நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக போவதென்றால் அது ஒரு பெரிய அரசியல் பிரச்சனை. தனியாக போகமுடியாது. செத்துப்போன தாத்தா பத்திக்குள்ளே சுருட்டு பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் வேறு நிற்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரையில் இருக்கும் அம்மாவை எழுப்பவுவது. முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார்.
“பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”
கேட்டுக்கொண்டே தலைமாட்டில் இருக்கும் மண்ணெண்ணை விளக்கை தடவி எடுத்து கொளுத்துவார். முதலில் கிணற்றடிக்கு போய் வாளியில் தண்ணி அள்ளிக்கொண்டு அப்படியே டோய்லட் பக்கம் போய், அம்மாவை வெளியே பேய், பிசாசுகள் வராதவாறு காவல் காக்க சொல்லிவிட்டு, டோய்லட் சுவரின் மேற்பகுதியில் இருக்கும் பெட்டி வடிவ ஓட்டை ஒன்றில் விளக்கை வைப்பேன். ஏற்கனவே மண்ணெண்ணெய் விளக்கின் புகை படிந்து அந்த நான்கு ஓட்டைகளும் கரிப்பிடித்து போய் கிடக்கும். கூர்ந்து கவனித்துப்பாரத்தால் அதன்மேல் மென்மையான கறுத்த குட்டி குட்டி திட்டுக்கள் அதன்மேல் ஒட்டி இருக்கும். நடுப்பக்க சுவரில் அதே கரியாலேயே “எங்கிட்ட மோதாதே, நான் ராஜாதி ராஜனடா” என்று நான் எழுதியிருந்ததை, அம்மா தண்ணி போட்டு கழுவ முயற்சி செய்திருப்பது தெரியும். டோய்லட்டின் ஒவ்வொரு யன்னல் ஓட்டையிலும் ஒவ்வொரு விஷயங்கள். ஒன்றில் நெருப்பு பெட்டி இருக்கும். இன்னொன்றில் கார்ப்பிக் இருக்கும். இன்னொன்றில் நுளம்புத்திரி கூட இருக்கும்!
இப்போது இராமன் இலங்கை புகும் படலம். கக்கூஸ் கதவெல்லாம் சும்மா தள்ளினா திறக்காது. ஏற்கனவே கீழ் பிணைச்சல் அறுந்து, மேல் பிணைச்சலில் தான் அதுவே தொங்கிக்கொண்டிருக்கும். கதவை கவனமாக தூக்கி திறந்துக்கொண்டு உள்ளே போனால், அங்கே ஒரு குட்டி தெகிவளை மிருகக்காட்சி சாலை இயங்கிக்கொண்டிருக்கும். ஒரு பெரும் தவளையார் முன்னுக்கு நின்று டிக்கட் கொடுப்பார். மேலும் ஆளுக்கொரு மூலையில் ஏனைய தவளைகள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கும். அது கூட ஒகே. இந்த தேரை என்று ஒன்றிருக்கிறது. அது ஆளில் பாய்ந்தால் வளர்ச்சி குறைந்துவிடும் என்று யாரோ கதைகட்டிவிட்டு போய்விட, தேரையை பார்த்தாலே ஒரு நடுக்கம் வரும். அது எந்தப்பக்கத்தால எப்பிடி மூவ் எடுக்கும் என்றெல்லாம் உய்த்தறிவது கஷ்டம். ஒரு ஆங்கிளில் ஊதி, தண்ணீர் தெளித்தால், கதவுப்பக்கமாக வெளியேறிவிடும்.
