Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 494

என் கொல்லைப்புறத்து காதலிகள் : குட்டியன்

$
0
0

 

download

கூப்பன் அட்டை

தொண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள். அ, உ, இ என மூன்று வகையான அட்டைகள். எங்கள் வீட்டுக்கு “உ” அட்டை. அரசாங்க உத்தியோகத்தர் என்றால், பீயோனாக இருந்தாலும் “உ” அட்டை தான். சங்கக்கடை நிவாரணத்தில் “உ” அட்டைக்காரருக்கு கொஞ்சம் தான் தருவார்கள். அரைபோத்தல் மண்ணெண்ணெய், அரை கிலோ பருப்பு, அரைகிலோ சீனி என்று எல்லாமே அரைவாசி தான் கிடைக்கும். அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும். குறைந்த சம்பளம், கூடிய சம்பளம் என்ற கதை பேச்சு இல்லை. அரசாங்க உத்தியோகம் என்றால் சும்மாவா? பணக்காரர் இல்லையா?

அப்பாவின் சம்பளம் அப்போது ஐயாயிரம் ரூபாய். அவரின் செலவு போக, ஓமந்தை தாண்டி எங்கள் கைக்கு வருவது நாலாயிரம் ரூபாய். அதுவும் ஏதாவது அடிபாடு, பாதை மூடீட்டாங்கள் என்றால் கதை கம்மாஸ். அந்த நாலாயிரத்தில் தான் ஆறுபேர் கொண்ட குடும்பத்தை அம்மா பார்த்துக்கொண்டார். கோட்டை, மண்டைதீவு பக்கம் பிரச்சனை என்றால் கொட்டடி மாமி ஆக்கள் வேறு வந்து இறங்குவினம். ஆறு பத்தாகும். அம்மா சமாளிப்பார். அதுவும் சிக்கல் என்றால் இருக்கவே இருக்கிறது அடைவு, காப்பில் இருந்து தாலிக்கொடி வரைக்கும் போய்வரும். இல்லாவிட்டால் சிவன் ஸ்டோர்ஸில் கொப்பிக்கு சாமான் வாங்குவோம். மாசக்கடைசியில் இருக்கிற சிந்தாமணி, வீரகேசரியில் இருந்து, ஒருமுறை எண்டமூரி நாவல்கள் பத்தை ஒரே கட்டாக அரசடி ரோட்டு நூலகத்துக்கு நானே விற்று நூறு ரூபாய் வாங்கியிருக்கிறேன். இரண்டு மூன்று நாள் சமாளிக்கலாம். சமாளித்திருக்கிறோம். இப்படி விற்றிருக்கிறோமே ஒழிய, காசு இல்லை என்று ஒருநாளும் அடுத்த நாள் பேப்பர் வாங்காமல் விடமாட்டோம். எங்கள் குடும்பம் என்றில்லை, அந்த சமயம் எந்த அரசாங்க உத்தியோகத்தர் வீட்டிலும் இந்த பஞ்சப்பாடு இருந்தது. ஊர் முழுக்க கடன் இருந்தது. வீடு பாங்கிலே இருந்தது.

“உ” அட்டைக்காரர் நிலை இப்படியை இருக்க “அ”, “இ” அட்டைக்காரர் பாடு வலு கலாதி. அவர்கள் தான் இந்த “வருமானம் குறைந்தவர்கள்” பிரிவு. அவர்களுக்கு எல்லாம் நிவாரணம் டபுளாக கிடைக்கும். அவர்களில் ஒரு சிலர் நிஜமாகவே வசதி குறைந்தவர்கள். விட்டுவிடுவோம். ஆனால் தொண்ணூறு வீதமான அன்றைய “வசதி குறைந்தவர்கள்” வேறு யாருமல்லர். இந்த வெளிநாட்டுக்காரரும் பிஸ்னஸ்காரரும் தான்.

