Quantcast
Channel: படலை
Viewing all 494 articles
Browse latest View live

என் கொல்லைப்புறத்து காதலிகள் : கொட்டில்

$
0
0

 

665482_442412385795144_1275380171_o

“துணிக்கை ஒன்றை ஆரம்ப வேகம் 100m/s இல் செங்குத்தாக மேல்நோக்கி எறிந்தால், அது திரும்பி பூமியை அடையும் வரையிலான பயணத்துக்கான வே...” 

இந்த இடத்தில் நிறுத்திவிட்டு குமரன் மாஸ்டர் ஒரு மர்ம புன்னகை ஒன்றை விடுவார்.

“வேக நேர வரைபா சேர்?”

சேர் இப்போது சடக்கென்று கேள்வியை மாற்றிவிடுவார்.

“…இடப்பெயர்ச்சி நேர வரைபை வரைக”

சொல்லி முடித்துவிட்டு இறங்கி நடந்துவருவார். எல்லோரும் அட் எ டைம் குனிவார்கள். போகும் வழியிலேயே முன் வாங்கு யாழ் இந்துக்காரன் கொப்பியை நீட்டுவான். சேர் பார்த்திட்டு ஒரு சிரிப்பு சிரிப்பார். கொஞ்சம் பின்னே வந்தால் இன்னொருத்தன் நீட்டுவான். ஒரு சின்ன யோசனைக்கு பிறகு அதே சிரிப்பு. இன்னும் கொஞ்சம் பின்னே வந்தால், ஏதோ கலியாண வீட்டு ரெஜிஸ்ரேஷனில கையெழுத்து வைக்கிற மாதிரி அத்தனை பெரும் சீரியஸா ரியாக்ஷன் கொடுப்பாங்கள். நிமிரவே மாட்டாங்கள். நம்மட வாங்கு நிலைமை இன்னும் சோகம். பக்கத்தில இருந்த மக்கரின் வரைபை பார்த்தால்,  பந்தை வானத்தில எறிஞ்சத பார்த்து அப்பிடியே கீறியது போல இருந்தது. கீர்த்தியின் கொப்பியில் வெறும் நேர்கோடு மட்டும் இருக்கும். கேட்டால் புவி ஈர்ப்பு மாறாதென்று விஞ்ஞான விளக்கம் குடுப்பான். மயூ என்கின்ற மயூரதன், நம்ம செட்டிலேயே செம குண்டன். அதே நேரம் செம மண்டையும். அவன் வரைபை பார்த்தால், ஒரு அரைவட்ட வடிவ பரவளைவாக நேர அச்சுக்கு மேலே கிடந்தது. எனக்கென்றால் அது பிழை போல இருந்தது. நாங்களும் மண்டை என்று இந்த உலகுக்கு நிரூபிக்கவேண்டாமா? என்னுடைய வரைபு ஒரு சரிவான நேர்கோடாக இருந்தது. ஒரு டக் டிக் டோஸில் கீறியது தான். காட்டினேன். வாங்கிப்பார்த்துவிட்டு குமரன் மாஸ்டர் சொன்னார்.

“நல்லா….…. தெரியுது”

சொதப்பிவிட்டேன். மயூவின் கொப்பியை அவரே போய் வாங்கிப்பார்த்தார். பார்த்திட்டு ஒரு புன்னகை. “நீ ஒரு மண்டைக்காய்” என்று சொல்லும் புன்னகை அது. அந்த புன்னகைக்காக பலர் தவம் கிடப்பார்கள் அப்போது. இப்போது எங்களை தாண்டி முன்னே போகும் பகுதி தேவதைகளின் கூடாரம். ஒன்றிரன்று பெண்கள் கொப்பி காட்டுவார்கள். மற்றைய பெண்கள் கால் நகத்துக்கு கியூடெக்ஸ் சரியாக அடித்திருக்கா என்று அந்த நேரம் தான் செக் பண்ணுவார்கள். தேவதைகளை நாங்கள் கணக்கு பண்ண வேண்டுமே ஒழிய அவர்களை கணக்கு பண்ண சொல்லக்கூடாது. ஆனால் குமரன் மாஸ்டர் அந்த இரண்டையும் செய்தார்!

இப்படி ஒரு ரவுண்ட் போய்விட்டு, குமரன் மாஸ்டர் மீண்டும் கரும்பலகைக்கு போய் மீண்டும் அதே நக்கல் சிரிப்பு சிரித்துவிட்டு பன்ச் டயலோக் ஒன்று விடுவார்.

“தம்பியவை பௌதீகம் எண்டது ஒரு கடல் பாருங்கோ!”

**********

டியூஷன் கொட்டில்… யாழ்ப்பாணத்து கல்வியின் இருதயம் இது. இங்கே காலடி எடுத்து வைக்காமல் எந்த ஒரு யாழ்ப்பாண இளைஞனும் ஏஎல் தாண்டியிருக்கமாட்டான். இன்றைக்கு உலகம் பூரா பரந்திருக்கும் கணக்காளர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலை வல்லுனர்கள் முதற்கொண்டு சாதாரண முகநூல் புரட்சியாளர்கள் வரை எவருமே இங்கே படிக்காமல் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள். ஸ்கோலர்ஷிப் பாஸ் பண்ணினால் தான் யாழ் இந்துவுக்கோ வேம்படிக்கோ நுழையலாம். அட்மிஷன் டெஸ்ட் பாஸ் பண்ணினாலும் அப்பன்காரனிடம் ஐயாயிரம் ரூபா இருந்தால் தான் சென்ஜோன்ஸ் சுண்டுக்குளியில் சேரலாம். இப்போது அது ஐம்பதாயிரம் என்கிறார்கள். ஆனால் எங்கள் யாழ்ப்பாணத்து டியூஷன் கொட்டில் அட்மிஷனுக்கு இது ஒன்றுமே தேவையில்லை. மாச மாசம் பீஸ் கட்டினால் போதுமானது. வருகை டாப்பு இல்லை. யூனிபோர்ம் இல்லை. ஒழுங்கான கிளாஸ் ரூம் இல்லை. ஆனால் அங்கே கற்பிக்கும் ஆசிரியர்களும் டூப்பு இல்லை. எங்கள் எல்லோரையும் வழிகாட்டிய, இன்றைக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களை படிப்பித்து சமூகத்துக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்து டியூஷன் கொட்டில் தான் இன்றைக்கு நம்மட கொல்லைப்புறத்து காதலி.

************

“சண் காட்டும் ஆட்கள்” என்று ஒரு பிரிவு இருக்கிறது. எட்டு மணி டியூஷனுக்கு ஆறுமணிக்கே எழுந்து பேபி சோப் போட்டு தேய் தேயென தேய்த்து முகம் கழுவி, பின்னர் தமக்கையின் பெஃயார் அண்ட் லவ்லியை மூஞ்சிக்கு தப்பும் ஆகிருதிகள் இவர்கள். அந்த காலத்தில் ஒரு சீப்பு இருந்தது. தட்டையாக நடுவில் ஒரு சின்ன வளையம், அதற்குள் நடுவிரலை செருகி, அப்படியே உள்ளங்கையில் வைத்து மேவி இழுக்கலாம். இரண்டு காதுப்புற தலைமயிரையும் அப்பிடியும் இப்பிடியுமாக இழுத்து ஒதுக்கலாம்.  பிடரிப்பக்கம் இரண்டு புறமும் சேர்ந்து நடுவிலே ஒரு நேர்கோடு கீறும். நம்மட ஆளு இத அழகாக செய்வார்.

எங்கள் காலத்தில் பிரபுதேவா baggy ஜீன்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போய், குழாய் ஜீன்ஸ் பாஷன் வந்துவிட்டது. மேலே இருந்து கீழே வரை ஒரே சைஸ் குழாய் தான்.  டெனிம் எல்லாம் எவனாவது வெளிநாட்டில அண்ணன்காரன் இருப்பவன் மட்டும் போடுவான். இந்த ஜீன்சுக்குள் ஷேர்ட் இன் பண்ணுறது ஒரு லோங் ப்ரோசீஜர். தலைவர் என்ன செய்வார் என்றால், முதலில் பனியனை தன்னுடைய அப்பிள் பெண்டருக்குள் செருகுவார். அது கூட ஓகே. ஆனால் அடுத்ததாக ஷேர்ட்டையும் அங்கேயே செருகுவார். பின்னர் ஜீன்சை இழுத்து பெல்ட் போட, ஷேர்ட் அப்படியே உடம்போடு ஒட்டிக்கிடக்கும். தலைவர் திரும்பி இப்போது பின்பக்க ஷேர்ட்டை கொஞ்சமே வெளியே இழுத்துவிடுவார். பார்த்தால் முன்னுக்கு மட்டும் ஷேர்ட் வண்டியோடு ஒட்டிக்கிடக்க, பின்னுக்கு பொங்கிப்போய் இருக்கும். இது ஸ்டைல். இதே போஸில் கண்ணாடிக்கு முன்னே நின்று இரண்டு கைகளையும் அகட்டி விரித்து, தலையை ஒரு ஆட்டு ஆட்டி, “தத்தளிக்கும் மனமே தத்தை தருவாளோ?” என்று முணுமுணுத்தபடி நான்கு கொப்பிகளையும் தூக்கிக்கொண்டு அண்ணர் புறப்படுவார். வகுப்பிலே முன் வாங்கில் இருப்பார். கடைசி கிளாசில என்ன படிச்சம்? என்று வாத்தி கேட்கும்போது தடாலென்று எழுந்து நோட்ஸ் கொடுப்பார். கொடுக்கும்போது பக்கத்து வரிசையில் இருக்கும் பெட்டைகளை பார்த்து சிரிப்பார். கணக்கு கொடுத்தால் மட்டும் குனிந்த தலை நிமிராமல் ஏதோ ஐன்ஸ்டீன் யோசிக்கிற எபக்ட் குடுத்தபடி அப்பிடியே கொப்பியில் கிண்டிக்கொண்டிருப்பார். இப்படி சண் காட்டுற ஆட்களுக்கு இன்னொரு பெயரும் உண்டு. “பொன்ஸ்!”

அடுத்த கோஷ்டி காவாலி கோஷ்டி. இந்த கோஷ்டிக்கு ஷேர்ட் எல்லாம் இன் பண்ணுற பழக்கமே கிடையாது. ஷேர்ட் போட்டால் பின் பக்க அடிப்பக்கம் சோழமன்னனின் ஓலைச்சுவடி போல சுருண்டு போய் கிடக்கும். இவர்கள் ஏல் படிக்க ஆரம்பிக்கும்போது நான்கு பாடத்துக்கும் நான்கு கொப்பிகள் வாங்குவார்கள். முதல் வருஷம் நான்கு கோப்பி இரண்டு கொப்பியாகும். இரண்டாம் வருடம் எல்லாமே ஒரே கொப்பியில் நடக்கும். நான்கு கட்டு கொப்பி வாங்கினால், முதல் கட்டு பிசிக்ஸுக்கு, இரண்டாம் கட்டு கெமிஸ்ட்ரிக்கு. கடைசி இரண்டு கட்டும் டபிள் மட்ஸுக்கு. நோட்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும்போது ஒற்றை முடிஞ்சுது என்று வையுங்களேன். பக்கத்தில இருக்கிறவனிடம் வெறும் ஒற்றை கேட்பார் நம்மட காவாலி. அவன் நடுவால கிழிச்சு கொடுக்க, அண்ணர் செம சீரியஸாக அதில எழுதுவார். அந்த ஒற்றை கொஞ்ச நேரத்தில் ரொக்கட்டாக மாறி சோதியர் எலக்ட்ரோனிக்ஸ் கணக்கில் மண்டை காய்ந்துகொண்டிருக்கும் சமயம் பார்த்து பின்னாலே போய் விழும். யாழ்ப்பாணத்து “கொசப்பு கதைகள்” பலவற்றை உருவாக்கிய இலக்கியவாதிகள் கூட இந்த காவாலிகள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.

969045_280534018750085_1832407604_n

இதிலே மூன்றாவது வகை ஒன்று இருக்கிறது. அது தான் தானும் தன்பாடும் என்று இருக்கின்ற உருப்படாத பயலுகள். “படம் காட்டுதல் நன்றன்று” என்ற வள்ளுவர் மொழிக்கிணங்க நடப்பவர்கள். ஆண்டு பத்தில் தைத்த ஜீன்சை, இயலுமான வரை கீழே இறக்கி ஏஎல் முழுக்க போடுவார்கள். அதுக்கு மேலே ஒரு ஷேர்ட்டையோ டீஷேர்ட்டையோ போட்டபடி, ஒரு பாட்டாவையும் மாட்டிக்கொண்டு அமைதியாக வகுப்புக்கு வருவார்கள். இவர்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. இவர்களில் கெட்டிக்காரர்களும் இருப்பார்கள். கிலோ என்ன விலை கேசும் இருக்கும். யார் என்ன என்று கூட படிக்கிறவனுக்கே ரிசல்ட் வந்தா பிறகு தான் தெரியும். இந்த ஜென்டில்மேன்களுக்கு பெடடைகளை பார்த்தால் பீலிங் இராதா என்று கேட்கலாம். அதெல்லாம் அளவுக்கதிமாக இருக்கும். இருந்தது! பட் எந்த பெட்டைகளு அவர்கள் பீலிங்கை விளங்கிக்கொள்ளுவதில்லை. பொதுவாக பெட்டைகள் “சண் காரரை” கண்டு சிரிக்கும். காவாலிகாரனிடம் விழும். இதை தான் Good men always end up last என்று சொல்வார்களோ தெரியாது.

இப்போது பெட்டைகள் செக்ஷனுக்கு போவோம். முதலில் “செடில் காட்டும் பெண்கள்”. அநேகமான அழகு பெண்கள். திமிர்களோடு கூடவே திமிரும் சேரும். இவர்கள் பொதுவாக சுண்டுக்குளி ஆட்களாக இருப்பார்கள். அதற்காக சுண்டுக்குளியின் அத்தனை பெண்களும் தேவதைகள் என்று சொல்வதற்கில்லை. செம மொக்கை பிகரெல்லாம் சுண்டுக்குளியில் படிக்கும். ஆனாலும் அந்த பள்ளிக்கூடத்துக்கு போன அடுத்த நாளே அந்த பிகரும் செடில் காட்ட தொடங்கிவிடும். இவர்களில் சிலர் “போப்ஃட்” அடித்திருப்பார்கள்.  நடையில் ஒரு நளினம் இருக்கும். நடக்கும் போது உடல் ஒருபக்கம் உலாஞ்சும். முகம் உட்பட எல்லாமே பளிச்சென்று இருக்கும். சின்ன புன்னகை கூட ரெடிமேட்டா குடுப்பாளவை. அந்த அழகு, திமிர் எல்லாமே சேர்ந்து இயல்பாக இவர்களை செடில்காரிகள் ஆக்கிவிடுகிறது என்று நினைக்கிறேன். அதிலும் சிலது கொழும்பில் இருந்து வந்திருந்தால் கதை கம்மாஸ். ஜீன்ஸ் டீஷேர்டோட எங்கட பாட்ச்சில் ஒருத்தி. நம்ம ஜெகன் போய் இங்கிலீஷ்ல கூட கதைச்சு பார்த்தான். ம்ஹூம். செடில் என்றால் அப்பிடி ஒரு செடில். அடியேன் இந்த விஷயத்தில் செம அலெர்ட். நம்மை எல்லாம் பக்கத்து வாங்கில இருக்கிற பார்த்திக்கே சரியா தெரியாது. பெட்டைகளா தெரிஞ்சு வச்சிருக்கபோகுதுங்க? கதைச்சு எல்லாம் நோண்டி ஆகி டைம் வேஸ்ட் பண்ணாம ஸ்டேரயிட்டா காஷ்மீர் போய் டூயட் பாட ஆரம்பிச்சிடுவோம்.

“ச்சா .. அவள் நல்ல பெட்டைடா”  என்று ஒரு ரக பெண்கள் இருக்கிறார்கள். சிம்பிளான பெண்கள். முகத்துக்கு பொன்ஸ் பவுடர் மட்டும் போடுவார்கள். அது கூட, காதுப்பக்கம் சரியாக துடைக்க மறந்து போய் வருவார்கள். தலைக்கு இன்னமும் நல்லெண்ணய் தடவுவார்கள். புரட்டாதிசனி, கௌரி காப்பு டைம் என்றால் தலைக்கு முழுகி, வெறும் கிளிப் போட்டு தலைமயிர் ஈரலிப்பாக தொங்கவிட்டு வருவார்கள். நேர் பின்வாங்கில் இருந்தால் சீயாக்காய் வாசம் தூக்கும். இவர்கள்  அனேகமாக உடுப்பது பாவாடை சட்டை. இவர்களுக்கென்று அப்போது வலு பேமஸான ஒரு ஸ்டைல் சட்டை இருந்தது. சாதாரண சீத்தை துணியில் தான் சட்டை தைத்திருப்பார்கள். சட்டையின் பாவாடைப்பகுதி குடைவெட்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும். மேற்பகுதி வெறும் ப்ளைய்ன் ப்ளவுஸ் தான். ஆனா அங்கே தான் ஒரு சின்ன ட்விஸ்ட். பிளவுஸின் பின் பக்கம் ஒரு குட்டி துணியாலேயான ரிபனில் கட்டப்பட்டிருக்கும். பின்னுக்கு மட்டும்தான். அணியும் போது அது இடுப்பின் பின்பகுதியில் வந்துநிற்கும். Just imagine. அப்படி இழுத்து கட்டும்போது, ப்ளவுஸ் சிக்கென்று உடலின் வடிவத்தோடு ஒட்டி நிற்க, கீழே குடைவெட்டு பாவாடைகள் காற்றில் பறக்க … அவளுக்கும் பதினெட்டு. பாக்கிற பாவிக்கும் பதினெட்டு. காந்திமதி கூட ஹன்சிகா மாதிரி இருக்கும் பருவம் அது. கமறும்.

இவ்வளவு இண்டரஸ்டிங்கான கரக்டர்ஸ் எல்லாம் கூடும் இடம் தான் கொட்டில். அதிலும் நாங்கள் போனது சயன்ஸ் ஹோல். அது விஞ்ஞான மாணவர்களின் மெக்கா. யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதியில் இருந்தது. கஸ்தூரியார் வீதியையும் பெருமாள் கோயில் வீதியையும் இணைக்கும் ஓரளவுக்கு நீண்ட வீதி அது. அந்த வீதி நெடுகவும் இரண்டு புறங்களிலும் சனி ஞாயிறு என்றால் சைக்கிள்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். கிளாஸுக்கு போகும்போது அவசரத்தில் அங்கே இங்கே சைக்கிளை நிறுத்தமுடியாது. செக்கி என்று ஒன்றிரண்டு பேர் நிற்பார்கள். இயக்கப்பிளான் காட்டுவார்கள். சைக்கிளை சரியாக நிறுத்தாவிட்டால் திட்டுவிழும். ஸ்டாண்ட் வேறு ஒழுங்காக நிற்காமல் விழும். அவசரத்தில் சைக்கிளை சரித்துவிட்டால், அப்படியே சீட்டுக்கட்டு போல சைக்கிள்கள் சரியும்.  பூட்டினால், பூட்டு ஓட்டைக்குள் போகாமல் விலகிப்போகும். பெல் மூடியை கழட்டிக்கொண்டு போகவென்றே ஒரு கூட்டம் அலையும். சில பேர் தன்னோட “சரக்கிண்ட” சைக்கிளுக்கு பக்கத்திலேயே தானும் சைக்கிள் விடோணும் என்று அடம் பிடிப்பான். இந்த விஷயம் அவளுக்கு தெரிந்திருக்காது.

இந்த சிக்கல் எல்லாவற்றையும் தாண்டி டியூஷன் வாசலுக்கு போனால் அங்கே விஸா செக் பண்ணுவார்கள். அதான் டியூஷன் கார்ட். அதுவும் மாச தொடக்கம் என்றால் மோப்பநாய் ரேஞ்சுக்கு நிற்பார்கள். கார்ட் கொண்டுவரவில்லை என்றால் கதை கந்தல். அருள் அண்ணை, கிட்டத்தட்ட கலாநிதி மாறன் போன்று பிஹேவ் பண்ணுவார். இவர்களை தாண்டி வகுப்புக்கு போனால், ஐநூறு பேர் கொள்ளகூடிய கொட்டில் நிறைந்து வழியும். இடம் இருக்காது. ஒரு பக்கம் பத்திருபது கொங்கிரீட் கல்லை அடுக்கி, அதை மேடை என்று சொல்லியபடி வாத்தியார் நிற்பார். வரிசைக்கு வாங்குகள், மனிதத்தலைகள். ஒரு நீண்ட கரும்பலகை, டஸ்டர், சோக்கட்டிகள், நிறைய சுண்ணாம்பு என வகுப்பு ஏற்கனவே ஆரம்பித்திருக்கும். அரக்க பரக்க பின் வாங்கிலே போய் நெருக்கி இருந்து, ஏதோ குத்துதே என்று எழுந்தால் … சர்க்க்க்..

பனஞ்சிராய் வாங்கில் இழுபட்டு ஜீன்ஸ் கிழிந்து போயிருக்கும்.

*************

சயன்ஸ் ஹோலில் யாரிடம் படிப்பது என்பது தான் பெரும் ரிசெர்ச். ஆளாளுக்கு குழப்புவார்கள். சோதியர் சுத்துவார் என்பார்கள். குமரன் பம்மாத்து என்பார்கள். மகாதேவாவிடம் டீப் காணாது என்பார்கள். மணியம் சிம்பிள் அண்ட் ஸ்வீட் என்பார்கள். எண்டர் பண்ணுறவன் எல்லாம் வெக்டரிடம் தான் படிப்பார்கள் என்பார்கள். இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு, மாஸ்டர்மாரை தெரிவு செய்யவேண்டும். சிலவேளைகளில் ஒரே மாஸ்டரிடம் வேறு வேறு டியூஷனில் வேறு வேறு செக்ஷனும் படிப்பதுண்டும். வேறு வேறு பட்சிலும் படிப்பதுண்டு.

முதல் நாள் சோதியரின் வகுப்பு. பிஸிக்ஸ் மண்டைக்காய்களுக்கான பாடம் என்றார். பக்கத்தில் இருந்த கீர்த்தி என்னை பாவமாய் பார்த்தான். திடீரென்று மிக்ஸரை எடுத்து மூடியில போட்டு சாப்பிட்டுக்கொண்டே யோசிக்கோணும் என்று ஒரு கணக்கை எடுத்துவிடுவார். நித்தியானந்தர் சபைல ரெடியா ஒருத்தன் எழுந்து போய் பாய்ஞ்சு பாய்ஞ்சு யோகா செய்யிறது போல, இங்கேயும் ஒரு யாழ் இந்து காரன், ஸ்டைலாக எழுந்து போய் போர்டிலே கணக்கை செய்வான். செய்துவிட்டு ரெண்டு கோடு வேறு கீழே போட்டு கடுப்பேத்துவான். பெட்டைகள் வேறு அவன் பெரும் மண்டை என்று நினைத்திருக்குமோ என்னவோ? எனக்கு செம கடுப்பு. கணக்கு வேற சரி வரேல்ல. ஸோ அன்றையோட சோதியருக்கு ஜூட்.

521810_446403338785785_1365046374_n

மகாதேவா மாஸ்டரின் தமிழே மிரட்டியது. தூய தமிழில் அறுத்துறுத்து தான் பேசுவார். நோட்ஸ் கூட அப்பிடித்தான் இருக்கும். அதிகம் டீப்பாக அலட்டிக்கொள்ள மாட்டார். ஒரு முறை ஓர்கானிக் கெமிஸ்ட்ரி படிப்பித்துக்கொண்டிருக்கிறார். அன்றைக்கு. பென்சீன் பாடம். அதுக்கு ஒரு அறுகோணம் கீறி உள்ளே ஒரு வட்டம் போடவேண்டும். இவர் நோட்ஸ் சொல்லிக்கொண்டிருக்கும்போது முன்னே இருந்த பெண் அறுகோணத்தை கீறிவிட்டு வட்டத்தை மறந்துவிட்டாள். இதைப்பார்த்த மகாதேவா சேர் சொன்னார்.

“ஐசே … நீர் உள்ளே ஒன்றும் போடவில்லை!”

வெக்டரிடம் போனால்,  எல்லாமே கயிலை காட்சி போன்றே இருக்கும். கணக்கு நிறுவுகிறார் என்று தெரிகிறது. சமப்படுகிறது. ஆனா எப்பிடி நடக்குது என்று மட்டுமே விளங்கேல்ல. இது ஏன் எதற்கு எப்படி என்ற டவுட்டிலேயே ரெண்டு மூன்று கிளாஸ் போயிருக்கும். ஒரு நாள் வெக்டரின் மகனே என்னிடம் வந்தான்.

“ஏதாவது விளங்குதா?”

“கணக்கு மட்டும் சாடையா விளங்குது .. நிறுவல் ஒரு மண்ணுக்கும் விளங்குது இல்ல.. உனக்கெப்பிடி?”

“கணக்கே விளங்குதில்ல .. அப்பர் ஆக மோசம்”

“ஓ .. அப்ப என்ன செய்யுறது?”

“பேசாமா கிளாசை கட் பண்ணி சந்திரன் மாஸ்டரிட்ட போவம் .. ”

“அவரிட்ட விளங்குமா மச்சான்?”

“சும்மா தண்ணி மாதிரி இருக்கும்”

அப்போதும் கூட இந்த டியூப்லைட்டுக்கு விளங்கவில்லை. சந்திரன் மாஸ்டரும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கணித ஆசிரியர் என்றே முதலில் நினைத்தேன். அதன் பிறகு அவர் வகுப்புக்கு போன பின்னர் தான் எல்லா விஷயமும் விளங்கியது. அது வேண்டாம் இங்கே.

நான் எந்த கிளாஸ் கட் பண்ணினாலும் குமரன் மாஸ்டரின் பிஸிக்ஸ் மாத்திரம் கட் பண்ணுவதில்லை. அதற்கொன்றும் பௌதீகத்தின் மீதிருந்த அளப்பரிய காதல் அல்ல காரணம். குமரன் மாஸ்டரிடம் தான் ஊருலகத்தில் உள்ள அத்தனை பெட்டைகளும் படிக்க வரும். அதுவும் கணிதப்பிரிவில் காய்ந்து கிடந்த எங்களுக்கு பயோ பிரிவில் இருந்த தேவதைகள் வந்துசேரும் ஒரே வகுப்பு குமரன் மாஸ்டரின் வகுப்பு தான். நாங்கள் தேவதைகள் இருக்கும் செகஷனுக்கு நேர் பின்னே போய் இருப்போம்.

அதிலும் ஒருத்தி! வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணான மேனகை. நடந்து போனால் என்றால் தூர நின்று பார்க்கும் எங்களுக்கு ஏதோ செய்யும். இடம்பெயர்ந்து சைக்கிள் உருட்டிக்கொண்டு நாவற்குழியால் நடக்கும்போதும் அவளும் பக்கத்தில் உங்களோடே சேர்ந்து சைக்கிள் உருட்டிக்கொண்டு பேசிக்கொண்டு வருகிறாள் என்று நினைத்துப்பாருங்கள். நடக்கும்போது பசியோ பயமோ எதுவுமே தெரியாது. she was like … பார்த்தீர்களா.. ஆ ஊ என்றால் பக்கம் பக்கமாக எழுதும் ஆள் நான். அவள் என்றவுடன் ஸ்டக்காகி நிக்கிறனே. That’s her.. A refreshing beauty. எங்கள் பாட்சில் இருந்த அத்தனை பெடியளும் அவளோடு தான் “தென் மேற்கு பருவக்காற்று” டூயட் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனா பாடின எல்லாருக்குமே கடைசில மாட்டினது என்னவோ கருத்தம்மா தான்! அந்த மேனகை எங்கள் எவருக்கும் சிக்கவே இல்லை. வழமை போல கடைசியில் ஒரு பொன்ஸ் அந்த தேவதையை லவட்டிவிட்டான். நாமளும் வழமை போல தேவதாசுக்கு பக்கத்து வார்டில கொஞ்ச நாளைக்கு அட்மிட் ஆகியிருந்தோம் என்று வையுங்களேன்!

இந்த காதல் விஷயத்தில் நாங்கள் வீக்கு என்றாலும், நம்ம வாத்திமார் எம காதகர்கள். சயன்ஸ்ஹோலில் இப்படி திருவிழா போல வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போது, யூனிவேர்சல் என்று ஒரு சப்பாணி டியூட்டரியும் நடந்தது. அங்கே ஒரு கெமிஸ்ட்ரி வகுப்பு. ஒரு நாற்பது மாணவிகள் சேர்ந்து ஒருவரிடம் படித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாமே கொஞ்ச நாள் நல்லாவே போனது. ஆனால் சில மாதத்தில் ஒருத்தன், அந்த வகுப்பில் தானும் படிக்கப்போகிறேன் என்று அடம்பிடித்துக்கொண்டு போய் சேர்ந்துவிட்டான். நாற்பது மாணவிகள், அதிலே ஒரு இருபது தேவதைகள், பத்து ரம்பை, ஒரு மேனகை கூட தேறும். அந்த செட்டில் இவன் தனியே படிக்கிறான் என்பதில் எங்கள் எல்லோருக்கும் செம கடுப்பு.  ஷேர்ட்டை வேறு பெண்டருக்குள் இன் பண்ணும் குரூப்பை சேர்ந்தவன் அவன். நாற்பதில் ஒருத்தியையாவது இவன் மாட்டுவான் என்று நம்பியிருந்தோம். ஆனால் நடந்தது வேறு. இவன் கடைசி வரை ஒரு ஆணியை கூட அசைக்கவில்லை. ஆனால் அந்த வாத்தியார் ஒரு மாணவியை காதலித்து திருமணமும் செய்துவிட்டார். இதே ட்ரெண்டில் இவரை பின்பற்றி இன்னும் இரண்டு வாத்திமார் காதலித்து திருமணம் முடிக்க, லூசு கேசுகளான நாங்கள் படிச்சு எண்டர் பண்ணீட்டு போய் கேட்டுப்பார்ப்பம் என்று ப்ளான் பண்ணிகொண்டிருந்தோம்.