அடுத்தது தண்ணீர் பைப். அதன் டப்பை எவனோ ஒரு வேதாளத்துக்கு பிறந்தவன், நாங்கள் இந்தியன் ஆர்மி டைம் இடம்பெயர்ந்திருந்த சமயம் பார்த்து கொத்திவிட்டான். விளைவு வெறும் உடைந்த பைப் மட்டும் தான் மிச்சமிருந்தது. அந்த குளாயினூடாக கரப்பான்கள் வன் பை வன்னாக வந்து “ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டூ யூ டூ” சொல்லும். உட்பக்கமாக சாத்திவிட்டு கதவு ஓட்டமட்டிக் ரிட்டேர்ன் வராதவாறு ஒரு கொங்கிரீட் கல்லை நகர்த்தி வைக்கவேண்டும் அல்லவா? அதை நகர்த்தும்போது இரண்டு மட்டத்தேள் கல்லுக்கு கீழால் இருந்து வேறு சரக்கென்று வெளியேறும். அதை காலில் போட்டிருக்கும் செருப்பை கழட்டி அடித்தாலும், இரண்டாக பிய்ந்து இரண்டு திசையில் ஓட ட்ரை பண்ணும். இதற்கிடையில் ஆங்காங்கே பிக்னிக் போகும் சிவப்பு, கறுப்பு, மஞ்சள் அட்டைகளை பற்றி பேசவேதேவையில்லை
சரி இதெல்லாம் கூட தமிழ் மக்களின் யதார்த்த தார்மீக காத்திரமான போராட்ட விழுமியங்களின் ஒரு அம்சம் தான் என்று சொல்லி மனதை தேற்றிக்கொண்டு அவசர அவசரமாக உட்கார்ந்துவிடலாம். ஆனால் தப்பித்தவறியும் மேலே பார்த்துவிட கூடாது. பார்த்தால் ஸ்ட்ரைட்டாக தலைக்கு மேலே ஒரு பெரிய சிலந்தி இருக்கும். கதை கம்மாஸ். புலிநகச்சிலந்தி கடித்தால் அடுத்த கணமே ஆள் குளோஸ் என்பார்கள். அப்பிடியே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போனாலும் எதுவும் ஆகப்போவதில்லை. “பெரிய புலிநகச்சிலந்தி ஒண்டு நிக்குது” என்று அம்மாவை உதவிக்கு அழைப்பேன். “உவத்திரமடா” என்று அலுத்துக்கொண்டே உள்ளே வந்து அம்மா டொக் டொக் என்று சுவரை தட்டுவார், அது கட கடவேண்டும் ஒரு மூலைக்கு ஓடும். “இது பட்டுப்பூச்சி, சும்மா எதுக்கெடுத்தாலும் பயப்பிடாத” என்று சொல்லிக்கொண்டே, தவளை தேரை எல்லாவற்றையும் அடித்து விரட்டி, அம்மா ஏரியாவை கிளியர் பண்ணி தருவார். இனி நிம்மதியாக அட்டாக் தொடங்கலாம் என்று உட்கார்ந்தால் கதவு கீழ்ப்பகுதி எல்லாம் உக்கி உதிர்ந்து வெளியிலே ஜிம்மி கடகத்துக்குள் படுத்து தூங்குவது நன்றாக தெரியும். என்னை பார்த்து அனுங்கும்!
அட்டாக் ஆரம்பிக்கிறது. அது எதற்கு இங்கே? வேண்டாம். அட்டாக் ஒரு பக்கத்தால் போய்க்கொண்டிருக்கும்போது தான் என்னுடைய தமிழ்பேச்சு ரிகேர்சலும் இடம்பெற தொடங்கும். நேரம் இரவு ஒரு மணி. அம்மா வெளியே செத்துப்போன தாத்தா வராமல் இருக்க காவல். தூங்கி வழிந்தபடியே. என் பேச்சு ஆரம்பிக்கிறது.
“என்னை இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே. (செருமல்) எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடிகளை என் சிரமேற் பணிந்து வணங்கி, பெருமதிப்புக்குரிய நடுவர் அவர்களே. கனம் அதிபர் அவர்களே (அதிபர் தனபாலனை பார்த்து ஒரு சிரிப்பு). ஆசிரியர் பெருந்தகைகளே. (இந்த சமயம் தேரை என்னை நோக்கி பாயும்போல இருப்பதால், தண்ணி எடுத்து ரெண்டு தெளி தெளிக்கிறேன். ஓடிவிட்டது) என் சக மாணவர்களே. எல்லோருக்கும் பணிவான வணக்கங்கள்.(கைதட்டல்கள்) நான் இன்றைக்கு பேச எடுத்துக்கொண்ட விடயம் “தமிழன் என்று சொல்லடா தலை நிமிரிந்து நில்லடா””.
இப்போது அடிபாடு முனைப்பு பெறுவதால் பேச்சுக்கு கொஞ்சம் ப்ரேக். கொஞ்சம் முக்கல். ஒபரேஷன் லிபரேஷன் சத்தங்கள். சக்கை லொறி முகாமுக்குள் இறங்குகிறது. கொஞ்சம் துவக்கு சூடுகள். காம்ப் சரண்டர். ஆசுவாசமாக மூச்சுவிடல். பேச்சு ஆரம்பிக்கிறது.
“கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய எங்கள் மூத்த தமிழானது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது! (கைதட்டல்) அய்யன் வள்ளுவன் அகரமுகர வில் ஆரம்பித்துவைக்க”
மீண்டும் ஒரு ப்ரேக். ஹெலியால் கொண்டுவந்து ஆர்மியை இறக்கி இருக்க வேண்டும். கரக் முரக் சத்தங்கள். ஹெலிக்கு இப்போது 50கலிபர் தாக்குதலை மெடிகல் பஃக்கல்டி கிரவுண்டில் வைத்து அடிக்கிறோம்.
“கவிச்சக்கரவர்த்தி கம்பன், இளங்கோ, அவ்வை என்று தொடர்ந்து புரட்சிக்கவி பாரதி வரை தமிழை வளர்த்துச்சென்றார்கள். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
பேச்சு சூடுபிடிக்கும்போது தான் சடக்கென்று டவுட் வந்தது.
“அம்மா”
சத்தமில்லை. மீண்டும் பலமாக கத்தினேன்.
“அம்மோய்…”
“என்னடா?”
“ஒண்டுமில்ல … இருக்கிறீங்களா எண்டு செக் பண்ணினான்”
***********
கக்கூஸ், லவட்டிரி, லட், டோய்லட் என்று தமிழ் அல்லாத வேறு எல்லா மொழிகளிலும் அழைக்கப்படும் மலசலகூடத்தை கொல்லைப்புறத்து காதலியாக எழுதலாமா? எழுதினால் “நாறாதா?” என்று நேற்று கேதாவிடம் கேட்டேன். “இது தான் அண்ணே உண்மையான ‘கொல்லைப்புற’ காதலி” என்று சொல்லி சிரித்தான். சரி காதல் மாட்டர் என்றாலே இறுதியில் “நாறும்” விஷயம் தானே என்பதால் துணிந்து இறங்கியாயிற்று.
சிறுவயது முதலே டோய்லட் எனக்கு ஒருவித போதிமரம் தான். ஏராளமான சிந்தனைகள் அங்கேயே ஆரம்பித்து அங்கேயே முடிந்துவிடும். எக்ஸாம் நேரத்தில் ரிவிஷன் எல்லாம் நடக்கும். என் டோய்லட்டில் நானே ராஜா. டிவி நிகழ்ச்சிகள், பத்திரிகை செய்திகளில் எல்லாம் என் சம்பந்தமான விஷயங்கள் இடம்பெறும். அந்த ஒரு பத்து நிமிஷத்தில் பலர் என்னை பேட்டிகள் கூட எடுத்திருக்கிறார்கள். நான் ஒரு செலிபிரிட்டியாம், ஒபரா வின்ப்ரே என்னை உட்கார வைத்து கேள்வி கேட்பாராம். எல்லாமே தரவரிசை வகை கேள்விகள் தான்.
“உங்களுக்கு பிடித்த ஐந்து விளையாட்டு வீரர்கள்?”
“ரோஜர் பெடரர், சவுரவ் கங்குலி, ஷேன் வோர்ன், விஸ்வநாதன் ஆனந்த், ஜஸ்டின் ஹெனின் … வெயிட் வெயிட் … ஆறு பேரு எண்டு மாத்துங்க .. சச்சின்!”
“உங்களுக்கு பிடிச்ச ஐஞ்சு விஞ்ஞானிகள்?”
“ஐன்ஸ்டீன், ஷ்ரோடிங்கர், நீல் போர் … நியூட்டன் …ம்ம்ம்.. மேரி கியூரி”
“பிடிச்ச ஐந்து மியூசிக் டிரேக்டரஸ்”
“ஏ எம் ராஜா, எம்எஸ்வி, இளையராஜா, ஏ ஆர் ரகுமான் …. வித்தியாசாகர்”
“டூ யூ ரிமெம்பர் யுவர் பஃர்ஸ்ட் எவர் டிஸ்ப்ளேஸ்மண்ட்?”
