கி.பி 1600.
நெதர்லாந்து நாட்டு மிடில்பேர்க் நகரத்தில் கண்ணாடிக்கடை ஒன்றை நடத்திவருகிறார் லிப்பர்ஷி. பூதக்கண்ணாடி, பார்வைக்குறைப்பாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் கண்ணாடிவில்லை என்று பல்வேறுவகைக் கண்ணாடிகளும் வில்லைவகைகளும் அவருடைய கடையில் விற்பனைக்குக் கிடைக்கும். லிப்பர்ஷியின் கடையில் அவருக்குத் துணையாக ஒரு உதவியாளரும் வேலைசெய்து வருகிறார்.
ஒருநாள் லிப்பர்ஷியின் உதவியாளர், இரண்டு வில்லைகளை ஓரடி இடைவெளியில் வைத்து அவற்றினூடாக வெகுதொலைவில் இருக்கும் பொருட்களைத் தற்செயலாகப் பார்க்குஞ்சமயத்தில் அந்தச்சம்பவம் இடம்பெறுகிறது. ஆரம்பத்தில் மங்கலாகத் தெரிந்த தூரப்போருட்கள் வில்லைகளுக்கிடையேயான தூரத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் தெளிவாகத் தெரிய ஆரம்பிகின்றன. மிக எட்டத்திலிருந்த தேவாலயம் ஒன்று அருகிலிருப்பதுபோல அவருக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது. உடனேயே அந்த உதவியாளர் லிப்பர்ஷியிடம் ஓடிச்சென்று தான் கண்டறிந்ததைச் சொல்லியிருக்கிறார். வெகுதொலைவில் இருக்கின்ற பொருளினை, இரண்டு வில்லைகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, அவற்றினூடு பார்க்கும்போது, அது மிகவும் அண்மித்துத் தெரிகிறது. இதனைக் கண்ணுற்ற லிப்பர்ஷிக்கு அன்றிரவு முழுதும் தூங்கமுடியவில்லை. அடுத்தநாளே மரக்குழாய் ஒன்றினைச் சரிக்கட்டி அதனுள் இரண்டு வில்லைகளை சரியான இடைவெளியில் நிலைநிறுத்திப்பூட்டி எல்லாவிடமும் கொண்டுசென்று தூர இடங்களைப் பார்க்க ஆரம்பிக்கிறார். சாதாரண கண்களுக்குத் தெரியும் எட்டத்துப் பொருட்கள் எல்லாம் அக்குழாயினூடாகப் பார்க்கும்போது மூன்று மடங்கு கிட்டத்தே தெரிந்தன. அடுத்தநாளே லிப்பர்ஷி அக்கண்டுபிடிப்புக்குரிய காப்புரிமையைப் பெற்றுக்கொள்கிறார். காப்புரிமையின் பெயர்,
“For seeing things far away as if they were nearby”.
“For seeing things far away as if they were nearby”.