சுண்டுக்குளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி இருக்கிறது என்று பொல்லர் வாத்தி சொல்லாமல் விட்டிருந்தால் அன்றைக்கு நான் பீட்டோ மண்டபப்பக்கமே தலை வைத்து படுத்திருக்கமாட்டேன். 1998 மே மாசம், மூன்று நாட்களாய் சென்ஜோன்ஸ் கல்லூரி தன்னுடைய 175வது ஆண்டு நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருந்தது. அது இரண்டாம் நாள். முதல் நாள் சேர்ச்சில் சேர்விஸ், 25வருடங்கள் சேவை செய்தவர்களுக்கு பாராட்டு என்று மேடையில் நடை பெற்றுக்கொண்டிருக்க நாங்கள் பின் வரிசையில் இருந்தபடியே துண்டுச்சீட்டில் வார இறுதியில் எந்த சினிமாவில் என்ன படம், அடுத்த தேவாவின் அல்பம் எப்ப ரிலீஸ் ஆகுது? போன்ற முக்கிய விஷயங்களை பரிமாறிக்கொண்டிருந்தோம். செம போர். “நாளைக்கு ஸ்கூல் காய்ச்சல் அடிக்கப்போறன் சேர்” என்று கண்டீனில் காஷுவலாக சொன்னபோது தான் பொல்லர் சொன்னார் “ஐ நோ ஜெயக்குமரன், நீர் வந்து ..படிப்பில ஆர்வம் .. அடுத்த வருஷம் ஏஎல் எல்லாம் ஓகே தான்.. ஆனா நாளைக்கு சுண்டுக்குளி கேர்ள்ஸிண்ட டான்ஸ் ப்ரோகிராம் இருக்கு, இந்த வயசில இதுகளை மிஸ் பண்ணீடாதீம்”.
வழமையாக கசங்கிய சேர்ட்டை கவனிக்காமல் போட்டபடி, கிடைக்கும் பாட்டாவை மாட்டிக்கொண்டு ஜம் என்று ஸ்கூல் போகும் கேஸ் நான். சுண்டுக்குளி பெட்டைகளின் ப்ரோகிராம் என்றதும் அடுத்தநாள் நீட்டாக அயர்ன் பண்ணி, சேர்ட்டை உள்ளே டக் பண்ணி, கொஞ்சம் கூட இழுத்துவிடாமல் அணிந்தேன். சொக்ஸை தேடி எடுத்து, மூக்கை பொத்திக்கொண்டு அணிந்து சப்பாத்தை மாட்டினால் கறுப்பு சப்பாத்து பிரவுன் கலரில் இருந்தது. பொரித்த எண்ணெயில் பேப்பர் தொட்டு சப்பாத்தை ஷைன் ஆக்கி, காதலுக்கு மரியாதை விஜய் அடுத்தநாள் சென்ஜோன்ஸ் போனார் என்று வையுங்களேன். அன்றைக்கு மாணவிகள் ஆடிய ஆட்டமும், மேடையில் இருந்த ஆயிரத்து ஐநூறு பேரில் யாரோ ஒருவராக விஜய் தூரத்தில் இருந்தபடியே, நடுவில் ஆடிய பெண்ணை பார்த்து “நீ காற்று நான் மரம்” என்று மனதுக்குள் பாடியதும் இந்த பதிவுக்கு தேவையே இல்லாதவை என்பதால் விஷயத்துக்கு போவோம்.
அன்றைக்கு காலையில் முதல் வகுப்பு பாடம் நடந்திருக்கவேண்டும். முடிய எல்லோரையும் மண்டபத்துக்கு அழைக்கிறார்கள். சயன்ஸ் புளொக் வழியாக நாங்கள் பீட்டோ மண்டபத்து பல்கணி படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறோம். ஆளாளுக்கு குறு குறு என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். மெதுவாக தான் வரிசை மூவ் பண்ணுகிறது. நான் டெனிசனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். அப்போது தான் அந்த தம்புரா நாதத்துடன் கீழ் ஸ்தாயியில் ஒரு ஆலாப்பொன்று சடக்கென்று மொத்த மண்டபத்தையே அடித்துப்போட்டது. ஒரு முப்பது செக்கன் ஆலாப். முடிய ஷடிடிங் சட் சட் என்று மிருதங்கம் அதிர “பூ மாலை வாங்கி வந்தான். பூக்கள் இல்லையே” என்று கம்பீரமாக அதே சாரீரத்துடன் ஒரு குரல். அந்த கணத்தை நான் ஆயுள் பூராக மறக்கமாட்டேன். “என்ன குரலடா இது” என்று அலறிக்கொண்டே வரிசையை தள்ளிக்கொண்டே பல்கணிக்கு ஓடி மேடையை பார்த்தால் “செவியில்லை இங்கொரு இசை எதற்கு?, விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு?” என்று நிமிர்ந்து இருந்தபடி சும்மா கர்வத்துடன் பேஸ் அதிர பாடிக்கொண்டிருந்தான் அந்த கந்தர்வ குரலோன் … அகிலன்.