பொற்பதி ரோட்டில், எங்களுக்கு தெரிந்த குடும்பம் ஒன்று.  எட்டு பிள்ளைகளில் ஆறு பிள்ளைகள் வெளிநாட்டில் செட்டில். தகப்பனிடம் கேட்டால் ஒவ்வொரு நாட்டில் எத்தனை குழந்தைகள் என்று கணக்கு சொல்லுவார். கூட்டிப்பார்த்தால் ஏழு வரும். அவ்வளவு வீக்கு.  கடைசி பெடியன் டியூஷனுக்கு இரட்டைப்பட்டு சங்கிலி வெளில விட்டுக்கொண்டு தான் வருவான். அவ்வளவு காசு. ஆனால் எட்டு பேருக்கும் சங்கத்தில கணக்கு காட்டி, எல்லோருக்கும் வேலையில்லை என்று விதானைக்கு புகையிலை வாங்கி கொடுத்து எழுதிவாங்கி, கள்ள நிவாரணம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் வெறும் கூடையில் கியூவில் நின்று நிவாரணம் வாங்கும்போது, அவர்கள் போறைபாக்கில் நிவாரணம் எடுத்து சைக்கிள் காரியரில் வைத்து பாரம் தாளாமல் உருட்டிக்கொண்டு போவார்கள்.  அதை விட கடுப்பு என்னவென்றால் “கூப்பனுக்கு தாற புழுப்பிடிச்ச புழுங்கல் அரிசியை மனுசன் சாப்பிடுவானா?’ என்று அதை அம்மாவுக்கு விற்றுவிட்டு,  அவர்கள் விலை அதிகமான முத்துச்சம்பா வாங்கி புரியாணி செய்வார்கள். சரி அந்த வயித்தெரிச்சல் இப்ப எதற்கு?"

லச்சுமி வந்தாள்

வீட்டு நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது. சாமான்கள் விலை எக்கச்சக்கம். பால்மா எல்லாம் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு விலை. இந்த நிலையில் கூப்பனுக்கு தரும் விட்டாஸ்பிறே மாவை தேத்தண்ணியில் கலந்தடித்தால் வயித்தால போகுது என்று ஒரு பிரச்சனை. லக்ஸ்பிரே, நெஸ்பிறே எல்லாம் நாலு பிள்ளை சீதனம். சரிவராது. என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒரு ஆடு வளர்த்தால் தேசியப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தீர்மானமானது. கேட்டு அனுப்பிய கையோடு ஒரு சினை ஆட்டை ஆனந்தம் அண்ணா அராலியில் இருந்து அவிட்டுக்கொண்டுவந்து வீட்டில் கட்டிவிட்டார். “எவ்வளவு?” என்றதுக்கு “அவசரமில்ல, பேந்து பார்ப்பம்” என்றார். “பெயர் என்ன?” என்று நான் கேட்க “லச்சுமி” என்றார். 

Picture 001[4]

எங்கள் வீட்டுக்கு இப்படித்தான் லட்சுமி வந்தாள். பிள்ளைத்தாய்ச்சி. வெள்ளை நிறம். சமச்சீரான கொம்புகள். மடி மட்டும் ஒன்று நீண்டு மற்றயது குட்டையாக இருக்கும். முதன்முதலில் லட்சுமி என்று அழைத்தபோது திரும்பவில்லை. நெருங்கியபோது மிரண்டது. முதுகை தடவிவிட சென்றவேளை முட்ட வந்தது. வாளியில் தண்ணீர் கொண்டுபோய் கொடுத்தேன். தட்டி விழுத்திவிட்டு திமிறியது. நெல்லி மரத்தை சுற்றி சுற்றி வந்து கயிற்றை சுருக்கி இதற்கு மேல் சுற்றமுடியாமல் மரத்தோடு சாய்ந்த போது செய்வதறியாமல் மே மே என்று பாவமாய் பார்த்தது.