“யெஸ் .. ஐ வோஸ் செவின் இயர்ஸ் ஓல்ட். இட் வோஸ் தி ஐபிகேஎப் டைம். வி ஒல் மூவ்டு நல்லூர் டெம்பிள். யூ னோ நல்லூர் டெம்பிள்? இட்ஸ் லைக் எ சேர்ச் .. பட் கோட் இஸ் திஃபரேன்ட், சிவன்’ஸ் சன் .. ஐ மீன் நல்லூரான் இஸ் எ சன் ஒஃப் கோட்”
“ஜீசஸ் ஓல்சோ எ சன் ஒஃப் கோட்!”
இப்படி எனக்கும் ஒப்ராவுக்கும் இடையில் அந்த பேட்டி நீளும். இடை நடுவில் செண்டிமெண்டாக பேசி, ஒபரா அழுதவிஷயங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. உங்களில் எத்தனை பேருக்கு இப்படி அனுபவங்கள் இருக்கோ தெரியாது. டோய்லட்டில் இவ்வாறான விஷயங்கள் எல்லாம் சகட்டு மேனிக்கு இடம்பெறும். உதாரணமாக தமிழ் சினிமாவில் இடம்பெறாத ஐடியல் கொம்பினேஷன் எது?
“மணிரத்னம், சந்தோஷ்சிவன், சுஜாதா, ரஜனிகாந்த், மதுபாலா, ஏ ஆர் ரகுமான், வைரமுத்து”
********
கொஞ்சம் கிராமப்பகுதி, தீவுப்பகுதி என்றால் அந்த நாட்களில் டோய்லட் கட்டியிருக்கமாட்டார்கள். அங்கே ஒரே ஒரு மெதட் “சுழல்” தான். வெட்டவெளியில் சுழல். அந்த மெதட்டை ஏன் சுழல் என்று சொன்னார்கள் என்று வளர்ந்த பின்னர் தான் புரிந்தது. விளக்கத்தை நான் இங்கே கொடுக்கமுடியாது. முடிந்தவர்கள் யாராவது ட்ரை பண்ணுங்கள். இன்னொரு வகை மண்ணெண்ணெய் பரல். கிடங்கு வெட்டி மண்ணெண்ணெய் பரலை தாட்டுவிட்டு அதற்கு மேலேயே செட்டப் செய்வது.
வன்னியில் மாயவனூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் இருக்கும் ஊர் அது. 1996ம் ஆண்டு கிளிநொச்சி அடிபாட்டு சமயம் நாங்கள் அங்கே இடம்பெயர்ந்திருந்தோம். அவசரமாக வட்டக்கச்சியில் இருந்து ஓடிப்போய் யாரென்றே சரியாக தெரியாத ஒருவீட்டில் அன்றைக்கு அடைக்கலம். இப்படியான அந்தரமான நேரங்களில் தான் “அதுவும்” வந்துவிடும். அங்கே ஒரு டோய்லட் இருந்தது. நான்கு பக்கமும் கிடுகால் வேயப்பட்ட டோய்லட். அட பரவாயில்லையே என்று தோன்றியது. முதலில் போன அக்கா போன வேகத்திலேயே திரும்பினார். “எதென்றாலும் வட்டக்கச்சி போய் பார்ப்பம், இங்க வேண்டாம்” என்றார். “உங்களுக்கெல்லாம் சொகுசா வளர்ந்ததால வந்த வினை. எந்த சிட்டுவேஷனையும் சமாளிக்க பழகிறவன் தான் மறத்தமிழன்” என்று சொல்லியபடி வாளியில் தண்ணி அள்ளிக்கொண்டே உள்ளே நுழைந்தேன். உள்ளே பார்த்தால் வெறும் முதிரைக்கட்டை கொட்டு. முதிரை மரத்துக்கு இயல்பாகவே ஒரு “வழுக்கும்” இயல்பு இருக்கிறது. அதை கொஞ்சம் சீவி வாய்க்கால் போலே அமைத்து, அப்படியே தாட்டுவைத்திருந்த மண்ணெண்ணை பரலோடு தொடுத்திருந்தார்கள். முதிரை கட்டைக்கு இரண்டு புறமும் இரண்டு கொங்கிரீட்கற்கள். அது வேறு பலன்ஸ் இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்துகொண்டு முதிரைக்கொட்டுக்குள் இருப்பதென்பது இந்த மறத்தமிழனுக்கே சவாலான விஷயமாக இருந்தது. வெளியே வந்து அக்காவிடம் சொன்னேன்.