அது கிட்டத்தட்ட ஒரு மணி நேர நிகழ்ச்சி. கீர்த்தனை, வர்ணம் , சுரம், ராகாலாபனை, தில்லானா என்று கர்னாடக சங்கீதத்தின் அத்தனை சங்கதிகளும் சரியாக அன்றைக்கு விழுந்தது. கேட்க கேட்க சபையில் ஒருவித பரவசம். அமைதி. அந்த உணர்வுக்கு சரியான சொல் சாந்தம் என்று நினைக்கிறேன். எனக்கு இசை ஒருவித கடவுள் போல. புரியாது. ஆனால் ரசிப்பேன். உயிரை கொடுத்து ரசிப்பேன். அதில் சமரசங்கள், பாசாங்குகள் எதற்கும் இடமில்லை. அன்றைக்கு அகிலன் பாடியது என்னை பொறுத்தவரையில் ஒரு Life of Pi moment. எனக்குள் இருந்த இசை ரசிகனை தூண்டி சுடர் மூட்டிவித்த நிகழ்ச்சி அது.
இத்தனைக்கும் அகிலன் பாடல்களை எட்டு வருஷமாக கேட்டு வந்தவன் நான். புதன் கிழமைகளில் “நீள நினைந்தடியேன், உனை நித்தலும் கைதொழுவேன்” என்று சுந்தரர் பாட்டு படுவான். “இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்” என்று தேவாரங்களில் சின்ன வயதிலேயே ஒருவித பற்றை ஏற்படுத்தியவன். அந்த வயதில் நான் எந்த கோயிலிலும் போய் முணுமுணுக்கும் தேவாரம் “மீளா அடிமை”. அதை கூட அகிலன் பாணியில் “வாளாங்கிருப்பீர் திருவாரூரில்” வரும்போது குரலை உடையுமாறு இமிடேட் பண்ணுவேன். ஆனாலும் அதே அகிலன் அன்றைக்கு அந்த நிகழ்ச்சியில் ஒரு முழு கச்சேரி செய்வான். அப்படி ஆட்கொள்வான் என்பது அது வரைக்கும் தெரிந்திருக்கவில்லை. சுஜாதா ஒரு முறை ஷேக்ஸ்பியரை மேற்கோள் காட்டியிருப்பார்.
“There is a tide in the affairs of men which taken at the flood leads on to fortune”. இப்போது புரிகிறது.
கொஞ்சநாள் கழித்து ஆசிரியர் தினம் வருகிறது. அதற்கும் அகிலனின் கச்சேரி என்று கேள்விப்பட்டு நல்லபிள்ளை போல முதலிலேயே போய் மண்டபத்தில் அமர்ந்துவிட்டேன். அன்றைக்கு வயலின் வாசித்தது ஜெயராமன். கலைவாணியே எல்லாம் அகிலன் பாடி, தில்லானா ஆரம்பிக்க தான் மிருதங்கத்தை கவனித்தேன். இடது பக்கம் இருந்து மெல்லிய கறுத்த உருவம் ஒன்று கிட்டத்தட்ட ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. நாதங்கள் எல்லாமே நங் நங் என்று விழுந்துகொண்டிருந்தன. எங்கே ப்ரேக் விடவேண்டும். எங்கே டேக் ஓவர் பண்ணவேண்டும் என்று புரிந்து, வாய்ப்பாட்டின் ஆளுமையை ஒரு படி உயர்த்தி, வாய்ப்பாட்டு அவ்வப்போது தளருகின்ற சமயங்களில் தன் வாசிப்பால் அதை கட்டுண்டு யார் இவன்? எங்கள் பாடசாலை இல்லையே என்று கீர்த்தியிடம் கேட்டேன். டேய் இவன் தாண்டா எங்கட மதராஸ் மயிலின்ட மகன். ஜஃப்னா ஹிந்து மச்சான். பெயர் கஜன் என்றான்… “That was a good interview”.
அன்றைக்கு என்னால் சரியாக தூங்க முடியவில்லை என்று சொன்னால் அதிகபிரசிங்கித்தனமாக இருக்கும். அதிகாலை ஒரு மணிவரை “பூ மாலை வாங்கிவந்தான்” பாட்டை மீண்டும் மீண்டும் கசட்டில் தேய தேய போட்டு கேட்டவாறே சார்புவேகம் பாஸ்ட்பேப்பர்ஸ் செய்துகொண்டிருந்தேன். சின்னவயதில் அகிலன் குரல் அடிக்கடி பிசிறும். ஆனால் இப்போது பத்தொன்பது வயதில் குரல் உடைந்து, அவனுக்கே உரிய பேஸ் உருவாகி, a legend in the making என்று அடுத்தநாள் போய் சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன். அவனை தேடி அவன் வகுப்பு அண்மையில் கூட போயிருந்தேன். உள்ளூர கொஞ்சம் தயக்கமும். அகலனுக்கென்று ஒரு வித்தைக்கர்வம் இருக்கிறது. அது தன் இசையை புரிந்துகொள்ளாதவர்களால் வரக்கூடிய சங்கடங்களை தவிர்க்க அவன் போட்டுக்கொண்ட வேலி என்று அப்போது எனக்கு தெரியாது. ஆக ஒரு பயம். ஏதாவது சொல்லி “உனக்கென்ன இசையை பற்றி தெரியும்?” என்று அவன் கேட்டுவிட்டால்? என்ற பயம். திரும்பிவிட்டேன். ஆனால் அவனோடு அது பற்றி பேசும் சந்தர்ப்பம் ஒரு வருடம் கழித்து வந்தது.