கொட்டிலில் படிப்பு, காதல், கொசப்பு சம்பவங்களுக்கு மத்தியில் பாட்டு கச்சேரியும் இடம்பெறும். ஒரு முறை அதே மேனகையை இம்பரஸ் பண்ணவென்று நானே “பொன் வானில் மீனுறங்க” பாட ஆரம்பித்து, “கார்கால மின்னல்கள் இடியோடு வந்தாலும் மேல் வானம் இரண்டாகுமா?” என்று பாடும்போது மேல் நோட்டில் மூக்கு பிய்ந்து இரண்டாகிவிட்டது! மேனகை எனக்கு அதுக்கு பிறகு சான்ஸே இல்லை என்று நினைத்தேன். ஆனால் குமரன் வாத்தியார் தானும் பாடுவேன் என்று அடம்பிடித்தார். அவருடைய ரெடிமேட் பாட்டு “என்னவளே”, அடுத்தது “நிலா காய்கிறது”. இரண்டையும் மூக்கு புடைக்க பாடுவார். இந்த வீடியோவில் மூக்கு புடைக்கிறது. பாருங்கள்.

&&&&&&&&&

எங்களுக்கு முன்னர், எங்கள் காலத்தில், ஏன் இப்போதும் கூட கொட்டில்களை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். கொட்டில்களில் வெறும் வியாபாரம் தான் என்பார்கள். “இந்த பழமும் புளிக்கும்” ரக விமர்சனங்கள் அவை. கொட்டில்கள் என்னைக்கேட்டால் யாழ்ப்பாண கலாச்சாரத்தின் இன்றைய இன்றியமையாத விஷயம் ஆகிவிட்டன.

கொட்டில்களில் முதன்மையான விஷயம், யாழ் மாவட்டத்தின் முக்கிய திறமைசாலிகளின் பெரும்பான்மையானோர் அங்கே வருவார்கள். எந்த பாடசாலை என்றில்லை. யாழ் இந்து, கொக்குவில் இந்து, வேம்படி, இந்து மகளிர், சென்றல், சென்ஜோன்ஸ், சுண்டுக்குளி தொடங்கி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி, மகாஜனா மாணவர்கள் கூட வந்து படிப்பார்கள். சாவகச்சேரி, நெல்லியடியில் இருந்து கூட வருபவர்கள் உண்டு. இதனால் படிக்கும்போதே ஓரளவுக்கு எங்கள் நிலைமை என்னவென்று தெரிந்துவிடும். தங்கள் தங்கள் பள்ளிக்கூடங்களில் கடும் “மண்டைக்காய்களாக” இருந்திருப்போம். ஆனால் கொட்டிலுக்கு வந்து ஏனைய மாணவர்களை பார்க்க தான் நம்ம சோகம் நல்லா தெரியும். இந்த ஐநூறு ஆட்களில் இருபது தானே எண்டர் பண்ணும்? எப்பிடி கூட்டிக்கழிச்சாலும் நாம நூறுக்குள்ளே கூட வரமாட்டமோ? என்று அடி வயிற்றில் அலாரம் அடிக்கும். அந்த அலார்மில் தூக்கம் வராமல் இரவு முழுதும் புரள்வீர்கள். நிஜத்தை கொட்டில்கள் ரிசல்ட் வரும் முன்னமேயே முகத்தில் அடித்துவிடும்.

கொட்டில்களில் இருக்கும் இன்னொரு விஷயம், ஆசிரியர்களை நாங்கள் தெரிவு செய்யலாம். அங்கே ஒருவித competition இருக்கிறது. ஆசிரியர்கள் கொஞ்சம் சொதப்பினாலும் மாணவர்கள் இன்னொரு ஆசிரியரை தேடி போய்விடுவார்கள். அதனால் கற்பித்தலில் ஒரு தரம் எப்போதுமே இருக்கும். பாடசாலைகளில் இது முடியாது என்றில்லை. ஆனால் யாழ்ப்பாண சூழலில் எல்லா பாடசாலைகளிலும் இது முடியாத காரியம். அண்மையில் சயன்ஸ் ஹோல் உடைந்து விட்டதாகவும், குமரன் மாஸ்டரும் இன்னும் சிலரும் பிரிந்து புதிதாக ஒரு கொட்டில் ஆரம்பித்து விட்டதாகவும் கேள்விப்பட்டேன். நல்ல விஷயம். போட்டி இருக்கும்போது தான் தரமும் அதிகரிக்கும்.

ஒரு வகுப்பு அனேகமாக ஒரு மணிநேரம் நடக்கும். வாத்தியார் அதுக்கு பத்து நிமிஷம் பிந்தி வருவார். ஐம்பதாவது நிமிஷத்திலேயே பின் வரிசைக்காரன் கொப்பியை அடித்து மூட தொடங்குவான். வாத்தியார் “எழுதுங்கடா .. இன்னும் கொஞ்சம் தான்” என்று தொடருவார்

“வெப்பக்கடத்தாறு என்பது அலகு குறுக்குவெட்டுப்பரப்புள்ள கோலிற்குக் குறுக்கே அலகு ….”

“சேர் … ப்ளீஸ்..”

சொல்வதையும் கேட்காமல் பெடியங்கள் சட சட வென கொப்பிகளை மூடி சத்தம் எழுப்புவார்கள். இதிலே பெண்கள் கூட இணைந்துகொள்வார்கள். சத்தம் பின் வரிசையில் இருந்து ஆரம்பித்து சட சடவென முன்னே கொஞ்சம் கொஞ்சமாக வரும். இந்த இடைவெளியில், வேளைக்கே ஓடினால் சைக்கிளை நெரிசல் இல்லாமல் எடுக்கலாம் என்று பத்து பதினைஞ்சு பேரு பாய்ஞ்சுடுவாங்கள். நம்ம பொன்ஸ்காரன் இன்னமும் புட்ரூலர் வைச்சு தலையங்கத்துக்கு சிவத்த லைன் அடிச்சு நோட்ஸ் எழுதிக்கொண்டிருப்பான். பெட்டைகள் நடராஜா கொம்பாஸ் பெட்டிக்குள் பேனை பென்சில்களை வைத்து மூட தொடங்குவார்கள். “செக்கி” ஒருத்தன் சிதறி அடிச்சு ஓடுறவனை சரிப்படுத்த ரெடியா பின்னாலே நிற்பான். இதுக்கு மேலே வச்சிருக்கேலாது எண்டு வாத்தியார் திரும்பிப்பார்த்து சொல்லுவார்.

“… வெப்பநிலை படித்திறன் என்பதை … “

“சேர் …

“அடுத்த வகுப்பிலே பார்ப்பம் .. ஓடுங்கடா .. ஒடுங்க!”

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

மறதிக்கு மருந்து மாஸ்தரிண்ட பிரம்பு
சந்திரன் மாஸ்டர்
ஏனைய கொல்லைப்புறத்து காதலிகள்

படங்கள் மூலம் : Facebook, Google images.


காத்திருப்பேனடி!

$
0
0

 

601029_10151611428160791_677914073_nஎன்னைப்போல் நீயும்
எவர் அவர் என்று
எண்ணுவியோ?
எடுத்ததுக்கெல்லாமே எகத்தாளம் 
பண்ணுவியோ ?
புரியாத கவிதைகள்
மரியானின் பாடல்கள் 
புறநானூற்று சுளகாலே
பிடரியில் இட தாளங்கள்
இவை யாவும் செய்திடவே
இலவு காத்து இருக்கிறியோ?

இதுகாலும் எழுதாத
கதையொண்டு வச்சிருக்கன்.
இவரெதுவும் அறியாத
கவியொன்று முடிஞ்சிருக்கேன்.
நீ வந்து திருத்தவென
சொற்பிலைகள் பொருட்பிழைகள்
ஒரு நூறு பலநூறு பலர் சொல்லியும்
விட்டிருக்கன்.

காட்டாத படம் எல்லாம் காட்டுவோர் மத்தியிலே
காட்டிய என் படங்கள் காட்சிப்பிழை என்பாரே!
நீ வந்து, முன் நின்று முகம் காட்டி நகை செய்து
ஒளி வந்து உன்கன்ன குழிமீது குடி அமர்ந்து
இருக்கின்ற அக்கணமே எடுத்திட்டால் அப்படமே
எம்மோட படுக்கையறை சுவரில் அது சித்திரமே!

உன்னோடு சேர்ந்து
போகோணும் எண்டதால
எவர் கேட்டும் போகாத
இடமெல்லாம் வச்சிருக்கேன்.
ஆத்தாடி சொன்னாலும்

அதை நானும் கேட்காம
கூட்டாளி பயலோட
கூத்தாடி திரும்பையிலே
வாயாடி உன்னிடம் நான்
வாங்கிக்கட்டும் பொழுதுனிலே
நடிக்காத நடிப்பெல்லாம் நடிப்பது எப்படிண்டு
நண்பர்கள் சிலரிடம் - கொஞ்சம்
கிளாஸ் கூட படிச்சிருக்கேன்.

என் முகநூலில் உன் நட்பு எப்போது வந்திடுமோ?
உன் டைம்லைனில் புதைந்திருக்கும்  காலம் தான் கனிந்திடுமோ?
இல்லாத ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ் அதை மாற்றையிலே
எண்ணற்ற லைக்குகளும் கொமெண்டுகளும் கிடைத்திடுமோ?

காலமெல்லாம் சேர்ந்து வாழும் கனவொன்று நனவாகும்
நினைப்பெல்லாம் நிஜத்தினிலே நடக்காது நாம் அறியும்.
காரிகை உன் முன்னரேயே காலன் என்னை எடுத்தாலோ
தினகரன் பேட்டியிலே என் பெயரை ப்ளீஸ் கெடுக்காதே!

சில்லறையாம் இவ்வளவு ஆசையெண்டு சொன்னாலும்
சொல்லாத ஆசையொண்டும் உள்ளொன்று இருக்குதடி

எத்திசையும் எத்திக்கும் ஏரிக்கரையோ எம்மலையோ
நான் ஏறிப்போனாலும் நீ கூட வரவேண்டும்
நீ ஏறும் வேளையிலே நான் பின்னே வரவேண்டும்
சறுக்கி விழும் நேரத்தில் எழுப்பிவிட நீ வேண்டும்.
எழுந்து நின்று செருமும் போது -  குட்டி
அடக்கும் குணம் அது வேண்டும்.

இந்த மாட்டர் எல்லாமே சாவகாசமாய் பேசிடவே
நீ முதலில் யார் என்று
அறியும் கணம் வரவேண்டும்.

நீ முதலில் யார் என்று - நான்
அறியும் கணம் வரவேண்டும்.

நீ முதலில் யார் என்று - நான்
அறியும் கணம் வரவேண்டும்.

&&&&&&&&&&&&&&

முன்னைய கவிதைகள்.

உயிரிடை பொதிந்த ஊரே
மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!
கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(
ஹைக்கூ எழுதிய கூப்பாடு!

நான் … வருவேன்.

$
0
0

 

14883751-couples-in-cafe“சம்வன் இஸ் நோட் இன் திஸ் வோர்ல்ட்…”

“சொறி .. நிரஞ்சனா.. ஐ ஜஸ்ட் …”

“நிரு”

“ஆ?”

“கோல் மீ .. நிரு .. அப்பிடித்தான் எல்லாரையும் கூப்பிடச்சொல்லுவன் .. நிரஞ்சனா இஸ் டூ லோங்”

“ஓ … அப்ப சுரேன் ஓகேயா?”

“பெயரை கேட்கிறீங்களா? இல்ல .. ஆளையே ..”

கண்ணை சிமிட்டியபடி ஹாண்ட்பாக்கை வைத்துவிட்டு அப்படியே கதிரையில் சாய்ந்து கையிரண்டையும் உயர்த்தி …ஜீன்ஸ், கையில்லாத கொட்டன் டாப் சிம்பிளாக தான் போட்டிருந்தாள். ஆனால்  அப்படி பின்புறமாக சாய்ந்து தலைமுடியின் ஹெர்பாண்டை லாவகமாக கழட்டி, முடியை உதறிவிட்டு, மீண்டும் மாட்டும்போது சுரேனுக்கு விசர் பிடித்தது.

“ஹோலி ஷிட், ஷி இஸ் எ கில்லர் மச்சான்” என்று மீண்டும் ஜூட்டுக்கு டெக்ஸ்ட் டைப் பண்ணிக்கொண்டிருக்கும் போதே மொபைல் பீப் பீப் என்றது. ஜூட் தான். “டேய் அவசரப்படாத .. வடிவா பேசி முடிவெடு” என்று எழுதியிருந்தான்.

ஞாபகம் இருக்கிறது. அன்றைக்கு அவனை பொறாமை பிடிச்சவன் என்று நினைத்தேனே. மொக்குச்சாம்பிராணி. அவன் சொன்னது போல கொஞ்சம் நான் பொறுத்திருக்கலாமே. ஷிட்.

ஆர் யூ ஒகே சுரேன்?

கேட்ட டிமிட்ரியை பார்த்து மெதுவாக கண் சிமிட்டியபடி பதில் சொல்லாமல், கொக்பிட்டில் இருந்து மைக்கை எடுத்து பேச தொடங்கினான் சுரேன்.

“Good morning ladies and gentlemen…. நான் விமானத்தின் கப்டன் சுரேந்திரகுமார் பேசுகிறேன். எமிரேட்ஸ் EK349 விமானமும், சக விமானி டிமிட்ரி மக்காய் மற்றும் ஊழியர்களும் உங்களை அன்போடு வரவேற்கிறோம். நாங்கள் இப்போது 19000அடிகள் உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறோம்…

சம்பிரதாயமான அறிவிப்புகள். முகமன்கள். செய்திகள். குரலில் எந்த மாற்றத்தையும் காட்டாது பேசினான். நிரூ இன்னமும் பல்கனி குந்தில் இருந்து அழுதுகொண்டிருந்தாள். “யூ டோன்ட் கெட் இட் சுரேன். உனக்கு சொன்னா விளங்காது…. ப்ளீஸ் என்னையும் தாரணியையும் போக விடு.. பளார்..”. சலிங் என்று ஒரு அறை. நிரூ தொடர்ந்து விசும்பிக்கொண்டிருந்தாள். “ப்ளீஸ்.. சுரேன்..யூ டோன்ட் கெட்…”

சுரேனின் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

…..மீண்டும் தரையிறங்கும்போது உங்களை தொடர்பு கொள்ளுகிறேன் .. have a pleasant journey.”

சொல்லிமுடிக்கும்போது தொண்டை அடைத்தது. மைக்கை மீண்டும் கொக்பிட்டில் கொழுவிவிட்டு சுரேன் அயர்ச்சியாக பைலட் இருக்கையில் சாய்ந்தான். தலை கனத்தது. கண்மூடினால் முகில்களுக்குள்ளிருந்து வெள்ளை சேலையில் முந்தானை திரள் திரளாய் பரவிக்கிடக்க நிரு தான் வந்து நின்றாள். பக்கத்திலேயே தாரணிக்குட்டி. அதே வெள்ளை சட்டை, குட்டி வெள்ளை தொப்பியுடன் தேவதையாட்டம்.

“அப்பா .. எனக்கு அடுத்தமுறை சிங்கபூர் ஏயர்லைன்ஸ் ப்ளேன் வேணும் .. வாங்கியோண்டு வாறீங்களா?”

நிரு … எப்படி உன்னால் முடிந்தது நிரு? இப்பிடி ஒரு குழந்தை யாருக்கு கிடைக்கும் சொல்லு? எப்படி அவளை என்னிடமிருந்து பிரிக்கமுடியுது உன்னால? ராட்சசி. சனியன். மாடு. சுரேன் கைகள் பதட்டத்தில் படபடத்தது.

EK349 விமானம் கொஞ்சம்  தளம்பியது. மத்திய கட்டுப்பாட்டு அறையில் ரேடியோ இரைய சுரேன் மீண்டும் வேலையில் கவனத்தை செலுத்த முனைந்தான். FL350 அளவில் விமானத்தை தொடர்ந்து செலுத்தும் அனுமதிக்கான ஆணைக்கு ரிப்ளை பண்ணிய பிறகு கட்டுப்பாட்டை டிமிட்ரியிடம் கொடுத்துவிட்டு ரெஸ்ட் ரூமுக்குள் விரைந்தான். விமானம் மெதுவாக தள்ளாடியது. தண்ணீரை முகத்தில் வேகமாக அடித்து கழுவி துடைத்தபடி கண்ணாடியில் பார்த்தான். கண்கள் சிவந்து, முகம் ஊதிப்போய், நிரு இவன் கோலத்தை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.

ப்ளீஸ் நிரு .. போகாத ப்ளீஸ்.. நான் எல்லாத்தையும் மறந்திடுறன் .. .. இந்த பைலட் வேலை தானே .. சனியன் பிடிச்ச வேலையை.. விட்டிடலாம் .. ப்ளீஸ் போகாத.

நிரு போயே விட்டாள். இரண்டு நாளைக்கு முன்னர் தான். தாரணியையும் தூக்கிக்கொண்டு, போனவளின், பின்னாடியே ஓடிப்போய், அப்பார்ட்மென்ட் லிப்டிலே இருபதாவது மாடியில் கெஞ்ச ஆரம்பித்தது; இரண்டாவது மாடி தாண்டும்போது காலில் விழுந்து பார்த்தான் சுரேன். குழந்தை வேறு அப்பா அப்பா என்று அழுதது.

infidelity

அவளின் எதிர்காலத்தையாவது யோசித்து பார்த்தாளா? வசதியான வாழ்க்கை, படிப்பு, கார், கொள்ளுபிட்டியவில் லக்சரி பிளாட்ஸ். தேவதை போன்று ஒரு பெண்குழந்தை. இது எல்லாவற்றையும் விட தரையிறங்கி அடுத்த கணமே தொலைபேசி அழைக்கும் பைலட் கணவன். இது ஒருத்திக்கு போதாதா? எத்தனை பேர் இந்த வாழ்க்கைக்காக ஏங்கிக்கிடக்கிறார்கள்? ஒருத்தன் இரவு பகல் பாராது வேலைக்கு போவது ஒரு குற்றமா? மூன்று வாரம் தனியப்படுக்க முடியாதா? எப்படி அவளால் … சுரேனின் கண் சிவந்து தளும்பியது…குழந்தையை பக்கத்து அறையிலேயே தூங்க வைத்துவிட்டு ….எப்படி ஒருத்தனோடு …

“How .. how can .. how can you fuck’in sleep with some idiot? … you bastard.”

ஓங்கி வாஷிங்பேசினில் ஒரு உதை விட்டான். நங் என்று கைவலித்தது. நிரூ கண்ணாடியில் இவனை பார்த்து மீண்டும் சிரித்தாள். அதே நக்கல் சிரிப்பு. எட்டு வருடங்களுக்கு முன்னரும், இந்த சிரிப்பு தானே, இப்படித்தானே சிரித்தாள். பசப்பி. உனக்கு என்ன குறைவைத்தேன்? சொல்லேன். நீ சொன்னதெல்லாம் கேட்டேனே. ஒரு குறை சொல்லேன். ஜஸ்ட் வன்.

சுரேன் முகத்தை துடைத்துக்கொண்டே ரெஸ்ட் ரூமை விட்டு வெளியே வந்தான். மீண்டும் கொன்ரோல் ரூமுக்குள் வந்து உட்கார்ந்தான். 35,000 அடிகள் உயரத்தில் விமானம் நிதானமாக பறந்துகொண்டிருந்தது. ரேடர் புள்ளி 16:12:18 சரியாக இருக்கிறது என்று மீண்டும் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து வந்த தகவலுக்கு பதில் கொடுத்துவிட்டு, ஓட்டோ பைலட்டின் சகலவிஷயங்களையும் மீண்டும் ஒருமுறை செக் பண்ணினான். லாண்டிங் தயார்படுத்தலுக்கு இன்னமும் நான்கு மணி நேரங்கள் இருக்கிறது. தலை கனத்தது. இப்படியே உட்கார்ந்திருந்தால் தலை வெடித்துவிடும் போல் தோன்றியது. தலையில் கையை வைத்தபடியே சாய்ந்து உட்கார்ந்தான்.

“யூ ஆர் நோட் ஒகே சுரேன் .. டேக் எ வோக் அண்ட் கம்”

டிமிட்ரி சொல்வது சரிபோலவே பட்டது. மீண்டும் ஒருமுறை கொக்பிட்டை சரிபார்த்துவிட்டு எழுந்து பயணிகள் பகுதிப்பக்கம் நடந்தான். பிசினஸ் வகுப்பில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஒருசிலர் இவன் உடையை பார்த்துவிட்டு மரியாதையாய் சிரித்தார்கள். சிலர் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். ஒரு ரெடிமேட் புன்னகை, முகமன்கள் தாண்டி நடந்தான். போகும் வழியிலேயே விமானப்பணிப்பெண்ணிடம் டீ கோப்பை ஒன்றை வாங்கினான். முதல் சந்திப்பு. நிரூ தான் அதிகம் பேசினாள்.

ஒரு சுகர் போதுமா? ஷுவரா? என்ன  இந்த வயசிலேயே டயபட்டிஸா?

எக்ஸ்ப்ரஸோவிற்குள் ஏற்கனவே ஒரு பக்கட் சீனியை போட்டுவிட்டு இரண்டாவதை தயாராக கையில் வைத்தபடி கேட்டாள் நிரு. சுரேன் சிரித்தான்.

“இல்ல .. அப்பிடியே பழகீட்டு … ஐ ஜஸ்ட் டோன்ட்..”

“ஓ கமோன் .. எனக்காக .. வன் மோர்..’

“நோ நோ .. நான் .. அதை குடிக்க ஏலா..”

சொல்லிமுடிப்பதற்குள் அடுத்த பக்கட்டையும் போட்டு இவனைப்பார்த்து சிரித்தபடியே கரைத்தாள். சிரித்தபோது மெல்லிசாய் ஒரு பக்க கன்னத்தில் மட்டும் குழி விழுந்தது. சுரேன் அவளையே கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன கோவமா?”

“ஓ .. நோட் ரிய..”

இவன் முடிக்க முதலேயே தொடர்ந்தாள்

ஸோ .. சொல்லுங்க .. நீங்க நிஜமாவே பைலட்டா?

“லைசன்ஸ் கொண்டுவர மறந்திட்டனே!”

“கட்டினா ஒரு பைலட்ட தான் கட்டுவன் எண்டு சிவானியிடம் சாலஞ் பண்ணியிருக்கிறன் தெரியுமா?”

“எவ்வளத்துக்கு?”

“எது .. பெட்டா?  நத்திங், … அது ரெண்டாம் வகுப்புல பண்ணினது.. .”

நிருவை அப்படியே பார்த்துக்கொண்டிருக்கலாம். ஒரு மாதிரி அங்கேயும் இங்கேயும் மெதுவாக தலையாட்டுவாள். நீண்ட மூக்குள்ள ஆட்டுக்குட்டி போல. அழகாக. தலை ஆடும்போது மேல்வாய் பல்லால் கீழ் உதட்டை மூடி கடித்தபடி ஒரு பாவனை கொடுப்பாள். பேசிக்கொண்டிருக்கும்போதே “She is the one” என்று ஜூட்டுக்கு டெக்ஸ்ட் பண்ணிவிட்டான்.

“யாருக்கு டெக்ஸ்ட்? கேர்ல் பிரண்டா?”

“ஹ ஹா .. இட்ஸ் ஜூட் .. மை பிரண்ட் … “

“அதான் நான் வந்திட்டனே .. அப்புறம் என்ன? … ஜூட்”

போயிட்டியே நிரூ. வந்தனி அப்படியே போயிட்டியே… நான் உன்னை திட்டினது பிழை தான். அதுக்காக நீ இப்படி போகலாமா சொல்லு? நான் செஞ்சது பிழை என்று ஒரு வார்த்தை சொன்னாயா? காலில் விழுந்து நான் தானே நீ செய்த பிழைக்கு சொறி கேட்டேன். நீ … என்னை இப்பிடி … முதல் நாளே கேட்டேனே .. சொல்லியிருக்கலாமே.

“நிறைய ட்ராவிலிங்க் .. மாசத்தில இருபது நாள் வானத்தில பறந்துகொண்டிருப்பன் இருப்பன் .. சமாளிப்பியா?”

“பத்து நாள் வீட்டுக்கு வருவீங்க தானே? …பைலட் வைஃபுக்கு பிசினஸ் கிளாஸ் ஒஃபர் கிடைக்குமாமே?”

பிசினஸ் கிளாஸ் ஐல் இருக்கையில் நிரூ சாய்ந்து கால் நீட்டி படுத்தபடி மாக்ஸிம் வாசித்துக்கொண்டிருந்தாள். ஸ்னிக்கர் போட்டு முழங்காலுக்கு கீழே பளிச்சென்று வெள்ளையாக முடியே இல்லாமல், பாதங்களில் கூட நரம்புகள் தெரியாமல், ஊதா கலர் நைல் போலிஷ் அடித்து.. நிரு தான். பெருவிரல் மெதுவாக தாளம் போட்டபடி. நீ இங்கே தான் இருக்கிறியா நிரூ? என்னை விட்டு உன்னாலே போக முடியாது பார்த்தியா? என் விமானத்திலேயே வந்துவிட்டாய் பார்த்தியா? சொன்னேன் இல்லையா? அவன் வேண்டாம் நிரு. இட்ஸ் லஸ்ட். எ ஷிட். நான் இருக்கிறன் நிரு.

“சுரேன் … அங்கே என்ன பார்க்கிறாய் .. கம் ஹியர்”

திரும்பிப்பார்த்தான். அட இங்கே இருக்கிறியா நிரு. உனக்கு விண்டோ சீட் தான் பிடிக்கும் எண்டத மறந்தேபோனன் பார்த்தியா? கண்ணை மூடி ஐபோடில் பாட்டு கேட்கிறியா? என்ன பாட்டு? இளையராஜாவா? இந்த பாட்டு கேட்டியா நிரூ? “சற்றுமுன்பு பார்த்த மேகம் மாறிப்போக”. நல்லா இருக்கும் நிரு. எடுத்தோண பிடிக்கேல்ல எண்டு சொல்லாம திரும்ப திரும்ப கேட்டுப்பாரு நிரூ. அப்பிடி சொல்லாத நிரு. அவனுக்கு பிடிக்காட்டி அது கூடாத பாட்டா? அவன் ஒரு சனியன் பிடிச்சவன் நிரூ. அவன்ட கதையை போயும் போயும் கேட்கிறியே. அவனுக்கெண்டு ஒரு டேஸ்டே இல்ல நிரு. he wants sex நிரு. He is a dog .. a stray dog. அப்படி அந்த நாயிடம் என்னத்தை கண்டு விட்டாய் நிரு?  சொல்லேன். சொல்லாட்டி .. சுரேன் நெருங்கினான்.

“அப்பா …. என்னை விட்டிட்டு எங்கேயப்பா போறீங்கள்?”

குழந்தை. ஐயோ. தாரிணி. கண்ணம்மா... எங்கேடா இருக்கிறாய். திரும்பினான். தூரத்தில் எக்கானமி இருக்கை வரிசை நடுவே தாரிணி நின்றுகொண்டிருந்தாள். அதே வெள்ளை சட்டை. வெள்ளை தொப்பி. குழந்தை இவளைப்பார்த்து சிரித்தது.

“இங்கேயா நிக்கிற குட்டி… ஓடியா ஓடியா .. அப்பாவை விட்டிட்டு எப்படிம்மா உன்னாலே போக முடிஞ்சது ..”

“இனி போகமாட்டன் அப்பா … அம்மா சொன்னாலும் கேட்கமாட்டான் .. நீங்க தான் எனக்கு வேணும் … ”

தாரணி சிரித்துக்கொண்டே இரண்டு கைகளையும் அகல விரித்தபடி ஓடிவந்தாள். சுரேனின் கண்கள் கலங்கி தழும்ப தொடங்கியது.

daddaughter“கண்ணா .. பார்த்தியா … உனக்கு நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பொம்மை வாங்கிவச்சிருக்கிறன் தெரியுமா?”

“அப்பிடியா அப்பா … எங்கே காட்டு”

“ம்ம்ம் .. காட்டமாட்டன் போ .. அப்பாவை அழவிட்டிட்டு போனதுக்கு வட்டியும் முதலுமாக .. எனக்கு டென் கிஸஸ் தரோணும்.. ஒகே யா”

“டென் எண்டா .. டென் பிஃங்கர்ஸ் டைம்ஸா?”

“என்ர கெட்டிக்கார குஞ்சு”

சுரேன் குழந்தையை வாரி அள்ளி உச்சி முகரப்போகும்போது விருக்கென்று வந்த நிரூ தாரணியை அவனிடமிருந்து பறித்தாள். இவன் இழுத்துப்பார்த்தான். அவள் விடவில்லை.

“விடு நிரு … எனக்கு தாரணி வேணும் .. ப்ளீஸ் .. என்னை ஏன் இப்பிடி கொல்லுறாய்?”

“நோ வே சுரேன் .. அவள் என்னோட தான் இருப்பாள்… ஜஸ்ட் போர்கெட் ஹெர்”

“நீ … அவளை தரப்போறியா இல்லையா?”

