அண்மைக்கால பொங்கல் நிகழ்வுகளில் அவதானித்த சில விசயங்கள்.
பொங்கல் அரசியலாக்கப்பட்டுவருகிறது. இது தமிழர்களுக்கான நிகழ்வு, இது ஒரு மத நிகழ்வு அல்ல என்ற வாதம் வலியுறுத்தப்படுகிறது. எனக்கு மிகவும் நெருக்கமான பாடும்மீன் சிறிஸ்கந்தராசா அண்ணா இதுபற்றி விரிவாக எழுதி பொங்கலுக்கு மத அடையாளம் சூட்டுவதை கடுமையாக எதிர்த்திருந்தார். எனக்கு இந்த விசயத்தில் சின்னக் கருத்துவேறுபாடு உண்டு. பொங்கல் ஒரு மண் சார்ந்த நிகழ்வு. அது ஒரு மதத்தின் போதனைகளிலிருந்து உருவானதல்ல. வேதங்களோ விவிலியமோ பொங்கலை நமக்கு அறிமுகம் செய்யவில்லை. உண்மைதான். மாற்றுக்கருத்து இல்லை. நாம் உழுதுண்டு வாழ்ந்த மண்ணில் இயற்கைக்கு உழவரும் மற்றவரும் நன்றி செலுத்துமுகமாகக் கொண்டாடப்படும் நிகழ்வு இது. அந்த நன்றி செலுத்தும் நிகழ்வு அவரவர் வாழ்வியலை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கும். இயற்கையின் இருப்பான சூரியனுக்கு நன்றி செலுத்தி அதற்குப் புற்கை படைக்கும் புள்ளியிலேயே இயற்கையை இறைக்கு நாம் ஒப்பிட ஆரம்பித்துவிடுகிறோம். அந்த நிலையில் இயற்கையோடு சேர்த்து நாம் நம்பும் ஏனைய இறைகளுக்கும் துதி பாடுவதில் தவறு இல்லை என்றே படுகிறது. அது வீட்டின் கொல்லையில் அமைந்திருக்கும் அக்குச்சி அம்மனாக இருக்கலாம். சுடலைமாடனாக இருக்கலாம். வீரமாகாளியாக இருக்கலாம். சிவனாக இருக்கலாம். கன்னி மேரியாக இருக்கலாம். இயேசுபிரானாகவும் இருக்கலாம். திருமணங்கள்போல. பண்டைத்தமிழரின் திருமண நிகழ்வுகள் மத அனுட்டானங்களோடு அமைந்திருக்காது அல்லவா. ஆனால் காலப்போக்கில் மத நம்பிக்கைகள் சார்ந்து அந்த நிகழ்வு மருவிவிட்டது. பின்னர் சுயமரியாதைத் திருமணங்கள் உருவாகின. காலனித்துவத்தின்பின்னர் திருமணத்தைப் பதிவுசெய்யும் நிகழ்வே ஒரு கொண்டாட்டமாக மாறிவிட்டது. இன்றைக்கு நம் சமூகத்தில் எல்லாவிதமான திருமண நிகழ்வுகளுக்கும் இடமுண்டு. ஒரு சமூகத்தின் நிகழ்வு காலப்போக்கில் மதம் சார்ந்தோ சூழ்நிலைகள்சார்ந்தோ எப்படி மாறுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். பொங்கலும் அப்படித்தான்.