மீண்டும் போய் இம்முறை முகத்தை தடவிவிட்டு கயிற்றை இளக்கி, முட்டு எடுத்து கட்டிவிட்டேன். தண்ணீர் எடுத்து வந்து தலையை தடவியவாறே கொடுத்தேன். குடித்தது. மிரளவில்லை. நான் பிரச்சனை இல்லாத ஆள் என்று உணர்ந்திருக்கவேண்டும். அம்மா கழனித்தண்ணி சரிக்கட்டிக்கொண்டு வந்தார். பிளாஸ்டிக் வாளிக்குள் கத்தரிக்காய் வெட்டின மிச்சம், பூசணிக்காய் தோல், வாழைக்காய் தோல் என்று சமைக்கும்போது வந்த மரக்கறி மிச்சங்கள் எல்லாமே சோறு வடித்த கஞ்சிக்குள் கலந்த கழனி. கொடுத்தேன். அது குடித்து முடிக்கும் வரை தோய்க்கிற கல்லிலே ஏறி இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். குடித்துவிட்டு என்னை பார்த்து மூசியது. அதன் பாஷையில் நன்றி சொல்லி இருக்கவேண்டும். பின்னர் கொஞ்ச நேரம் நெல்லி மரத்தில் உடம்பை தேய் தேய் என்று தேய்த்துவிட்டு, கால் மடித்து உட்கார்ந்து தூங்க ஆரம்பித்தது. ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் இருந்த “புது இடம்”, “புது ஆட்கள்” என்ற சலனம் இப்போது இல்லை. ஹீரோ குரைக்கும்போது மட்டும், திடுக்கிட்டு கண் முழித்து, நான் முன்னே இருக்கிறேனா என்று செக் பண்ணிவிட்டு மீண்டும் அயர்ந்தது. பார்த்துக்கொண்டே இருக்க லட்சுமி மீது ஒருவித பாசம் பொங்க ஆரம்பித்தது.

லச்சுமி வீட்டுக்கு வந்த நாள் முதல் என் டெய்லி ரூட்டின் மாறியது. பாடசாலை முடிந்து, வீடு வந்து, சாப்பிட்டு, டியூஷன் இருந்தால் போய்வந்து,  இல்லாவிடில் ஒரு குட்டித்தூக்கம் போட்டு நான்கு மணிக்கு பவுடர் எல்லாம் அடித்தபடி குழை குத்தும் கம்பியை தூக்குவேன். அப்புறம் என்ன? அந்த ஏரியா பூராக கண்ணிவெடி அகற்றும் வேலை தான். பழுத்த பிலா இலை தான் ஆட்டுக்கு போட அசல் சாமான். குத்தி குத்தி குத்தி ஒரு இருபது இலை சேர்ந்தபின்னர் அப்படியே இழுத்து உச்சத்தில் விடவேண்டும். பின்னர் மீண்டும் குத்த தொடங்கவேண்டும். நன்றாக காய்ந்த இலை என்றால் குத்தும்போது ஒட்டி நிற்காது. நைசாக குத்தி செருகவேண்டும். ஒன்ற விட்ட ஒருநாள் எங்காவது சீமைக்கிளுவை கிடைத்தால் ஒடித்துக்கொண்டு வந்து கட்டித்தொங்கவிடலாம். கிளுவை கூட ஓகே. ஆனால் வாழை இலை குடுத்தால் மட்டும் லச்சுமி சீண்டாது. தவிடு ஸ்ரீ மில்லில் இருந்து வாங்கிவந்து கலந்து கொடுக்கலாம். புண்ணாக்கு கோண்டாவிலில் ஒரு செக்கு இருந்தது. எடுக்கலாம். லச்சுமிக்கு என்ன டைம் என்ன சாப்பாடு என்ற டீடைல் என் நுனிவிரலில் இருந்தது.

அந்த இரவு

மார்கழி மாசம். இரவு. மூன்று மணி இருக்கும். மழை அடிச்சு கொட்டுது. பெட்ஷீட்டை இழுத்துப்போர்த்திக்கொண்டு நான் நல்ல நித்திரை. திடீரென்று டேய் என்று அக்கா அடிச்சு எழுப்புறா. எழுந்து பார்த்தால் ஷெல்லடி, பொம்மர் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை. நான் பேசாமல் திரும்பவும் படுத்துவிட்டேன். அக்கா மீண்டும் எழுப்பினார். என்னக்கா? என்று எரிச்சலாக கேட்டேன். பூரிப்பாக சொன்னார்.