ஏஎல் முடிந்து இருவருமே மொறட்டுவவுக்கு தெரிவாகியிருந்தோம். அதை செலிபரேட் பண்ண வீட்டில் ஒரு சின்ன பார்ட்டி. பார்ட்டி என்றால் வேறொன்றுமில்லை. அத்தனை நண்பர்களையும் அழைத்து ரோல்ஸ், பற்றிஸ், கேக் கொடுப்பது. வாடகைக்கு டெக் எடுத்து சினிமா பாடல்கள் போடுவது. அந்த காலத்து சினிமா காசட்களில் “சந்தா ஓ சந்தா, மின்னல் ஒரு கோடி” போன்ற சிம்ரன் பாடல்களும் “தனியே தனியே மண்ணில், தத்தோம் தகதிமி தோம்” போன்ற சந்திரன் மாஸ்டர் ரேஞ் பாடல்களும் இருக்கும். கீர்த்தி அந்த பார்ட்டியை கலாய்த்து இங்கேஎழுதி இருக்கிறான். அன்றைக்கு அகிலனும் வந்திருந்தான். அகிலன் வந்திருக்கிறான் என்பது ஒரு செலிபிரிட்டி எங்கள் வீட்டுக்கு வந்திருப்பது போல. அக்காவின் நண்பிகள் எல்லோரும் என்னை அழைத்து “பாடச்சொல்லுடா” என்றார்கள். எனக்கு தயக்கம். கர்னாடக சங்கீதம் பாடுபவனை போய் இப்படி ஒரு பார்ட்டியிலா பாட சொல்லுவது என்று யோசித்தேன். இந்த இடத்தில் அவன் நண்பன். வித்துவான் இல்லை என்றார்கள். இருந்தாலும் சந்தேகத்துடனேயே போய் “ஒரே ஒரு பாட்டு ப்ளீஸ்” என்றேன். “நான் கேட்கும் பதில் இன்று வாராதா? நான் தூங்க மடி ஒன்று தாராதா?” என்று அன்றைக்கு அவன் பாடிய தாலாட்ட வருவாளா இன்னும் ஞாபகம் இருக்கிறது.
அதே நாட்களில் ஒருமுறை குமாரசாமி வீதியால் போய்க்கொண்டிருக்கும்போது முன்னாலே சைக்கிளில் வந்துகொண்டிருந்தான் அவன். நூறு மீட்டர் தூரத்திலேயே தெரிந்துவிட்டது அவன்தான் என்று. அவன் படங்கள் வராத உதயனின் நடுப்பக்கங்கள் அப்போது குறைவு. முகம் நன்றாக ஞாபகம் இருந்தது. ஆனால் அவனுக்கு என்னை தெரிய வாய்ப்பில்லை. என் படம் என் வீட்டு அல்பத்தில் கூட எங்காவது மூலையில் தான் கிடக்கும். சிரிப்போமா விடுவோமா என்று யோசித்துக்கொண்டிருந்த போது அவனே என்னை பார்த்து சிரித்தான். அது தான் கஜன். A man with no ego. என் அதிர்ஷ்டம் (அஜீ அதை துரதிஷ்டம் என்பான்), நான், அகிலன் கஜன் என மூவருமே மொறட்டுவ பல்கலைக்கழகத்துக்கு ஒரே ஆண்டில் தெரிவானது. முதல் வருஷம் ஒரு லெக்சர் முடியும்போது கஜனே நெருங்கி வந்து “நான் கஜன்” என்றான். “தெரியுமே அகிலனுக்கு வாசிச்சனிங்கள்” என்றேன். “உனக்கும் மியூசிக் பிடிக்குமாமே .. அகிலனோட சேர்ந்து ஹொஸ்டல் ரூம் போடுவோமா?’ என்றான். கரும்பு தின்ன கூலியா. அன்றைக்கு ஆரம்பித்த நட்பு அது.
யோசித்துப்பார்க்கிறேன். இன்றைக்கு ஜேகேக்கு தெரிந்து கஜனுக்கு தெரியாத விஷயம் என்று ஒன்றில்லை. படலையின் ஒவ்வொரு பதிவுகளையும் ஈவு இரக்கமில்லாமல் விமர்சிப்பான். “இதை எழுது இதை எழுதாதே” என்பான். ஒரு முறை “குவாண்டம் பிஸிக்ஸ் பற்றி நிறைய எழுத ஆசையாக இருக்கு, எழுதினா கிளிக் ஆகுமா?” என்று கேட்டேன். “வாசிக்க வருபவனுக்கு குவாண்டம் தெரியவேண்டியதில்லை. ஆனால் வாசித்து முடித்தபின்னர் அது தெரிந்திருக்கும்படி நீ எழுதவேண்டும்” என்றான். “இசை பற்றி எழுதும்போது ராகம் பற்றி அதிகம் எழுதாதே, அதற்கு உனக்கு தகுதி இல்லை” என்று குட்டுவான். என் வாழ்க்கையில் நடந்த அத்தனை … அத்தனை அடிகளும் தெரிந்த ஒரே நண்பன் அவன். எனக்கு ஒன்றென்றால் ஓடிவந்து நிற்பான் என்ற நம்பிக்கையை கொடுப்பவன். அன்றைக்கு சந்திக்கும்போது அது தெரியவில்லை.
