த ஆவலோடு காத்திருந்து, புத்தகம் கைக்கு வந்ததும் அத்தனை வேலைகளையும் ஓரம் தள்ளிவிட்டு வாசித்து முடித்த கதை.

வாசிக்க விரும்பியவர்கள் இணையத்தில் ‘படலை’ என்கின்ற ஆசிரியரின் ப்ளாக்கில் புத்தகம் வாங்கலாம்.

அதோடு, இரசித்து வாசிக்க பல சிறுகதைகளும் அங்கே கிடைக்கும்.

Viewing all articles
Browse latest Browse all 494


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>