“லச்சுமி குட்டி போட்டுட்டுதடா”

சடக்கென்று பெட்ஷீட்டை உதறி எறிந்துவிட்டு பின்பத்திக்கு ஓடினேன். லச்சுமி ஒரு மூலையில் நின்றிருந்தது. அண்ணா  கோயிலடி ஆலமரத்தில் கொண்டுபோய் கட்டவென்று நஞ்சுக்கொடி எடுத்து உமலில் முடிஞ்சுகொண்டிருந்தார். அம்மா கடம்புப்பால் கறந்துகொண்டிருந்தார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு …. தேடினேன்.. எங்க? எங்க? எங்க?

லச்சுமிக்கு முன்னே குளிரில் நடுங்கியபடி .. குட்டி கால்கள்... குட்டி தலை… குட்டி உடம்பு. நல்ல நீண்ட செவி. நக்கி நக்கி ஈரமாய் உதிர்ந்து உதிராமலும் உரோமங்கள். கண் திறந்தும் திறக்காமலும்… “தலைவர்” .. நெருங்கினேன். அரவம் கேட்டு லச்சுமி திரும்பி என்னை பார்த்தது. சன்னமாய் “மே..” என்றது. அதன் கண்களில் ஒருவித பெருமை. அருகில் போய் தலையை தடவிட்டு நம்மட ஆளை இரண்டு கையாளும் தூக்கி முகத்துக்கருகே கொண்டுபோக … கண் திறக்காமல் என் மூக்கை ஒரு நக்கு நக்கியது. முதல் முத்தம்! பச்சக். .. “ஈயா .. அம்மா இது நக்கீட்டுது!”

அம்மா சிரித்தபடியே தலைவரை கையில் வாங்கி, லச்சுமியின் மடியருகே கொண்டுபோய் விட்டார். முதற்பால், கடம்புபால் குடித்தார். அப்போது தான் கவனித்தேன். கொஞ்சம் பிரவுன் கலர். பளிச் என்ற கண்கள். பார்த்துக்கொண்டே இருக்கலாம். “கிடாய் குட்டி, என்னடா பெயர் வைக்கலாம்?” என்று அக்கா கேட்டார். யோசிக்காமல் சொன்னேன்.

குட்டியன்.

குட்டியன் வளர ஆரம்பித்தான். இரண்டு மூன்று நாட்களிலேயே எம்பி எம்பி நடக்க ஆரம்பித்தான். இப்போது எனக்கு தாயையும் குழந்தையையும் பார்க்கும் வேலை. தண்ணி விடாய் என்றால் தலைவர் வீட்டுக்கதவடியில் வந்து நிற்பார். நான் போய் பால்போச்சிக்குள் நிரப்பி வந்து, குட்டியனை மடியில் தூக்கி வைத்து, பருக்குவேன். ஏதோ லச்சுமி மடி என்ற எண்ணத்தில் முட்டி முட்டி குடிப்பான். குடிக்கும்போது அவனின் அடிப்பாதங்களை தடவிப்பார்ப்பேன். மென்மையாக இருக்கும். செவி ரெண்டையும் பிடித்து தூக்கினால் கண்களும் சேர்ந்து மேலெழும். சொக்கிப்போவான் அவன். தூக்கி தோளில் வைக்கலாம். என்னுடைய எல்லா விளையாட்டுக்கும் எடுபடுவான் என்ர குட்டியன்.