கொழும்பு கம்பன் கழகம் அந்த காலங்களில் ஆண்டுதோறும் இசை வேள்வி நடத்தும். சேஷகோபாலன், நித்யஸ்ரீ போன்றவர்களோடு அகிலனின் கச்சேரியும் நடக்கும். அது கிட்டத்தட்ட திருவிழா போல எமக்கு. அகிலன் கஜன் மேடை என்றால் அம்மா என்னையும் கூட்டிப்போடா என்பார். ராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் போய் உட்கார்ந்தால், “வக்ரதுண்ட மஹாகாய” என்று ஆரம்பிக்கும் ஒரு கடவுள் வாழ்த்து என்று நினைக்கிறேன். பிறகு ஒரு கீர்த்தனை .. இன்னொரு கீர்த்தனை, இடையில் ஒரு வர்ணம் என்று தண்ணீர் குடித்துவிட்டு ராகம் ஒன்று இழுப்பான். இடையிடையே மெய்மறந்து ரசித்துக்கொண்டிருக்கும் கூட்டத்தை பார்த்து தெரிந்தவர்கள் இருந்தால் சிரித்தும் வைப்பான். பக்கத்தில் கஜன் வாசிக்கும் போது தலை திரும்பி சபையை பார்த்துக்கொண்டிருக்கும். ஆனால் கண்ணை கவனித்தால் புரியும். அதில் கணக்கு மட்டுமே தெரியும். கர்னாடக சங்கீதம் ஒரு வித கணிதம் தான். அதை கணக்கில் கலக்கும் இரண்டு இளைஞர்கள் மேடையில் கொடுக்கும் போது, இன்னமும் சிக்கலாக்கி, பின்னி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கல் எடுப்பார்கள். அந்த சிக்கலுக்குள் சபையையும் கூட்டிப்போவார்கள். அதற்கு ராகமோ, சுரக்கட்டுகளோ எமக்கு தெரிந்திருக்க தேவையில்லை. அவர்களை நம்பி எங்களை ஒப்படைத்துவிட்டால் அந்த அனுபவம் எங்களுக்கும் கிடைக்கும். அது அவர்களின் எல்லா மேடையிலும் எனக்கு கிடைத்தது. கஜனுக்கும் அகிலனுக்குமிடையில் ஒரு கெமிஸ்ட்ரி வேறு இருந்தது. பச்சக் என்று ஒரு உச்ச நோட்டை பிடித்து வைத்து அதில் ஏறி உட்கார்ந்து இழுத்துவிட்டு இனி இறங்க போகிறான் என்று நாங்கள் நினைக்கும்போது, இன்னொரு நோட்டு மேலே பிடிக்க முயற்சிப்பான் அகிலன். “காதலி என்ன சொல்ல போகிறாளோ?” என்று கதிகலங்கும் காதலன் உணர்வு அப்போது கேட்பவருக்கு இருக்கும். Those places are very slippery. கொஞ்சம் பிசகினால் சுருதி போய், இவ்வளவு தூரம் மேலே போனதுக்கு அர்த்தம் இல்லாது போய்விடும். அகிலன் துணிந்து ஏறுவான். அந்த நேரம் கஜன் கண்கள் மூக்கு எல்லாமே கூர்மையடையும். “சிங்கன் எங்கேயாவது சறுக்குகிறானா?” என்று தேடும் நக்கீரன் கூர்மை. இரண்டு வகை சிரிப்பு கஜனிடம் இருக்கிறது. தலையை மேலும் கீழும் ஆட்டி சிரித்தால், அது கிளீன் டேக் ஒப். சின்னதாய் சிரித்து தலையை சலனமாக ஆட்டினால் சறுக்கிவிட்டது என்று அர்த்தம். எனக்கு எல்லாமே கடவுள் நிலை தான். ஆனால் அவன் ரியாக்ஷனை பார்த்து ஓகோ என்பேன். I am missing those moments guys. Seriously.
பல்கலைக்கழகத்தில் அகிலன் கஜன் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காது. தமிழ் விழாக்கள் என்றில்லை. சிங்களவர்களுடன் சேர்ந்து செய்யும் நிகழ்சிகளிலும் கூட அரேஞ்சர் கஜன் தான். இசை பற்றிய முழுமையான ஒரு பார்வை உள்ளவன். எனக்கு பெயர் தெரிந்த அனேகமான தாள வாத்தியங்களை நேர்த்தியாக வாசிக்கத்தெரிந்தவன். மிருதங்கம், கடம், தபேலா, முகர்சிங், ஒக்டோபாட், டோலக், கொங்கோட் டிரம், ட்ரம்ஸ் என்று அவன் பாட்டுக்கு கிடைத்த கருவியெல்லாம் வாசிப்பான். மற்றவர்களை வாசிக்க வைப்பான். மெல்லிசை என்று வந்துவிட்டால் அகிலன் எடுத்து பாடுவது அப்போதெல்லாம் ஹரிகரன் பாடல்கள் தான். “நிலவுப்பாட்டு”, “உனை நான்”, “ஆத்தொரத்தில”, “என் மன வானில்” என்று அவன் பாடல்கள் பிர்காக்களுக்கும் சங்கதிகளுக்கும் ஸ்கோப் உள்ள பாடல்களாகவே இருக்கும். ரிகர்சல் என்று எல்லாம் வரமாட்டான். நேரே வந்து ஸ்ட்ரைட்டாக பாடி எல்லோரையும் மயக்கி விட்டு போய்விடுவான். அவர்களோடு ஹொஸ்டல் ரூமில் இருந்தபோது ஒன்றிரண்டு பாட்டு நாமளும் இழுத்ததோ என்னவோ, “மேடையில் பாடிப்பாரு மச்சி” என்றார்கள். ஆனால் மைக்கை பிடித்து பிட்ச் குடுக்க தான் இசை ஒன்றும் பாத்ரூமில் பாடும் டப்பா மாட்டர் இல்லை என்று புரிந்தது. ஆனாலும் கஜன் தலையில் குட்டி குட்டி திருத்தி எடுத்தான். ஒரு முறை “தாலாட்ட வருவாளா” ரிகர்சல். நானும் அகிலன் மாதிரி இறுதி சரணத்தில் ஒரு சங்கதி விட்டுப்பார்த்தேன். பாட் ஸ்டிக்கால கஜன் அடிக்க ஓடிவந்தான். “பிளாட்டா பாடும்போதே ஸ்ருதி ஜல்லியடிக்குது. உனக்கெதுக்கு சங்கதி எல்லாம்? பிழை இல்லாம டியூனுக்கு முதலில் பாடு” என்றான். வெறும் காட்டுப்பயலை இது சுருதி, இது தாளம், இங்கே இருந்து இங்க போகும்போது அதில ஒரு கட்டமைப்பு இருக்கு. பிச்சுக்கொண்டு போனியா? அது ஒப். விலகிடும். அபசுரம். என்று சொல்லி கொஞ்சம் மண்டையில் ஏற்றியவன் கஜன். “நீ நல்ல ரசிகன், அதோட நிறுத்தினா உனக்கும் நல்லம், கேட்கிறவனுக்கும் நல்லம்” என்று நக்கலாய் சொல்லுவான் அகிலன்.
