இது நடந்தது 93ம் ஆண்டு.
"வைத்தியகலாநிதி சிவகுமாருக்கு மகரயாழ் விருது" என்று உதயனில் தலைப்புச்செய்தி போடுகிறார்கள். யாழ்ப்பாணக் கம்பன் கழகம் “மகரயாழ்” விருது பற்றி அறிவித்தபின்னர், தொடர்ச்சியாக பத்திரிகைகளில் கட்டுரைகள், விண்ணப்பங்கள் என்று வெளிவந்து, இந்த விருது யாருக்கு கிடைக்கப்போகிறது? என்கின்ற ஒருவித எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இப்படி இருந்த சமயத்தில்தான் சிவகுமாருக்கு விருது கிடைத்த செய்தி வருகிறது. அதுவும் முதல் பக்கத்து தலைப்புச்செய்தி. செய்தியை வாசித்த அத்தனை பேருக்கும் திருப்தியும் பெருமிதமும். தகுதியானவருக்கு கிடைத்ததால் திருப்தி. “அட எங்கட ஆளுக்கு குடுத்திருக்கிறாங்கள்” என்பதால் பெருமிதம். டொக்டர் சிவகுமார் எல்லோருக்கும் “எங்கட ஆளாக” இருந்தார்.