“முடியாது .. போ .. போடா … அதான் உன்னை வேண்டாம் எண்டு விட்டாச்சே .. அதுக்கு பிறகு என்ன குழந்தை இவருக்கு வேண்டிக்கிடக்கு…”

“இல்லை நிரு .. நீ எங்கேயாவது .. யாரோடையாவது .. ஐ டோன்ட் கேர் .. அவளை மட்டும் விட்டுடு ப்ளீஸ்”

நிருவிடம் இருந்து குழந்தையை சுரேன் பறிக்கப்போனான். அவள் குழந்தையை அடுத்தப்பக்கம் எறிந்தாள். படுத்திருந்த நிரூ திடீரென்று எழுந்து குழந்தையை பிடித்தாள். அவளிடம் போய் குழந்தையை மீண்டும் பறிக்கப்போனான். நிரூ குழந்தையை மீண்டும் எறிந்தாள். ஹெட்போனை போட்டபடியே திடீரென்று எழுந்த நிரூ குழந்தையை பிடித்து மடியில் வைத்துக்கொண்டாள். அவளிடம் போனால் பின்னால் இருந்து குழந்தை “அப்பா” என்றது. திரும்பிப்பார்த்தபோது பின்னால் இருந்து மீண்டும் நிரு சிரித்தாள். அதே நக்கல் சிரிப்பு. அடுத்தபக்கம் இருந்தும் சிரித்தாள். எகத்தாள சிரிப்பு. குழந்தை அழுதது. மொத்த இருக்கைகளிலுமே நிரு இருந்து சிரித்துக்கொண்டிருந்தாள். குழந்தையை எறிந்து விளையாடிக்கொண்டிருந்தாள். குழந்தை வீரிட்டு அழுதது. நிரு சிரித்துகொண்டிருந்தாள். ஹ ஹா ஹா. ஹா. ஹாஹா.

சுரேனுக்கு தலைவெடித்துவிடும் போல இருந்தது. சடக்கென்று திரும்பி எதையுமே பார்க்காமல் பைலட் அறைக்குள் நுழைந்தான். தண்ணீர் குடித்தான். இருக்கையில் இருக்கும்போது கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. டிமிட்ரி திரும்பி இவனைப்பார்த்தான்.

120518_C-17Cockpit_MarchARB_Riverside“ஹௌ ஆர் யூ பீஃலிங் சுரேன்?”

சுரேன் டிமிட்ரியை பார்த்து சிரித்தான். தெளிவாக சிரித்தான்.

“மச் பெட்டர்.”

“குட் …. எக்ஸ்கியூஸ் மீ ..”

சொல்லியபடி கட்டுப்பாட்டை சுரேனிடம் கொடுத்துவிட்டு டிமிட்ரி ரெஸ்ட் ரூமுக்கு போக எழுந்தான். சுரேன் விமானத்தின் முன் கண்ணாடி வழியே வானத்தை பார்த்தான். முகில்களுக்குள்ளிருந்து வெள்ளை சேலையில் முந்தானை திரள் திரளாய் பரவிக்கிடக்க நிரு தான் வந்து நின்றாள். பக்கத்திலேயே தாரணிக்குட்டி. அதே வெள்ளை சட்டை, குட்டி வெள்ளை தொப்பியுடன் தேவதையாட்டம். ஹ ஹா ஹ ஹா ஹ ஹா … நிரு சிரித்தாள்.

ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாய், சுரேன் கொக்பிட் வோய்ஸ் ரெக்கோர்டர் பவர் ஸ்விட்சை சடக்கென்று இழுத்து நிறுத்தினான். டேட்டா ரிக்கொர்டருக்கான கேபிளை இழுத்து அறுக்க, அந்த லைனுக்குரிய ரிப் விழுந்தது. பின்னர் விமானத்தின் ஓட்டோ த்ரோட்டில், ஓட்டோ பைலட் என ஒவ்வொன்றாக நிறுத்த ஆரம்பித்தான்.  விமானம் கலீர் என்று குழுங்கியது. இப்போது நோஸ் லிவரை வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் மாறி சுழற்ற ஆரம்பிக்க,

விமானம் சுழன்றடித்து தலைகுப்புற விழ ஆரம்பித்தது. சுரேன் விமானத்தின் வேகத்தை உச்சத்துக்கு அதிகரித்தபடியே கண்ணை மூடினான். விமானத்தின் ஒவ்வொரு பாகங்களாக வெடித்து சிதற ஆரம்பித்தது.

“அப்பா …. என்னை விட்டிட்டு எங்கேயப்பா போறீங்கள்?”

&&&&&&&&

 

விவரங்கள்

படங்கள் : Google Images

வியாழமாற்றம் 27-06-2013 : இது எங்கட கதை.

$
0
0

 

brother-and-sister-gladiola-sotomayor

நீங்க கேட்டதால ஒரு கதை சொல்லுறன். ஒண்டே ஒண்டு தான். அதுக்கு மேலே கேக்க கூடாது. நீங்க என்ன  வேணுமெண்டு கேட்டீங்களோ அதையே சொல்லுறன். திருப்பி சொல்லுறன். கேளுங்க. தம்பிராசு டேய் .. உன்னை தான்.. நித்திரை கொள்ளாம கிடந்திட்டு திரும்ப சொல்லன எண்டு அரியண்டம் பண்ணக்கூடாது சரியா? எடியே பெட்டை .. மலர் .. அங்கை இங்க ஏமலாந்தாம கேக்கிறியா? கேட்டிட்டு அப்பிடியே நித்திரையாயிடோணும். இன்னொரு கதை சொல்லுங்கப்பா எண்டா நான் எங்க போறது? ஒண்டே ஆயுசுக்குக்கும் போதும். செரியா?..வெள்ளன எழும்பி நடந்தா தான் வெயிலுக்கு முதல் யாப்பாண டவுண்ல நிக்கலாம்… ஒரு கதையை கேட்டிட்டு பேசாம படுக்கோணும். விளங்குதா?

கோயிலடி பூவரச கொப்புகளையும் சித்திரை மாசத்து திரள்முகில்களையும் உச்சிக்க்கொண்டு பூரண சந்திரன் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தது. பூநகரி சந்தி பிள்ளையார் கோயிலடியில் சாரத்தை விரித்து அதில் தம்பிராசையும் மலரையும் கிடத்திவிட்டு சுவர்க்குந்தில் சாய்ந்திருந்தபடியே சோமப்பா கதை சொல்லத்தொடங்கினார்.

 

சோமப்பா சொன்ன கதை

விருத்தேஸ்வரம் தேசம் செல்வச்செழிப்பான தேசம் இல்லாவிட்டாலும் நல்லவர்களை கொண்ட தேசம். அந்த தேசத்தின் குடியானவர்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக செய்து வந்தது கமம்; பெரும்போகம் சிறுபோகம் என்று ஆண்டின் பெரும்பாலான நாட்களில் கமமும் கமம் சார்ந்த தொழில்களும் தான் செய்வார்கள். அத்தனை பெரும் உழைப்பார்கள். உழைக்கவேண்டும். குடும்பத்தில் பத்துப்பேர் என்றால் பத்துபேரும்... பெண்கள் கால்நடைகள், வீட்டு சமையல், புழுங்கல் அவிப்பு என்று கவனிப்பார்கள். ஆண்கள் வயலுக்கு போவார்கள். தென்னைக்கு அடி வெட்டுவார்கள். சிறுவர்கள் கிளி அடிப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. சில பருவங்களில் மழை பொய்த்துவிடும். சிலவேளை வெள்ளம் பயிரை மூடிவிடும். கொடிய பயிர்கொள்ளி நோய்களும் பரவுவதுண்டு. வாழ்க்கை பஞ்சப்பாடு தான். ஆனாலும் மாசத்துக்கு ஒருமுறை அரசனுக்கு கொடுக்கும் திறை தவிர்த்து மிச்சம் உள்ளதை இல்லாதவர்களுக்கும் கொடுத்து தானும் உண்பார்கள் இந்த விருத்தேஸ்வர தேசத்து மக்கள்.

இந்த நாட்டு மக்களுக்கு இன்னொரு துன்பமும் இருக்கிறது. அங்கிருந்து எட்டு மலை தாண்டி ஒரு தொங்கு தோட்டத்து அரண்மனையில் பூதம் ஒன்று வசித்து வந்தது. அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்துக்கு வந்துவிடும். வந்து ஏதாவது ஒரு வீட்டுக்குள் சட்டென்று புகுந்து குடும்பத்தில் “ஒரு பிள்ளையை தந்துவிடு, போகிறேன்” என்று சொல்லும். “கொடுக்கமாட்டேன் போ” என்று பூதத்துடன் சண்டை பிடித்தால், பூதம் வீட்டில் இருக்கும் எல்லா பிள்ளைகளையும் பிடித்துக்கொண்டு போய்விடும்.  ஒரு பிள்ளையை தா என்றால் எந்த பிள்ளையை கொடுப்பது. பெற்றோர்கள் ஒருவரையும் கொடுக்கமாட்டோம் என்று அடம் பிடித்து அழுவார்கள். பூதம் எல்லா பிள்ளைகளையும் தூக்கிப்போய்விடும்.

1325139455_1-2

விருத்தேஸ்வரம் தேசத்தின் கிழக்கு கோடியில் இருக்கு தாயாற்றுக்கு அருகே பல்லவபுரம் என்ற சிற்றூர் இருக்கிறது.  கந்தனும் அவன் மனைவி காமாட்சியும், அவர்களின் ஐந்து பிள்ளைகளும் அங்கே தான் வசித்துவந்தார்கள். மற்றவர்களை போலவே கமம் செய்து பிழைத்து வந்தார்கள். ஐந்துமே சின்னதுகள். மூத்தவனுக்கு எட்டு வயது. ஐந்தாவது கடைக்குட்டி சாரதாதேவிக்கு மார்கழி கழிந்தான் ரெண்டு வயசு. சாரதாதேவி வெறும் குழந்தை அல்ல. ஒரு தேவதை. தூளியிலே அவள் அழும்போது கேட்கவேண்டுமே. அவள் அழுகை தேனாக காதிலே வந்துவிழும். அந்த அழுகை இசையில் மயங்கி காமாட்சி அவளுக்கு பால் ஊட்ட கூட மறந்துவிடுவாளாம். அண்ணன்மார்களுக்கும் சாரதாதேவி என்றால் உயிர். குட்டி குட்டி என்று தூளி ஒரு கணம் ஓய்ந்திருக்க விடமாட்டார்கள். எங்கிருந்தோ இருந்தெல்லாம் மயிலிறகு எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பார்கள். கந்தனோ சாரதாதேவி ஒரு சின்ன அணுக்கம் காட்டினாலேயே எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவான். செல்லக்குட்டிக்கு கொஞ்சும்போது குத்தக்கூடாது என்று மீசை வழித்து சவரம் செய்திருந்தான். பாசம் அந்த வீட்டில் தாயாற்று நீர்மட்டத்தை மீறி பாய்ந்துகொண்டிருந்தது.

கந்தன் வீட்டுக்கு ஒருநாள் அந்த சனியன் பிடிச்ச பூதம் வந்துவிட்டது.

ஒரு பிள்ளையை பூதத்துக்கு விடிவதற்குள் தாரை வார்க்கவேண்டும். இல்லாவிட்டால் பூதம் அத்தனை பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு போய்விடும். எல்லா பிள்ளைகளுமே சிறுவர்கள். யாரை என்று கொடுப்பது? கந்தன் இரவு முழுதும் தூக்கம் வராமல் தவித்தான். அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாய், தாயம் விளையாடுவோமே சோகி, அதில் ஐந்தை எடுத்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரை எழுதி எல்லாவற்றையும் ஒரு கிண்ணிக்குள் போட்டான். கிண்ணியை கொண்டுபோய் சாரதாதேவியிடம் கொடுத்து “ஒண்டை எடு கண்ணம்மா” என்று கண் கலங்கிக்கொண்டே சொன்னான். சாரதாதேவி “அப்பா” என்று மழலை வழிய சொல்லிக்கொண்டே ஒரு சோகியை எடுத்தாள். அந்த சோகியில் இருந்த பெயரை பார்த்தால்

“சாரதாதேவி”..

பூதம் அவளை பிடித்துக்கொண்டு போய்விட்டது. கந்தன் அன்றைக்கு பைத்தியமானவன் தான். “என்ன ஒரு அப்பன் நான், என் பிள்ளையை பூதம் பிடித்துக்கொண்டு போக பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேனே” என்ற குற்ற உணர்வு. நாட்கள் கழிந்தன. கமத்துக்கு போகிறான் இல்லை. வயல் முழுதும் களை மெத்திப்போய் கிடக்கிறது. இவன் என்னடாவென்றால் வீட்டிலேயே கிடக்கிறான். ஊர் முழுக்க பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லிக்கொண்டார்கள்.  கந்தன் இதை ஒன்றுமே கவனத்தில் எடுக்கவில்லை.  தினமும் சாவு விழும் வீடு போல ஆகிவிட்டது கந்தனின் வீடு.

ஒருநாள் அதிகாலையில் திடீரென்று கந்தன் பூதத்தை தேடி புறப்பட்டு விட்டான். பூதத்தை கொன்று சாரதாதேவியை மீட்டுவருகிறேன் என்று சூழுரைத்தான். வழியில் கண்டவர்கள் எல்லாம் இவனை ஏளனம் செய்தார்கள். இரண்டு மலைகள் தாண்டும் முன்னரேயே காலணி தேய்ந்து அறுந்துவிட்டது. நான்கு மலைகள் தாண்டும்போது உடுத்த உடை கந்தலாகி உக்கி உதிர்ந்துவிட்டது. இவன் நடந்தான். நடந்து இறுதியில் பூதம் இருக்கும் தொங்குதோட்டத்துக்கு போய்விட்டான். இப்போது தொங்குதோட்டத்தில் ஏறவேண்டும். எப்படி ஏறுவது? கள்ளப்பூதம் தோட்டத்தை சந்திரனில் கயிறு கட்டி தொங்கவிட்டிருந்தது.

கந்தனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  கத்தினான்.

“சனியன் பிடிச்ச பூதமே .. நீ உண்மையான வீரனாக இருந்தால் வந்து என்னோடு மோது பார்ப்போம்.. ”

இவன் சத்தம் கேட்டு பூதம் வெளியே வந்தது. இவ்வளவு காலத்தில் ஒரு அப்பன் துணிந்து தன்னை தேடி வந்திருக்கிறானே என்று பூதத்துக்கு ஆச்சர்யம்.

“உன்னோடு எதுக்கு நான் சண்டை பிடிக்க வேணும்?”

“நீ என் கடைக்குட்டி தேவதையை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாய். அதற்காக உன்னை கொல்லப்போகிறேன்.”

“ஹ ஹா ஹ .. நான் இப்படி நிறைய பேரின் தேவதைகளை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறேனே”

“தெரியும் .. அவர்கள் எல்லோர் சார்பிலும் நான் உன்னை கொல்லப்போகிறேன்”

பூதத்துக்கு கந்தனின் துணிச்சலும் ஓர்மமும் பிடித்துவிட்டது. ஒரு நூலேணியை கீழே இறக்கியது. கந்தன் வேக வேகமாக ஆத்திரத்தோடு அந்த ஏணியில் ஏறினான். ஏறி தொங்குதோட்டத்தில் காலடி வைத்தகணமே சுற்றும் முற்றும் பார்க்காமல் பூதத்தை அடிக்க போனார்.

“பொறு பொறு .. அங்கே பார்” என்றது பூதம். கந்தன் திரும்பிப்பார்த்தான். அங்கே சாரதா தேவி. நிஜமாகவே தேவதை போல, அவளை ஒத்த குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தாள். எந்நாளும் காணாத சந்தோஷ சிரிப்புடன் இருந்தாள். மற்ற ஊர்களில் பிடிக்கப்பட்ட குழந்தைகளும் அப்படியே. அவர்களுக்கு அங்கே எல்லாமே இருந்தது. உணவு, உடை, இருக்க இடம், கல்வி .. எல்லாவற்றுக்கும் மேலே பாசம். கிடைத்தது.

“யோசிச்சு பார், இந்த குழந்தையை நீ திரும்ப கூட்டிக்கொண்டு போனால், மீண்டும் இங்கே திரும்பிவர முடியாது… இப்படி உன்னால் இந்த குழந்தையை பார்த்துக்கொள்ள முடியுமா .. சொல்லு? இப்படி ஒரு வாழ்க்கையை அந்த குழந்தைக்கு உன்னாலே கொடுக்கமுடியுமா சொல்லு?”

கந்தன் யோசித்தான்.

“ஆனா என்னால அவளை மறக்கவே முடியாதே .. அவள் என் குழந்தை ஆயிற்றே .. அவள் இல்லாம ஒவ்வொரு நாளும் உயிர் போகுதே .. ”

பூதம் சிரித்தது.

“பார்த்தியா பார்த்தியா .. அவளுடைய சந்தோசமான வாழ்க்கை உனக்கு முக்கியமா? இல்லை அவள் உன்னோடு இருக்கிறபோது கிடைக்கும் உன்  சந்தோசம் உனக்கு முக்கியமா?”

பூதம் கேட்டுவிட்டு கந்தன் முன்னே ஒரு மணல் கடிகாரத்தை வைத்தது. மேல் பாதி மணல் கீழ் பாதிக்குள் கொட்டி முடியும் முன்னர் நீ முடிவெடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டது. கந்தன் தலையில் கைவைத்து யோசிக்க தொடங்கினான்.

மணல் கடிகாரத்தில் மண் சொட்டு சொட்டாக கீழ்ப்பாதிக்கு கொட்ட ஆரம்பித்தது.


 

கொஞ்சம் பெர்சனல் ... வேணுமெண்டால் ஸ்கிப் பண்ணுங்க!

இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஷ்பேக் சொல்லவேண்டும். படலையின் முதல் பதிவான அரங்கேற்றவேளையில்வரும் பகுதி இது.

“நான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தது 2004இல் என்று நினைக்கின்றேன். அப்போதெல்லாம்“The Namesake”வாசித்து கொண்டிருந்த காலம். மனதிலே ஒரு Jhumpa Lahiriயாகவோ அல்லது இன்னொரு Khaled Hosseiniஆகவோ எங்கள் வாழ்கையை எழுதி  ஒரு காலத்தில் வருவேன் என்ற நம்பிக்கை இருந்தது.”

இது எழுதி இரண்டு நாட்களில் “அக்கா” கதை வெளியாகிறது.  உண்மையில், அந்த கதை எழுதியபிறகு தான் படலையே ஆரம்பிக்கலாம் என்ற ஐடியா வந்தது. அக்கா கதைக்கு பின்னாலே ஒரு பெரிய சங்கதி இருக்கிறது.

ஆஸிக்கு விடைபெறும்போது சிங்கபூர் ஏர்போர்டில் அஜி கேட்ட கேள்வி, “எங்களை எல்லாம் விட்டிட்டு போய் தனிய இருந்து என்ன செய்யபோறாய் மச்சான்?”. நான் சொன்ன பதில் ஒன்றே ஒன்று தான் “எழுதோணும்”. ஏர்போர்ட்டில் பிளேனுக்கு வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கும்போதே இன்னிங்க்ஸ் ஆரம்பித்துவிட்டது. அன்று எழுதிய பதிவு My Relationships!.

sister-and-brother-natalia-tejera

ஆஸி வந்து கொஞ்சநாளிலேயே ஆரம்பித்த நாவல் தான் அக்கா! யெஸ். நாவல். அதுவும் ஆங்கிலத்தில். அக்கா என்ற ஒரு உறவு எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். அந்த உறவிலே ஒரு வித உயிர் இருக்கும். அதே சமயம் ஒரு ஹோல்ட் பாக்கும் இருக்கும். அக்கா இருப்பவர்களுக்கு அது புரியும். பாசம் பரிவு அத்தோடு “என்ன தானே செய்றானே பாக்கலாம்” என்ற ஒருவித விட்டுப்பிடித்து பார்க்கும் உறவு அது. விழுந்தா மட்டும் வந்து தூக்கிவிடுவார். மற்றும்படி தூரத்தில் நின்று என்ன செய்யிறான் என்று ரசிக்கும் உறவு அது. அந்த அக்கா உறவை நான் மூன்று பேரிடம் அனுபவித்திருக்கிறேன். என் சொந்த அக்கா. மற்றது கஜன். மூன்றாவது அமுதா. மூவரும் அதை தெரிந்து கொடுத்தார்களா என்று தெரியாது. ஆனால் நான் எடுத்துக்கொண்டேன். I needed it.

இப்போது அக்கா நாவலை யோசியுங்கள். ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கை. ஒரு குடியேறி. ஒரு வெளிநாட்டு பெண். வன்னிக்கு இடம்பெயர்ந்து கடைசிவரை சில்லுப்பட்டு வட்டக்கச்சியில் வசிக்கும் ஒரு இளைஞன். இந்த நான்கு பாத்திரங்களை நாவலின் பல்வேறு சூழல்களால் தொடுத்து இறுதியில் உணர்வோடு முடிக்கவேண்டும். இந்த நான்கு பாத்திரங்களும் தம்பாட்டுக்கு தங்கள் வாழ்க்கையை கொண்டு போயிருப்பார்கள்.அவர்களுக்கென்று உறவுகள், சந்தோஷங்கள், தருணங்கள் எல்லாமே இருக்கும். ஆனால் எதையோ ஒன்றை தொலைத்தது போல ஒரு இழை நாவல் பூராக நூற்க வேண்டும். அது எது என்ற ஆதாரமான விஷயம் இறுதி அத்தியாயத்தில் அவிழும்.

இது டிசைன். முன்னூறு நானூறு பக்கம் தேறும், மூன்று வருடத்தில் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ரெண்டு மூன்று பக்கம் எழுதியிருப்பேன். வழமை போல சுற்றத்துக்குள்ளேயே இருந்து ஒரு குரல். 

“நீ என்ன பெரிய இவனா? எழுதி என்னத்த கிழிக்கப்போறாய்?”


 

And the mountains echoed.

ஒரு நாவல், அதுவும் அரசியல் இல்லாமல் எங்கள் வாழ்க்கையை அதன் இன்ப துன்பங்களோடு இயல்பாக, இப்பிடித்தான் வாழ்ந்தோம், இப்பிடித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று, என் அக்காவின் பிள்ளைகள் ஆங்கிலத்திலேனும் வாசிக்க ஒன்றை எழுதவேண்டாமா? என்ற கேள்வியை கேட்கவைத்தவர் காலித் கூசைன். அவரும் லாகிரியும் இல்லை என்றால் இன்றைக்கு படலை இல்லை …ஏன் நானே இல்லை. சக்திவேல் அண்ணா வீட்டுக்கு முதன்முதல் போனபோது கூட கொடுத்தது The Kite Runner தான். எனக்கு அதன் மதிப்பும் மரியாதையும் அலாதியானது. இப்படி ஒன்றை எழுதினால் அது சும்மா பிச்சி உதறும் என்று நான் ஒரு ஸ்கெட்ச் போட்டால், தலைவர் அதில் வீடு கட்டி குடிபூரலே பண்ணுவார். அப்பிடி ஒரு உறவு அவர் புத்தகங்களுக்கும் எனக்கும் இருக்கும்.

8347051_0_9999_med_v1_m56577569853216552அப்படி அவர் கட்டின வீடு தான் “And the mountains echoed”

சென்ற மாதம் தான் வெளியான புத்தகம். ஆப்கான் வாழ்க்கையோடு ஒன்றிய கதைக்களம். ஐம்பதுகளில் இருந்து ஆரம்பிக்கிறது. ஒரு தந்தை தனது நான்கு வயது மகளையும் அவள் அண்ணனையும் கூட்டிக்கொண்டு கால்நடையாக காபுலுக்கு போகிறார். போகும் வழியில் ஒரு பூதக்கதை சொல்லுகிறார். காபுலில் மகளை ஒரு பணக்கார குடும்பத்துக்கு தத்துக்கொடுக்கிறார். பாசமுள்ள அண்ணனும் தங்கையும் இப்படித்தான் பிரிகிறார்கள். தங்கை பேர் பாரி. அண்ணன் பேர் அப்துல்லா.

பாரி அந்த வீட்டில் வளர்ந்து, தத்தெடுத்த தாய் அவளை பிரான்ஸ் கூட்டிப்போய்விட, பின்னர் பிரான்சிலேயே வளர்கிறாள். அவள் வாழ்க்கை. தாய் பிரபல கவிஞர். குடிப்பழக்கத்தில் தன்னை தொலைத்தவள். பாரி கணித்ததில் மிளிர்ந்து பேராசிரியர் ஆகிறாள். அவளுக்கு நண்பர்கள். குடும்பம். பிள்ளைகள். பிள்ளைகளுக்கு பிள்ளைகள். எத்தனை வாழ்க்கைகள். ம்ஹூம்.

அப்துல்லா கஷ்டப்பட்டு, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து அமெரிக்கா போய் அங்கே ஒரு ரெஸ்டோரன்ட் வைத்து செட்டில் ஆகிறான். காபுலில் பாரி இருந்த வீட்டில் இருக்கும் நபியுடைய வாழ்க்கை இன்னொன்று. நாட்டுக்கு வந்த NGO சேவையாளரான மார்க்கஸின் வாழ்க்கை இன்னொன்று. மார்க்கஸ் கிரீசை சேர்ந்தவர். அவருக்கு ஒரு அம்மா. ஒரு உடன் பிறவா சகோதரி.

hosseini-khlaled404 பக்க நீண்ட நாவலை நாற்பது வரியில் எழுதிவிட முடியாது. காலித் பாத்திரங்களை செதுக்கும் முறையில் ஆச்சர்யப்படுத்துகிறார். பாரியும் அப்துல்லாவும் சந்திக்கும் இறுதி அத்தியாயம் நம்மை விசர் பிடிக்கவைக்கும். அதற்கு காரணம் உணர்ச்சிவசப்படாமல் இயல்பாக அந்த சந்திப்புகளை நிகழ்த்துவார். பாத்திரங்கள் தங்கள் அன்பை, கோபத்தை, விரக்தியை வெளிக்காட்டும் விதம் பயங்கர ஷட்டலாக இருக்கும். அழுது தொலையுங்களேன் என்று எங்கள் மனம் சொல்லும். அவர்கள் அழமாட்டார்கள். அது எங்களை அழ வைக்கும். அது தான் எழுத்தாளனின் வெற்றி. காலித்தோடு ஒரே வண்டியில் சேர்ந்து பயணித்தால் தான் நம்மால் அதை உணரமுடியும். உணர்ந்தேன். வண்டில் நிறைய பொறாமையுடன்!

இது The Kite Runnerஆ? என்றால் இல்லை. A Thousand Spelendid Sunsஆ? என்றால் இல்லை. அவை இரண்டும் ஆப்கானை சுற்றிவரும் கதைகள். இந்த நாவல் உலகெங்கும் வாழும், ஆப்கானோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்புபட்ட மக்களின் கதை. இடம்பெயர்ந்தவர்கள், அவர்களின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள்… ஆப்கான் என்றாலே என்ன என்று தெரியாத, அந்த மொழி தெரியாமல் பிரஞ்சும் ஆங்கிலமும் பேசும் தலைமுறையின் வாழ்க்கையை சொல்லும் கதை. இந்த வாழ்க்கையோடு தொடர்புபட்ட வெளிநாட்டு உதவி நிறுவனங்களை சேர்ந்தவர்களின் குடும்ப வாழ்க்கையையும் இங்கே புகுத்தியது தான் காலித்தின் சிறப்பு. நாவலின் எந்த இடத்திலும் தலிபான் பெண்களை சிரச்சேதம் செய்யவில்லை. அமெரிக்காகாரன் குண்டுபோடவில்லை. அல்லாஹு அக்பர் என்று இஸ்லாமியர்கள் தொழுதுவிட்டு குண்டுவைக்கவில்லை. அதுவல்ல ஆப்கானிஸ்தானின் ஒரே முகம். அதற்கு நிஜமான உணர்வும் உயிரும் உள்ள மக்கள் கூட்டம் இருக்கிறது. People என்று சுமந்திரன் சொல்லுவார். அது. அதை சொல்லவேண்டும். இதைவிட யதார்த்தமாக அதை சொல்லமுடியாது என்னுமளவுக்கு பாத்திரங்களால் கதை சொல்லுகிறார் காலித். In one word, he is a genius.

பலதரப்பட்ட பாத்திரங்கள் வருவதாலும், நீண்ட நாவல் என்பதாலும் ஆங்காங்கே கொஞ்சம் சலிப்பு, குழப்பங்கள், பக்கங்களை பர பரவென்று தாவுதல்கள் எல்லாம் செய்யவேண்டியிருந்தது. ஆனால் வயோதிப பாரி அப்துல்லாவின் மகள் பாரியுடன் தொடர்பு கொள்வது முதல் நாவல் சுப்பர்சோனிக் வேகம் பிடிக்கும். சில இடங்களில் குண்டு போடும். பல இடங்களில் அழுவீர்கள். பல தடவை நல்லவர்கள் ஆவீர்கள்!

ஒரு சதம் கூட பெயராத வேலைல ஏழெட்டு மணித்தியாலம் கிடந்து ஏன் குத்திமுறியிறாய்? என்று எழுதுவதை கேலிபண்ணி அப்பாவே கோபித்துக்கொள்வார். சில நேரங்களில் எழுதி என்னத்தை காணப்போகிறோம் என்று மற்றவர்கள் கேட்டு கேட்டு எனக்கே அந்த சலிப்பேற்படுத்துவதுண்டு. காலித்தை வாசிக்கும்போது அது பறந்துவிடும். அண்ணர் ஒரு வைத்தியர். வைத்தியராக இருந்துகொண்டே தான் Kite Runner எழுதினார். எழுதி அதை ஒருத்தன் பதிப்பித்து ஹிட் ஆனது வேற விஷயம். முதல் அத்தியாயம் எழுதும்போது அதெல்லாம் அவர் யோசித்திருக்க சாத்தியமில்லை. ஒன்றே ஒன்று தான் யோசித்திருப்பார்.

