காலை ஏழரை மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத இலக்கம். ஹலோ சொன்னேன்.
“தம்பி, நான்தான் அண்ணா கதைக்கிறன்”
அண்ணா. பேர்த்தில் அப்போது அதிகாலை நாலரை மணி இருக்கும். அவ்வளவு வேளைக்கே எனக்கு அழைப்பு எடுக்குமளவுக்கு அப்படி என்ன அவசரம்? குழப்பமாகவிருந்தது. அப்படியொன்றும் நாங்கள் அநுதினமும் அழைத்துப் பேசுபவர்கள் அல்லர். வருடத்துக்கு இரண்டுமுறைதான் அண்ணாவும் நானும் பேசுவதுண்டு. அவருடைய பிறந்தநாளுக்கு நான் அழைப்பு எடுப்பேன். என்னுடையதன்று அவர் எடுப்பார். “ஹப்பி பேர்த்டே, என்ன நடக்குது? பிறகென்ன? சரி. அப்ப வைக்கிறன்”. அவ்வளவுதான் எங்களுடைய தொடர்பாடல். நிலைமை இப்படியிருக்க திடீரென்று வந்த அண்ணாவின் அழைப்பு சற்று பயத்தையும் ஏற்படுத்தியது.
“ஆ .. அண்ணை . வணக்கம்... எப்பிடி சுகங்கள்? என்ன இந்த நேரம்?”
சம்பிரதாய சுகவிசாரிப்புகளுக்குப் பதில் சொல்லும் நிலையில் அவர் இருக்கவில்லை.
“தம்பி, உனக்கு வியாழன் மாறப்போகுது... கவனமா இரு”