“மரங்கள் குழுக்களாகவே வாழ்கின்றன. மனிதர்களைப்போல. ஒரு மரத்தை அதன் குழுவிலிருந்து பிரித்து வேறொரு இடத்தில் கொண்டுபோய் நடுவது என்பது ஒரு மனிதரை தன்னுடைய இனக்குழுவிலிருந்து பிரித்து இன்னொரு நாட்டுக்குக் கொண்டுசென்று வளர்ப்பதுபோன்றது. மரங்கள் அப்போது அகதிகளாகின்றன.”
“My People’s Dreaming” என்றொரு புத்தகத்தை சில மாதங்களுக்கு முன்னர் மனைவி வாசித்துக்கொண்டிருந்தார். அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் வாழ்வு எப்படி பூமியோடு பின்னிப்பிணைந்து கிடக்கிறது என்பதைப் படங்களோடு விளக்கும் புத்தகம் இது. ஒருநாள் அதிகாலைத் தேநீரோடு எதேச்சையாக அதைக் கையிலெடுத்தேன்.