“என்ன இருந்தாலும் அதில இருந்த இஞ்சினியரிங் டிசைனை யாராலேயும் அடிக்க ஏலாது. நிச்சயமா ஒரு மரத்தமிழன் தான் இதை செய்திருப்பான்.”
வட்டக்கச்சியில் நாங்கள் இருந்த வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு தென்னஞ்சோலை. அங்கே தான் கௌசல்யா அக்காவின் குடும்பம் குடியேறியிருந்தது. அத்தான் ஒரு சிவில் எஞ்சினியர். அந்த மண்வீட்டை கூட இஞ்ச் இஞ்சாக தானே பார்த்து பார்த்து கட்டினார். கக்கூசும் அப்படியே. அது ஒரு பெரிய கதை.
வீட்டுக்கு பின்னால் கொஞ்சம் தள்ளி பத்து இருபது கற்களை அடுக்கி, எங்கிருந்தோ எடுத்துக்கொண்டு வந்த ஒரு உடைந்த பவுலை வைத்து மண்ணாலே மெழுகினார். பின்னர் அதற்கு மேலே கிலோ நூறு ரூபாய்க்கு சீமெந்து வாங்கி குழைத்து பூசினார். இப்போது ஒரு சின்ன மேடை தளத்தின் மேலே பவுல் கட்டியாயிற்று. மறைப்பு எப்படி? என்று கேட்டேன். நான்கு பக்கத்துக்கும் கதிகால் நட்டு ஒரு உர பாக்கை சுற்றிவிட்டார். உள்ளே போய் உட்கார்ந்தால் தோளுக்கு மேலே எல்லாமே வெளியே தெரியும். “மூஞ்சி வெளியே தெரியுதே அத்தான், அந்தரமாக இருக்காதா?” என்றேன். “மறைக்கவேண்டியத்தை மறைச்சால் போதும்” என்றார். கூரை வேறு கிடையாது. “மழை பெய்தால் என்ன செய்வது?” என்றதற்கு, “குடை பிடிச்சுக்கொண்டு இருக்கவேண்டியது தான், பாவிக்காத நேரத்தில ஒரு பாத்திரத்தால பவுலை மூடினா தண்ணி உள்ளுக்க போகாது” என்றார். எஞ்சினியரிங் டிசைனின் உச்சம் இது. இருக்கிறதை கொண்டு சமாளிக்கிறது. அந்த கணமே வளர்ந்து படிச்சு எஞ்சினியர் ஆகோணும் என்று முடிவு எடுத்துவிட்டேன்.
ஆனால் அதெல்லாம் அடுத்தநாள் காலைவரை தான். விடியக்காலமை எழும்பும்போது லேட் ஆகிவிட்டது. வயிற்றை கலக்குகிறது. சரி என்று அந்த டோய்லட்டுக்குள் போய் உட்கார்ந்தேன். மழை வேறு இலேசாக தூறிக்கொண்டிருந்தது. தூரத்தில் அக்கா முற்றம் கூட்டிக்கொண்டிருக்கிறார். அவரை கவனிக்காமல் நேரே பார்த்தால் முன் வீட்டு சந்திரிக்கா, என்னுடைய வகுப்பு தான், அவள் வீட்டில் சரவச்சட்டி கழுவிக்கொண்டிருந்தாள். என்னை பார்த்து சிரித்தாள். “என்ன குமரன் இங்கால பக்கம்?” என்றாள். அவள் சும்மாவே ஒரு நக்கல்காரி. இந்த விஷயம் அடுத்தநாள் வட்டக்கச்சி மகாவித்தியாலயம் முழுக்க பரவிவிடும் என்று புரிந்தது. உலகமே கூடி நின்று பார்க்கும்போது ஒண்டுக்கே போக முடியாது. அதில ரெண்டு என்றால் சுத்தம். கெட்ட குடியே கெடும் என்பது போல மழைவேறு கொஞ்சம் பலத்து பெய்ய ஆரம்பிக்க, இடையில் விட்டு விட்டு உள்ளே ஓடமுடியாத நிலைமை. “தம்பி குடை கொண்டுவரட்டா?” என்று அக்கா வீட்டுக்குள்ளே இருந்து கேட்கிறார். “இல்லை அக்கா, சிட்டுவேஷன் அண்டர் கொன்ரோல்” என்கிறேன். அவர் கேட்கவில்லை. “உனக்கு ஆ ஊ எண்டால் அஸ்மா வந்திடும்.. இந்தா குடையை பிடி” என்று எடுத்துக்கொண்டு கிட்ட வந்து தந்தார். வெட்கம் பிடுங்கித்தள்ளியது. தாங்க்ஸ் சொல்லி குடையை வாங்கி பிடித்தவாறே அவசர அவசரமாக மாட்டரை முடிப்போம் என்றால் அது வேறு டென்ஷனில் ஆகுதில்லை. இருதலைக்கொல்லி எறும்பு சிட்டுவேஷன். சரவச்சட்டி கழுவிக்கொண்டிருந்த சந்திரிக்கா இப்போது விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
கட்டைல போகட்டும் இந்த அத்தானின் இந்த கக்கூஸ் டிசைன்.