எழுதோணும்!


 

பூவிலே மேடை நான் போடவா?

பூத கதையிலே பல யதார்த்தங்கள் இருக்கிறது. அந்த யதார்த்தங்கள் தான் “And the mountains echoed.” என்ற நாவலை ஒருமுகப்படுத்தும். நாவலின் ஆரம்பமே இப்படித்தான் இருக்கும்

“You want a story and I will tell you one. Just one.”

சோமப்பா பூநகரியில் தன் பிள்ளைகள் இருவருக்கும் சொல்லும் பூதக்கதை சொல்லும் ஒரு கசப்பான யதார்த்தம்; நான்கு விரல்கள் தப்புவதற்கு ஒரு விரலை சிலவேளை காவு கொடுக்கவேண்டி வரும் என்பது. குடும்பத்தை சமாளிக்கமுடியாமல் பாரியை தத்து கொடுக்கிறார்கள். ஆனால் பாரி நல்ல நிலைக்கு வருகிறாள். ஏனைய சகோதரர்கள் ஆப்கானில் இருந்து கஷ்டப்படுகிறார்கள். பாரி, அப்துல்லா சகோதரர்கள் நாவலின் ஆரம்பத்தில் பிரிந்தவர்கள் இறுதியில் தான் சேருகிறார்கள். சேரும்போது அப்துல்லாவுக்கு அதை உணரும் வயது கடந்துவிட்டது.

நாவல் முழுக்க இருவர் வாழ்க்கையிலும், எதையோ தொலைத்த ஒரு உணர்வை காலித் ஏற்படுத்திக்கொண்டே இருப்பார். அது வெறும் பாசமோ சகொதரத்துவமோ கிடையாது. ஒரு உணர்வு. வாசிக்கும்போது அது இருந்தது. அதை எனக்கு மொழியில் புரியவைக்க முடியவில்லை. ஆனால் இசையால் புரியவைக்க முடியும். ஏனென்றால் அதற்கு ராஜா இருக்கிறார்!

வாசிக்கும்போது இந்த பாட்டு எனக்கு பிஜிஎம் இல் போய்க்கொண்டிருந்தது. இப்படியான எது என்று தெரியாமல் தொலைத்துவிட்டு தேடும் உணர்வுகளுக்கு  ராஜா சும்மா லாலாலலா என்று பீலிங்கை பொழியமாட்டார். அவர் தெரிவு அனேகமாக வெஸ்டேர்ன் கிளாசிக்காக இருக்கும். அங்கே தான் அவர் தன்னை தேடுவதும் கூட.

இந்த உணர்வுக்கு தல தேர்ந்தெடுத்தது பாஷ்(Bach) இசையை.  Bach Sonata என்று சும்மா யூடியூபில் தேடிப்பாருங்கள். அது எப்படிப்பட்ட சாத்தான் என்று புரியும்.  நீங்கள் கடற்கரையில் படுத்திருக்கும்போது இடைவிடாமல் மெல்லிய நுண்ணலைகள் அடுத்தடுத்து உங்கள் கால்களை நோகாமல் நனைக்கும்போது எப்படி இருக்கும்? அது Bach Sonata! இதை ராஜா பல பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார். இந்த பூவிலும் வாசமுண்டு, ஏதோ மோகம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

ராஜாவின் How to name it அல்பத்திலே “I met bach at my house” என்று ஒரு கொம்போசிஷன் இருக்கும். எவன்டா இப்பிடி எங்களை சாகடிக்கமுடியும்? என்னா இசைடா.

ராமேஸ்வரம் என்று ஒரு மொக்கை படம் கொஞ்ச நாளைக்கு முன்னர் வந்தது. ஈழத்து கதை தான். அதன் இசை நம்மாளு. நிருஎன்று பெயர். ரெண்டு படம் இசையமைத்துவிட்டு இப்போது பாரீசில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் அந்த படத்திலே ஒரு பாட்டு போட்டார். பக்கா Bach. ஆரம்ப செல்லோ ஓடும் ஓட்டத்திலேயே தெரிந்துவிடும் அது Sonata அரேஞ்மெண்ட் என்று.  அலை அடிக்கும். அந்த பாட்டிலும் ஒரு இழப்பு, வலி, தேடல், காதல் எல்லாமே இருக்கும். நம்மாளுடா. Bach போட்டு இசையமைச்சிருக்கிறான். கொண்டாடவேண்டாம்? யாருக்காவது அவர் தொடர்பு இருந்தால் தாருங்கள். தலயோடு பேசிவிட்டு தனிப்பதிவே போடவேண்டும்.

 

நான் இங்கே நேரடி Bach வீடியோ எதையும் கொடுக்கவில்லை. ஆனால் இந்த லிங்கைபடுக்கபோகும் முன்னர் கேட்டுப்பாருங்கள். இந்த Sonata மாட்டர் என்ன எண்டு அறிஞ்ச அளவில டெக்னிக்கலாக எழுதலாம் தான். ஆனால் அகிலன் திட்டுவான்! கஜன் டிலீட் பண்ணு என்பான். வேண்டாம். Bach இசையை ஐன்ஸ்டீன் இப்படி சொல்லியிருப்பார்.

This is what I have to say about Bach’s life work: listen, play, love, rever—and keep your mouth shut!“


 

கவுஜர் கஜனோடு ஒரு சம்பாஷனை

நேற்று கஜனோட பேசிக்கொண்டு இருக்கும்போது, வியாழமாற்றம் இப்ப எல்லாம் ரொம்ப சீரியஸா போகுதடா. ஒரு ஏ ஜோக் சொன்னாய் எண்டால் போட்டு மனேஜ் பண்ணலாம் என்றேன். “அப்பிடியெல்லாம் பண்ணாத நாளைக்கு ஒரு ஐடியாவோட வாறன் பொறு” என்றான். காலம ஆறு மணிக்கே சாட்டுக்கு வரும்படி எஸ்எம்எஸ் வந்தது. எனக்கு ஆறு மணி எண்டா அண்ணருக்கு மூண்டு மணி. தக்காளி தூங்கேல்லே போல. சாட்டில கதைச்சத அப்பிடியே கொப்பி பேஸ்டிங் ஹியர்!

“என்னடா என்ன ஐடியா .. சொல்லு”

“ஒரு கவிதை எழுதலாம் மச்சி”

“அதாண்டா போன வாரமே எழுதி ஐஞ்சு பேரு லைக் பண்ணி இருந்தாங்களே .. பாக்கலியா?”

"இல்ல மச்சி .. நீ போனவாரம் எழுதின மொக்கை கவிதையை பார்த்தனா… எனக்கும் கவிதை எழுதோணும் என்று ஆசையா இருக்கு"

ஜெர்க் ஆகிட்டேன்.

"டேய் வேணாம்டா .. பயலுக கொன்னே போட்டிடுவாங்க .. கவிதை எழுதிறது ஒன்னும் கலியாணம் கட்டுறது மாதிரி ஈசி வேலை கிடையாது .."

"அத நீ சொல்லுறியா ? ஐயோ ஐயோ என்னால சிரிப்ப தாங்க முடியலியே…"

"(மைண்ட் வாய்சில் .. ச்சே சந்தம் வருது எண்டதுக்காக உளரிட்டமோ) .. இல்லடா, இந்த ஊரில நிறைய கவிஞர்கள் மச்சி ... அவங்கள் கவிதையும் வேற எழுதுவாங்கடா ..  நமக்கெதுக்கு .. நானே தேவையில்லாம மூக்குல மருந்து கட்டீட்டு நிக்கிறன் .. "

thirumathi-thamizh_135729412914"இல்லடா சின்ன வயசில நிறைய கவிதை எழுதி இருக்கிறன் .. கோட்ட மட்டத்துக்கெல்லாம் போயிருக்கோம்ல "

"பிறகேண்டா கொண்டினியூ பண்ணேல்ல?"

"பதினாறு வயசு ஆனப்பறம்  லேடிஸ் சைக்கிளில போறது எல்லாமே நான் எழுதினத விட நல்லா இருந்துதடா .. அதாலா அன்னைக்கு தொட்டு கவிதையை எழுதுறத நிறுத்தீட்டு ரசிக்கலாம்னு முடிவு பண்ணீட்டேன்!"

"அப்புறம் திடீர்னு எதுக்கடா இன்னிக்கு கவிதை எழுதோணும்னு ஆசை?"

"ஹி ஹி .. வயசாயிடிச்சி மச்சி .. இப்பெல்லாம் கவிதைய முன்ன மாதிரி ரசிக்க முடியேல்ல ..  ஹி  ஹி ரசிச்சா வீட்டில வேற கும்முறாங்கடா .. ஹி ஹி .. "

"..வழியுது . துடைச்சுக்கோ .. அப்படி என்னதாண்டா எழுதியிருக்க?"

"நீ தான் போனவாரம் "பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென" எண்டு பார்த்தீபன் மாதிரி பீல் பண்ணினியே மச்சி ..  "

"அதுக்கு ..அண்ணனுக்கு ஒரு தேவயாணி பிடிச்சிட்டியா ?"

“நீ ராஜகுமாரன் தாண்டா .. ஆனா தேவயாணிங்க எல்லாம் இப்ப அலெர்ட்டா இருக்காங்கடா”

(ச்சிக் …திரும்பவும் நாமளே வாயை கொடுத்து மாட்டிக்கிட்டோமே).

"அப்புறம் என்னடா செய்திருக்க?"

“அண்ணியை தேடி ஒரு கவுஜ எழுதியிருக்கேன் .. இத படலைல போடு .. சும்மா பின்னும்டா”

“அப்படீங்கறே?”

“டேய் நான் சொல்லி உனக்கு எது சரி வரேல்ல சொல்லு?”

“அதாண்ட வவுத்த கலக்குது..”

“போடுறா போடு .. அப்புறம் பாரு கொமெண்டுகளை ”

“டேய் என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணலியே?”

 


 

அண்ணி நீ எங்கே !!

மழைக்கால மேகம் மலையோரம் சாரும்
2இடைகால தேர்தல் இவன் நெஞ்சில் தாவும்
கனாகாணும் உலகில் இவன் கொஞ்சம் மிஞ்சும்
இவன் வாழ உலகு தனி ஒண்டு வேணும்

படலையில் சில கடலைகள் போட
குழலிகள் விடை கேட்பது பஞ்சம்
தரணியில் பல தாவணிகள் பார்க்க
தல கண்டிஷனை இன்னும் குறைச்சா நல்லம்

காதலை தேடி விண்ணை தாண்டி போகணுமாம்
சமர்த்து பெண் வந்தால் சமந்தாவே வேணாமாம்
சொல்லா காதல் போட்டுத் தாக்கணுமாம் - பாவம்
காத்திருந்த காரிகைகள் அடுத்த பஸ்சுல ஏறிடிச்சாம்

காத்திருப்பேன் என்கிறானே காலம் தான் போன பின்னே - இவன்
யாத்திரைகள் செல்லுமுன்னே சீக்கிரமாய் நீயும் வந்துவிடேன்
குட்ட எல்லாம் தேவையில்லை கும்மி விட்டால் போதுமனே
மொட்டையிவன் என் நண்பன் முகத்தை வந்து காட்டிவிடேன்

அண்ணி நீ எங்கே !!

உன் கண்களில் தன் உயிரையும்
தன் கரங்களில் உன் உடலையும்
உன் கன்னம் சேர் வண்ணம் சேர்த்து
எண்ணம் போல் இல்லறம் செய்ய
எங்கே நங்கி இருக்கிறாய்?
எப்பன் ஒருக்கா வந்துவிடேன்!

--கஜன்


வியாழமாற்றம் 04-07-2013 : உஷ்ஷ்ஷ்..!

$
0
0

shhh---finger-on-lips

உஷ் ….. 1

ஓமந்தை சென்றிபொயின்ட் பரபரத்துக்கொண்டிருந்தது. காந்தன், அவன் நேரத்தை அடிக்கடி செக் பண்ணியபடி கொஞ்சம் பதைபதைப்புடன் நின்று கொண்டிருந்தான். எட்டரை மணிக்கு பாதை திறப்பார்கள்.  இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. கண்டுபிடிச்சிடுவாங்களோ? பிடிக்கேலாது. என்னெண்டு பிடிக்கிறது? ஏலுமெண்டா பண்ணிப்பார்க்கட்டும் என்று உள்ளூர நினைத்துக்கொண்டே அடிக்கடி தலைமயிரை கைகளால் மேவியபடி இருந்தான். ஆனாலும் ஒரு நடுக்கம் கால்களில் இருந்தது. அடிக்கடி வரிசையில் பின்னுக்கிருந்தவரிடம் சொல்லிவிட்டு பத்தடி தள்ளி இருந்த கக்கூஸுக்கு போய் வந்துகொண்டிருந்தான்.
ஒரு போறைபாக் முழுக்க உடுப்புகளும், இன்னொரு சந்திரிக்கா பாக்கினுள் கொஞ்ச விளையாட்டு சாமான், அப்பிள், எள்ளுருண்டை என்று வவுனியாவில் வாங்கிய பொருட்களை அடைத்து வைத்திருந்தான். ஒரு பிள்ளை. பெயர் கோமதி, மனிசிண்ட பேர் ராகிணி என்று சொல்லுவதாக தீர்மானித்திருந்தான். தம்பி பிரதீபனை பேராதனை பல்கலைக்கழகத்தில் கொண்டு போய் சேர்த்துவிட்டு மீண்டும் மல்லாவிக்கு திரும்புவதாக சொல்ல வேண்டும். இவ்வளவு தான் கதை. சரிக்கட்டிவிடலாம்.
Omanthaicheckpoint
பிடிபட்டால் நிச்சயம் நான்காம் மாடி. நான்கு மாசத்தில் பூஸா. வாழ்க்கை அழிந்தது. அங்கே அதை குறடு பிடித்து திருகுவார்கள். காந்தனுக்கு அடிவயிற்றில் கொஞ்சம் பயம் எட்டிப்பார்த்தது. வரிசையை திரும்பிப்பார்த்தான். குறைந்தது நான்கு மைல் நீளத்துக்கு கியூ நின்றது. அவனுக்கு முன்னாலே ஒரு இருநூறு பேர் நின்றிருந்தார்கள். இருநூறு பேரை செக் பண்ணி முடிக்க மத்தியானம் ஆகிவிடும். சாப்பிடும் சமயம். அதிகம் செக் பண்ணமாட்டார்கள்.  காந்தனுக்கு நம்பிக்கை வந்தது. மவனே, ஆம்பிளை எண்டா மெசேஜை கண்டுபிடியுங்கள் பார்ப்பம். காந்தன் கொடுப்புக்குள் கொஞ்சம் சிரிக்கவும் செய்தான்.
காலை எட்டரை மணி. சென்றிபோயிண்டை இப்போது திறந்து ஒவ்வொருத்தராக செக் பண்ண ஆரம்பித்தார்கள். கியூ நகர்ந்தது. ஓமந்தை வெயில் அனல் பறந்தது


ரெக்கி அனுப்புதல்

காந்தன் பிடிபட்டானா? அவன் தென்பகுதியில் இருந்து வன்னிக்கு கொண்டுசென்ற அந்த சங்கேத தகவல் ஆர்மி கையில் மாட்டுப்பட்டதா? என்ற விஷயங்களை தொடர முதல் கொஞ்சம் கிரேக்கத்துக்கு போய்விட்டு வருவோம். இது நடந்தது கிமு ஐந்தாம் நூற்றாண்டில். அப்போது ஐரோப்பா, ஆசியா சேர்ந்த பிராந்தியத்தில் பாரசீகர்கள் கொடிகட்டிப்பறந்தார்கள். அதிலும் இந்த ராஜா சேர்ஸ் கொஞ்சம் கொடுங்கோல் ராஜா. கழுத்துல துண்டு போட்டு தாலி அறுக்கிற ஆள். அவனுக்கு எல்லா குறுநில மன்னர்களும் திறை கொடுக்க வேண்டும். கொடுக்காவிட்டால் படையெடுத்து துவம்சம் செய்துவிடுவான். ஆனால் கிரேக்கம் மாத்திரம் அவனுக்கு அடிபணிய மறுத்தது. இந்த ராஜா உடனே கிரேக்கம் மீது படையெடுக்க ஒரு பெரிய கப்பல் படையை கட்டமைக்க தொடங்கினான். இரகசியமாக. இந்த விஷயம் பாரசீகத்தை விட்டு இஞ்சி கூட வெளியே போகமுடியாதவாறு கட்டுக்காவல். கிரேக்க காரருக்கு இந்த சங்கதி தெரியாது. அவர்கள் தங்கள் பாட்டுக்கு கலை, கிளேடியேட்டர் என்று விளையாட்டு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள், வரப்போகின்ற ஆபத்தை அறியாமலேயே.
டிமார்டஸ். இவன் கிரேக்கத்தை சேர்ந்தவன். அண்ணர் ஏதோ கில்மா செய்ததால நாட்டை விட்டு ஆளை கலைத்துவிட்டார்கள். அவன் இப்போது பாரசிகத்திலே வசித்துவருகிறான். அவனுக்கு இந்த படையெடுப்பு விஷயம் தெரியவருகிறது. டிமார்டஸ் தன் தாய்நாடு தன்னை வெறுத்தாலும் தான் தாய்நாட்டை வெறுக்ககூடாது என்று நினைப்பவன் (டேய் இந்த பன்ச் டயலாக் இப்ப ரொம்ப அவசியமா?).  இவன் கிரேக்கத்துக்கு இந்த செய்தியை எப்படியாவது அனுப்பிவிடவேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் எப்படி அனுப்புவது? எல்லா பக்கமும் காவல்காரர்கள். எல்லையில் கண்காணிப்பு அதிகம். ஜட்டியைக்கூட கையால ஸ்கான் பண்ணித்தான் அப்பாலே விடுவார்கள்.cover_m
எஸ்கிஸ் மீ அண்ணே .. ஒரு டவுட்டு.
இந்த இடத்தில உனக்கு என்ன டவுட்டுடா?
அந்த காலத்திலயும் ஜட்டி போட்டிருப்பாங்களாண்ணே?
வாடா என் தெய்வமே … உனக்கு கீழே நஸ்ரியா படம் போட்டிருக்கேன் .. பார்த்திட்டு அப்பிடியே எஸ்கேப் ஆயிடு!
டிமார்டஸுக்கு இது ஒரு சாலன்ஞ். இப்போது என்ன செய்வது? ஒரு ஐடியா வந்தது. அந்த காலத்திலே எழுதுவதற்கு மெழுகு பலகைகளை தான் பயன்படுத்துவார்கள். ஆங்கிலத்தில் Wax Tablet என்று அழைப்பார்கள். iPad போன்ற கருவிகளுக்கு டாப்லட் என்ற பெயர் வந்த காரணம் இதுதான்.  இந்த மெழுகு பலகையில் எழுதவென்று கூரிய எழுத்தாணி இருக்கும். Stylus. அதனாலே மெழுகிலே எழுதி, அழித்து எழுதி பயன்படுத்தலாம் இல்லையா. பேப்பர், சிலேட் வகைகள் வரமுன்னர் இவை வந்திருக்கலாம்.
mytablet
இந்த டாப்லட்டிலே எழுதி அனுப்பினால் எல்லைக்காவலர்களிடம் எப்படியும் அது சிக்கிவிடும். தூக்கு நிச்சயம். ஸோ ஏதாவது வித்தியாசமா செய்யவேண்டும். இவன் என்ன செய்தான் என்றால், மொத்த மெழுகையும் சுரண்டி எடுத்துவிட்டு, உள்ளே இருந்த பலகையிலே அந்த இரகசிய செய்தியை எழுதினான். பின்னர் மெழுகை உருக்கி பழையபடி பலகை மேலே பூசி, ஏதோ வெற்று டாப்லட்டை கொடுத்துவிடுவது போல கொடுத்துவிட்டான்.  ஒபரேஷன் சக்ஸஸ். டாப்லட் கிரேக்கத்தை போய் சேர்ந்துவிட்டது. கொண்டுபோன கபோதிக்கு இந்த மாட்டர் தெரியாது. அவன் போய் வெற்று டாப்லட்டை கொடுக்கவேண்டியவர்களிடம் கொடுத்துவிட்டு தன் ஜோலியை பார்க்க போய்விட்டான்.
இப்போது டாப்லாட் கிரேக்க ராஜதந்திரிகள் வசம். மேசை நடுவே வைத்துவிட்டு எல்லோருமே சுற்றி சுற்றி வருகிறார்கள். என்னா மாட்டர் இருக்கும் இதிலே? டிமார்டஸ் போன்ற ஒரு கில்மா மண்டைக்காய் வெறும் டாப்லட்டை கொடுத்துவிடமாட்டானே என்று அவர்கள் யோசித்தார்கள். மண்டையை உடைத்தார்கள். எப்படித்திருப்பிப்பார்த்தாலும் ஒன்றுமே தெரியவில்லை. மெழுகிலே ஒரு செய்தியும் இல்லை. இந்த இடத்திலே தான் கிளியோமேன்ஸ் என்கின்ற பெண் மூளையை பாவித்தாள். மெழுகை சுரண்டிப்பார்க்க சொன்னாள். இரகசியம் வெளிப்பட்டது. கிரேக்க மன்னன் அலெர்ட் ஆனான். கிரேக்கம் இரகசியமாக பதிலடிக்கு தயாரானது. பாரசீக கப்பல் படை கிரேக்க குடாப்பரப்பு ஒன்றுக்குள் நுழைய, தந்திரோபாய பின்வாங்கலை நிகழ்த்தி, நல்லா ஆக்களை உள்ளே வரவிட்டு, சுத்திவளைத்து செம அடி. துண்டை காணும் துணிய காணும் என்று பாரசீகர்கள் ஓடிவிட்டார்கள்.
இந்த சம்பவம் தான் நவீன செக்குயர் கொமினிகேஷனின் முதல் அடி என்கிறார்கள்.
அட .. ஒரு வரலாற்று கதை எண்டு எழுதோணுமப்பா.


உஷ் ….. 2

காந்தன் சோதனை சாவடியை அடையும் போது பன்னிரண்டு தாண்டியிருந்தது. நின்றவன் சோமரத்ன என்ற ஒரு ஆர்மி கோப்ரல். அவனுக்கு பக்கத்திலேயே மதுரிகா, மிலிட்டரி போலிஸ்காரி நின்று செக் பண்ணிக்கொண்டிருந்தாள். இடையிடையே சோமரத்ன அவளை செக் பண்ணிக்கொண்டிருந்தான். இதைப்பார்த்த காந்தனுக்கு தைரியம் பிறந்தது.
அரைவாசி சாக்கு தொங்கிக்கொண்டிருந்த ஒரு குட்டி அறைக்குள் முதலில் அழைத்தார்கள். கைகளை தூக்கச்சொல்லிவிட்டு தலையில் இருந்து ஜீன்ஸ் அடிப்பக்கம் வரை காந்தனை சோமரத்ன தடவினான். நடுவிலே கொஞ்சம் பிடித்துவிட்டு பார்த்து இளித்தான். “வடுவா சேட்டையா விடுறாய். பிடிடா பிடி. எல்லாருக்கும் ஒரு நாள் செய்யிறம் வேலை” நினைத்துக்கொண்டே காந்தன் பதிலுக்கு சின்னதாக புன்னகைத்தான், பெல்டை கழட்ட சொன்னார்கள். சேர்ட், ஜீன்ஸ் பொக்கட், ஜீன்சுக்குள்ளே உள் பொக்கட் இருக்கிறதா? எல்லாமே செக் பண்ணினார்கள். பண்ணும்போது காந்தனின் தாத்தாவை விசாரித்தார்கள். சொன்னான். கோமதிக்கு ஆறுமாதம் என்றான். ராகிணி ஒரு டீச்சர் என்றான். வாய்க்குள் எது வந்ததோ எல்லாமே சொன்னான். சொமரத்னாவும் மதுரிகாவும் பாக்குகளை செக் பண்ண தொடங்கினார்கள்.
military-checkpoint-2
போரைபாக்கை அப்படியே தலைகீழாக கொட்டினார்கள். ரெண்டு சோடி பென்டோர்ச் பட்டறி இருந்தது. விளையாட்டு காரை காட்டி அதற்கு தேவை என்றான். காரை ஒருமாதிரி நோட்டம் விட்டுவிட்டு, உள்ளே குண்டு இருக்கும் கொண்டுபோக முடியாது என்றான் சொமரத்னா. பாப்பிள்ளைக்கும் அதே கதி தான்.  மதுரிகா அனே பௌ என்றாள். சொமரத்னா பென்டோர்ச் பட்டறியை மாத்திரம் திருப்பிக்கொடுத்துவிட்டு விளையாட்டு சாமான்களை தன் பக்கம் வைத்துக்கொண்டான். எள்ளுருண்டையும் போனது. கேட்டுப்பார்த்தான். மாத்தையா உதவுகரன்ன ப்ளீஸ் என்று ரெண்டு சிங்களம் விட்டுப்பார்த்தான். ம்ஹூம். இரண்டு பையில் கொண்டுவந்த சாமான் செக்கிங் முடிந்து வெளியே போகும்போது ஒரு பை ஆனது. பயங்கர வெயில். காந்தனுக்கு வியர்த்து வழிந்தது. சேர்ட் கையால் மாறி மாறி கன்னத்தை துடைத்துக்கொண்டான். ஹரி யன்ன என்றார்கள். அப்பாடி.
காந்தன் தப்பிவிட்டான்.


காமசூத்ரா … அய் … ஜாலி!

டிமார்டஸ் அனுப்பிய டப்லட்டை சுரண்ட சொல்லி சொன்னது ஒரு பெண் என்று பார்த்தோமில்லையா. பெண்களுக்கு இப்படியான கள்ள மூளை நன்றாக வேலை செய்யும் என்று கஜன் சொன்னான். அந்த ஐடியாவை போட்டு அனுப்பினதே ஒரு ஆம்பிளை தாண்டா அப்பிரசிண்டா! அட ஆமால்ல?.
நம்ம வாத்சாயனார் எழுதின காமசூத்திரத்திலும் இது பற்றி இருக்கிறது. பெண்ணுக்கு அறுபத்து நான்கு கலைகள் தெரிந்திருக்கவேண்டுமாம். பார்டா. ஆ அப்புறம்? சமையல், உடுப்பு போடுறது மசாஜ் பண்ணுறதில இருந்து செண்டு தயாரிக்கிறது வரைக்கும் லிஸ்ட் இருக்கு. விரல்வித்தை காட்டுறது, செஸ் விளையாடுறது, புக் பைண்டிங் தொடங்கி மேசன் வேலை கூட பெண்கள் படித்திருக்கவேண்டுமாம். என்னாங்கடா நீங்க. காமசூத்திரா என்றுவிட்டு கப்ஸா விடுறீங்க? மையின் மாட்டர் எங்கேடா ஜேகே?
Kama-Sutra-artwork-008
இந்த லிஸ்ட்ல நாற்பத்தைந்தாவது இடத்தில ஒரு ஐட்டம் இருக்கு. அதுக்கு பெயர் மேலக்சிட்ட விகல்ப. அது சொல்கின்ற விஷயம் மெயின் மாட்டர்.  சங்கேதமாக செய்திகளை பரிமாறுவதற்கு பெண்களுக்கு தெரிந்திருக்கவேண்டுமாம். கோட் வேர்ட். அந்த கோட் வேர்டை யாராவது சொன்னால் அது என்ன என்று இன்டர்ப்ரிட் பண்ணவும் தெரியவேண்டும். ஏனாம்?
இந்த இடத்தில சீன் வருகிறது. இது தெரிந்தால் தான் பெண்கள் கள்ளக்காதலனுக்கு கணவனுக்கு தெரியாமல் மெசேஜ் அனுப்பலாமாம். இட்டுக்கட்டுகிறேன் என்று நினைக்காதீர்கள். “mlecchita-vikalpa, the art of secret writing, advocated in order to help women conceal the details of their liaisons” என்கிறார் The Code Book என்கின்ற புத்தகத்தை எழுதிய சைமன் சிங். ஆரம்பிச்சிட்டான்யா ஒரு புத்தகத்தை பற்றி என்று பயப்பிடாதீங்க. அந்த புத்தகம் இன்னும் வாசிச்சு முடிக்கேல்ல. முடிச்சப்புறம் தாக்கலாம்.
வாத்சாயனார் சொல்கின்ற டெக்னிக் அவ்வளவு கஷ்டமில்லை. கோட்வேர்ட் தான். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஜோடியை முதலிலே தீர்மானித்து வைப்பது. ‘அ’ என்றால் ‘வ’. ‘ம்’ என்றால் ‘ண்’. ‘மா’ என்றால் ‘டி’. அம்மா என்ற சொல் வண்டி என்ற கோட்வேர்டால் அழைக்கப்படும். அவ்வளவு தான்.
இந்த வகை கோட் வேர்டிங்கை, கிரிப்டோ நுட்பத்தை “காமசூத்ரா ஸைபர்” அல்லது “வாத்சாயனா ஸைபர்” என்று அழைக்கிறார்கள். ஆனால் இதை கிராக் பண்ணுவது எளிது. ஒரு பெரிய பந்தியிலே அதிகமாக வருகின்ற சொற்களை, தொடர்களை கணித்து பட்டேர்ன்களை அவதானித்து கோர்ட் வேர்டுகளை கண்டுபிடிக்கலாம். உதாரணமாக ஆங்கில வார்த்தைகளில், the, and, he, she போன்றவை அதிகம் வருமல்லவா. ஆக மூன்று எழுத்து, இரண்டு எழுத்து சொற்கள் அதிகமாக கிரிப்டோ மெசேஜில் இருந்தால் அவற்றை the, and, he, she என்பவற்றோடு பொருத்திப்பார்க்கலாம். அப்படிக்கண்டுபிடிக்கும்போது t, h, e, a, n, d, s என்ற எழுத்துகளின் கோட் எழுத்துக்களை கண்டுபிடித்துவிடலாம் இல்லையா. இப்போது ஏனைய இடங்களில் இந்த எழுத்துக்களை பொருத்தமாக ரிப்ளேஸ் பண்ணினால் ஏனைய சொற்களும் பிடிபடும்.   இப்படி கொஞ்சம் முக்கி முனகினால் எல்லா வார்த்தைகளையும் ஊகிக்கலாம். கீயை கூட இப்படி கோட் உடைக்கும் முறையை Frequency analysis என்று சொல்லுவார்கள். இதற்கு மேல் இதை விளங்கப்படுத்தினால் பேஜாராகிடும். வேண்டாம்.
Russell-Crowe-in-A-Beauti-009
ரசல் குரோ கணிதமேதையாக நடித்த “The beautiful mind” படத்தில் இப்படிப்பட்ட Frequency Analysis ஐ அவர் செய்வார். ஊருலகத்தில இருக்கின்ற பத்திரிகைகள், புத்தகங்களை பரப்பி அவற்றின் வாசகங்களுக்கிடையே ஏதாவது பட்டேர்ன் இருக்கிறதா? ரஸ்யாகாரன் உளவு செய்தி பரிமாறுகிறானா என்று மறை கழன்று போய் தேடுவார்.
Beautiful Mind ஒரு கிளாசிக் படம்.  அதில் வருகின்ற ஹாலுசினேஷன் தாக்கத்தில் எழுதினது தான் நம்மட கிளாசிக்கான மேகலாஎன்கின்ற சிறுகதை. அந்த கதை எனக்கொரு ஒரு குழந்தை மாதிரி.

