ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம்.
மேலும் வாசிக்க »24 – 04 – 2009முள்ளிவாய்க்கால்
சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். “நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுறேல்லை…” அத்தார் சந்திராவைக் கட்டிக்கொண்டு வெடித்து அழத்தொடங்கினான்.
“அண்ணை வெளிக்கிடுங்கோ…” வெள்ளையன் கையை ஆறுதலாகப் பற்றினான்.
“என்னை விடு. நீ போ”
“ஷெல்லடி கூடுதண்ண… வாங்க போவம்”
“டேய்… நாயே… ஒருக்காச் சொன்னா கேக்க மாட்டியே…. நீ போ… நான் வரேல்ல” அத்தார் சந்திராவின் கன்னங்களை வருடினான். குருதி தோய்ந்த விரல்கள் சிவப்புக்கோடுகளை வரைந்தன. “குடும்பத்தில ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டுமே நம்பி வந்தவளடா… என்ர சுகதுக்கம் எல்லாத்திலயும் பக்கத்தில நிண்டவளை ஒரு அநாதையா விட்டிட்டு வரச்சொல்லுறியே…”
அத்தார் சந்திராவின் தலையைத் தூக்கித் தன் மடியில் கிடத்தினான். “என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே…” அவளுடைய கழுத்தில் தலையைச் காய்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான். ஷெல் சத்தங்கள் மறுபடியும் கூவின.
மறுநாள் காலை, இயக்கத்தின் தமிழர் ‘புனர்வாழ்வு’ கழகத்தைச் சேர்ந்தவர்கள் உருக்குலைந்த கூடாரத்தின் சிதைவுகளை அப்புறப்படுத்திவிட்டு மனிதத் துண்டங்களைக் கூட்டி அள்ளினார்கள். அவர்கள்தான் இப்போது சவங்களைப் புதைக்கின்ற கடமையை மேற்கொண்டார்கள்.
உடல் சிதைந்து வலதுகண் மட்டும் திறந்திருந்த ஒரு தலையை நீண்ட நேரமாக யாராலும் அடையாளம் காண முடியவில்லை. புதைப்பதற்குச் சற்று முன்பாகவே ஒரு நடுத்தர வயதுக்காரன் அடையாளம் காட்டினான்.
“இந்த அம்பட்டக் கிழவனை எனக்குத் தெரியும். அத்தார் எண்டு கூப்பிடுறவை. ஒரு வெள்ளாளப் பொம்பிளையைக் கட்டியிருந்தவர். இவருக்குப் பிள்ளையள் இல்லை…”