*******
டோய்லட் எதிக்ஸ் என்று சிலது இருக்கிறது. யாழ்ப்பாணத்திலும் இருந்தது. வெளிநாட்டிலும் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் டோய்லட்டுக்கு போனால், அடுத்து அவசரத்தில் வருபவருக்காக தண்ணீர் அள்ளி வாளியில் நிரப்பி வைக்கவேண்டும் என்பது ஒரு நடைமுறை. அதேபோல பேப்பர் டோய்லட் என்றால், நாங்கள் பாவிக்கும் போது பேப்பர் ரோல் முடிந்துவிட்டால், இன்னொன்றை எடுத்து கொழுவிவிட்டு போகவேண்டும். இதை சில லூசுகள் செய்வதில்லை. ஒண்டுக்கு போனால் நன்றாக அடித்து தண்ணீர் ஊற்றுவதில்லை. கொமோட் வகை டோய்லட்டுகள் இப்போது எல்லா இடமும் வந்துவிட்டது அல்லவா. அதிலே டோய்லட் சீட் என்று ஒன்று இருக்கிறது. ஆண்கள் ஒண்டுக்கு போவதென்றால் அதை நிமிர்த்திவிட்டே போகவேண்டும். எங்கட ஆட்களிடம் அந்த பழக்கமே கிடையாது. சீட்டையும் தூக்கி வைக்கமாட்டார்கள். டார்கட் பண்ணி அடிக்கவும் தெரியாது. “பெய்யன பெய்யும் மழை” போல உலகமெங்கும் பெய்துவிட்டு போவார்கள். அடுத்து வருபவர் அந்த சீட்டிலே எப்படி இருக்கமுடியும் என்ற விவஸ்தையே இருக்காது. இதிலே இன்னுமொரு நெறி இருக்கிறது. வீடுகளில் பெண்கள் இருக்கிறார்கள் என்றால், பெய்து முடித்தபின்னர், நிமிர்த்தி இருக்கும் சீட்டை மீண்டும் மடித்துவிட்டே போகவேண்டுமாம். பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் மரியாதை அது என்கிறார்கள். இப்படி டோய்லட் எதிக்ஸ் என்றே பல விஷயங்கள் இருக்கின்றன. முன்னர் ஒருமுறை விரிவாக வியாழமாற்றத்திலேஎழுதியிருக்கிறேன்.
சிங்கப்பூருக்கு மாற்றலாகி சில வாரங்களே ஆகியிருந்த சமயம். புது நாடு, சிங்கிலிஷ் என்ற புது மொழி. புது மூக்கு பெண்கள். ஈவு இரக்கமே இல்லாமல் பந்தாடும் வேலைத்தளம். இத்தனையையும் என் நிறுவனம் சார்பாக ஒரே ஆளாக சமாளிக்கும் வேலை. “இவன் வெட்டியாடுவான்” என்று ஹர்ஷா கொடுத்த நம்பிக்கையில் தூக்கி ஆற்றிலே போட்டுவிட்டார்கள். சேர்வர் ரூமிலே டிஸ்கஷன் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு எக்குத்தப்பான கேள்வி ஒன்று கேட்டுவிட்டார்கள். சடக்கென்று பதில் வரவில்லை. சொல்லப்போனால் அதற்கு பதில் இல்லை. யோசித்து எதையாவது நானே முடிவெடுத்து சொல்லவேண்டும். சுற்றிவர இருந்த சீனத்துப்பெண்கள் நிலைமையை இன்னமும் மோசமாக்கிக்கொண்டார்கள். திடீரென்று உதித்த ஐடியாவில் சொன்னேன் “ஐ நீட் டு கோ டு டோய்லட்”.