 

உஷ் ….. 3

கிளிநொச்சியின் கிழக்குப்பக்கம் பன்னங்கண்டி பாலம் தாண்டி கொஞ்சத்தூரம் உள்ளே போனால் பழைய விவசாயத்துறை பண்ணை வரும். அந்த பண்ணை நடுவே இருக்கும் பெரிய வீடு இப்போது இரகசிய தளம். மேலாலே  எவ்வளவு சுப்பர்சோனிக், ஹெலி, கோள்மூட்டி வந்தாலும் கண்டுபிடிக்கமுடியாது. அவ்வளவுக்கு தென்னஞ்சோலையால் அந்த இடம் மூடப்பட்டு கிடக்கும். அந்த வீட்டின் சமையலறை மேசையில் தான் எல்லோரும் காந்தனுக்காக காத்திருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் ஒருவித அவசரம் பரபரப்பு தொற்றிவிட்டிருந்தது. அம்மான் காந்தன் மூலம் என்ன மெசேஜ் அனுப்பியிருப்பான்? காயா பழமா? எப்ப தொடங்கவேண்டிவரும்? எல்லாவித குழப்பங்களும் வந்து போயின. இந்த குழப்பங்கள் எல்லாவற்றுக்குமான விடையை தான் காந்தன் வவுனியாவில் இருந்து போர்டர் தாண்டி கொண்டுவந்துவிட்டான். இப்போது பாத்ரூம் போயிருக்கிறான். அவனுக்காக தான் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
07_07_08_Vaddakkachchi_01_70035_445
பாத்ரூமில் காந்தன் ஷேவ் எடுத்துக்கொண்டிருந்தான். நான்கு நாள் மழிக்காத தாடி, மீசை அதில் ஆரம்பித்து பின்னர் சோப்பே தடவாமல், தண்ணி போடாமல் கொஞ்சம் கொஞ்சமாக …. தலை மயிரை ஷேவ் செய்ய தொடங்கினான்.
கவனமாக முன் மண்டையில் இருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஷேவ் பண்ண சிக்கல் சிக்கலாக நிறைய எழுத்துக்கள், நம்பர்கள், கோடுகள் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தன. உச்சி மண்டை வழித்து, பிடரியில் ஆரம்பிக்க இன்னமும். காந்தன் திரும்பி நின்று கண்ணாடியில் பிடரியை பார்க்க முயற்சித்தான். சிக்கல் சிக்கலாக புரியாத வடிவங்களில் சங்கேத செய்திகள். எல்லாமே தலை மண்டையில் எழுதப்பட்டு இருந்தது. முழுக்க வழித்து துவாயால் தலையை தட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் காந்தனின் தலை முழுக்க பச்சை குத்தியது போல பல்வேறு சங்கேத வார்த்தைகள். கோட் வேர்ட்ஸ்.
காந்தன் மெல்லிய பெருமித புன்னகையோடு மொட்டைத்தலையோடு சமையலறைக்குள் நுழைய அங்கே இருந்தவர்கள் அவசரமாக அவனை சூழ்ந்து அவன் தலையை ஆராய தொடங்கினார்கள்.
முற்றும்


ஸ்டேக்னோகிராபியும் கிரிப்டோகிராபியும்

பன்னிரண்டு வயசில பார்த்த சீன். அப்பிடியே கண்ணுக்க நிக்குது.
“மாப்பிள்ள என்ன வேலை பார்க்கிறாரு?”
“கிரிப்டோலஜிஸ்ட்”
“என்னது கிரிப்டோலைட்டா? ஒண்ணுமே புரியலையே தம்பி”
“அட இது தெரியாதா? அதான் போட்டோ பிடிக்குற வேலை”
இருபத்தொரு வருஷத்துக்கு முதல் தலைவர் எழுதின வசனம் முடிய கூட்டம் கொல்லென்று சிரிக்கும். ரோஜா படத்தில பாகிஸ்தான் அனுப்புகின்ற கிரிப்டோகோடுகளை உடைக்கிற வேலை தான் அந்த படத்தில் அரவிந்சாமிக்கு. அத கொஞ்சம் மண்டை காயவைக்காம அடிப்படை விஷயங்கள் மட்டும் என்னவென்று பார்ப்போம். மிச்சம் தேவை என்றால் நீங்களே பிறகு படித்துக்கொள்ளலாம்.
டிமார்டஸ் மரத்திலே அந்த செய்தியை செதுக்கிவிட்டு அதற்கு மேலே மெழுகை பூசி அனுப்பினான் இல்லையா. அது வந்து ரகசியங்களை மறைத்து அனுப்பும் முறை. Security by Obscurity, மூடி மறைத்து ரகசியம் காப்பது என்று இதை சொல்லுவார்கள். இதை தான் Steganography என்று அழைப்பார்கள் (Stegan என்றால் மூடுதல் என்று அர்த்தமாம்).  ஏதாவது சில வீடியோக்களை ஓபன் பண்ணும்போது மேலே வெறும் கலர் மட்டும் இருக்கும். காசு கொடுத்து வாங்கினால் தான் அந்த கலர் எடுபடும். வோட்டர்மார்க் எடுபடும். இது கூட Steganography தான். இதில் இருக்கிற பிரச்சனை என்னவென்றால்,  மூடி வைத்திருக்கும் மாட்டரை தூக்கிவிட்டால் ரகசியம் தெரிந்துவிடும். யோசித்துப்பாருங்கள். பாரசீக காவலாளிகள் டிமார்டஸின் டப்லட்டை சுரண்டிப்பார்த்திருந்தால் குட்டு வெளிப்பட்டு இருக்கும். மேலும் அந்த காவலாளிகள் புத்திசாலிகளாக இருந்திருந்தால் அந்த மரத்தில் வேறு ஏதாவது பொய்யான தகவலை எழுதி மீண்டும் மெழுகை போட்டு கிரேக்கத்துக்கு அனுப்பியும் இருக்கலாம். கதை கந்தலாகி இருக்கும். இப்படி ஒரு ரிஸ்க் அந்த வழிமுறையில் இருக்கிறது. அப்படியென்றால் தப்பித்தவறி மாட்டுப்பட்டாலும் கொண்டுபோகின்ற செய்தி எதிராளிக்கு கிடைக்காமல் இருக்க என்ன செய்வது?
அதற்கு தான் காந்தன் கதை கை கொடுக்கிறது.
காந்தன் தலையை அம்மான் முதலில் மொட்டை அடித்து,  செங்கேத குறியீடுகளை எழுதி பின்னர் ஒன்றிரண்டு மாசம் வெயிட் பண்ணி முடி நன்றாக வளர்ந்து மறைத்த பின்னரேயே வன்னிக்கு அவனை அனுப்பியிருக்கிறான். இந்த கதையின் ஐடியா வந்தது கூட பாரசீக யுத்தத்தில் ஒரு ராஜதந்திரி செய்ததை வாசித்ததனால் தான் (அதே The Code Book புத்தகம்).
இரகசியத்தை, மயிரை நன்றாக வளர்த்து மறைத்தது Steganography. தப்பித்தவறி ஆர்மிக்காரன் அதை கண்டுபிடித்திருந்தாலும் காந்தன் மண்டையில் என்ன எழுதியிருந்து என்பதை அவனால் வாசிக்கமுடியாமல் போயிருக்கும். அதுக்கு காரணம் அதை எழுதியிருந்தது சங்கேத வார்த்தைகளில். இது தான் ரிஷிகுமாரின் கிரிப்டோகிராபி. காந்தன் மண்டையில் இருந்த அந்த கிரிப்டோ கோடை உடைக்கும் திறப்பு, கீ கொழும்பில் இருந்த அம்மானுக்கும், பண்ணை வீட்டில் இருந்த யாரோ ஒருவனுக்கும் மாத்திரமே தெரிந்திருக்கும். காந்தனுக்கு கூட தெரிந்திருக்காது. அவன் வெறும் காரியர் தான். அந்த கோடுக்கு உரிய கீயை கூட இன்னொரு காரியர் மூலம் அம்மான் வன்னிக்கு அனுப்பியிருக்கலாம்.
இந்த ஆதாரமான விஷயங்களை மட்டும் சரியாக புரிந்துக்கொண்டால், பின்னாளில் நீங்கள் சிலவேளைகளில் படிக்கக்கூடிய Public Key, Private Key security algorithm எல்லாம் சப்பை மாட்டர் என்று புலப்படும். பேசிக் எல்லாமே ஒன்று தான். ஆனால் அதை புரிந்து கோடிங் எழுதும்போது …. அது சொர்க்கம். யார் கண்டது. சிலவேளை பொண்ணு பார்க்க போகும்போது, செம்பகம் மாட்டேன் என்று சொல்லி ரோஜா கூட கிடைக்கலாம்!


143

ஆசை படத்தில் காதலை சொல்ல இந்த காமசூத்ரா-ஸைபர் பாவிப்பார்கள். I LOVE YOU என்பதற்கு 143 என்பார்கள். இது கூட கோட் தான். கார்ட்ஸ் விளையாடும்போது மூக்கை சொரிந்தால் டயமண்ட் துரும்பு. நெஞ்சை தடவினால் ஹார்ட்ஸ். காதை சொறிந்தால் கலாவறை என்று பேசி வச்சு கள்ள விளையாட்டு விளையாடுவாங்கள். குழந்தைகளுக்கு முன்னாலே ஏதாவது கொஞ்சம் அப்படி இப்படி மாட்டர் பெசுவதேன்றாலும் அப்பா அம்மா இந்த வேலை பார்ப்பார்கள். எங்கள் ஊரில் சங்கக்கடை மனேஜர் கூட ஒவ்வொன்றுக்கும் கோட் வேர்ட் வச்சிருப்பார்.
மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் “மீசை இல்லாத பாரதி” என்பார்கள். பிரண்ட்ஸ் படத்தில் தல விஜய் ல்தாகா சைஆ என்பார்.  இப்படி வரிசையாக மொக்கை போடலாம்.  இதைவிட பல ஈழத்து படைப்பாளிகளின் எழுத்துக்களே க்ரிப்ட்டோ ஸ்க்ரிப்டில் இருக்கும். ஒரு சனியனும் விளங்காது. இப்படி எழுதினால் தான் இலக்கியவாதி என்று ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காக நானும் ட்ரை ஒன்று போட்டுப்பார்த்தேன்.
..காத்திரமான படைப்பு வெளியின் உச்சம் என்பது எமது மேலாண்மை விழுமியங்களின் சங்கிலித்தொடர்களை இணைக்கும் செவ்விய நீரோட்டத்தின் ஆளுமையை எடுத்தியம்புவதாக இருக்கவேண்டும். ஈழத்து இலக்கியத்தின் ஒவ்வொரு படிநிலைகளையும் இந்த யதார்த்த விழுமிய காரணகூறுகளுடன் புணருமிடத்து, போருக்கு பின்னரான நமது படைப்பு கூறுகள் , ரூசியப்புரட்சின் பின்னரான சோவியத் அடையாளங்களை…
எழுதிக்கொண்டிருக்கும்போதே கேதா இடையில் வந்து குழப்பிவிட்டான். அண்ணே என்ன அண்ணே எல்லாருக்கும் புரியுமாப்போல எழுதுறீங்க. இப்ப பாருங்க நானு ஒரு க்ரிப்ட்டோ இலக்கியம் எழுதுறன். புரியுதா என்று பாருங்க. என்றான். சொன்னான்.
எல்லைகளற்ற ஒரு பெருந்தேடலுக்கான உந்துவிசையற்ற ஒரு சடத்துவ இனமாக மாறிக்கொண்டிருக்கும் தமிழ் இனக்குழுமம், வலுவிழந்து பிரபஞ்ச பொதுவெளியில் தனக்கென ஒரு அக மற்றும் புற வெளிகளை இனங்கண்டு தக்கவைக்கும் திறனற்று பூகோள இயக்கத்தில் ஒத்திசைய முடியாமல் புறந்தள்ளப்படுவது யதார்த்தமாக புலப்படுகிறது. ஆழமான புரிந்துணர்வும், காலவெளியை கடந்த தொலைநோக்கும், காத்திரமான சமுக பேரெழுச்சி ஒன்றை தோற்றுவிக்கக்கூடிய தகைமை வாய்த்த தலைமையும் தன் வசம் ஆகாததால், அது தன அக விழுமியங்களை அணு அணுவாக அழித்து தன ஆதாரமான அடிப்படை கட்டமைப்புகளை சிதைவடைய செய்கிறது. இந்த பேருண்மையை புரிந்துகொள்வதே இன்று எம்முன்னுள்ள வாரலாற்று சவாலாகும்.
சேகர் செத்தாண்டா!

நீ தானே என் காதல் வேதம்!

இவனுக்கு அவள் என்றால் அவ்வளவு பிடிக்கும். அவளுக்கும் தான். என்ன ஒன்று. கொஞ்சம் பிகு பண்ணுவாள். நான் ஈ படத்தில் சமந்தா நானியை போட்டு அலைக்கழிப்பாளே அப்படி.  ஆனாலும் இவன் லூஸன் அதை பெரிசா கணக்கெடுக்கமாட்டான். ஏனென்றால் காதல். அவளைக்கண்டாலே அண்ணருக்கு கவிதை வரும். கற்பனை எகிறும். வானவில், நிலா, இசை, பூ, என்று பெண்ணை வர்ணிக்க பாஸ்ட்டில கம்பர் புகழேந்தி ஆட்கள் என்னெல்லாம் பாவித்தார்களோ அதை எல்லாம் பாவிப்பான். அவ்வளவு காதல். பீறிடும். அதை அப்படியே கொட்டி அவளை கொஞ்சமேனும் புன்னகைக்க வைக்கவேண்டும். அந்த மோகன புன்னகையில் மயங்கி அவன் இன்னமும் கடிவாளத்தை தட்டவேண்டும்.
இது கங்கை அமரன் சொன்ன சிட்டுவேஷன்.  தல அந்த மோகனம் என்ற சொல்ல மைண்ட்ல எடுத்திருக்கவேண்டும். பாட்டு கூட ராகம் மோகனத்திலேயே வந்து விழுகிறது. எஸ்பிபி குரலை செருமிவிட்டு ஆரம்பிக்கிறார். சைலஜாவும் இணைவார்.
கீதம்......
கீதம்......
சங்கீதம்...
சங்கீதம்...
அண்ணர் இந்த இடத்தில செம நெளிவு நெளிவார். வெட்கமாம். அண்ணிக்கும் தாண்டா! எஸ்பிபிக்கு “பாடும்போது நான் தென்னங்காற்று” ஞாபகம் வந்திருக்கவேண்டும். மோகனம் அல்லவா. ஒரு புன்னகை பாட்டு முழுதும் இருந்துகொண்டே இருக்கும். அந்த குரலில் இருக்கின்ற பாவம் எந்த பெண்ணையும் கரைக்கும். ஜீனியஸ் (தன்யாக்கா நோட் திஸ் பாயிண்ட்!)
பாட்டு தொடர்கிறது.Nazriya-Nazeem
கீதம்......
கீதம்......
சங்கீதம்...
சங்கீதம்...

நீதானே என் காதல் வேதம்
நீதானே என் காதல்
என்னாடா இந்தாளு இப்பிடி மியூசிக் போடுதே. நாம யாரு என்று காட்டவேணாமா? இது வைரமுத்து மைண்ட் வொயிஸ். வைரமுத்து சரணத்தில் கியரை போடுகிறார்.
வாசமான முல்லையோ
வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ
நடந்து வந்த சோலையோ
உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
ராஜா கடுப்பாகிவிட்டார். நிறுத்துயா.. நிறுத்து என்று புளோவில பின்னுகின்ற வைரமுத்துவை இடை நிறுத்துகிறார்.
என்ன ராஜா?
என்னாய்யா கவிதை இது? முல்லையோ பிள்ளையோ சோலையோ என்று ஒரு டிம்பர் இல்லாத லிரிக்ஸ்யா. மெட்டை கவனிச்சியா. அப்பிடியே கீழே இருந்து நோட்ஸ் கொஞ்சம் கொஞ்சமா மேலே போகுதுய்யா. காதல்யா. கற்பனை போகவேண்டாமா. இப்பிடி ஒரு மோகனப்புன்னகையோட பொண்ணு வந்து முன்னுக்கு நிண்டா ஒரு பரவசம் வரவேணாமா? அப்பிடியே கடைசி நோட் அங்கே எட்டேக்க பொண்ணு மயங்கோணும்யா. அப்பிடி இருக்கோணும் லிரிக்ஸ்.
வைரமுத்து ஜெர்க் ஆகிட்டார். யோசித்து பார்த்தார். திடீரென்று ஒரு ஐடியா வருகிறது.
“ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்”
என்று ஒரு பிட்டை போட்டார். போய்யா இது ஏற்கனவே கண்ணதாசன் எழுதிட்டாரு. புதுசா எழுதுய்யா என்று ராஜா சொல்ல வைரமுத்து ஒரு ப்ளேன்டீ அடித்துக்கொண்டே யோசிக்கிறார். பார்த்தா பரவசம் வரவேண்டும். போட்டு தாக்கோணும். இதல்லவோ பெண். இதுக்கு மேலே என்னத்த சொல்ல என்ற உணர்வு. அட.. சடக்கென்று வைரமுத்துக்கு அப்பர் சுவாமிகள் ஞாபகம் வருகிறார்.
திருக்கைலாயத்தில சிவனை ரசிக்கப்போகிறேன் பேர்வழி என்று அப்பர் உழவாரத்தையும் தூக்கிக்கொண்டு ரஜனி மாதிரி வடக்கே போனார் இல்லையா. கனகாலம் நடந்தா பிறகு வயோதிபராக அப்பர் சுவாமிகள் சரியாக கஷ்டப்பட்டார். உடனே சிவபெருமானே அப்பருக்கு . கயிலை காட்சியை காட்டவென்று திருவையாற்றில் டோட்டல் செஷனை லைவ் கவரேஜ் டெலிகாஸ்ட் பண்ணுவார். அங்கே இருந்து ப்ரொஜெக்டர் ஸ்கரீன்ல கயிலை காட்சியை பார்த்து மெய்சிலிர்த்த அப்பர் ஒரு தேவாரம் இழுப்பார்.
large_197837மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!
கண்டேன் அவர் திருப்பாதம்!
கடைசியில் That’s it mate. I can’t express it anymore. என்று முடிவெடுத்து ஒரு வரி விடுவார்.
கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!!.
வைரமுத்து யுரேகா என்று கத்தினார். இங்கேயும் அதே நிலைமை தானே. இப்படி ஒரு பெண், முன்னே வந்து நிற்கும்போது இதுக்கு மேலே என்னத்த சொல்லுறது? This is the moment இல்லையா. வரிகளை பாருங்கள்.
உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
அப்புறம் வரிகளுக்கு இடமேது. ஆலாப் தான்!

இதுக்கு பெயரு தான் உயிரை குடுத்து பாட்டை ரசிக்கிறது எண்டுறது!


படங்கள் : Google Images.






எளிய நாய்!

$
0
0

 

dogindex

நான் ஆரெண்டு தெரியுதா? இல்லையா? ம்ம்ம்.

அப்படீண்டா பேஃஸ்புக்ல லொகின் பண்ணிப்போய் “மனீஷா சூரியராகவன்” என்று தேடிப்பாருங்கோ. எல்லாமா பதினொரு பெயர்கள் லைன்ல வந்து விழும். அதுல எட்டாவதா இருக்கிற புரபைல் எண்டு நினைக்கிறன். டிரான்சி, பிரான்ஸ் எண்டு ஊர் இருக்கும். அந்த போட்டோவை கிளிக் பண்ணுங்க. அண்ணே அப்பிடியே கொப்பி பண்ணி தேடாதீங்க. அந்த பொண்ணுக்கு எங்கண்ணே தமிழ் தெரியப்போகுது? இங்கிலீஷ்ல டைப் பண்ணி தேடுங்க.  “Manisha Sur”ஆ வருதா? ஒரு பொம்பிளை படம் இருக்கா? கொஞ்சம் நிறம் குறைஞ்ச பிள்ளை. தலையை ஸ்ட்ரெய்ட் பண்ணி, கண்ணெல்லாம் பெயின்ட் அடிச்சு அரியண்டம் பண்ணியிருக்கும். கடும் நாவல் கலர்ல லிப்ஸ்டிக் அடிச்சிருக்கும்.

எனக்கு தான் நாய்க்குணம். இவ்வளவு நோண்டி நோண்டி பார்த்திருக்கிறன் எண்டா நீங்களும் ஏன் ஆவெண்டுறீங்க? அடுத்த போட்டோவுக்கு போங்க. அது என்ன யாழ்ப்பாணத்தில எடுத்த போட்டோவா? அதே தான். அந்த படத்திலயும் இதே மனீஷா பிள்ளை ஒரு கியூட்டான நாயை கட்டிப்பிடிச்சுக்கொண்டு நிக்குமே? அந்த நாயிண்ட இடப்பக்க காது மேற்பகுதி சாதுவா கடிவாங்கி பிஞ்சு போயிருக்குமே? அந்த போட்டோவில “மீ அண்ட் மை ஜிம்மி” என்று விளக்கம் குடுத்திருக்குமே. நான் கடைசியா பாக்கேக்க எண்பத்து நாலு லைக் விழுந்திருந்தது. பொம்பிளைப் பிள்ளை படம், எப்பிடியும் இன்னொரு ஐம்பது லைக்கு இத்தனைக்கும் விழுந்திருக்கும். அந்த நாய் வேற வடிவான நாயில்லையா ... கட்டாயம் விழுந்திருக்கும். எனக்கென்னண்டு இவ்வளவு டீடெய்ல் தெரியும் எண்டு நினைக்கிறீங்களா? இதை சொல்லுறீங்க. எனக்கு அந்த நாயிண்ட காது எப்பிடி பிய்ஞ்சது எண்டது கூட தெரியும். சீசரிண்ட வேலை அது. தொண்னூற்றொன்பதாம் ஆண்டு நந்தாவில் அம்மன் கோயில் திருவிழா டைம், தெற்கு வாசல் சாமி சுத்தேக்க எங்கட பக்கத்து ஐயர் வீடும் எண்ட ஐயா வீடும் அடுத்தடுத்து அரிச்சனை மேசை வச்சவை. அந்த டைம் ஐயர் வீட்டு நாய் சீசரும், பாருங்கோவன் கலிகாலத்தை, செய்யிறது பூசை. நாய்க்கு பேர் சீசர்.  கடுப்பாகிட்டேன் நான். கடுப்பாகீட்டன் இந்தியா தமிழா? இது வேற அப்பப்ப சிக்கிக்கும். இந்த தமிழ் இப்ப தான் படிச்சது. அப்ப கடுப்பாகேல்ல. அண்டைக்கு கெட்ட கோபம் வந்திட்டுது. அதால தான் சீசரை கடிக்க போனன்.  கருமம் பிடிச்சவன் நான் கடிக்கமுதல் அவன் என்னை கடிச்சுப்போட்டான். செவிடு கிழிஞ்சு போச்சு.

என்ன புரிகிறதா?

கட் கட் கட். கமல் பாட்டு வரிகளை சொன்னா நல்லா இருக்கும்  நாயே.

நாயே எண்டு கூப்பிடாதீங்க .. ஜிம்மி .. எங்க .. சொல்லுங்க .. ஜிம்மி

சொறி .. ஜிம்மி. ஒகே .. லாஸ்ட் த்ரீ லைன்ஸ் ரிப்பீட். டேக்.

என்று இயக்குனர் இனியவன் சொல்ல ஜிம்மி ஒருமுறை குரைத்து செருமிவிட்டு ஆரம்பித்தது.

‘கடுப்பாகீட்டன்’ இந்தியா தமிழா? இது வேற அப்பப்ப சிக்கிக்கும். இந்த தமிழ் இப்ப கொஞ்ச நாளா தான் படிச்சது. அந்த காலத்தில இந்த கடுப்பெல்லாம் பாவிக்கிறதில்லை பாருங்கோ. அப்பேக்க பயங்கர கோபம் தான். அண்டைக்கு இந்த ஐயர் வீட்டு சீசர் குலைச்சதை பாத்து பயங்கர கோவம். அதால தான் சீசரை கடிக்க போனன். கருமம் பிடிச்சவன் நான் கடிக்கமுதல் அவன் என்னை கடிச்சுப்போட்டான். என்ர செவிடு கிழிஞ்சு போச்சு.

என்ன .. யாரென்று தெரிகிறதா? இவன் நாய் என்று புரிகிறதா? ஐ ஆம் த வன் அண்ட் ஒன்லி ஜிம்மி.

நல்லாருக்கு .. ஆனா இங்கிலீஷ் வேண்டாமே.  உங்களுக்கு ஈழத்து நடை நல்லாவே வருது.

நான் எண்ட பாட்டுக்கு குலைச்சுக்கொண்டு நிக்கிறன் .. அதை நடை எண்டுறீங்க. ஒகே .. ரிப்பீட். ஒன்லி லாஸ்ட் லைன் ஒகே.

என்ன .. யாரென்று தெரிகிறதா? இவன் நாய் என்று புரிகிறதா?  ஜிம்மியும் நானே. மனீஷா கொஞ்சிய உஞ்சுவும் நானே. உங்களோடு இப்போது பெசிக்கொண்டிருப்பவனும் நானே.

கட் கட் கட். எக்சலன்ட் ஜிம்மி. சும்மா கவிதையா வருது உங்களுக்கு. அப்பிடியே இதை வொயிஸ் ஓவர்ல போட்டு உங்கட வீட்டு பத்திக்கு கமராவை ரோல் இன்ல கொண்டு வரலாம். கலக்கும்.

வாற வழில ஊத்தை தண்ணி போற பைப் பம்பர் இருக்கு. ரோலிங் கமரா தடக்கீடும். கமரா ஆடிடும் அண்ணே.

ஒரு நாய் தன்னை அண்ணே என்று அழைப்பதை கேட்டு இனியவன் ஆத்திரப்பட்டாலும் இப்போதைக்கு நாயிண்ட காலம், நான் ஒன்றுமே செய்யமுடியாது என்று நினைத்துகொண்டார்.

பார்த்தியா .. வெறும் நாய் எண்டாலும் இந்த விஷயங்களையும் கண்டு பிடிக்கிறாய்?. எப்பிடி உன்னால முடியுது?

உன்னால எப்பிடி நாயை பேச வைக்க முடியுது எண்டு நான் கேட்டனா? இல்லை தானே. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன இப்ப?

மீண்டும் ஜிம்மியின் குத்தல் கதை. ஒருமையில் கதைத்தால் மறக்காமல் ஒருமையிலேயே பதில் சொல்லுகிறது. சமாளிக்கவேண்டும். ஒரு நாய் பேசும் டோக்குயூமெண்டரியை இன்றைய திகதிக்கு அல்ஜஸீராவில் கூட காட்டியதில்லை. இந்த நாய் வேறு பேஸ்புக் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறது. இதோடு குழம்பினால் வேலை நடைபெறாது என்று இனியவன் நினைத்துக்கொண்டார்.

அடுத்ததா உங்கட இடத்தை சுத்திக்காட்டுறீங்களா ஜிம்மி?

ஜிம்மி கமரா குரூவை பின்பத்திக்கு கூட்டிக்கொண்டு போனது. அது ஒரு டிப்பிக்கல் யாழ்ப்பாணத்து வீட்டு பத்தி. ஒரு பக்கம் பொச்சு மட்டை இளக்கயிற்றில் கோர்த்து தொங்கவிடப்பட்டிருந்தது. இன்னொரு மூலையில் தேங்காய் குவியல். ஒரு பக்கம் உரல், அம்மி, அந்த ஏரியாவில் ஈரம் மண்டி கால் வைத்தால் கறுப்பு கறுப்பாக அடிக்கால் ஒட்டியது. மற்ற பக்கம் கக்கூஸ். சரியாக தண்ணீர் ஊற்றப்படாமல் நாறியது. அப்படியே அதை தாண்டி போனால், பழைய கொட்டில் ஒன்று. கொட்டில் என்றால் பிள்ளை கிடத்திற தொட்டில் அது. கீழே இறக்கப்பட்டு இருந்தது. அதன் ஒரு மூலையில் பழைய சாரம், கிரீஸ் துணி, வீரகேசரி எல்லாமே ஒன்றன் மேல் ஒன்று இழுபட்டு, ஒருவிதமாக படிந்து போய் கிடக்க, இன்னொரு பக்கம் பழைய நாய் சங்கிலி ஒன்று கறல் பிடித்துப்போய் கவனிப்பாரற்று கிடந்தது. தள்ளி ஒரு கோப்பையில் கொஞ்சம் சோறு, பூசணிக்காய் கறி பூஞ்சணம் பிடிச்சு கறுத்துப்போய் இருந்தது.