பின்னேரம் என்றால் ஓடிப்பிடிச்சு விளையாடுவோம். குட்டியன் செம ஓட்டம் ஓடுவான். துரத்துவான். அதிலும் பயங்கர இன்டெலிஜன்ட். எங்கள் வீடு சண்ஹூடை சுத்தி சுத்தி ஓடுவோம். கொஞ்ச நேரம் சுத்தி சுத்தி கலைப்பான், திடீரென்று ப்ரேக் அடித்து மற்றப்பக்கத்தால் வந்து முன்னே நிற்பான். இது என்னைபார்த்து அவன் கற்றுக்கொண்ட டெக்னிக். நான் கலைக்கும்போதும் அப்படித்தான். கலைத்துக்கொண்டே போவன். அண்ணரும் இம்மை மறுமை இன்றி திரும்பிப்பார்க்காமல் ஓடுவார். திடீரென்று நான் மற்றப்பக்கத்தால் ஓடிப்போய் முன்னே நிற்பேன். சட்டென்று என்னை முன்னே கண்ட டென்ஷனில் சடக்கென்று ரிவேர்ஸ் எடுக்க,  தேங்காய்பூவில் போலிஷ் பண்ணப்பட்ட தரையில் தலைவர் சரேலென்று வழுக்கியபடி போய் விழுவார். இந்த விளையாட்டில் நாய்க்குட்டி ஹீரோவும் இணையும்போது சுதி கிளம்பும். அம்மாவின் பூங்கன்று ஒன்று விடாமல் முறித்துக்கொண்டு ஓடிவிளையாடுவோம். அம்மா கத்தியபடி அடிக்கவந்தால், ஹீரோ கேற்றுக்கு வெளியே ஓடிவிடும். குட்டியன் மட்டும் என்னிடம் வந்து முன்னங்கால் ரெண்டையும் தூக்கி என் வயிற்றில் வைத்தபடி தூக்கு என்று அடம்பிடிப்பான். தூக்கி வைத்தபடியே அப்போது பள்ளிக்கூடத்தில் படிப்பித்த பாட்டு ஒன்றை பாடுவேன்.

ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி
அருமையான சின்னக்குட்டி
ஓட்டம் ஓடி வந்திடுவாய்
உனக்கும் முத்தம் தந்திடுவேன்

பாடியபடி முகத்தை அதன் முகத்துக்கு கிட்டே கொண்டுபோகும்போது ஒரு நக்கு நக்குவான். முத்தம்! பச்சக். .. சொர்க்கம். அம்மாவை கூப்பிடமாட்டேன்.

ஆட்டுப்பால்.

குட்டியன் பிறந்த கையோடு வீட்டிலே தேத்தண்ணி பிரச்சனை தீர்வுக்கு வந்தது. அதிகாலையிலேயே அம்மா பால் கறந்துவிடுவார். லச்சுமியின் மடியை கழுவி, ஒரு நிமிஷம் குட்டியனை இடித்து குடிக்கவைத்து, பின்னர் பலகக்கட்டை போட்டு உட்கார்ந்தால் கறத்தல் ஆரம்பிக்கும். சில்வர் சட்டியில் சரக்கென்று கறக்க, கைங் கைங் என்று சீறிக்கொண்டு பால் நிரம்பும். அரைவாசி நிரம்பிய பின்னர் கைங் சத்தம் கர் என்று மாறும். கறந்துமுடிந்த பின்னர் மீண்டும் குட்டியனை குடிக்கவிட்டுவிட்டு, அம்மா எங்களுக்கு தேத்தண்ணி ஊற்றித்தருவார். பின்னேரத்துக்கும் எடுத்து வைப்பார். அப்போதும் அரைப்போத்தல் அளவில் மிஞ்சும். தயிர் உறை போட்டு அடுப்படியில் எல்லாம் வைப்பார். அவ்வளவு கறத்தல் கறக்கும் லச்சுமி.

45573_420721816414_3116177_n

கம்பன் விழா

சித்திரை மாசம் என்றால் அனேகமாக கம்பன் விழா தொடங்கிவிடும். பள்ளிக்கூடம் முடிய அப்படியே நல்லூர் வடக்கு வீதிக்கு போய் ஆவென்று அவ்வளவு நிகழ்ச்சியையும் கேட்டுவிட்டு வீடு போய் கைகால் முகம் கழுவி சாப்பிட்டுவிட்டு பத்திக்கு போவேன். அங்கே நித்திரை கொள்ளும் ஹீரோவை இழுத்துக்கொண்டு, தாயோடு நிற்கும் குட்டியனையும் கூட்டிக்கொண்டு முற்றத்துக்கு போய், பக்கத்து மூன்றாய் கதிரைகள் போட்டுவிட்டு அண்ணர்மார் ரெண்டுபேரையும் இருங்கடா என்பேன். கம்பன் விழா தொடங்குகிறது.

“எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடிகளை என் சிரமேற் பணிந்து வணங்கி”…

ஹீரோ தூங்கி வழியும்…  40039_420717296414_1382296_n

“அவையில் உள்ள பெரியோர்களே, தாய் மார்களே,  குழந்தைகளே, ஹீரோவே” …

ஹீரோ கண்விழிக்காமலேயே வாலை கடமைக்கு ஆட்டிவிட்டு தொடர்ந்து தூங்கும்..

“குழந்தைகளே… என் இனிய குட்டியனே” ..

கேட்டவுடன் சடக்கென்று ஓடிவந்து மார்பில் இரண்டு கால் வைப்பான் அவன். கொஞ்சிவிட்டு மீண்டும் கொண்டுபோய் இருத்திவிட்டு கம்பவாரிதி பேச்சை தொடருவார்.

“’மன்னவன் பணி அன்றாகின், நும் பணி மறுப்பெனோ’, கம்பன் என்ன சொல்லுகிறான்? … அம்மா கைகேயி, என் தந்தை சொன்னால் தான் நான் மறுக்கமாட்டேனோ? நீ சொல்லியிருந்தாலும் மறுக்கமாட்டேனே” என்பான் இராமன். அதை மட்டும் சொல்லிவிட்டு போயிருந்தால் அது இராமன் கிடையாது. அங்கே தான் கம்பன் கவிச்சக்கரவர்த்தியாகி தனித்து நிற்கின்றான். ம்ம்ம் ’மன்னவன் பணி அன்றாகின், நும் பணி மறுப்பெனோ’ …’என் பின்னவன் பெற்ற செல்வம், அடியனேன் பெற்றதன்றோ’”

பெற்றதன்றோ என்ற இடத்திலே குரலை தளைய விடும்போது ஹீரோ வாலை சடக்கென்று இலையான் துரத்த அடித்துவிட்டு தொடர்ந்து நித்திரை கொள்ளும். குட்டியன் மட்டும் ங்கே என்று முளித்திருப்பான். பட்டிமன்றம் முடிந்தபின் நானே கரகோஷம் செய்ய, தன்னைத்தான் கூப்பிடுகிறேன் என்று மீண்டும் மடியில் வந்து கிடப்பான். இப்படித்தான் ஒரு நாள் வந்துகிடந்தவனின் தலையை தடவிப்பார்த்தேன். ஏதோ முட்டுப்பட்டது. அட மென்மையான கொம்பு. குட்டியனுக்கு கொம்பு வளர தொடங்கியது.

அந்த நாள்.

வருடங்கள் கழிந்தது. குட்டியன் இப்போது பெருங்கடா. முன்ன மாதிரி விளையாட்டு குறைந்துவிட்டது. ஆனால் இன்னமும் நெருங்கிப்போனால் சர்க்கென்று பாய்ந்து கொஞ்சு என்று மூஞ்சியை நீட்டும். டேய் கொம்பு கண்ணுக்க குத்திடும் எண்டு அம்மா வெருட்டுவா. எனக்கு என்ர குட்டியனில பயம் இல்லை. நல்ல நீட்டு கொம்பு. என்னளவுக்கு இப்போது குட்டியன் வளர்ந்து நின்றான். லச்சுமியை விட நல்ல உயரம். நான் வளர்த்த குட்டியன் அல்லோ.

45573_420721821414_4275775_n

அன்றைக்கு ஒருநாள், பொன்னுச்சாமி மாஸ்டரின் தமிழ் கிளாஸ் முடிந்து வீடு திரும்பினேன். என்றுமில்லாதவாறு ஒரு வித அமைதி வீட்டில் இருந்தது. “அப்பன் தேத்தண்ணி குடிக்கிறியா?” என்று அம்மா திடீரென்று பாசம் பொழிந்தார். என்னைக்கண்ட அக்கா தெரியாத கெமிஸ்ட்ரி வாய்பாட்டை உரத்துச்சொன்னார். சம்திங் ரோங் என்று தெரிந்துவிட்டது. பாத்ரூமுக்கு போகவென பத்திக்கு போனேன். லச்சுமி என்னை கண்டத்தும் மே மே என்று கத்தியது. வழமைக்கு மாறான ஒரு கத்தல் அது. சந்தேகத்தில் அதனிடம் நெருங்க, இன்னமும் கத்தியது. தலையை தடவ உதறியது. இப்போது கத்தல் கூடி காட்டுக்கத்தல் ஆனது. என்னடா என்று குட்டியனை தேடினால் அவனை காணவில்லை. நெல்லிமரத்தடியில் பார்த்தால் அங்கேயும் இல்லை. குட்டியன் என்று கத்தினேன். ஹீரோ தான் ஓடிவந்து வாலாட்டியது. “டேய் குட்டியன் டேய் குட்டியன்.. அம்மா குட்டியன் எங்கே?” என்று கத்தினேன். “இப்ப எதுக்கு கத்திறாய், அதை கூட்டிக்கொண்டு போயிட்டாங்கள்” என்று சொல்ல தடுக்கென்றது.