நல்லூர் மஞ்சத்திருவிழா என்றால் துர்க்கா மணி மண்டபத்தில் கச்சேரி இவர்களுடையது. அப்போது கொழும்பில் வாசித்துக்கொண்டிருந்த நான் இவர்கள் நிகழ்ச்சி பார்க்கவென்றே பஸ் பிடித்து யாழ்ப்பாணம் போவேன். அதிலும் அகிலன் தில்லானாவுக்கு நான் அடிமை. குறிப்பாக “தீம் தீம் தீம் தித்தில்லானா’. அது ஒரு ரோலர் கோஸ்ட்டர் பாட்டு. கஜனும் தில்லானா என்றால் ஏறி இருந்து வாசிப்பான். கேட்கும் போது சச்சினின் 2003 பாகிஸ்தான் இன்னிங்க்ஸ் போன்று இருக்கும். ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி முடியும் போது அடச்சீ .. இனி அடுத்தது எப்பவோ? என்று யோசிக்க தோன்றும். அவனின் “சாமஜவரகமனா” எனக்கு பிடிக்கும். அகிலன் திலகநாயகம் போலின் மாணவன். அவரின் பாவங்கள் இவனிடமும் தொற்றியிருப்பது சாமஜகேட்டவர்களுக்கு புரிந்திருக்கும். போலிடம் இல்லாத ஒன்று அகிலனிடம் இருக்கிறது. அது அவனின் பேஸ் குரல். அது அவனுக்கு மிகப்பெரிய ரேஞ்சில் பாட வழி வகுக்கிறது. “ஓம் .. ஓம் .. ஓம்” என்று அவன் கச்சேரியை ஆரம்பிக்கும்போதே தன்னுடை பேஸ் இது என்று ஆணி அடித்துவிடுவான். அடுத்ததெல்லாம் அங்கிருந்து ஆரம்பிக்கும். He designs his performances well.
எங்கள் வீட்டில் எல்லோருக்குமே மூன்று பாடகர்களை மிகவும் பிடிக்கும். ஜேசுதாஸ், ஹரிகரன் அடுத்தது அகிலன். மூவர் குரலுக்கும் இயல்பாக அம்மா, அக்காமார் தொட்டு அனைவரும் அடிமையானவர்கள். கொழும்பில் இருந்த காலத்தில் அகிலன் கஜனின் கச்சேரி ரிகர்சல் எங்கள் வீட்டில் தான் நடக்கும். அன்றைக்கு ரிகர்சல் என்றால் அம்மா ஒரு வித படபடப்போடு இருப்பார். காலையிலேயே சமைத்து வைத்து வீட்டறையை தயார் பண்ணி விடுவார். இருவரும் வந்து அறைக்குள் இருந்து அடுத்த நாள் கச்சேரிக்கான first cut ஐ தயார் செய்வார்கள். அப்படியான அனுபவம் எல்லோருக்கும் கிடைக்காது. ரிகர்சலில் நிறைய பரிசோதனைகள் செய்வார்கள். மேடையில் செய்ய மாட்டார்கள். கேட்டால் சபைக்கு தாண்டா கச்சேரி என்பார்கள். அவர்கள் அடித்து ஆடுவதற்கான இந்திய டிசம்பர் சீஸன் போன்ற கச்சேரிகள் கிடைக்காதது இசை ரசிகர்களுக்கு பெரிய இழப்பு தான். இலங்கையில் கச்சேரிகள் அனேகமானவை ஒரு மணி நேரம் தான். அதில் கூட ஓரளவுக்கு பரிச்சயமான கல்யாணி, ஹிந்தோளம் போன்ற ராகங்கள் தான் பாடவேண்டும். இதுவே பல்கலைக்கழக மேடை என்றால் ஒன்றிரண்டு சினிமா பாடல்களும் இடையில் செருகவேண்டும். அப்போதும் கூட பின்னுக்கிருந்து ஒரு சில பிரகிருதிகள் விசில் அடித்துக்கொண்டிருக்கும்.