ஜிம்மி போய் வீரகேசரிப்பேப்பரை கொஞ்சம் கிளறி உள்ளே இருந்த காய்ந்து கல்லு போல கிடந்த ஒரு எலும்புத்துண்டை எடுத்து கால் இடுக்குக்குள் வைத்தபடியே இனியவனை பார்த்து சொன்னது.

“வீ ஆர் ஹோம்”

செணி நாற்றம் அடித்தது. இனியவன் மூக்கை பொத்திக்கொண்டார்.

“ம்ஹூம் .. மண்டேலா இருபத்தேழு வருஷம் இப்பிடி இருந்தவர்… ”

அதற்கு பதில் சொன்னால் ஜிம்மி தென்னாபிரிக்க அரசியல் பேசும் போல தோன்றியது. இனியவன் அதை சட்டை செய்யாமல் பத்திக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த கொடியை அவதானித்தார். இரண்டு சாயம் போன வேட்டிகள். நூல் சீலை இரண்டு. பிளவுஸ். உள் பாவாடை. லேஸ். வேலைக்காரப்பெண்ணின் உடுப்புகள். அடுப்புத்துணி எல்லாமே ஒன்றாக கிடந்தன. காய்ந்து கிடந்தன. எடுக்கப்படவில்லை.

“காய்ஞ்சு கிடக்கு எடுக்கேல்ல எண்டு நினைக்கிறீங்களா? இந்தா நான் படுத்துக்கிடக்கிறனே சாரம்? மூண்டு மாசத்துக்கு முதலில கொடில காயப்போட்டிருந்தினம்.  அண்டைக்கு பயங்கர குளிர். உருவி இழுத்து போர்த்துக்கொண்டு படுத்திட்டன். கண்டே பிடிக்கேல்ல”

“ஏன் இதெல்லாத்தையும் கவனிக்கமாட்டினமா?”

“இங்க இப்ப எல்லாமே இப்பிடித்தான்””

“ஆனா வீட்டுக்காவல்காரன் நீங்களே இப்பிடி செய்யலாமா?”

“அப்ப என்ன செய்ய சொல்லுறீங்க? குளிர்ல நடுங்கி சாக சொல்லுறீங்களா?”

“வீட்டுக்காரர் … அவையள் ஒண்டும் சொல்ல மாட்டீனமா?”

ஜிம்மி மீண்டும் அந்த எலும்பு துண்டை வீரகேசரிக்கு கீழே பதுக்கிவிட்டு குரைத்து செருமிவிட்டு பேச ஆரம்பித்தது.

 

இந்த மார்கழி தமிழுக்கு மூண்டு நாள் கழிந்தால் எனக்கு பதினாலு வயசு. நம்புவீங்களா? இதே ஏரியா தான். ரெயில்வே ட்ரக் பக்கமா நாலு பொம்பிளை சகோதரத்துக்கு நானும் சீசரும் தான் ஆம்பிளை பிள்ளைகள். ஆறு பிள்ளைகள். பிறந்த அண்டைக்கு, அம்மா நந்தாவில் அம்மன் கோயில் வாசலில எங்களையும் கூட்டிக்கொண்டு விடியக்காலமையே கும்பிட போனவாவாம். அங்க வந்தது சனியன். நித்தியகல்யாணி ஆய வந்த ஐயரிண்ட ரெண்டாவது குமர் எங்களை பார்த்திருக்கோணும். உடனே நாய் வளர்க்கோணும் எண்டு அதுக்கு ஆசை வந்திட்டுது. கோயிலடியிலேயே சீசர் பிள்ளை ஆப்பிட்டு போனார். அம்மா சீசரை மீட்கிறதா இல்ல எங்களை காக்கிறதா எண்டு குழம்பிப்போட்டாவாம். அம்மாளுக்கு பூசை வேற தொடங்கப்போகுது. சனம் வரப்போகுது. அதில குலைச்சுக்கொண்டு நிக்கவும் ஏலாது. அம்மா ரெயில்வே ட்ரக் பக்கமா எங்களையும் தூக்கிக்கொண்டு வந்து ஒதுங்கீட்டா.  ஆனாலும் விதி விடேல்ல.

ஐயர் வீட்ட சீசர் போய் நிண்டு அழ தொடங்கினோன பக்கத்து வீட்டு சிவராசா குடும்பத்துக்கு தாங்களும் நாய் வளர்க்கோணும் எண்டு ஆசை வந்திட்டுது. அப்போ சிவராசா வீட்ட சிவராசாவிண்ட மகம் சூரியராகவன் இருந்தவன். ஏஜெண்டுக்கு காசை கட்டிப்போட்டு ஐஞ்சு வருஷமா ஏஜென்ட் கோல் பண்ணுவான், கனடா போகலாம் என்று வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தவன்.  வெயிட் பண்ணின டைம்ல சும்மா இருக்கேலாம ஆரியகுளத்தடில இருந்த பான்ஸிகுட் கடைல வேலை செய்த பெட்டையோட லவ்வாயிட்டுது. வீட்டை கூட்டிக்கொண்டு வந்திட்டான். பிள்ளை வரேக்கயே வயித்தில பிள்ளை. அந்த பிள்ளைக்கு வாங்கின கொட்டில் தான் இது.. நான் படுத்துக்கிடக்கிறது. .. இதில தான் மனீஷா பிள்ள உருண்டு பிரண்டவ. இப்ப கேட்டுப்பாருங்களேன். ஷிட் எண்டுவா. 

கேட்டீங்களா?

ரெண்டு வருசத்துக்கு முன்னாலே சூரியராகவன் குடும்பம் யாழ்ப்பாணம் வந்தது. அப்ப எடுத்தது தான் நீங்க பேஸ்புக்ல பார்த்த படம். ஐயாண்ட செத்தவீட்டுக்கு அடுத்த நாள் எடுத்த படம் அது.

சிவராசா செத்துப்போனாரா?

பின்ன? மனுஷன் சேடம் இழுக்குது என்ன … எனக்கே விசர் பிடிச்சு போயிட்டுது. நான் நாயா குலைக்கிறன்.  அந்த பப்பா மரம் தெரியுதே ..

எது .. அந்த ஆண் பப்பாவா?

ஆ … பூத்துக்கிடக்கே .. அதுக்கு நேர் மேலாலே தான் எமன் குதிரைல வந்தவர் … நான் எண்டா கண்டிட்டு ஊளை இடுறன் .. எமன் வாறான் .. எவண்ட தலையை கொண்டு போகப்போறானோ .. எண்டு ஊளை இடுறன். இவள் வேலைக்காரி கோமதி நித்திரை குழம்புது எண்டு கறிச்சட்டியை கொண்டுவந்து வச்சிட்டாள்.

பேந்து?

நான் ஊளையை நிப்பாட்டிட்டு சட்டியை நக்க தொடங்கீட்டன்.

ச்சசிக் .. அத கேக்கேல்ல .. எமன் குதிரைல வந்தான் எண்டீன்களே .. எருமைல அல்லோ வாறவர்?

ஐயா இழுத்த இழுவைக்கு அம்புலன்சில வந்திருந்தாலே லேட்டாகி இருக்கும். இதில எருமைல வந்திருந்தா? .. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டே.

சொல்லுங்க

எமனுக்கு வாகனம் கிடையாது

வட்?

அம்மான சொல்லுறன் .. எமனுக்கு வாகனமே கிடையாது .. பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் தான். இந்தப்பக்கத்தால எது வருதோ அதில தொத்தி வருவார். அவர் எருமைல வந்து ஒரு நாள் கூட பார்த்ததில்ல.

ம்ம்ம் எமனை அடிக்கடி பார்த்திருக்கிறாய் .. கடவுளையும் பார்த்திருக்கிறியோ?

ஆரு கடவுள்?

இனியவன் ஜிம்மியோடு அதிகம் பேச்சுக்கொடுக்ககூடாது என்று தீர்மானித்தார். வயது போனதால் புத்தி பேதலிக்கிறது போல. கதையை எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்துவிட்டது இந்த நாய். பேசாமல் இன்டர்வியூ பண்ணவேண்டியது தான்.

அது இருக்கட்டும் ஜிம்மி. உங்கட வாழ்க்கைல மிகவும் சந்தோஷமான காலம் எது?

சமாதான காலம்.

ரணில் டைமா?

இல்ல இல்ல .. ஐயர் வீடும் சிவராசா வீடும் கதைச்சு பேசிக்கொண்டிருந்த டைம். அது ஒரு வசந்த காலம். வாங்க காட்டுறன்.

ஜிம்மி இவர்களை மீண்டும் முற்றத்து கேற்றடிக்கு கூட்டிக்கொண்டு போனது.

இங்க பார்த்தீங்களா? ரெண்டு கதவு கேட். அந்த டைம் கீழால நான் பூரேல்லாத மாதிரி நெட்டு அடிச்சிருந்தவை. இப்ப பிஞ்சு போச்சு. பின்னேரம் ஐஞ்சு மணிக்கு தான் கேட்டு திறந்து விடுவினம்.  எனக்கெண்டா அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போகும் அப்ப. அடக்கி வச்சிருந்ததை எல்லாம் போய் ரெயில்வே ட்ரக்கில கொண்டுபோய் கொட்டுவன். கொட்டுற டைம் தான் அங்கனைக்க பெயர் வைக்க ஆள் இல்லாத சில கட்டாக்காலி நாய்கள் திரியும். நாங்கள் அவயளை உஞ்சு எண்டு சொல்லி நக்கல் அடிப்பம். அதில சில பெட்டைகளும் திரியும். அதுகளை கண்டா காணும். இந்த சீசர் எங்கனக்க இருந்தாலும் ஓடி வந்திடுவான். சீசரை ஐயர் வீட்டுக்காரர் கட்டி வளர்க்கேல்ல. அவன் வேணுமெண்டா எந்த நேரமும் வேலை பார்க்கலாம். ஆனா அந்த நாய்க்குணம், நான் போய் நிக்கிற நேரம் தான் அவனும் வருவான். அதில ஒருக்கா ரெண்டு தரம் சண்டை பிடிச்சு பார்த்தன். அவன் என்னை விட பலசாலி. சரி நாயே, எதையாவது செய்திட்டு போடா என்று அவனை முதலில விட்டுட்டு தான் நான் பிறகு செய்யிறது.

IMG_0109

இதெல்லாம் முடிஞ்சு திரும்பி இங்கே, கேட்டடிக்கு வந்தா ஐயரம்மாவும் எங்கட வீட்டம்மா, சிவராசாண்ட மனிசி. கமலாம்மா. அவவும் கேட்டிண்ட தூணுக்கு ஒண்டா சக்கப்பணியாரம் இருந்து கதை அளப்பினம். முழுக்க விடுப்பு. வலு கலாதியா இருக்கும். அப்பிடியே உடம்பை ஒருபக்கமா சரித்து கிடத்திக்கொண்டு பின்பக்க வலக்காலை கவட்டுக்குள்ள குறு குறு எண்டு சொறிந்தபடியே ஒழுங்கை நடுவில கிடந்தது அவங்கட விடுப்பு கேக்கிறது என்ன சுகம் தெரியுமா? அந்த ஏரியாவில என்ன விஷயம் என்றாலும் அப்போது எனக்கு அப்டுடேட்டாக இருந்துது. இந்த கலைவாணி அக்கா இருக்கிறா, முன் ஒழுங்கை .. அவவுக்கும் சுரேஷ் அண்ணேக்கும்….

“இல்ல ஜிம்மி .. அது வேண்டாம்…. உங்கட கதையை சொல்லுங்க”

பிறகு 2005ம் ஆண்டில ஐயர் வீட்டில டாட்டா இண்டிகோ கார் ஒண்டு வாங்கிச்சினம். மூத்தமகன் அனுப்பினது. இதை பார்த்திட்டு சிவராசா சூரியராகவனிடம் கார் வாங்கித்தா கார்வாங்கித்தா எண்டு கேட்டுப்பார்த்தார். எனக்கும் கார்ல ஒரு விருப்பம். இவன் சீசர் அவங்கட வீட்டு காருக்கு கீழே படுக்கிறவன். பிறகு வந்து அந்த ஒயில் மணத்தை பத்தி எனக்கு வந்து அளப்பான். அந்த கடுப்புல தான் கிரீஸ் துணியை போட்டு இப்ப படுத்திருக்கிறன். அதுவும் கொஞ்சம் மணக்கும் தானே.

“சூரியராகவன் கார் அனுப்பினவனா?”

அவன் கெட்ட கிருமி. நான் சொன்னன் தானே. இல்லையா? காசு வேற மனிசி வீட்டுக்கு தான் அனுப்புறவனாம். கமலாம்மாவிண்ட தாலிக்கொடி வச்சு தான் இவர் வெளிநாடு போனவர். இவன் கார் வாங்கி குடுக்காத கவலை,  ஆனானப்பட்ட ஐயர் கார் வாங்கி ஓடுறானே எண்ட கடுப்பு, சிவராசா டென்ஷனில படுத்த படுக்கையா போனார். அந்த நேரம் தான் இந்த வளவில் இருந்த தென்னை மரத்து காய் ஐயர் வீட்ட விழுந்திட்டுது. அதுகள் எடுத்துட்டு தம்மெண்டு இருந்திட்டுதுகள். எனக்கு நல்லா தெரியும். எடுக்கேக்க குலைச்சனான். ஆனா எவன் எண்ட பேச்சை கேட்டான்? விழுந்த சத்தம் கமலாம்மாவுக்கும் கேட்டிருக்கோணும். அடுத்த நாள் போய் தேங்காயை கேக்கேக்க அதுகள் தேங்காயா? தென்னம்பிள்ளை வச்சு மூணு மாசம் தான் எண்டு அவயளிண்ட செவ்விளனி மரத்தை நக்கலா காட்டிச்சினம். மனிசி நெருப்பெடுத்துட்டுது. பேந்தென்ன. இந்த மனிசி அந்த மனிசியை பார்த்து குலைக்க, சிவராசா ஐயரை பார்த்து குலைக்க, நான் சீசரை பார்த்து குலைக்க .. கடைசில சென்றில நிண்ட ஆர்மிக்காரன் வந்திட்டான். வந்தவன் சிவராசாவை கன்னத்தில அடிச்சுப்போட்டான்.

ஏன் அவன் சிவராசாவை அடிக்கோணும்?

ஏண்டா அந்த ஆர்மிக்காரனுக்கு ஐயரிண்ட குமர் மேல ஒரு கண்

உனக்கென்னண்டு தெரியும்?

அந்த நாய் எனக்கு நைஸ் பிஸ்கட் குடுக்கமாட்டான். ஆனா சீசருக்கு குடுப்பான்.

ம்ம்ம் .. அந்த ஆர்மிக்காரன் சிவராசாவை அடிக்கேக்க நீ கடிக்கேல்லையா?

நான் என்ன லூஸா? அவன் துவக்கு கட்டையால மண்டைல போட்டா எண்ட கதை சரி .. ஆர்மி எண்டா எனக்கு கொஞ்சம் பயம். அதையே ஐயர் கையை வச்சிருந்தா அவர்ட வேட்டியை உருவியிருப்பன்.

ஜிம்மி சொல்லிக்கொண்டே அவர்களை மீண்டும் உள்ளே கூட்டிக்கொண்டு போனது. கதவைத்தள்ளிக்கொண்டு வீட்டுக்குள்ளே சென்றது. வீடு தாறுமாறாக கிடந்தது. உதயன், சினிமா எக்ஸ்பிரஸ், ரமணிச்சந்திரன் புத்தகங்கள் தொடக்கம் தீயா வேலை செய்யணும் குமாரு வரைக்கும் இரைந்து கிடந்தது. ஒரு பக்கம் கொம்பியூட்டர் மேசை இருந்தது. மற்றப்பக்கம் டிவி. பிரிட்ஜ் கூட முன் ஹோலில் இருந்தது.

“இந்த வீட்டில ஆரு கொம்பியூட்டர் பாவிக்கிறது .. சிவராசாவிண்ட மனிசியோ?”

உஷ்.. சத்தம் போட்டு கதைக்காதீங்க. கமலாம்மா சிவராசா போனதில இருந்து ரூமை விட்டு வெளிய வாறது குறைவு. பத்திக்கு போறதுக்கும் எப்பாவாச்சும் இருந்திட்டு குளிக்கிறதுக்கும் தான் வெளிய வரும்.

அப்படீண்டா?

வீட்டை இப்ப முழுக்க முழுக்க கொன்றோல்ல வச்சிருக்கிறது வேலைக்காரி கோமதி தான். கோமதி தான் பேஸ்புக் கூட எனக்கு பழக்கினது. பிரான்சில நான் பேமஸ் எண்டு எனக்கெப்பிடி தெரியும்? ரெக்கொர்டிங்க நிப்பாட்டினா இன்னொரு விஷயமும் சொல்லுவன்.

நிப்பாட்டியாச்சு சொல்லுங்க..

அப்பா கமராவில சுவப்பு லைட் எரியுது?

சொறி .. இப்ப சரி .. சொல்லுங்க..

ஆ .. என்னெண்டா இந்த கோமதி இருக்கிறாளே. பச்சைக்கள்ளி. சூரியராகவன் மூன்று மாசத்துக்கொருக்கா முன்னூறு யூரோ அனுப்புறவன். அத இவள் அம்மாட்ட குடுக்கிறன் எண்டு சொல்லிட்டு தான் எடுத்துப்போடுவாள். கமலாம்மாக்கு முன்னூறு ரூவா மாத்திரம் காட்டுவாள்.  யூரோ ரூவா கொன்பியூஷன் ஸ்கைப்பில தெரியாது தானே.

பகல் கொள்ளையா இருக்கே நீ இத ஒண்டும் கேக்கிறதில்லையா?

கேட்டு என்ன செய்யிறது? இந்த நேரம் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி எந்த லாபமும் இல்ல.  முதல் நாள் கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. அட வளர்ந்த வீட்டில இப்பிடி ஒரு அநியாயம் நடக்குது. பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறமே எண்டு குத்தீச்சு. ஆனா கோமதி அண்டைக்கு நல்ல பாரை மீன் தலையை சதையோட எனக்கு போட்டாள். அவ்வளவு தான் கட்சி மாறீட்டன்.

துரோகம் இல்லையா?

முதலில குழப்பமா இருந்திச்சு. இப்ப வீட்டில மூண்டு பேரு. வயசான மனிசியும் கோமதியும் நானும். அதில கோமதியும் நானும் துரோகி எண்டாலும் மஜோரிட்டி நாங்க தானே.

அதுக்கு?

ரெண்டு துரோகிங்க நல்லா இருக்கோணும் எண்டதுக்காக ஒரு நல்லவனை பலிகடா ஆக்கலாம்

இனியவனுக்கு இம்முறை கொஞ்சம் கோபம் வந்தது. என்ன தான் பேசும் நாய் என்றாலும் நாயுக்கேன்று இருக்கின்ற தார்மீக நெறிகளை மீறலாமோ? நன்றி மறக்கலாமோ?

ச்சே .. நாய் ஜென்மத்திலேயே நீயொரு ஈனப்பிறப்பு .. நன்றி எண்டது ஒரு சதத்துக்கும் இல்ல.

ஜிம்மிக்கு வந்ததே கோபம். சிலிர்த்தெழுந்தது.

ஓன் பண்ணுங்க.

ஆ?

அந்த வீடியோ கமராவ ஓன் பண்ணுங்க.

இனியவன் தயங்கினார்.

கமோன் .. டூ இட் ஐ சே.

இனியவன் பதட்டத்துடன் ரேக்கொர்டிங்கை ஓன் பண்ண ஜிம்மி குரைத்து செருமிக்கொண்டே பேச தொடங்கியது.

“ஆரு ஈனப்பிறப்பு? நானா? அம்பிட்டன் எண்டதுக்காக போட்டு மொங்குவீங்களா? மத்த நாயள் எல்லாம் தம்மெண்டு இருக்க நான் உண்மைய சொல்லுறது பிழையா? இவன் சூரியராகவனை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நான் அப்ப சொல்லேல்ல .. மனிசி பிள்ளைத்தாச்சியா வீட்டில இருக்கு. இவர் எண்ட கழுத்துல காதல் கடிதம் கட்டி முன் வீட்டுக்கு குடுத்துவிடுறார். இது நடந்துது. இதெல்லாம் சொல்லக்கூடாது எண்டு பார்த்தன். இந்த கோமதி கூட ஆரெண்டு .. சரி விடுங்க .. தாய்க்காரி ஒரு ரூமில கிடையா கிடக்கே .. ஒரு போன் போட்டு கதைக்கவேண்டாம்? ஸ்கைப்பில தான் கதைப்பார். ஏண்டா கார்டுக்கு காசு போயிடுமாம். யாழ்ப்பாணத்து புரோன்ட்பாண்டு வேற விட்டு விட்டு நாய் மூத்திரம் அடிக்கிறது போல தான் வரும். அதில தாய்க்காரி மகனை பாக்குமா பேத்தியை பாக்குமா? சரி ஸ்கைப்பில தான் கதைக்கிற.. நாலு வார்த்தை நல்லா கதைக்கவேண்டாம்? தாயை போட்டு திட்டுவான் அவன். 

dr_17

ஒருக்கா செத்து துலையேண்டி எண்டு பேசிறான் அந்த கேடு கெட்டவன். ஏனாம்? வீட்டை சிவராசா சீவிய உரித்து வச்சு எழுதிப்போட்டாராம். தன்னால விக்க முடியேல்லயாம். ஏதோ இவரு உழைச்ச வீடு மாதிரி. அவன் செத்து துலையேன் எண்டு சொல்ல எனக்கு அழுகை வந்திட்டு தெரியுமா? நானும் வயசு போனவன் தான். பின் பக்கம் கொஞ்சம் குட்டை பிடிச்சு போச்சு. வீட்டுக்குள்ள வந்தாலே செணி நாறும். ஆனாலும் இண்டைக்கும் அந்த மனிசி நான் அறைக்குள்ள போனா பிளேன்டீயை நிலத்தில ஊத்தி நான் நக்கி முடிக்கும் மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கும். நான் துரோகி தான். ஆனாலும் ஒரு நாளும் அந்த மனிசி சாகோணும் எண்டு நினைக்கிற ஆள் இல்ல. அண்டைக்கு கூட நந்தாவில் அம்மானிட்ட போய் அந்த சூரியராகவன் நாய்க்கு கை கால் விளங்காம போகணும் எண்டு நேர்த்தி வச்சனான். பிறகு மீட்டிட்டன். என்ன இருந்தாலும் அவன் தான் காசு அனுப்புறவன். பிறகு எங்களுக்கு சாப்பாடு சிக்கீடும்.”

இப்ப கொஞ்சநாளா எமன் நடமாட்டம் கூடவா இருக்கு. என்னை தான் எடுக்க வாறானோ இல்ல மனிசியை தூக்க போறானோ தெரியேல்ல. போன மாசம் சீசர் செத்துப்போனான். அண்டைக்கு பூனை வாகனத்தில் எருமை வந்தான். எனக்கு தெரிஞ்சு போச்சு அண்டைக்கு சீசர் தான் எண்டு. சீசர் சீசர் எண்டு ஊளையிடுறன். அவனை எனக்கு பிடிக்காது. ஆனாலும் அவன் போனா பிடிக்காம விடுறதுக்கு ஆளும் இல்ல எனக்கு. அவன் சாகக்கூடாது. ஊளை ஊளையா இடுறன். கோமதி கருவாட்டு துண்டு ஒண்டு போட்டு பார்த்துது. ம்ஹூம். சீசர் வேணும் எனக்கு. ஆனா எமன் எடுத்துக்கொண்டு போட்டான். சீசர் .. என்னோட பிறந்து வளர்ந்து சண்டை போட்ட சீசர். அவன் இருக்கும் வரைக்கும் அவனை குறை சொல்லிக்கொண்டே இருந்தன். இண்டைக்கு அவன் இல்ல. ஆனா எதுவுமே இங்க மாறேல்ல. இன்னும் மோசமா தான் போயிட்டுது. என்னாலையும் பழைய படி குலைக்க முடியேல்ல.

ஒண்டே ஒண்டு சொல்லுறன். சூரியராகவனுக்கு ஏலுமெண்டா சொல்லிவிடுங்க. நான் செத்துப்போனா அம்மாவோட பிழைப்பு நாய்ப்பிழைப்பா போயிடும். கோமதி சுத்திவிடுவாள். நேற்றைக்கு ரெயில்வே ட்ரக்கடில ஒரு புள்ளைத்தாச்சி நாய் திரியிறதா கதைச்சுக்கொண்டு இருந்தாள். அது குட்டி போட்டா ஒண்டை கொண்டந்து வளர்ப்பாள். அது எப்பிடி வளரும்? கோமதிக்கு விசுவாசமா தான் வளரும். அப்பிடீண்டா இனி அவளிண்ட ராஜ்ஜியம் தான். நான் கோமதியை எதிர்க்காட்டியும் கூட இருந்து அம்மாக்கு ஒண்டும் ஆகாத மாதிரி பார்த்துக்கொண்டன். இனி ஆரு அம்மாவை பார்ப்பா? நினைச்சு பார்த்தா விசர் பிடிக்குது.. எப்பிடி இருந்த வீடு இது..

ஜிம்மி பொரிந்து தள்ளிவிட இனியவன் அதிர்ந்து போய் இருந்தார். தயங்கி தயங்கி சொன்னார்.

இத நீ .. நீங்க சூரியராகவனோட ஸ்கைப்பில கதைக்கேக்க சொல்லியிருக்கிறீங்களா?

அதை ஏன் கேக்கிறீங்க .. அந்த எளிய நாய்க்கு அத ஒரு நாள் கோமதி இல்லாத நேரம் பாத்து படிச்சு படிச்சு சொன்னனான்

அதுக்கு அவர் என்ன சொன்னார்?

சொன்னதை எல்லாம் ஹாயா கேட்டிட்டு ரெண்டே ரெண்டு சொல்லு தான் சொன்னார்?

என்னது?

வள் வள்!

&&&&&&&&&&&&&&&&&

வியாழமாற்றம் : 07-03-2013

$
0
0

 

பிரான்ஸிஸ் ஹாரிசன்

images (1)“இறுதிப்போர் நடந்துகொண்டிருந்த நாட்களில் ஐநா செயலாளர் பான் கீ மூனுக்கு ஒரு சிங்கள பத்திரிகையாளர் தான் தவறான தகவல்கள் குடுத்தாராமே, அது உண்மையா?” என்று ஒருவர் உளறிக்கொட்ட பிரான்சிஸ் ஹாரிசன் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்

“சிங்கள பத்திரிகையாளர் இருந்தாரா என்று தெரியாது. ஆனால் அப்போது விஜய் நம்பியார் அந்த வேலையை செய்துகொண்டிருந்தார்”

தை மாதம் Still Counting The Deadவாசித்து முடித்தவுடனேயே தோன்றிய எண்ணம். இத்தனை இன்னல் பட்ட பத்துபேரின் வாழ்க்கையை அதே உணர்வுகளோடு, உருக்குலைவுகளோடு, கண்ணீரோடு எப்படி இந்த பெண்மணியால் கொண்டுவர முடிந்தது என்ற எண்ணம். வெறும் பத்திரிகையாளராக இதை எழுத முடியாது. இதை எழுத தன் விழியால் பிறருக்கழுகின்ற மனசு வேண்டும். அது பிரான்ஸிஸிடம் இருக்கிறது. அவரை தூரவேனும் நின்று பார்த்திட வேண்டும் என்று அவர் எப்போது ஆஸி வருகிறார் என்று அறிந்து, ஜூட் அண்ணாவுக்கு கோல் பண்ணி, “அவர் மெல்பேர்ன் வந்தா சொல்லாம விட்டிடாதீங்க அண்ணே” என்று ஞாபகப்படுத்தி, இரண்டு மாதங்களுக்குள்ளேயே அவரை நேரில் சந்திக்கப்போகிறோம் என்ற பரபரப்பு காலையிலேயே தொற்றிவிட்டது. அலுவலகத்துக்கு போனால், சரியான சமயத்தில் கூட்டத்துக்கு போய்ச்சேருவது கடினம் என்பதால் திடீர் காய்ச்சலை உருவாக்கி, ஸிக் போட்டு, ஐந்து மணிக்கே கேதாவை பிக்கப் பண்ணிக்கொண்டு கூட்டத்துக்கு ஏழு மணிக்கு போனால் மூன்று பேர் வழமை போல சரியான டைமுக்கு வந்திருந்தார்கள்.

