Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 494

படிச்சதென்ன? பிடிச்சதென்ன? - கதாவிலாசம்

$
0
0

 

274

ஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் வாசகன் தானும் ஒரு படைப்பாளி ஆகிறான். பாத்திரங்களை படைக்கிறான். காட்சிகளை உருவாக்குகிறான். இன்செப்ஷன் படத்தில் அந்த ஆர்கிடெக்ட் பெண், கனவில் கட்டிடங்களையும் மனிதர்களையும் வடிவமைப்பாள். வாசிக்கும்போதும் அது நடக்கும். இராமநாதபுரமும் போஸ்டனும், நல்லூரும் கொழும்பும் அநேகமான நூலகங்களிலேயே அடிக்கடி உருவாகின்றன. மார்கழி மாதத்துகுளிர் வாஷிங்டன் பனி காலத்து நடையை உருவகிக்க போதுமானதாக இருக்கும்.

The namesakeவாசிக்கும்போது நானே கொகுலாகவும் அஷோக்காகவும் ஆஷிமாவாகவும் உருவம் எடுத்திருக்கிறேன். அஷோக் இறந்தசெய்தி கேட்டு ஆஷிமாவுக்கு குளிர முதல் எனக்கு குளிர்ந்தது. பிரிவோம் சந்திப்போம் ரத்னாவுடன் பேசுவதற்கு வெட்கப்பட்டு தலை குனிந்திருக்கிறேன். மஞ்சளழகி கடற்கரையில் நீராடிவிட்டு வருகையிலே வசமிழந்திருக்கிறேன். கோபல்ல கிராமத்து அண்ணாச்சியின் புத்தக அலுமாரியை நோட்டம் விட்டிருக்கிறேன். ஐன்ஸ்டீனோடு பொன் நகரத்து புகையிரத மணிக்கூட்டை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். ஒன்று கதை மாந்தராக நாங்கள் மாறுவோம். இல்லை கதை மாந்தரோடு அசரீரியாக உலாவுவோம்.

ஒவ்வொரு புத்தகத்தையும் வாசிக்கும்போது அதை எழுதிய எழுத்தாளன் தான் உலகிலேயே அதி சிறந்த எழுத்தாளன் என்ற எண்ணம் வரும். செல்லம்மாளை வாசித்தபோது புதுமைப்பித்தனை விட எவன் வருவான் என்று எண்ணினேன். கோர்த்சேயின் Disgrace வாசித்தபோது இப்படியும் எழுதமுடியுமா என்று தோன்றியது. கோயில் மண்டபத்து மூலையில் சிவனே என்றிருக்கும் குட்டி பிள்ளையார் சிலையை பார்க்கும்போது அதற்குள் தான் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் வரும். வணங்காமல் போக மனம் வராது. ஒரு அழகான கவர் ட்ரைவை சச்சின் அடித்தாலும் கௌரி அடித்தாலும் மெய் சிலிர்க்கிறது. இதில் பெரியோர் சிறியோர் ஏது?

வாசிப்பும் அப்படியே.

எஸ்ராவின் கதாவிலாசத்தை வாசித்தபோது சேம் பின்ச். மனுஷன் கதாசிரியர்களை கொண்டாடியிருக்கு. கூட வாழ்ந்திருக்கு. ஒப்பிடுதல் என்பது கொண்டாடுவதற்காகவே ஒழிய ஒருவரை உயர்த்தி மற்றவரை தாழ்த்த அல்ல. அதை எஸ்ரா சொல்லாமல் அழகாக செய்கிறார். தும்பைபூவின் நுனியில் இருக்கும் தேன்துளி சிறிதே என்றாலும் அதன் சுவைக்கு நிகரே இல்லை என்கிறார். தன் வாழ்வில் கண்ட நிகழ்வுகளை, மாந்தர்களை வாசிக்கும்போது கொண்டுவருகிறார். அல்லது அவர்களாக வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். ரசிகன்டா.

வாசித்துக்கொண்டிருக்கும்போதே கேதா வீட்டு கழிவறை கொமெட் டாங்கில் கதாவிலாசம் இருந்த ஞாபகம் வந்தது!

மெசேஜ் அனுப்பினேன். பதில் வந்தது.

"That book changed me, rasikan bass. He get lost and make us get lost and immerse in it."

தன்னை தொலைத்து வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் எழுத்தாளன் ஆகலாம். எஸ்ரா எழுத்தாளன் ஆனதில் ஆச்சரியம் இல்லை. எப்போது எழுத்தாளன் வாசிப்பை நிறுத்துகிறானோ அவன் எழுத்துகளும் ஒரு குறித்த வடிவத்துக்குள் தேங்கிவிடும். அல்லது எழுதுவதை நிறுத்திவிடுவார்கள். வாத்தியார் மரணப்படுக்கையிலும் வாசித்தார். எழுதினார்.

s-ramakrishnan

கதாவிலாசம் … வாசிப்பின் கொண்டாட்டம்.

&&&&&&&&&&

படிச்சதென்ன பிடிச்சதென்ன?


Viewing all articles
Browse latest Browse all 494

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>