கஜன் யாழ்ப்பாண பிரபல மிருதங்க வித்துவான் கண்ணதாசனின் பிரதான சீடன். அகிலனுக்கு மட்டுமல்லாமல் ஏனைய ஜாம்பவான்களுக்கும் வாசித்திருக்கிறான். சேஷகோபாலன், நித்யஸ்ரீ, சுதா ரகுநாதன், சஞ்சய் சுப்ரமணியம் என்று அந்த வரிசை தொடராக நீளும். துளிகள்போன்ற நேர்த்தியான இசை அல்பங்களில் அவன் உழைப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த முதல் மூன்று பெண் பாடகிகள் சுசீலா, சித்ரா மற்றும் ஸ்ரேயா கோஷல். முதல் இருவரோடும் கஜன் நிகழ்ச்சிகள் செய்துவிட்டான். ஸ்ரேயா மட்டும் தான் பாக்கி. சான்ஸ் அமையும் போது என்னையும் அசிஸ்டெண்ட் எண்டு சொல்லி கூட்டிப்போடா என்று கேட்டிருக்கிறேன். “பார்க்கலாம்” என்றிருக்கிறான். “நீ பார்க்கிறது இருக்கட்டும்டா .. நான் பாக்கோணும்!”.
சித்ரா ஒருமுறை இலங்கை வந்தபோது “பாடறியேன் படிப்பறியேன்”, “எங்கே எனது கவிதை”, “இவன் யாரோ” போன்ற பாடல்களுக்கு இவனை சிறப்பாக அழைத்து மிருதங்கம் வாசிக்க வைத்தார்கள். பாடறியேன் படிப்பறியேன் இறுதி சுரக்கட்டில் மிருதங்கம் பக்க வாத்தியமாக இல்லாமல் வயலினுக்கு நிகராக சேர்ந்து தனி ஆவர்த்தனம் குடுக்கும். சின்ன பிட் தான். அவன் என்னோடு தான் வீட்டில் இருந்து கச்சேரிக்கு கொஞ்ச நேரத்துக்கு முதல் பாட்டை ரேடியோவில் போட்டு கேட்டான். வாசித்தெல்லாம் பார்க்கவில்லை. முதல் நாலு .. மூணு என்று ஏதோ கணக்கு சொன்னான். “சும்மா கேட்கேக்க விளங்கேல்ல, இந்த மிருதங்கம் ஒரு போர்மட்ல இல்லை மச்சி … நிறைய ப்ரேக் எடுத்து வருதேடா?” என்றேன். “இளையராஜா” என்றான். அவன் கச்சேரியில் அன்றைக்கு கலக்கியதும் அவன் கலக்கியதை கண்டு ஒரு பெண் கலங்கியதும், பின் அந்த பெண் அவன் வாழ்க்கையில் இப்போது ஒரு கலக்கு கலக்கிக்கொண்டிருப்பதும் சந்தோஷமான விஷயங்கள். இப்போது போல் எப்போதுமே கலக்குவதற்கு வாழ்த்துக்கள்!
குன்னக்குடியின் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய பாடல் “மலரோ நிலவோ மலைமகளோ”. அதையெல்லாம் அகிலன் கஜன் கொம்பினேஷனில் கேட்டிருக்கவேண்டுமே. “என் தேவி உனக்கிது சரிதானா?” என்னும்போதும் கொன்றுவிடுவான் பாவி. “நானொரு பூச்சாரி உனக்கிது தெரியாதோ?” என்னும்போது கஜன் வாசிப்பது மிருதங்கம் அல்ல. அது நடனம். அந்த தாளத்துக்கு எல்லோர் தலையும் சிரித்துக்கொண்டே நடனமாடும். இந்த பாடலை இரண்டு மூன்று தடவை இவர்கள் பாடி பார்த்திருக்கிறேன். முடியாமல் நீண்டுகொண்டே போகாதா என்று ஏங்க வைக்கும் பாடல்கள்.
பல்கலைக்கழக படிப்பு முடிந்த பின்னரும் இவர்கள் கூட்டணி தொடர்ந்தது. அகிலன் தனிக்கச்சேரி இல்லாமல் நடன நிகழ்ச்சிகளுக்கும் பாட ஆரம்பித்தான். கஜன் ஏனைய பாடகர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்க தொடங்கினான். இருவரின் பாதைகளும் அவர்களை அறியாமலேயே பிரிந்துகொண்டிருந்ததை கொஞ்சம் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தவன் நான். அகிலன் கனடா அவுஸ்திரேலியா என்று பல நாடுகளுக்கு அப்போதே சென்று சங்கீத கச்சேரிகள் செய்தவன். கஜன் சிங்கப்பூர் சென்று, கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலை நிறுத்தி கச்சேரிகள் செய்ய தொடங்கிவிட்டான். சிங்கப்பூர் தேசிய இசைக்குழுவிலும் அங்கம் வகிக்கிறான். இப்போது கொஞ்ச நாளாக கமராவோடு திரிகிறான். தலைவரே இசை உங்களுக்கு கடவுள் கொடுத்த கொடை. விட்டு விடாதீர்கள்.