“எங்கே கூட்டீட்டு போட்டாங்கள்? யாரு கூட்டிப்போனது?”

“அதுக்கு தவிடும் புண்ணாக்கும் வச்சு கட்டுமே … வளர்ந்திட்டுது .. அதான் இறைச்சிக்கு வித்தாச்சு”

“இறைச்…. என்ன சொல்லுறிங்க அம்மா?”

அக்கா உடனே ஓடிவந்து சொன்னார்.

“இல்லையடா .. அத வளர்க்கபோறன் என்று ஆனந்தம் அண்ணே வந்து கேட்டார் .. குடுத்திட்டம்..”

“போய் சொல்லாதீங்க அக்கா .. அது என்ர குட்டியன் … எப்பிடி குடுக்கலாம்?.. அது எப்பிடி என்னை விட்டிட்டு இருக்கும்? … மெய்யா சொல்லன .. இறைச்சிக்கா குடுத்தீங்க .. ஐயோ ..”

நான் கேட்க கேட்க அம்மா பேசாமல் இருந்தார். அக்கா ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டார். எனக்கு முகம் எல்லாம் சிவந்து உடல் திடீரென்று குளிர்ந்தது போல தோன்றியது.  ஹீரோ காலடியில் வந்து வாலாட்டிக்கொண்டு நின்றது. என்ன செய்வது என்று புரியவில்லை. மே மே என்று லச்சுமி அழைத்தது. போனேன். தண்ணீர் வாளியை தட்டி விழுத்தியது. தடவி விடப்போக மிரண்டது. லச்சுமி என்றேன் திரும்பிப்பார்க்காமல் சுற்றி சுற்றி வந்து கயிறு இறுகியது. மே என்று இன்னமும் கத்தியது. இளக்கவென நெருங்கினேன். மூசி மூசி என்னை கலைத்தது.  பக்கத்திலேயே குழைகுத்தும் கம்பி தொங்கியது. குட்டியனுக்கு என்று பாதிக்குழை இன்று போடவென விட்டு வைத்திருந்தேன்.

குட்டியன் போகும் போது காட்டுக்கத்தல் கத்தி இருப்பானா? என்னை நினைத்திருப்பானா? மனம் இறுகிப்போய் ஆட்டுக்கல்லின் மேல் போய் இருந்தேன். நான் வந்து இருந்தவுடன் குட்டியன் ஓடி வந்து நெஞ்சிலே குதிப்பது போன்ற உணர்வு. தலையை தடவிவிடும்போது அன்று தான் அந்த முளை கொம்பை தொடுவது போன்ற உணர்வு. செவி இரண்டையும் பிடித்து தூக்கும் போது கண்கள் சரேலென்று எகிறும் உணர்வு. போச்சியில் பாலூட்டுவது போன்ற உணர்வு.  அது தன் முகத்தை எனக்கு கிட்டே நெருங்க கொண்டுவருவது போன்ற உணர்வு.

ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி
அருமையான் சின்னக்குட்டி
ஓட்டம் ஓடி வந்திடுவாய்
உனக்கு முத்தம் தந்திடுவேன்.

என்று நானும் நெருங்கும்போது குட்டியன் என் முகத்தை நக்கி .. பச்சக் … குட்டி…யன்…..

ஓ என்று அழ தொடங்கினேன்.

&&&&&&&&&&&&&

ஏனைய கொல்லைப்புறத்து காதலிகள்


Viewing all articles
Browse latest Browse all 494

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>