டோய்லட் போய் கதவை சாத்திவிட்டு பாட்டு பாடினேன். “வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே, வானோடு நீலம் போலே இணைந்து கொண்டது இந்த உறவே”. ஒரே கணம் தான். ஐடியா வந்தது. சின்ன டிசைன் சேஞ். பெரும் வேலை இல்லாமலேயே கேட்டதை செய்துகொடுக்கலாம். உடனேயே போய் அவர்களுக்கு பதிலை சொல்லி, ஆச்சர்யப்படுத்தி, இவனுக்குள்ளும் ஏதோ இருக்கென்று நம்பவைத்த ஆக்கிமிடிஸ் மொமென்ட் அன்றைக்கு டோய்லட்டுக்கு போயிருக்காவிட்டால் இடம்பெற்றே இருக்காது. டென்ஷனானால், யாரோடும் பேசும்போது என் பக்கம் வீக்காக இருப்பதாக உணர்ந்தால் உடனே நாடுவது டோய்லட்டை தான். அங்கே போய், கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி, ஒரு பாட்டை ஹம் பண்ணி முடிப்பதற்குள் ஐன்ஸ்டீன் யுரேகா சொல்லிவிடுவார் என்று வையுங்களேன்.
முதல் முறை கேதா வீட்டுக்கு போயிருந்த போது ஒரு டிஸ்கஷன் ஆரம்பித்தது. ஒரு பக்கம் கேதா பிரம்மாஸ்திரம் விட்டுக்கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் வீணா நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேலே எய்யக்கூடாது என்ற ரூலையும் தாண்டி வரிக்கு வரி போட்டுத்தாக்கிக்கொண்டிருக்க என் நிலைமை படு மோசமாக போய்விட்டது. எஸ்கியூஸ்மீ சொல்லிவிட்டு அவர்கள் டோய்லட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தினால் ஆச்சர்யம் காத்திருந்தது. கொமோட் டாங்குக்கு மேலே எஸ் ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் இருந்தது. அட. நம்மை போல பல கேசுகள் இருப்பது அன்றைக்கு தெரிந்தது. டோய்லட்டில் வாசிப்பதற்கென்றே தனியாக ஒரு புத்தகம் என்னிடம் எப்போதும் இருக்கும். அதை ட்ரைனிலோ அல்லது படுத்திருக்கும்போதோ வாசிக்கமாட்டேன். இப்போது என் டோய்லட்டில் இருக்கும் புத்தகம் அசோகமித்திரனின் “தண்ணீர்”.
*********
சில நண்பர்கள், குறிப்பாக தமிழரல்லாத நண்பர்கள், “உனக்கேன் இலங்கையை பிடிப்பதில்லை?எப்போது பார்த்தாலும் வெறுப்பாகவே பேசிக்கொண்டிருக்கிறாயே?” என்பார்கள். அமுதா ஒருமுறை கேட்டபோது நான் சொன்னது ஒரு சம்பவத்தை. நிஜத்தில் நடந்தது. நடந்து சரியாக இருபத்துமூன்று வருடங்கள்.
அப்போது தான் இலங்கை அரசாங்கம் சகடை என்று ஒரு பெரிய யுத்தவிமானத்தை கொள்வனவு செய்திருந்தது. அது ஒரு தாட்டான் ப்ளேன். ஸ்லோவாக தான் நகரும். கோட்டைக்கு குண்டு போடுவதென்றால் உரும்பிராய்க்கு மேலே இருக்கும்போதே குண்டை தள்ளிவிடும். இதெல்லாம் கீழே இருந்தபடி வடிவாக கவனிக்கலாம். ஒரு வெள்ளை நிற குண்டு அது. ஸ்லோவாக நகர்ந்து நகர்ந்து ஒரு கண் மட்டுக்கு கோட்டை, கொட்டடிப்பக்கம் போய் விழும். பத்து விழுந்தால் ஐந்து தான் வெடிக்கும். வெடித்தால் விழுந்த இடத்தில் இருந்த வீடு தரைமட்டம் ஆகும். யாழ்ப்பாண கம்பஸ் பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேர் எதிரே, இராமநாதன் ரோட்டுக்கு அடுத்தபக்கமாக ஒரு இரண்டு மாடி வீடு இருந்தது. ஒரே ஒரு சகடை குண்டு தான். வீடு தரை மட்டம். அடுத்தநாள் பூசி மெழுகலாம் என்ற நிலையில் அந்த இடம் இருந்தது.