அகிலன் இப்போது மெல்பேர்னில். கல்வியங்காட்டில் கீதாஞ்சலி என்று அவன் அம்மா அக்கா எல்லோரும் இணைந்து நடத்திய சங்கீதப்பள்ளி போலவே இங்கேயும் ஸ்தாபித்து இசை கற்பிக்கிறான். பரதநாட்டிய நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பாட்டு என்றால் அது அகிலன் தான். மிருதங்கம் வயலின் அரங்கேற்றங்கள் என்றாலும் நடு நாயகம் அகிலன் தான். அண்மையில் இங்கே ஒரு நாட்டிய பள்ளியின் மூன்று மணிநேர நிகழ்ச்சி. அகிலன் பாடுகிறான் என்பதற்காகவே போய் ஒரு மூலையில் அவன் பாடுவதை மாத்திரமே கவனித்துக்கொண்டே இருந்தேன். டான்ஸ் தன்பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தது. யார் கண்டார். முழுக்க முழுக்க முருகன் பாடல்கள், நாட்டிய தாளங்களுக்கேற்ற பாடல்கள், அந்த வரையறைகளுக்குள் நின்றும் பின்னிப்பெடலெடுத்தது தான் அவன் திறமை. எனக்கொரு கவலை என்னவென்றால், அவன் கொழும்பில் இருந்த போது அவனை அழைத்து கச்சேரி செய்து அழகு பார்த்த அவுஸ்திரேலியா, அவன் பக்கத்திலேயே இருக்கும் போது ஒரு தனிக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்யவில்லை. அண்மையில் ஒரு விழா சம்பந்தமாக எப்படியான நிகழ்ச்சிகள் செய்யலாம் என்று என்னை கேட்டார்கள். அகிலன் கச்சேரி செய்வோம். அவன் கச்சேரி என்றாலே மேடைக்கு ஒரு தனி களை வந்துவிடும் என்றேன். சரி தான் ஆனால் பேமன்ட் அதிகம் என்றார்கள். If you pay peanuts, you get only monkeys என்றேன். அவர்களுக்கு புரியவில்லை. இறுதியில் அகிலன் இல்லாமலேயே அந்த நிகழ்ச்சி ஜனரஞ்சகமாக நடந்தது!
அவ்வப்போது பாட்டு கேட்டுக்கொண்டிருக்கும் போது தான் நான் இந்த இருவரையும் எவ்வளவு மிஸ் பண்ணுகிறேன் என்று புலப்படும். மூன்று வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இடம்பெற்ற சம்பவம் இது. ஒரு நிகழ்ச்சி முடிந்து நானும் கஜனும் பேரூந்துக்காக காத்திருக்கிறோம். பேசிக்கொண்டிருக்கும் போது “மச்சான் அந்த காலத்தில சேர்ந்து பாட்டுக்கேட்டது போல இப்ப டைமே கிடைக்குதில்ல” என்றேன். அவன் ஒன்றுமே பேசவில்லை. திடீரென்று அடுத்ததாக வந்த ஒரு பஸ்ஸில் பாய்ந்தான். என்னையும் பார்த்து “டேய் ஏறு” என்றான். “இது எங்கட பஸ் இல்லடா” என்று நான் சொல்ல “நீ ஏறு முதலில” என்றான். அது ஒரு டபிள் டெக்கர் பஸ். மேல் தளத்தில் யாருமே இல்லை. ஏறி போய் உட்கார்ந்தோம். என் ஐபோனை ஸ்பீக்கரில் போட்டு பாட்டு கேட்க ஆரம்பித்தோம். முதல் தெரிவு என்னுடையது. “வெண்ணிலா ஓடுது”. அடுத்தது அவனுடையது “ஆகாய வெண்ணிலாவே”. என்னுடையது “நெஞ்சே நெஞ்சே”. அவன் இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமேஎன்றான். விழியே கதை எழுதுஎன்றேன். “சங்கத்தமிழ் கவியே” வந்தது. சரணத்தில் “நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓடவிட்டேன்” என்று யேசுதாஸ் பாட இருவருமே புன்முறுவல் செய்தோம். “டேய் இது அகிலன் குரல்” என்றேன். விழுந்து விழுந்து சிரித்தோம். இப்படி இரண்டு மணி நேரம் பஸ் எங்கே போகுது என்ற பிரக்ஞை இல்லாமலே கேட்டுக்கொண்டு போனோம். சென்ற வருஷம் நண்பன் படத்து “அஸ்கு அஸ்கா” பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டு, அதன் சரணத்தில் நான் மயங்கி விழுந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த பாட்டு ஏன் எனக்கு பிடிக்கோணும்? என்று நான் போய் கஜனிடம் கேட்டேன். உடனே பதில் இல்லை. அடுத்த நாள் ஈமெயில் வந்தது. “கேட்டேன் மச்சி .. சரணம் புஃல்லா வெண்ணிலவே வெண்ணிலவே. அதுவும் ‘எட்டாத உயரத்தில நிலவை வைத்தவன் யாரு’ டியூன் அப்பிடியே இருக்கு. உனக்கு பிடிக்காம வேறு எவனுக்கு பிடிக்கும்?”. அதற்கு பிறகு தான் எனக்கு ஸ்ட்ரைக் பண்ணியது. எனக்கு என்ன பிடிக்கும் என்று எனக்கே தெரியாது, ஆனால் அவனுக்கு தெரியும். ஆனால் நான் தான் அவன் சொல்வதை பல சமயங்களில் கேட்பதில்லை.