“யாராவது எதையாவது செய்வார்கள் என்று ஒரு வருடம், ரெண்டு வருடம், மூன்று வருடம் என்று காத்திருந்தேன். ஒன்றுமே நடக்கவில்லை. எல்லாமே தலைகீழாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஓர் பேரழிவை உலகத்துக்கு சொல்லவேண்டாமா? ஒரு பத்திரிகையாளராக நான் என்ன செய்யமுடியும் என்று யோசித்தே, இப்படிப்பட்ட அனுபவங்களை சேகரித்து புத்தகமாக வெளியிட்டேன்” என்று இந்த புத்தகம் உருவானமைக்கான காரணத்தை விளக்கினார். வைத்தியர் நிரோன் பற்றிய இரண்டு பக்கங்களை வாசித்துக்காட்டி, இன்றைக்கும் இந்த வைத்தியர் வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றார். அவருக்கு கனடா அமைப்பு ஒன்று கொடுத்த “வாழ்நாள் சாதனையாளர்” விருதை கூட, பிரான்சிஸ் ஹாரிசன் தான் ரகசியமாக நிரோனிடம் சேர்ப்பித்தாராம்.  எப்படிப்பட்ட பெண்மணி என்று பாருங்கள்.

பொதுநலவாய அமைப்புகளின் மாநாடு இலங்கையில் இடம்பெறுமா? நடந்தால் பிரிட்டன் அதை புறக்கணிக்குமா? என்ற கேள்விக்கு அதற்கான சந்தர்ப்பம் குறைவு என்றார். கமரூன் வெறும் வாக்குகளுக்காக ஈழத்தமிழர் அது இது என்று போற்றிப்பாடினாலும் இப்படியான முடிவு எடுக்க தயங்கலாம் என்றார். கனடா அளவுக்கு இன்னமும் இரண்டு மூன்று நாடுகள், அதுவும் ஆபிரிக்கா, ஆசியா பகுதிகளில் இருந்த சில நாடுகள் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்தாலே இது சாத்தியம் என்று புருவம் சுருங்க கவலைப்பட்டார்.

Screen-Shot-2012-12-01-at-5.33.36-PM[4]பெரும்பாலான கேள்விகள் ஐக்கிய நாடுகள் அமைப்பை தாக்கியே கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்குமான பதில்களை மிக விவரமாக அவர் தன் புத்தகத்திலேயே விளக்கியிருக்கிறார். “மக்களை கொல்லுவதற்கு ஐக்கிய நாடுகளில் அனுமதி உண்டா?” என்று ஒரு பெண்மணி ஆதங்கமாகவே கேள்விகேட்டார். அப்படிப்பட்ட கேள்வியை, எம்மோடு சேர்ந்து, எம்மைவிட ஆயிரம் மடங்கு இந்த அநீதிக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் பிரான்ஸிஸ் ஹாரிசனிடம் கேட்பது அபத்தமாக இருந்தது. ஆனால் அவர் அதற்கும் பொறுமையாக பதில் சொன்னார்.

அனேகமானவர்கள் பதில்கள் தெரிந்த கேள்விகளையே கேட்டார்கள். இப்படியான கேள்விகள் ஏன் கேட்கிறார்கள் என்று யோசித்துப்பார்த்தேன். இது ஒருவித உளவியல் பிரச்சனையாக இருக்கலாம். அரசியல் கேள்விகள், அட்டகாசமான கேள்விகளை கேட்டு பக்கத்தில் இருப்பவருக்கு தன்னுடைய ஈழப்பிரச்சனை உலக அரசியல் பற்றிய அறிவை காட்டுவதற்காக கேட்கப்படுபவையாகவே அவை பெரும்பாலும் இருந்தன. கேள்வியை கேட்டபின்னர், பிரான்சிஸ் பதில் சொல்லும்போதே கேட்டவர் அடுத்த கேள்விக்கு தயாராகிக்கொண்டிருந்ததும் நடந்தது!

என்னிடம் பிரத்தியேக கேள்விகள் என்று எதுவும் இருக்கவில்லை. நன்றி மட்டுமே சொல்லவேண்டும் போல இருந்தது. கூட்டத்துக்கு வந்தால் மறக்காமல் தன்னை வந்து சந்திக்குமாறு facebook இல் மெசேஜ் அனுப்பியிருந்தார். கூட்டம் முடிந்தால் சந்தர்ப்பம் கிடைக்காதோ என்ற பயத்தில் “பிரான்சிஸ்” என்று கை உயர்த்தும்போது, முன்னால் இருந்தவர் “ஐக்கிய நாடுகள் ஏன் எங்களை கண்டுகொள்ளவில்லை, நீங்கள் உங்கள் தொடர்புகளூடாக ஏதாவது செய்யமுடியாதா?” என்று பதினேழாவது தடவையாக கேட்கப்பட்ட கேள்வியை திருப்பிக்கேட்டார். “நான் வெறும் பத்திரிகையாளர், என்னால் செய்ய முடிந்தது இந்த புத்தகம் தான்” என்று மேசையில் தூக்கிப்போட்டார், சலிப்பை காட்டாமலேயே சிரித்துக்கொண்டு.

இப்போது கை உயர்த்தினேன். அரசியல் கேள்வி கேட்கும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் பிரான்ஸிஸ் என்ன சொல்லுவார் என்றும் எனக்கு தெரியும். அவரை மிக தீவிரமாக பின்தொடரும் வாசகன் நான். என் எண்ணமெல்லாம் அவர் எழுதிய புத்தகம் பற்றியே. “வாசிக்கும்போது அவமானமாக, ரணமாக இருந்தது. அழுதுவிட்டேன் (It was a humiliating and painful exercise, I was in full of tears)..” என்று நான் சொல்லும்போதே “நீங்களா அந்த ட்ரெயினில் அழுதது?” என்று கேட்க “ஆம்” என்றேன். “சொன்னது போல வந்துவிட்டீர்கள், நன்றி” என்றார். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. எனக்கு இப்படியான கேள்வி பதில் என்றாலே வாய் டைப் அடிக்க ஆரம்பித்துவிடும். சென்றவருடம் சுமந்திரனிடமும் இது நடந்தது. தட்டுத்தடுமாறி “இந்த புத்தகத்துக்கு மிக்க நன்றிகள், இதிலே நீங்கள் முப்பது பேரளவில் கண்டு பேசியிருப்பதாக கூறியிருக்கிறீர்கள். பத்து பேரின் வாழ்க்கையே இந்த பதிப்பில் இருக்கிறது. இதன் தொடர் வெளியிடும் எண்ணம் இருக்கிறதா? அந்த வாழ்க்கைகள் அப்படியே சொல்லப்படாமல் போய்விடக்கூடாது இல்லையா?” என்றேன்.

“அப்படி ஒரு எண்ணம் இல்லை. சொல்லப்போனால் லட்சக்கணக்கானோர் இப்படி இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வெளிவரவேண்டும். எனக்கு தெரிந்து அவரவர் தங்கள் வாழ்க்கையை குறிப்பெடுத்துக்கூட வைத்திருக்கிறார்கள். அவை எல்லாம் வெளிவரவேண்டும். ஆங்கிலம் என்றில்லை, தமிழில் கூட இருக்கலாம். சொல்லப்படவேண்டும். அவ்வளவே. அதை நீங்கள் கூட செய்யலாம்” என்றார்.

1353344651-former-bbc-foreign-correspondent-frances-harrison_1608520

கூடவே அந்தப்புத்தகத்தில் இல்லாத ஒருவரின் அனுபவத்தை விவரித்தார். ஒரு தமிழ் சிங்கள பெற்றோருக்கு பிறந்த பெண் பட்ட பாடு அது. அந்தப்பெண் மாறி மாறி குழு பாலியல் வன்முறைக்கு உள்ளானதையும், உறவுகள் எல்லோரையும் இழந்ததையும், இறுதியில் ஐரோப்பியா வந்து சேர்ந்தபின் அந்த பெண் விரக்தியில் தற்கொலைக்கு முயற்சித்ததையும் விவரிக்க விவரிக்க எனக்கு விசர் பிடித்தது. அதுவும் கேள்வி கேட்டது நானானதால் என்னையே பார்த்துக்கொண்டு அவர் பேச, என் முகம் கறுத்து கண்கள் குழம்ப ஆரம்பித்தது. நேரில் பார்க்க முடியாமல் தலை குனிந்துவிட்டேன். நிமிர்ந்து பார்த்து நன்றி கூட சொல்ல முடியவில்லை.

இறுதியாக ஒரு கேள்வி என்றார்கள். “ஈழப்பிரச்சனையை வெளியில் இருந்து பார்க்கும் புத்திஜீவி என்ற வகையில், ஆளாளுக்கு பிரிந்து அடிபட்டுக்கொண்டிருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?” என்றார் ஒரு வயோதிபர். முக்கியமான கேள்வி அது. பிரான்சிஸின் பதில் உலகத்தமிழர் எல்லோருக்கும் போய் சேரவேண்டியது.

“புலிகள் இருக்கும்போது ஒரே கொள்கை, ஒரு கருத்து, மாற்றுக்கருத்தாளர்கள் சத்தம்போடாமல் இருந்தார்கள். இப்போது நிலைமை வேறு என்பதால் எல்லோரும் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த நிலையை நீங்கள் தவிர்க்கமுடியாது. You have to get through this process. சிலவேளைகளில் அது நல்லதும் கூட. எல்லோரும் கருத்துரையாடுங்கள். போருக்கு பின்னரான ஈழம் எது என்ற ஒரு தெளிவான பார்வைக்கு வாருங்கள். இப்போதைய உலகநிலை, உள்நாட்டு நிலை, புலம்பெயர் தமிழர் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு உங்கள் ஈழத்தை மீள்வரையறை செய்து தெளிவாகுங்கள். அதை நீங்கள் தெளிவு படுத்தினால் தானே வெளியார் எங்களுக்கு புரியும். இன்னமுமே எனக்கு அது சரியாக புரியவில்லை” என்றார்.

“வெளிநாட்டு அமைப்புகளை உள்வாங்கிக்கொண்டு உங்கள் செயற்பாடுகள் நீங்கள் செய்யுங்கள். தனி நபராக உங்கள் பிரச்சனை என்ன என்று நண்பர்களுக்கு சொல்லுங்கள். அலுவலகம், கிளப்புகள், மனித உரிமை அமைப்புகள் என்று எதையுமே விட்டுவைக்கவேண்டாம். கிரிக்கட் ரசிகர்களுக்கு கூட தெரியப்படுத்தலாம்” என்றார்.

மூன்றாவதாக முக்கியமாக ஒன்றை சொன்னார்.

“எடுத்ததுக்கெல்லாம் ஐநா என்ன செய்தது. உலகம் என்ன செய்தது என்று உங்களை தவிர மிகுதி எல்லோரையும் குறை சொல்லும் பாங்கு இருக்கிறது. அவர்கள் செய்தது பிழை தான். குறை சொல்லத்தான் வேண்டும். ஆனால் உங்கள் பிரச்சனைகளை முறையாக உலகம் கேட்கும்படி செய்யும் பொறுப்பு உங்களிடம் தானே இருக்கிறது. மற்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பதை குறைத்து நீங்கள் என்ன தவறுகள் செய்தீர்கள் என்று அறிந்து அதிலிருந்து பாடம் படிக்கவேண்டியது மிக முக்கியமானது” என்றார்.

சபையை நிறைத்திருந்தவர்கள் அனேகமானவர்கள் அறுபதை தாண்டியவர்கள். எண்ணிப்பார்த்தால் நான்கு இளைஞர்கள் இருந்திருப்பார்கள். அதிலும் ஒரு பெண் சிங்கப்பூரை சேர்ந்தவர். தமிழ் எங்கள் மூச்சு, தமிழன் லெமூரியாக் கண்டத்தில் முதன் முதலில் ஐபாடை கண்டுபிடித்தான், டைனோசருக்கு புட்டும் தேங்காய்ப்பூ சம்பலும் செய்து கொடுத்தான் என்ற ரீதியில் பெருமை பேசுபவர்களை அன்று காணாமல் போனது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. சந்தானம் நைட்டில் மீட் பண்ணுவோம் கைஸ்!

நிகழ்ச்சி முடிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு பிரான்ஸிஸிடம் ஓடினேன். “So glad you came to see me” என்றார். பெருமையாக இருந்தது. “இந்த புத்தகம் என்னை கூனி குறுக(humble) வைத்துவிட்டது, இப்போதெல்லாம் டக்ஸ் அதிகம், எட்டு நாளாய் வெயில் முப்பதில் எரிக்கிறது, ட்ரையின் டிலே என்று சின்னப்பிள்ளை முறைப்பாடுகள் செய்யமுடிவதில்லை, எவ்வளவு தான் மனசு பாரமாக இருந்தாலும் இவர்கள் பிரச்சனைகளுக்கு முன்னாலே என்னது நத்திங் என்றே நினைத்து அமைதியாகிறேன்” என்று நேற்று நான் ஆங்கிலத்தில் எழுதின பதிவின் சாராம்சத்தைசொன்னேன். சிரித்தார். “நீங்கள் அனுப்பிய மெசேஜை huffingtonpostஇல் என்னுடைய பத்தியில் சேர்த்திருக்கிறேன். பெயரை குறிப்பிடாமல் தான் எழுதியிருக்கிறேன், கவலைப்படாதீர்கள்” என்று சிரித்தார். மறக்காமல் அடுத்தநாள் காலை அவரிடமிருந்து அந்த நியூஸ் லிங்க் என் மெசேஜ் பொக்ஸில் வந்திருந்தது. மேன் மக்கள் மேன் மக்களே. கொஞ்சம் நன்றாகே எழுதுகிறோமோ என்றெல்லாம் எண்ணம் வீட்டு வாசலை தட்டும்போது இப்படி யாராவது வந்து பக்குவம் என்றால் என்ன என்று சொல்லிவிட்டு போகிறார்கள். வாசகனாய் கிடைத்த முதல் அங்கீகாரமும் சந்தோசமும் இது.

வீடு வந்து புத்தகத்தை திறந்து பார்த்தேன்.

For JK,
So great to meet you in Person!
Frances

என்று பெரிய கையெழுத்தில் அழுத்தி எழுதியிருந்ததில் அவர் வாசகன் மீது கொண்ட மதிப்பும் பாசமும் புரிந்தது. இன்றைக்கு facebook இல் சாட் பண்ணும்போது சொன்னார்.

FH : This one is for you! Great to meet you in person yesterday - thank u! fh

JK : Thank you Francis. Moment of glory for me meeting you. During your reporting time in SL, your voice-over would be played before the Tamil translation in BBC Tamil service. Ten years after I have talked to you in person now! wow. Thank you. Bit surprised to know that there are negative comments about the book. Then again its Sri Lanka! like you mentioned in the book, 'Denial has become a Sri Lankan habit', including Tamils too. Thank you again.

FH : wow - didn't expect to have my words quoted back at me! But yes. f

இது போதும் எனக்கு இது போதுமே. வேறென்ன வேண்டும்?


நிலா நிலா ஓடி வரவா?

கெய்லா ஒரு சுட்டிப்பெண். இரண்டே வயது தான். அவளுக்கு நிலா என்றால் கொள்ளை இஷ்டம். எப்போது வானத்தில் நிலாவை கண்டாலும் “நிலா நிலா நிலா” என்று கத்துவாள். அப்பா “நிலாவை போய் பிடி” என்று சொல்ல, இவள் முடியாது என்கிறாள். “முடியும் பாய்ந்து பார்” என்கிறார் அப்பா. கெய்லா பாய்ந்து பார்க்கிறாள். “என்னால பிடிக்க முடியேல அப்பா” என்கிறாள். “இல்ல முடியும், இன்னும் நல்லா பாய்” என்கிறார் அப்பா.  கெய்லாவும் அதை நம்பி மீண்டும் மீண்டும் முயன்று பார்க்கிறாள். இறுதியில் பிடிக்கமுடியவில்லையே என்று குழந்தையின் முகம் வாடிவிட்டது. ச்சோ கியூட்.

இந்த வீடியோவை பார்த்த நாஸா உத்தியோகத்தர் ஒருவர் கெய்லாவை அழைத்து நிலாவை எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்கமாக காட்டமுடியுமோ அவ்வளவுக்கு நெருக்கமாக ஆய்வுகூட தொலைகாட்டி மூலம் காட்டியிருக்கிறார். கெய்லா இரண்டு வயதில் முயன்றாள். சாதித்தும் விட்டாள்.

இந்த வீடியோவை பார்த்தது முதல் எனக்கு ஆச்சர்யம் தான். அதுவும் அவள் அப்பா மீது. எங்கள் ஊரில் என்றால் “நிலா நிலா ஓடி வா” என்று லொஜிக் இல்லாமல் பாட வைப்பார்கள். அதை நம்பி வளர்ந்த நாங்களும் பெண்ணை பார்த்தெல்லாம் நிலாவுக்கு ஒப்பிடுவோம். கடைசியில் அதுவும் வந்து சேராது என்பது வேற விஷயம். இங்கே இந்த தந்தை “நிலாவை எல்லாம் பிடிக்கமுடியுமா? அலம்பாம வா” என்று மகளை அதட்டாமல், அவளாகவே முயன்று பார்க்கட்டும் என்று ஊக்குவிக்கிறார்.

பல நண்பர்களுக்கு கெய்லாவின் செய்கையை பார்க்க சின்னப்பிள்ளைதனமாக இருந்தது. Facebook இலே அர்த்தமே இல்லாத நக்கல் கொமெண்டுகள் வந்தன. அது தான் எங்கள் பிரச்சனை. நிலாவை சும்மா பாய்ந்து பிடிக்கமுடியாது என்று வளர்ந்தவர்கள் நாங்கள் முன்முடிபுபண்ணி வைத்திருக்கிறோம். அதனால், பிள்ளை பிடிக்கலாம் என்று முயலும்போது அறிவுரை செய்கிறேன் பேர்வழி என்று “நிலாவை பிடிக்க ஏலுமே, அது அங்க கிடக்கு உனக்கேன்ன லூசா?” என்று கேட்டுவிடுவோம். “Our minds are corrupted and we have too much of prejudice” என்று சயந்தன் மிக அருமையான கருத்துஒன்றை என் ஆங்கில பதிவில் சொல்லியிருந்தான். பெரியவர்கள் எங்களால் ஏற்கனவே புரையேறிப்போயிருக்கும் சிந்தனைகளை மாற்றுவது கடினமாக இருக்கலாம். ஆனால் அந்த சிந்தனைகள் தவறாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறை ஒரு நாளும் நாங்கள் நிராகரிக்கக்கூடாது. அது விஞ்ஞானமாக இருக்கலாம். கலாச்சாரமாக இருக்கலாம். மொழியாக கூட இருக்கலாம்.

முட்டாளாயிரு, பசித்திரு, (Stay foolish, Stay hungry) வாழ்க்கையில் வெற்றிபெற இது இரண்டும் அவசியம் என்று ஸ்டீவ் ஜொப்ஸ் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சிஒன்றில் சொல்லியிருப்பார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மின் காந்தவியல் சார்ந்த தேடல், அவர் நான்கு வயதில் ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடக்கும்போது, அப்பா விளையாடவென கொடுத்த திசைகாட்டியில் இருந்து ஆரம்பித்தது. “என்னடா இது எந்த இயந்திரமும் இல்லாமல், கண்ணுக்கு புலப்படாத சக்தியால் திசை காட்டி நகருகிறதே” என்று நினைத்தது இன்றைக்கு எமக்கு E=MC2ஐ கொடுத்திருக்கிறது. தியரி ஒப் ரிலேட்டிவிட்டியை கொடுத்திருக்கிறது. இத்தனையாயிரம் விஞ்ஞானிகளை அவர் வழியில் பின் தொடர வைத்தது. அவரே சொல்லுகிறார்.

“Never cease to stand like curious children before the great mystery into which we were born”

93434191-einstein-tongue_custom-36fb0ce35776dc2d92eda90880022bf48a67e192-s6-c10

மிகப்பெரும் அறிவுஜீவிகளுக்கு இந்த சிந்தனை மிதமிஞ்சி இருக்கும். Misfits, crazy, rebels, trouble makers என்று அப்பிளின Think Differentவிளம்பரம் பெருமையாக ஐன்ஸ்டீன், காந்தி போன்றவர்களை குறிப்பிடும். சாதாரணமாக எங்களிடம் இல்லாதது அவர்களுக்கு இருப்பதால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எங்களுக்கு புரிவதில்லை. அதனால் எங்களை விடுத்து அவர்களுக்கு ஆட்டிசம் (Autism) வியாதி இருப்பதாக சொல்லிக்கொள்ளுவோம் நாங்கள். Losers.

இனிமேலும் எங்கள் குழந்தைகள் ஏறுக்கு மாறாக ஏதாவது சொன்னால் செய்தால் கவனமாக வெடிக்கை பாருங்கள். மரத்தில் ஏறும் குழந்தையை ஏறவிட்டு விழும்போது பிடிப்பது தான் குழந்தைக்கு நல்லது என்கிறார்கள். என்னை என் பெற்றோர் அப்படி வளர்க்கவில்லையோ என்ற குறை அவ்வப்போது எட்டிப்பார்க்கும். இதை போய் என் அக்காவுக்கோ நண்பர்களுக்கு சொன்னால், “உனக்கென்று குடும்பம் குட்டி வந்தால் அப்ப புரியும். அதுக்கு பிறகு என்ன நடக்குது என்று பார்க்கலாம்” என்கிறார்கள் …அடச்சே …  யாருடி நீயி? அப்பிடி எங்க தான் இருந்து தொலைக்கிறாய்?


யார் அந்த கண்ணம்மா?

காதல்பற்றி எழுதும்போது “வீட்டில் செல்லம்மா சிவனே என்று இருக்க “தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்” என்று கண்ணமாவை பார்த்து பாடினான் பாரதி.” என்று சொல்லியிருந்தேன் அல்லவா.  துஷி “அது தப்பாட்டம் அண்ணே, பாரதி செல்லம்மா செல்லம்மா என்று தான் எழுதினார். கொஞ்சம் ஓவராக இருந்ததால் பிற்காலத்தில் செல்லம்மாவின் அண்ணன்காரன் தான் அதை கண்ணம்மாவாக மாற்றிவிட்டார்” என்று புது குண்டை தூக்கிப்போட்டான். தக்காளி இப்பிடி எல்லாமா உல்டா பண்ணுவாங்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. நம்பவும் முடியவில்லை. துஷி வேறு மாட்டர் உள்ள ஆள் என்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. பாரதியார் கவிதைகள் புத்தகத்தை தூசி தட்டினேன்.


b1கண்ணன் திருமார்பில் கலந்த கமலை என்கோ ?
விண்ணவர் தொழுதிடும் - வீரச் சிங்கா தனத்தே 
நண்ணிச்சிவன் உடலை - நாடும் அவள் என்கோ?
எண்ணத் ததிக்குதடா - இவள் பொன் உடலமுதம் !
பெண்ணில் அரசி இவள் - பெரிய எழில் உடையாள்
கண்ணுள் மணிஎனக்குக் - காதல் இரதியிவள்
பண்ணில் இனிய சுவை பரந்த மொழியினாள்
உண்ணும் இதழ்அமுத ஊற்றினள் கண்ணம்மா

கவிதையை வாசிக்கும்போது, கலியாணமான புதுசில் செல்லம்மாவை பார்த்து பாரதி இதை பாடியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆனால் “நண்ணிச்சிவன் உடலை நாடும் அவள் என்கோ” என்று கட்டிய மனைவியை நெருங்கும்போது எவனாவது பாடுவான்? எனக்கென்னவோ இந்த இடத்தில் கண்ணம்மா என்று தேவியை தான் காதலியாக்குகிறான் பாரதி என்றே தோன்றுகிறது.

திருவே நினைக்காதல் கொண்டேனே -- நினது திரு
உருவே மறவா திருந்தேனே -- பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே -- நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே -- அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே -- மிகவும்நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே -- இடைம்நடுவில்
பையச் சதிகள்செய் தாயே -- அதனிலுமென்
மையல் வளர்தல்கண் டாயே -- அமுதமழை
பெய்யக் கடைக்கண்நல் காயே -- நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே -- பெருமைகொண்டு
வையந் தழைக்கவைப் பேனே -- அமரயுகஞ்
செய்யத் துணிந்துநிற் பேனே -- அடியெனது
தேனே, எனதிரு கண்ணே, -- எனையுகந்து
தானே வருந்திருப் -- பெண்ணே!

என்று அடுக்களைக்குள் இவன் வருகைக்காய் ஆக்கி வைத்து காத்திருக்கும் செல்லம்மாவை பார்த்து பாரதி ஏன் பாடவேண்டும்? பாரதிக்கு கண்ணம்மா என்பது ஒரு கனவு. தேவதை. அவன் இஷ்டத்துக்கு அந்த தேவதை உருமாறுவாள். அது செல்லம்மாவுக்கு புரிந்திருக்காது. பேதைப்பெண் தன்னைத்தான் இந்த முண்டாசுத்தலையன் பாடிக்கொண்டு திரிகிறான் என்று நினைத்திருக்கலாம். அண்ணன்காரனும் ஆறுதல் கூறியிருக்கலாம். மற்றும்படி பாரதி என்பவன் ஐன்ஸ்டீன், காந்தி வரிசையில் வந்த misfit, rebel. ஆட்டிச வியாதிக்காரன். சாமானியர் எமக்கு அவன் என்ன நினைத்திருப்பான் என்று புரிவது என்பது ஆகாத விஷயம். அவன் கவிதைகளை வேண்டுமானால் எங்கள் தளத்தில் ஆராயலாம். இங்கே நான் செய்வது போல.  அவ்வளவே.


பள்ளம் குழி பாத புரியல!

“சொல்லு மேகலா .. அப்படீண்டா பிடிக்கவே இல்லையா?”

Caramel latte இல் கவனமாக அரை பக்கட் சீனியை அளந்து போட்டுக்கொண்டிருக்கும்போது தான் குமரன் கேட்டான். மேகலா நிமிர்ந்து அவனின் கண்களை நேராக பார்த்தாள்.

“சொன்னேனா?”
“அப்ப இருக்கு எண்டுறாய்?”
“ஹெலோ … எக்ஸ் கியூஸ் மீ சேர், இது வெறும் மீட்டிங் தான் .. டேட்டிங் கூட கிடையாது. ஜஸ்ட் டாம்ன் கொஃபி, அது வேற கடைல நிக்கிற எருமை மாடு, பாலை ஒழுங்கா ஸ்டீம் பண்ணாம .. பாரு கருகி மணக்குது .. ப்ச் ”
Neethane-En-Ponvasantham_takie_portion“முப்பத்திரண்டாவது தடவை … பதினாலு டைம் குளோரியாவில, பத்து தடவை கொஃபிபீன்ஸ், ஆறு தடவை உண்ட ஹோஸ்பிடலுக்கு பக்கத்தில இருக்கிற லோக்கல் கடை ..ஸ்டில் .. ஒரு ஹின்ட் கூட இல்லையே’
“முப்பத்தி ஒண்டு தான் வருது .. மற்றது எங்கே?”
“விளையாடாத மேகலா ப்ளீஸ் .. பி சீரியஸ்”
“சரி என்ன வேணும் சொல்லு”
“ஏதாவது தெளிவா சொல்லு .. பிடிச்சிருக்கா .. என்னை மாதிரி பட்டென்று சொல்லு .. இல்லையா … அப்ப கூட ஐ லவ் யூ எண்டே சொல்லலாம் .. தப்பில்ல”
“பார்த்தியா .. உண்ட டகால்டி வேலையை காட்டீட்ட”
“இல்ல மேகலா .. இட்ஸ் கில்லிங் … வட்ஸ் ரோங் வித் மீ சொல்லு? படிப்பில்லையா .. அழகு .. சரி லூஸ்ல விடு … குவாண்டம் பிஸிக்ஸ் .. கேளேன் .. க்வார்க் இன்டெர் எனெர்ஜி எப்பிடி வோர்க் பண்ணும் எண்டு ..”
“செம மொக்கைடா நீ … கொஃபி ஷாப்பில குவாண்டம் கதைக்கிற… உருப்படுவியா? உன்னை நம்பேலாது .. சுத்த கள்ளன்டா நீ! யூ மேக் திங்க்ஸ் அஃப் .. ”
“நீயும் தான் மேக் அப் போடுறாய்.. நான் சொன்னேனா? இந்த சம்மரில யாராவது வயலட் கலர் லிப்ஸ்டிக் அதுவும் இந்தா அப்பு அப்புவாளவையா? சகிக்கல. பட் பேசாமா இருக்கிறன் தானே”
“அடி வாங்க போற நீ’


சொல்லிக்கொண்டே தன்னுடைய ஹான்ட் பாக்கில் இருந்த குட்டி கண்ணாடியை வெளியில் எடுத்த மேகலா அவசர அவசரமாக லிப்ஸ்டிக்கை அட்ஜஸ்ட் பார்த்து செய்தாள். திருப்திபட்டவளாய் தோன்றவில்லை. குமரனை பார்த்து கேட்டாள்.


“இப்ப ஓகேயா?”
“நீ தான் சொல்லோணும் மேகலா … நான் எப்பவுமே ஒகே தான்”
“அடங்க மாட்டியா சரியான ஜவ்வுடா நீ .. சரி விடு”
“என்ன சொல்ற”
“சரி .. நீயும் தான் எவ்வளவு காலத்துக்கு படலைலேயே கிடப்பாய் .. பிழைச்சுப்போ ராஜா”
“நிஜமா தான் சொல்லுறியா? ப்ச் .. இங்க பாரு கூஸ் பம்டி … ஆர் யூ ஷுவர்”
“போதும்டா கதையே இல்லாமா எவ்வளவு நேரம் தான் இழுப்பாய் .. பாட்டு போடு .. கிளாசிக் ரொமாண்டிக் சோங்”
“போட்டா போச்சு .. ஏதாவது ஸ்பெசிபிஃக் ராகம்?”
“துலைச்சு போடுவன் .. ராகம், பாடியவர், உனக்கு 90ம் ஆண்டில அந்த ரோட்டில இந்த சீனில மனதை அள்ளிச்சு எண்ட எந்த லொள்ளும் பண்ணாம பாட்டுக்கு போ”
“இத மாதிரி ஏற்கனவே இளையராஜா போட்டிருக்கிறார் எண்டு ..”
“ஒரு மண்ணும் வேண்டாம் .. நேரே பாட்டை போட்டு வியாழமாற்றத்தை முடிடா டொங்கா”
“ஓல்ரைட் .. தேர் யூ கோ.. எடுத்துக்கோ”

 

வர வர உன்னோட பாடல் விளக்கம் எல்லாம் டெக்னிக்கலா இருக்குடா. பீல் பண்ணி எழுதுறது குறைஞ்சு போச்சு, வித்தியாசமா ட்ரை பண்ணு” என்றான் கஜன்(நான் எப்பேடா சொன்னேன்?). அதுக்காக தான் இந்த முயற்சி! மற்றும்படி எந்த ஆணி புடுங்கினாலும் அது தேவையில்லாத ஆணி தான் பாஸு! ஆளாளுக்கு என்னைய போட்டு கும்மாதீங்க மக்களே.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வியாழமாற்றம் 14-03-2013

$
0
0

 

மஹாகவி!

