முற்றத்தில் மூன்று பரப்பு நிலத்துக்கு நிழல் பரப்பி நிற்கும் ஒரு மிகப்பிரமாண்டமான மாமரம். அதிலே இரண்டு ஊஞ்சல்கள். மரத்தடியில் “ட” வடிவ பங்கர். ஒன்றிரண்டு கதிரைகள். கயிற்றுக்கட்டில். பேப்பர் படிக்கும் இரண்டு முதியவர்கள். மணல் அளையும் சிறுவர்கள். ஒருபுறம் செவ்வரத்தைகள். ஜாம்பழ மரம். தூர்ந்த மணற்கிணறு ஒன்று. ஒரு வைக்கோல் கும்பி. தனியாய் தரித்து நிற்கும் டிரக்டர் பெட்டி. மாட்டுவண்டில். வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு காளை மாடுகள். குறுக்கும் நெடுக்குமாக கேறிக்கொண்டிருக்கும் கோழிக்கூட்டம். பிறவுன் கலரில் ராமு.
வீடு சிறியது. ஒரு படுக்கையறை. ஒரு குட்டி ஹோல். UNHCR தறப்பாள்போட்டு பெரிதாக்கப்பட்ட திண்ணை. தனியாகக் குசினிக்கு புகைக்கூண்டோடு ஒரு சின்னக் கொட்டில். அவ்வளவும்தான் வீடு.
சிவிக் சென்டர் என்பது அறுபதுகளில் படித்த வாலிபர் திட்டத்தில் இளைஞர்களுக்கு வீடும் காணியும் கொடுத்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கிராமம். படித்த இளைஞர்களை கிராமங்களுக்கு வரவழைத்து விவசாயத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. சிவிக்சென்டரின் குடும்பங்கள் அத்தனையுமே விவசாயம் செய்பவை. எல்லோருமே இரு போகமும் வயல் விதைப்பார்கள். அது பள்ளிக்கூட அதிபராக இருந்தாலென்ன, மணிக்கூடு திருத்துபவராகவிருந்தாலென்ன, வைத்தியர், சங்கக்கடை முதலாளி, விதானையார், தபால்காரர் என்று யாராக இருந்தாலும் விதைப்பார்கள். பலரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாகவிருந்தது. நிறைய யாழ்ப்பாணத்துவாசிகளும் அந்தத்திட்டத்தில் வீடுகளைப்பெற்று பிறருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார்கள்.
மலையகத்தமிழர்களும் அந்தக்கிராமத்தில் இருக்கிறார்கள். சிங்களவர்கள்கூட. அனேகமானோர் வயல்களில் தினக்கூலி செய்பவர்கள். மாதச்சம்பளத்துக்கு வேலை செய்பவர்களுமுண்டு. ஜெயமணி அண்ணா அந்தரகம். மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபா சம்பளம். மூன்று வேளையும் முதலாளியின் வீட்டிலேயே சாப்பாடு. கூடவே தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்புக்கு புதுச்சாரம், புதுச்சேர்ட் கிடைக்கும். அவர்களும் ஒரு ஏக்கரோ இரண்டு ஏக்கரோ குத்தகைக்காணி வைத்திருப்பார்கள். முதலாளியின் மிஷின், ஆளணிகளையே பயன்படுத்தி தம்முடைய வயலிலும் விதைத்து அறுவடை செய்வார்கள்.
நாம் இடம்பெயர்ந்து போனபோது அந்த வீட்டிலே நாற்பது பேர்கள் தங்கியிருந்தார்கள். நம்மோடு சேர்த்து நாற்பத்துமூன்று. மறுநாள் அது நாற்பத்தைந்தானது. வீட்டுக்கு வருபவரெல்லாம் வீட்டிலேயே தங்கிவிடுவதாலோ என்னவோ, யார் விருந்தினர், யாரைப்பார்த்து குரைக்கவேண்டும் என்கின்ற குழப்பத்தில், ராமுகூட வாலையாட்டிக்கொண்டே நம்மை வரவேற்றது. கிட்டத்தட்ட சிவிக் சென்டர் வீடுகள் அத்தனையிலும் அதுதான் அப்போதைய நிலைமை.
மேலும் வாசிக்க »