சகடைக்கு முதல் வந்த விமானம் தான் அவ்ரோ. ஒருவித பிரவுன் கலர் விமானம். வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்கு ஒருமுறை குண்டுபோட்டுவிட்டு போட்ட வேகத்திலேயே பழுதடைந்து நாவற்குழியில் ஒருமுறை விழுந்துவிட்டது. நல்லூர் கண்காட்சியில் அதன் பாகங்களை அப்போது அடிக்கடி காணலாம். “அவரோ வாறார்” என்று நக்கலாக அழைப்பதுமுண்டு.
1990ம் ஆண்டு. எனக்கு பத்துவயசு. ஒரு நாள், ஒக்டோபர் மாசம் என்று நினைக்கிறேன், இந்த அவ்ரோ வழமை போல வருகிறது. குண்டு போடுகிறது. வெள்ளை நிறத்தில் இருக்கும் குண்டு இன்றைக்கு கறுப்பு நிறத்தில் இருக்கவே, அம்மாவுக்கு சொல்லுகிறேன். “என்ன சனியனோ தெரியாது, பங்கருக்குள் போயிரு” என்கிறார். குண்டு விழுகிறது ஆனால் வெடிப்பதாக இல்லை. மீண்டும் மீண்டும் வந்து குண்டை போடுகிறது. இது தான் இடம் என்றில்லாமல் யாழ்ப்பாண நகரம் முழுதும் எழுந்தமாற்றுக்கு குண்டுகள் விழுகின்றன. ஆனால் எதுவுமே வெடிப்பதாக இல்லை. சத்தம் இல்லை. எல்லாம் முடிந்து அரை மணி கழிந்திருக்கும். ஏதோ ஒரு நாற்றம். “டோய்லட்டுக்கு போனனி, தண்ணி ஒழுங்கா ஊத்திணியா?” என்று அக்கா என்னை திட்டுகிறாள். ஆனால் ஊர் முழுக்க நாறுகிறது. கடையடிக்கு போயிருந்த அண்ணா மூக்கை பொத்திக்கொண்டே வீட்டுக்கு வந்தார். அவருக்கு ஓங்காளித்துக்கொண்டு வந்தது.
“அறுவாங்கள் கக்கூசை சாக்கிலை கட்டி ஊர் முழுக்க தள்ளியிருக்கிறாங்கள்”
“பிரேமதாஸா போட்ட பீக்குண்டு” என்று அடுத்தநாள் உதயனில் தலைப்புச்செய்தி வந்தது. ஆரியகுளத்தடியில் அந்த “பீக்குண்டு” தலையில் விழுந்து சைக்கிளில் போன ஒருவர் ஸ்தலத்திலேயே அவுட். பலருக்கு தொத்து வியாதிகள் பரவியது. அந்த "நாற்றம்” நான்கைந்து நாட்களுக்கு ஊர் முழுதும் உலாவியது. அந்த வியாதிகளை விட, அது கொடுத்த அவமானம் பலமடங்கு அதிகமானது. சிலது மறக்க நினைத்தாலும் மறக்காது. இது அந்த வகை. இதை நான் சந்தித்த அத்தனை சிங்கள நண்பர்களுக்கும் சொல்லியிருக்கிறேன். வெளிநாட்டவருக்கும் சொல்லியிருக்கிறேன். நான் வீரன் கிடையாது. அரசியல் அறிவு எனக்கு சுத்தம். ஆனால் பத்து வயசு சிறுவனுக்கு பீக்குண்டு போட்டுவிட்டு இப்போது வந்து “சகோதரர்கள், ஒரே நாடு, ஒற்றுமை, மண்ணாங்கட்டி, மட்டை” என்று எவனாவது எனக்கு அட்வைஸ் பண்ணி, எதுக்கு இப்படி இருக்கிறாய்? என்று கேள்விகேட்டால் என் பதில்.
“They shit on us”
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கக்கூஸ் சிறுகதை
ஏனைய கொல்லைப்புறத்து காதலிகள்
படங்கள்: siragu.com, இணையம்