நேற்று எழுத ஆரம்பித்து இரண்டு பந்தி தாண்டியவுடனேயே அகிலனின் குரலை கேட்கவேண்டும் என்று ஆசை. உள்ளூரிலேயே இருக்கிறோம். அவ்வப்போது நிகழ்சிகளில் சந்தித்து ஹாய் சொல்வதோடு சரி. சந்தித்து மனசுவிட்டு பேசி பல வருடங்கள். தாங்கோணாமல் உடனேயே தொலைபேசி போட்டு “அவசரமா உன் வீட்டுக்கு வரவேண்டுமே” என்றேன். அவனுக்கு ஓய்வாக ஒரு நிமிடம் கிடைப்பதே அரிது. ஆனாலும் “வா, கன காலம் நாங்க மியூசிக் டிஸ்கஸ் பண்ணி” என்றான். போனேன். போயிருந்து சின்ன வயது முதல் சிலவாரங்களுக்கு முன்னர் பேர்த்தில் நடந்த நிகழ்ச்சி வரை அத்தனையும் அலசினோம். இத்தனை நாளும் நான் தான் அகிலனின் தீவிர வெறித்தனமான ரசிகன் என்ற பெருமையில் இருந்தேன். ஆனால் அவன் மனைவியும் வரிக்கு வரி அத்தனை நிகழ்சிகளையும் ரசித்திருக்கிறார் என்பது அவன் பாடிய பாட்டுகளை அவர் நினைவு கூர்ந்தபோது புரிந்தது. பழைய சிடிகளை போட்டு, மீண்டும் மீண்டும் கேட்டு பதினாறு வருடங்களில் குரல் எப்படி மாறியிருக்கிறது, நேர்த்தியாகியிருக்கிறது என்று பேசினோம். ஆங்காங்கே சங்கதிகள், ஆலாப், இந்த இடத்தில் எக்ஸ்ட்ரா ஒரு சுரம் போட்டிருக்கலாம் என்று பல விஷயங்கள் பாடியும் காட்டினான். அண்மையில் காளிங்கன் வதம் பற்றிய தில்லானா, அது ஒரு மாயமான் போல அங்கேயும் இங்கேயும் ஓடும் தாளக்கட்டு, அதை அவன் விளக்கிய போது அந்த பாட்டின் செட்டப்பில் இருக்கும் வில்லங்கம் புரிந்தது. எப்படி இதை எல்லாம் தயார் பண்ணுகிறாய்? என்றால் வெறும் சிரிப்பு தான். தெலுங்கு கீர்த்தனை ஒன்றின் ராகாலாபனை. “பூமாலையில் ஓர் மல்லிகை” ஆரம்ப ஆலாப்பும் இது தான் என்றேன். இழுத்தான். “இங்கு நான் தான் தேன் என்றது. உந்தன் வீடு தேடி வந்தது. இன்னும் வேண்டும் வா என்றது” என்று முழு பல்லவி ஹம்மிங். பிச்ச்ச் … சான்ஸே இல்லை. “ஐயோடா இது கனவில்லை எண்டு காதில் சொல்லுங்கோவன்” என்று கையை கிள்ளிக்கொண்டேன்.
ஒவ்வொரு சிடியாக ப்ளே பண்ணி பார்க்க பார்க்க, எல்லா பாடல்களையும் தரவேற்றவேண்டும் என்று ஆசை வந்தது. ஆனாலும் பதிவுக்கேற்றாட்போல, நான்கைந்து வெவ்வேறு வகை பாட்டுகளை மாத்திரமே தேர்வு செய்து இங்கே கொடுத்திருக்கிறேன். சீக்கிரம் எல்லா பாடல்களை யூடியூபில் ஏற்றவேண்டும் என்று ஒரு ஆசை. அதை விட அகிலன், கஜன் கச்சேரி ஒன்றை மெல்பேர்னில் நடத்தில் பார்க்க ஒரு பேராசை. தியாகராஜர் கருணை வைப்பார் என்று நம்புவோம்.
படலை ஆரம்பித்து இரண்டாம் வாரமே எழுதலாம் என்று நினைத்த விஷயம் இது. ஏதோ காரணங்களால் தள்ளுப்பட்டு போய்க்கொண்டிருந்தது. நேற்று மூன்று மணி நேரம் அகிலன், காயத்ரியோடு இசை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த அனுபவம் கொடுத்த திருப்தி அலாதியானது. விடைபெற மனமே இல்லை. எழுதுவதால் கிடைக்கும் பலாபலன்கள் இவை. ரஜனிகாந்த் சொன்னது போல சரஸ்வதி அகிலனையும் கஜனையும் தன் மார்பில் தாங்கி கொண்டாடிக்கொண்டிருக்கிறாள். வெறும் தேடலால் வரும் திறமை அல்ல. இது கொடை. ஜீன்ஸ். டிஎன்ஏ. அதை வைத்து இன்றைக்கும் புதிது புதிதாக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு நண்பர்களாக கிடைத்தது அதிர்ஷ்டமே.
என்ன ஒன்று, காயத்திரி, தர்ஷினி என்ற இரண்டு பெண்களையும் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கும். அட, வீட்டிலேயே இசை தாண்டவமாடுகிறது. அதை ஆயுள் பூராவும் கேட்டு ரசிக்கும் பாக்கியம் அவர்களுக்கு. நான் ஆணாக பிறந்ததால் தப்பித்தார்கள்! அடுத்த பிறப்பிலேனும் பெண்ணாக பிறந்து அகிலன், கஜன் இரண்டுபேரையும் கட்டினாலும் காரியமில்லை. என் நிஜமான கொல்லைப்புறத்து காதலிகள். இப்போதைக்கு ஆண்டாளாக இருந்துவிட்டு போகிறேன். பாதகமில்லை!
&&&&&&&&&&&&&