புத்தாண்டுக் காலை. கையில் தேநீரோடு ஜெயமோகன் தளத்தில் மேய்ந்தால் அற்புதமான வாக்கியம்ஒன்று அகப்பட்டது.
“பெய்தொழிந்தாலொழிய முகிலுக்கு மீட்பில்லை”
எவ்வளவு உண்மை. அங்கிங்கெனாதபடி அலைந்தோடும் முகிலினுடைய பேறுதான் என்ன? பெய்தொழிதலே. பெய்தொழிந்து, மண் சென்று, அது நீங்கி, மீண்டும் முகிலாகிப் பெய்தொழிந்து என்ற சங்கிலியில் முகிலுக்கு என்றைக்கும் மோட்சமில்லை. பெய்தொழிந்தாலும் அதற்கு மீட்பில்லை. அப்படியானால் முகிலிடம் எதற்கு இத்தனை அவதி?
எழுத்தும் வாசிப்பும் எப்போதுமே தூங்குகின்ற எரிமலைபோல. அடிவயிற்றில் ஒரு அந்தளிப்பு எப்போதுமே இருக்கும். எழுத்தைக்கூட விட்டுத்தள்ளலாம். ஆனால் இந்த வாசிப்புக் கொண்டுவரும் அந்தளிப்பு தாங்க முடியாதது. பொக்ஸ் கதைப்புத்தகத்திலே அந்தப் பாலியல் விடுதி பற்றி வருகின்ற இடத்திலே எரிமலை குமுறும். யாமத்தில் பண்டாரத்தொடு நாயின் பின்னே நாமும் செல்லும்போது கடைசிநேரத்தில் அந்த நாய் செய்கின்ற “நாய் வேலை”க்கு அதனை அடித்துக்கொன்றால் என்னவென்றிருக்கும். இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் சைமன் சிங்கின் “Big Bang” புத்தகம் கொடுக்கின்ற அந்தளிப்பு அளவிலாதது. வெள்ளையானையில் தொங்கி இந்திரலோகம் சென்ற கதையாய், ஒரு புத்தகத்தைப்பிடித்துக்கொண்டு பிரபஞ்சம் முழுதும் காலத்தாலும் தூரத்தாலும் சுற்றுகின்ற உணர்வு. பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் இயக்கமும் கொடுக்கின்ற பிரமிப்பு நம்மை ஒன்றுமே இல்லாதவராக்குகிறது. பிரபஞ்ச இயக்கத்தில் நாங்கள் எதுவுமேயில்லை. நத்திங். பல தற்செயல்கள் சேர்ந்து உருவாக்கிய தற்செயல். கடவுள் இருப்பாரேயானால் அதுகூட ஒரு தற்செயலே என்கிறது பிரபஞ்சம். சற்றுமுன் வைத்த முற்றுப்புள்ளிபோல. சொல்லாதவரைக்கும் அதனை யாரறிவார்?
வேறு ஒன்றுமே வேண்டாம். வழமைபோலவே இந்த வருடமும் செய்வதை எல்லாம் ரசிச்சு ரசிச்சுச் செய்யவேணும். முடியுமானால் ரசிக்கிறமாதிரியும் செய்யவேணும்.
சென்ற வருட “பிடித்ததும் பிடிக்காததும்” கட்டுரையில் இப்படி எழுதியிருந்தேன்.
எழுத்தில் இந்த வருடம் ஒரு நாவல் ஆரம்பிக்கவேண்டும். ஒன்று சமகால பொலிடிக்கல் திரில்லர். அல்லது ஒருவித வரலாற்று நகைச்சுவை. தீர்மானிக்கவில்லை. சென்ற வருடம் ஆரம்பித்த தீண்டாய் தீண்டாய் தொடர் இரண்டோ, மூன்று அத்தியாயங்களுடன் தேங்கிவிட்டது. இந்த வருடம் ஒரு ஐந்தேனும் எழுதவேண்டும். மற்றும்படி புது வடிவங்களில் நிறைய ட்ரை பண்ணலாம். கொல்லைப்புறத்துக் காதலிகளுக்கு படம் வரைந்த ஜனகனோடு ஒரு கொமிக்ஸ் தொடர் செய்யலாமா என்றும் ஐடியா இருக்கிறது. பார்ப்போம்.
இதிலே “மற்றும்படி புது வடிவங்களில் ட்ரை பண்ணலாம்” என்பதைவிட வேறு எதுவும் நிகழவில்லை. Writing happens. இதிலே திட்டமிட்டு எதுவுமே செய்யமுடியாது என்பது இப்போது புரிகிறது. வெள்ளியும்அமுதவாயனும்தற்செயல்களே. “கனகாலமா உங்கட ஸடைலில ஒரு பம்பல் கதை எழுதேல்ல. ஒண்டு எழுதுங்கோ” என்று தற்செயலாக போகிறபோக்கில் மனைவி அடித்த கொமெண்ட்தான் “சந்திரனைத் தொட்ட சுந்தரி”யை எழுதச்செய்தது.
இவ்வருடமும் வெள்ளி, அமுதவாயன், ஊரோச்சம் போன்ற அற்புத கணங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
மேலும் வாசிக்க »