ஒரு சின்ன சிட்டுவேஷன். அளவெட்டிப்பக்கம் ஒரு வாழைத்தோட்டம். அந்த நாளில் தண்ணீர் இறைப்பு என்றால் துலாக்கிணறு தான் பாவிப்பார்கள். துலாவில் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கும் படலம். நம்மட ஆள் அதை எப்படி எழுதுகிறார் என்று பாருங்கள்.

40039_420717206414_3583362_n

 

பொன்னப்பன் துலாவின் மீது
போய் வந்து கொண்டிருந்தான்;
சின்னையன் இறைத்தான்; தண்ணீர்
சென்றோடி உருகும் வெள்ளி
என்னப் பாய்ந்தது வாழைக்குள்.
“ஏனிந்த கஞ்சிக் காரி
இன்னும் வந்திறங்க வில்லை?”
என்று பொன்னப்பன் பார்த்தான்.

 


இரண்டாவது வரியிலேயே நான் குழம்பிவிட்டேன். துலாவில் மேல் என்னத்துக்கு பொன்னப்பன் நிற்கவேண்டும்? அம்மாவிடம் கேட்க சொன்னார். “அந்தக்காலத்தில கன நேரம் தண்ணி இறைப்பு எண்டதால அப்படித்தான்” என்று தொடர்ந்து விளக்கினார். துலாவில் ஒருவர் ஏறி, நடுக்கால் பக்கம் ஒரு கயிற்றை கட்டி பிடித்துக்கொண்டு வாளி உள்ளே போகும்போது முன்னே போய் அழுத்துவதும், அள்ளும்போது பின்னே வந்து கனம் கொடுப்பதுமாக ஓடித்திரிவாராம். அதுதான் “பொன்னப்பன் துலாவின் மீது போய் வந்து கொண்டிருந்தான்”. கீழே நின்று சின்னையன் வாளியை தூக்கி வாய்க்காலில் இறைக்கிறானாம். வெள்ளி போல வாழைக்கு தண்ணி பாய, மேலே நின்று இறைப்பவனுக்கு பசி. எங்கேடா இவளை காணேல்ல என்று தொடருகிறான்.

“உச்சிக்கு வெயில் ஏறிற்றே”
உன்னையும் மறந்தாளோ, உன்
மச்சாள்? இம்மினை கேடேனோ?
மாற்றுகின்றாளோ சேலை
அச்சிறு கள்ளி?’ என்றே
அவிழ்க்காமல் நினைத்தான் மாமன்;
மிச்சத்துக் கிவன் சிரித்தான்;
மீண்டும் அவ் வழியைப் பார்த்தான்.

என்னவாம்? பொன்னப்பன் மகள் தான் தோட்டத்துக்கு கஞ்சி கொண்டு வருபவள். இன்னும் வரவில்லை. வெயில் ஏறிவிட்டது. பொன்னப்பன் சின்னையனை சீண்டுகிறார். “என்னைத்தான் மறந்தாள், சரி, மச்சான் உன்னையுமா மறப்பாள்? என்று முதல் கேள்வி. “இல்லை இல்லை, உன்னை பார்க்க தான் இவ்வளவு நேரம் மினக்கெட்டு சேலை உடுத்துகிறாளோ?” என்று அடுத்த நக்கல். மாமன் மருமகன் உறவு, ஒரு துலாவில் நீர் இறைப்பு. மருமகனை கீழே விட்டுவிட்டு தான் துலா ஏறி மிதிக்கும் மாமன் காரன். எட்டு வரியில யாழ்ப்பாணத்து வாழ்க்கையை பட்டென்று எழுத மஹாகவியை விட்டால் யாரால் முடியும்?

ஒரு சனிக்கிழமை, வேலையில்லை, கொஞ்சம் நித்திரை கொள்ளலாம் என்றால் தூக்கம் வரவில்லை. ஏழு மணிக்கே முழிப்பும் வெளிச்சமும் வந்துவிட்டது. கட்டிலில் கிடந்தவாறே Facebook திறந்தால் சக்திவேல் அண்ணேஇந்த ஸ்டேடஸ் போட்டிருந்தார்.

“இன்றைக்கு ஒரு சம்பாஷணையில் 'கலட்டி'என்று தமிழ் வார்த்தையைப் பாவித்துவிட்டேன். அப்போது இருந்த யாருக்கும் (எல்லோருக்கும் யாழ்ப்பாணந்தான் பூர்வீகம்) அதன் அர்த்தம் தெரியவில்லை . தனித்து விடப்பட்டேன். நிற்க "கலட்டி"என்ற சொlல் உங்கள் ஊர் வழக்கில் உண்டா? இந்த மாதிரிச் சொற்களை (அழிந்துபோகாமற்) காக்க, கி.ரா. மாதிரி இலக்கியவாதி எங்களுக்குக் தேவைப்படுகிறார்.”

வாசித்துக்கொண்டிருக்கும்போது கொஞ்சம் டென்ஷனாகிவிட்டேன். இதற்கெதுக்கு கீ.ரா? எங்கட ஆள் “கலட்டி” என்று தனியாக காவியமே வில்லுப்பாட்டாக எழுதியிருக்கிறார்.1966ம் ஆண்டு. அதிலே கலட்டி என்ற நிலத்தை விவரித்தே மூன்று பாடல்கள் இருக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று.

tamilnadu079காரை சூரை நாக தாளி
கள்ளி முள்ளி ஈச்சை மட்டும்
வேர் விடுத்து வளர லாகும்
வெட்டை; அந்த வெளியில் எங்கு
பாரை கொண்டு தொட்ட போதும்.
படுவ தொன்று-பாறை என்று!
யாரை அந்த நிலம் அழைக்கும்?
அன்பு கெட்ட மனம் நிகர்க்கும்.


அறுபதுகளில் உலகிலே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த பொதுவுடைமை தத்துவம் தான் கலட்டியின் ஆதாரமான கரு. உயர்சாதி செல்லையன், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த கண்மணியாளை கைப்பிடிப்பது. ஊர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சமூக சேவைகள் செய்வது. முதலாளிகள், அரசாங்க ஊழியர்களுக்கெதிராக குரல் எடுப்பது, கலட்டி நிலத்தை பண்படுத்தி கமம் செய்வது, ஏழைகளுக்கு பிரித்துக்கொடுப்பது என்று எல்லாமே பாடல்கள்.கலட்டியின் முடிவு சந்தோஷ முடிவு. அதை பிறகு அவர் கண்மணியாள் காதை என்று மாற்றினார். பலதை வெட்டி எறிந்தார். முடிவை கவலையாக மாற்றினார். செல்லையன் இறந்துபோக கண்மணியாள் அவன் மேல் புரண்டு அரற்ற, நில முதலாளிகள் அவளை அடைய துரத்துவதாக. சோக முடிவு யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக அவர் நினைத்திருக்கலாம்.

images (2)கலட்டி/கண்மணியாள் காதல் கவிதை தொகுப்பு சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையே சொல்லுகிறது. இதையே செங்கை ஆழியான் காட்டாறு என்று கதையாக சொல்லியிருப்பார். புதுவை கூட கொம்யூனிசம் பேச தவறவில்லை. அது ஒரு தலைமுறை. தமிழகத்தில் திராவிட இயக்க எழுச்சி, ஒருவித எழுத்து புரட்ச்சிக்குள் புகுந்து, மரபுடைத்து உரைநடையாக போய்க்கொண்டிருந்த காலத்தில் ஈழத்தில் மகாஹவி, சில்லையூர் செல்வராசன் போன்றவர்கள் சத்தம்போடாமல் அதே புரட்சியை மரபுக்குள் நின்று மீறாமல் செய்துகொண்டிருந்தார்கள். சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான் போன்ற கவிஞர்கள் அதை அடுத்த பத்தாண்டுக்கு தொடர்ந்தார்கள். பின்னர் ஈழப்போராட்டம் உருவாகி, எங்கள் கவிதையும் மரபை தாண்டி, உரைநடைக்கும், சந்தத்துக்கும் அகப்பட்டுக்கொண்டது காலத்தின் தேவை என்றாலும், மரபு எம்மத்தியில் அருகிவிட்டது கவலையே. அருமையான கேதா, வாலிபன் போன்ற கவிஞர்கள் கூட மரபு விதிகளை படிக்க ஆர்வம் காட்டாமல் இருப்பதை பார்க்கையில் அவர்கள் மேல் உள்ள உரிமையில் மூஞ்சில் நாலு குத்து விட்டால் என்ன என்று தோன்றும். வெண்பாவில் கலக்கலாம், கவியரங்கம் செய்யலாம் என்று இங்கே சொன்னால், “சனம் வராதுடா தம்பி”.

ஒரு காதல் காட்சி. தலைவர் இதிலே விண்ணர்! கலட்டி குடிசை தொகுதி. அங்கே கணவனும் மனைவியும் காதலோ காமமோ ஒன்றுமே “பண்ண” முடியாது. எங்கேயும் குடிசை. குடிசைக்குள்ளும் குஞ்சு குருமான் சிலது கிடக்கும். கலியாணமான பம்பாய் படத்து அரவிந்த்சாமி, மனீஷா நிலைமை. செல்லைய்யன் எட்ட நின்று குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் கண்மணியாளை பார்த்து ஏங்குகிறான். “தண்ணியோ கிணற்றினில!, தாகமோ, தனிமையிடை போய்த் துயின்றால்,  போகுமோ? ” என்று புலம்புகிறான். உள்ளே தாழ்ப்பாள் போட்டு தூங்குவது போல நடிக்கும் கண்மணியாளுக்கு கேட்கிறது. அப்புறம் கவிதையை கேளுங்கள்.

Large_1835[1]

 

சேலை ஒன்று சரசரப் புற்றது.
திறப்பும் பூட்டும் கறகறப் புற்றன.
வேலியோ கறையான் படர்ந்துள்ளது;
மெல்லவே அந்த மண் உதிர்வுற்றது.
வாழை நட்டுள பாத்தியில் ஈரமோ?
வைத்த காலிற் சளசளப் புற்றது.
மூளை ஒன்றினில் ஓலைக் கிடுகினை
முன் விரிக்க, அது நெரிவுற்றது.


மேலோட்டமாக பார்த்தால் வெளியில் தோட்டத்தில் தான் வேலை நடந்திருக்கும் போல இருக்கும். மஹாகவியின் குறும்பை யோசித்தால், அட குடிசைக்குள்ளே கூட இத்தனையும் நடந்திருக்கும் போலவே தோன்றுகிறது. என்ன நினைக்கிறீர்கள்? 

 

யாரடா அவன் துட்டகைமுனு?

வேலாயுதம் மாஸ்டரை அவரிடம் படிக்காதவர்கள் கூட மறந்துபோய் இருக்கமாட்டார்கள். தமிழில் காவி என்று அழைக்கப்படும் வெக்டர் கணிதத்தை கரைத்துக்குடித்தவர். மாணவர்களுக்கு மோர் ஊற்றுவது போல அழகாக சொல்லிக்கொடுக்கவும் செய்வார். அதனாலேயே அவருக்கு வெக்டர் வேலாயுதம் என்ற பெயர் வந்தது. நான் அவரின் பிரதான சீடன் கிடையாது. இரண்டு மணி நேரம் யார் எப்படித்தான் படிப்பித்தாலும் என்னால் ஒரு வகுப்பறையில் இருக்கமுடியாது என்பதும் ஒரு காரணம். அவருடைய வகுப்பு டைமில் தான் சந்திரன் மாஸ்டர்தன்னுடைய கிளாசை ஆரம்பிப்பார் என்பது இன்னொரு காரணம். ஆனாலும் வெக்டர் மாஸ்டரிடம் நான் விரும்பி முறையாக கற்றுக்கொண்ட ஒரு பாடம் சார்புவேகம். அதற்கு காரணம் சார்புவேக கணக்குகளை ஏனைய வாத்திமார் போன்றில்லாமல் இவர் காவியிலேயே நிறுவுவார். ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கு காவி பற்றிய அறிவு மிக முக்கியமானது. ஒரு சட்டத்தில் இருந்து இன்னொரு சட்டத்துக்கு முழுமையாக எங்களை மாற்றி ஒன்றை அவதானிக்க அது கை கொடுக்கும். அதென்ன சார்புத்தத்துவம்? இரண்டு வரியில் முயற்சிக்கலாம்.

பௌதீகவிதிகள் (வேகம், நேரம், ஆர்முடுகள், விசை) எல்லாமே, வேறு வேறு சட்டத்தில் இருக்கும் அவதானிப்பாளர்களுக்கு மாறுபடும். உதாரணமாக ஒரு புகையிரதத்தின் வேகம் வெளியில் இருப்பவனுக்கும் உள்ளே இருப்பவனுக்கும் மாறுபடும். ஆனால் உள்ளேயே இருக்கும் இருவருக்கு வேகம் ஒன்றாகவே இருக்கும். இந்த தத்துவம் விரிந்து பிரபஞ்சம் வரையிலும் சுருங்கி குவாண்டம் வரையிலும் போகும். இதை கொஞ்சம் விஞ்ஞானத்துக்கு வெளியேயும் யோசிக்கலாம். சிங்களவருக்கு தமிழரின் ஆதாரமான பிரச்சனைகள் புரிவதில்லை.ஏன்?

ஒளியின் வேகம் எந்தச்சட்டத்திலும் மாறாது. சாஸ்வதமானது. வண்டிக்கு உள்ளே இருந்தாலென்ன வெளியே இருந்தாலென்ன ஒளியின் வேகம் எல்லோருக்குமே ஒன்றாகவே இருக்கும். நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எழுதலாம். எஸ்கேப் ஆயிடுவீர்கள்.

சார்பியல் தத்துவத்தின் ஆதாரமான எண்ணங்கள் தலைவருக்கு எப்படி எங்கே தோன்றியிருக்கும்? பல்கலைக்கழகத்திலா? ஆராய்ச்சிசாலையிலா? ம்ம்ம்ஹூம். சின்ன வயதில். சின்ன வயதில் அவர் வீட்டில் சாப்பிடவரும் ஒரு மருத்துவ இளைஞன் இவருக்கு கொடுத்த சுவையான பௌதீகம் சார்ந்த புத்தகங்கள். தலைக்கு பத்து வயசு. அப்போது தான் ஒளியின் வேகமே ஆதாரமானது, மாறாதது என்ற பரிசோதனை பற்றி வாசித்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார். பதினாலு வயதில் சுவிட்சர்லாந்தில் ஒரு பாடசாலையில் படிக்கிறார். அங்கே வழமையான கொப்பி, புத்தகம், மனப்பாடம், பரீட்சை விஷயங்கள் இல்லை. படங்கள், ஓவியங்கள் மூலம் தத்துவங்களை படிப்பித்திருக்கிறார்கள். “குமரனை ஒரு இலத்திரனோடு இறுக்கி கட்டிவிட்டால், அவன் எங்கெங்கெல்லாம் போய்வருவான்?”, “ஒளியோடு சேர்ந்து நாமும் ஐந்தடி பின்னாலே ஓடினால் பிரபஞ்சத்தை எப்படிப்பார்ப்போம்?” வகை அசைன்மெண்ட்கள். கேட்கவே புல்லரிக்கிறது இல்லையா. ஐன்ஸ்டீன் போன்ற மூளைசாலிகளிடம் இவ்வகை கேள்விகளை பதின்மூன்று வயதில் கேட்டால், முப்பத்தைந்து வயதில் சார்பியல் கோட்பாடு கண்டுபிடிக்காமல் வேறு எதை தான் கண்டுபிடிப்பார்கள்?

einstein-on-bike

Thought Experiment என்று அழைக்கப்படும்  இந்த வகை பரிசோதனைகளில் ஜெர்மனியர்கள் அசகாயசூரர்கள். அப்படி யோசித்ததாலேயே ஒரு எல்லையை தாண்டி அணு தொழில்நுட்பம், குவாண்டம், ஷ்ரோடிங்கர் பூனை என்று அவர்களால் சிந்திக்க முடிந்தது. இந்த வகையிலான கேள்விகளை எங்கள் ஆசிரியர்கள் கேட்டார்களா? என்றால் விஞ்ஞான பாடத்தில் சுத்தமாக இல்லை. ஆசிரியர் தொழில் என்பது கிடைச்சத வச்சுக்கோடா அவ்வளவு தான் என்ற நிலையில் இருப்பதால் அதி மேதாவிகள், புத்திசாலிகள், விஞ்ஞானிகள் அந்த துறைக்கு, அதுவும் பாடசாலை கற்பித்தலுக்கு செல்வது வர வர அரிதாகிக்கொண்டிருக்கிறது. இதையும் தாண்டி வெக்டர், பிகே என்றழைக்கப்படும் யாழ்ப்பாணத்து விஞ்ஞான ஆசிரியர் என்று பலர் தோன்றி அவ்வப்போது வானதி அக்கா போன்ற மாணவர்களை உருவாக்கவும் செய்கிறார்கள்.

இந்த வருடம் மெல்பேர்னில் தமிழ் போட்டி வைத்தார்கள். எவரோ ஒருவர் என் மீது இருக்கும் செம காண்டில், ஜேகேக்கு தமிழ் தெரியும், நடுவரா போடலாம் என்று சொல்ல, வரும்படி அழைத்தார்கள். தமிழ், அதுவும் இலக்கணம் எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பது படலை வாசிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். தமிழில் நேர்முக கேள்வி கேட்கவேண்டும். இங்கே உள்ள பிள்ளைகள் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுவார்கள். அவர்களை சுத்த தமிழில் பேசென்றால் அதுகள் என்ன செய்யும்? அதுவும் ஒருமுறை பிள்ளை “கரட்” என்று சொல்லிவிட்டு “ஒ ஷிட்” என்றது. என்ன பிரச்சனை என்று கேட்டேன். “கரட்டுக்கு தமிழ் தெரியாது நடுவர் அவர்களே!”. வெளங்கிடும். அதுவும் கொஞ்சம் பெரிய பிள்ளைகளுக்கு ஒரு கம்பராமாயண பாடலை கொடுத்து வாசித்து விளக்கம் சொல்ல சொல்லி ஒரு கேள்வி. அந்த பாட்டு கம்பவாரிதிக்கு தெரிந்திருந்தாலே பெரியவிஷயம். பிள்ளை நாலெழுத்து வார்த்தையால் என்னை மனதுக்குள் திட்டியது புரிந்தது. கொஞ்ச நேரத்தில் கேள்விப்பேப்பரை கடாசிவிட்டு நான் கேட்ட கேள்வி “சின்ட்ரெல்லா கதையை தமிழில் சொல்லுங்க பார்ப்பம்?”. “இந்த நாலுவரி விளங்காத கவிதையை கம்பர்/பாரதி/வைரமுத்து, இவர்களில் யார் எழுதியிருக்கலாம்? வை டூ யூ திங் ஸோ?”. 

சென்ஜோன்ஸில் படிப்பித்த மயில்வாகனம் மாஸ்டர் கொஞ்சம் ஜெர்மன் வகை. படிப்பித்தது சமூகக்கல்வி. அதில் ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கும். மாணவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு அரசரின் பெயர் கொடுப்பார். முதலாம் பராக்கிரமபாகு முன்னே வா என்பார். நடுங்கிக்கொண்டு போவேன்.


1313144241“சொல்லு நீ என்ன செய்தாய்?”
“இலங்கையை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தேன்”
“இஸ் இட்? அடிக்கடி என்ன டயலோக் விடுவாய்?”
“வானிலிருந்து விழுகின்ற ஒரு துளி நீரேனும் வீணாக கடலை சென்றடைய விடக்கூடாது சேர்”
“வெரி குட், அப்ப நீ என்னென்ன குளங்கள் கட்டினாய்?”
“பராக்கிரம சமுத்திரம் ஒண்டு தான் சேர்”
“ஒகே நீ போகலாம் … அடுத்ததாக எவண்டா அவன் துட்டகைமுனு?”

துட்டகைமுனு குலப்பன் காய்ச்சலுடன் முன்னே வருகிறான்.

“சொல்லு அப்பன்.. நீ யாரை போரில் வென்றாய்?”
“வந்து … மறந்து .. போச்சு .. சேர்”

படார் என்று துட்டகைமுனு மன்னன் முதுகில் அடி விழ ஏனைய மன்னர்கள் நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

யாழ்ப்பாணத்து பேப்பர்

kannan_arunasalam_2_1

கண்ணன் அருணாசலத்தை பற்றி முன்னமும் எழுதியிருக்கிறேன்.  காட்சியில் கவிதை எழுதும் விற்பன்னர். இப்படி ஒரு படைப்பாளி, அதுவும் யாரு பார்க்கிறார்களோ இல்லையோ, தன்னுடைய சுயதிருப்திக்காக, நேர்த்திக்காக எந்த எல்லை மட்டுக்கும் போகக்கூடிய, சமரசங்களே இல்லாமல் கலை வடிக்கும் ஒருவர். அவருடைய எடிட்டிங், கமரா கோணங்கள், வெளிச்சம்/வெளிச்சமின்மை எல்லாமே புதிதாக இருக்கும். இளையராஜாவோ பீத்தோவனோ யார் சொன்னது என்று தெரியாது. நிஜமான இசை என்பது இரண்டு சுரங்களுக்கிடையில் சிக்குப்பட்டிருக்கும் நிசப்த்தத்தில் தான் கிடைக்கும். கண்ணன் அதை ஒளி ஓவியத்தில் கொண்டுவருவார். சட்டிலான எடிட்டிங் இடைவெளிகளை கவனமாக பார்த்ததால் ஏதோ ஆண்டுகள் கடப்பது போல ஒரு உணர்வு இருக்கும்.  இந்த பேப்பரையே பாருங்களேன். முழுமையாக ஒரு காட்சியை காட்டமாட்டார். காட்டிவிட்டால் பார்ப்பவன் உனக்கென்ன வேலை? உன் ஸ்ருஷ்டிக்கென்ன வேலை? அது தான் படைப்பிலக்கியம். ஒவ்வொரு எழுத்தாக அது ஒரு நாளும் படிப்பிக்காது.

Paper from Kannan Arunasalam on Vimeo.

உதயன் எங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை கொல்லைப்புறத்து காதலிகளில் எழுதியிருக்கிறேன். அப்போது கணக்கு செய்ய வெற்றுத்தாள் வாங்குவதற்கு உதயனுக்கு தான் போவோம். பத்திரிகை கட் பண்ணிய மிகுதி துண்டு தாள்களை தருவார்கள். போப்பரசர் இன்றைக்கு தெரிவானபோது கூட உதயன் தான் எனக்கு ஞாபகம் வந்தது.  1995 ஜனவரியில் புனித ஜோன் போல் போப்பரசர் இலங்கை வந்தது அப்போது திருவிழா செய்தி. காலிமுகத்திடலில் ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக பிரகடனம் செய்ததும் ஞாபகம் வந்தது. உதயன், பளிச்சென்ற மினுங்கல் தாளில் அவரின் படத்தை பிரசுரித்து இணைப்பாக வெளியிட்டிருந்தது. நெஸ்பிறே பெட்டி மட்டையில் அதை ஒட்டி, சாமித்தட்டில் இயேசுக்கு பக்கத்தில் வைத்து பூவெல்லாம் போட்டு கும்பிட்டுக்கொண்டிருந்தேன். ஏழெட்டு மாதத்தில் இடம்பெயர்ந்து எல்லாமே போய்விட்டது.

உதயன் அப்போது யாழ் மக்களின் குடும்ப நண்பன். இப்போது யாருக்கு நண்பன் என்று எழுதினால் அரசியல் புகுந்துவிடும். வேண்டாம்.

 

பனிவிழும் இரவு

இன்றைக்கு அலுவலகத்தில் இளையராஜா ஸ்பெஷல். “வா வா வஞ்சி இள மானே” கேட்டுக்கொண்டிருந்தேன். “பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகாதம்மா” என்னும்போது என்னையறியாமல் ஏதோ ஒரு எக்ஸ்பிரஷன் காட்டியிருக்கவேண்டும். பீட்டர் வந்து “யூ இன் எ குட் மூட் டுடே” என்றான். “இளையராஜா பாடல் கேட்கிறேன்” என்றேன். விசாரித்தான். சொன்னேன். தான் ஒரு பாட்டு கேட்கவேண்டும் என்று சொல்ல, இரண்டு செக்கன்ஸ் யோசித்துவிட்டு ப்ளே பண்ணிக்காட்டிய பாட்டு இது. “Wait till the interludes. You are in for a surprise” என்றேன்.

முதல் இன்டர்லூடில் ஓர்கன் முடிய ஒரு இடைவெளி. மௌனம் மட்டுமே அங்கே ஒரு இசை கோர்வையாக பயன்படுத்தப்பட்டிருக்கும். படீரென்று கிழித்துக்கொண்டு வயலின்கள் ரீங்காரிக்க  ஆரம்பிக்கும். இந்த பாட்டின் இசை கோர்வை ஒரு உச்சம்.  வசியப்படுத்தும் இசை. அதுவும் “தனிமையே போ” என்று ஜானகி பிட்ச் பிடிச்சு ஏங்கும்போது,

டேய் மொட்டை, ரொம்ப அநியாயம்டா!

 

&&&&&&&&&&&&&


N14, 4/1, சொய்சாபுர பிளட்ஸ், மொரட்டுவ

$
0
0

 

z_p-24-Facelift-02
படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

கைநிறைய சோப் நுரை. நன்றாக அலம்பி, துவாயால் துடைத்துவிட்டு, கக்கூஸ் பவுலில் அவசர அவசரமாக ஒண்டுக்கடித்துவிட்டு வாயிலை நோக்கி போகும்போது மீண்டும் படார் படார். இம்முறை அவசரம் தெரிந்தது. “யாராக இருக்கும்?” என்று நினைத்துக்கொண்டே கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால்,

வெளியே நான்கைந்து பொலிஸ்காரர்கள்.

செல்வவடிவேலுக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. விடிய வெள்ளன ஏன் வந்திருக்கிறாங்கள்? சும்மா செக்அப் ஆக இருக்குமோ? வீட்டில வேறு இந்நேரம் யாருமே இல்லையே. சிங்களம் வேறு அவனுக்கு டைப் அடிக்கும். மீண்டும் கதவு ஓட்டைகுள்ளால் பார்க்கப்போனவன் தயங்கினான். பொறு.  வெளிச்சம் மாறுவதை வைத்து உள்ளே ஆள் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள். இப்போது என்ன செய்வது? திறக்காமேலேயே இருந்தால் போய்விடுவார்களா? சொல்ல முடியாது. எதுக்கு சனிக்கிழமை காலமை வந்திருக்கிறாங்கள்? திறப்பதா விடுவதா? செல்வவடிவேலுக்கு ஒரே நேரத்தில் எல்லா யோசனையும் வந்தது.

அடையாள அட்டை பெர்சுக்குள் இருக்கிறது. கம்பஸ் ஐஸியும் இருக்கிறது. பொலிஸ் ரிப்போர்ட் கம்பஸ் பாக்கில் இருக்கிறது. வீட்டு ஒனர் நம்பரை போன் புக்கில் பிடிக்கலாம். தேவை என்றால் வேலாயுதம் அங்கிளை கூப்பிடலாம். ஆறு பேர் ரூமில், சுரேஷ், மட்டக்குளிக்கு அன்ரி வீட்டுக்கு போய்விட்டான். பிரதீபனும் மயூரனும் ஸீமா கிளாசுக்கு; ரமா கம்பஸ் லைப்ரரி. சொல்லிவிடலாம். எல்லோரும் யாழ்ப்பாணம் டவுன் தான். விளக்கம் கேட்டால் கொடுக்கலாம். இந்த ரெஜினோல்ட் தான். பளைக்காரன். எங்கே போயிருப்பான்? கேட்டா என்னத்த சொல்லுறது? ரெஜினோல்ட் ரூமில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அவன் பொலிஸ் ரிப்போர்ட் எடுத்ததும் ஞாபகம் இல்லை. ஆளே பார்க்கும்போது சரியில்லை. விசாரிக்காமல் கம்பஸ் என்று ரூம் கொடுத்தது பிழை. அவனை தேடி தான் வந்திருக்கலாம். வேறு வகையில் இங்கே தேடிவர வேண்டிய நிலைமை இன்னமும் வரவில்லை. கேட்டால் என்ன சொல்லுவது? தெரியாது சேர் என்று சொல்லலாம். கேட்கமாட்டாங்கள். ரெஜினோல்ட்; சமாளிக்கவேண்டும். சமாளிக்கலாமா. தனியே இருக்கும்போது மறியலுக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டால் எடுத்துவிட ஆள் இல்லை. கதை சரி. கம்பஸ் என்ற கவர் உள்ளே போன பிறகு வேலை செய்யாது.

தட் தட் தட் என்று மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை. திறந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் ஓடலாம். பின் ஜன்னலால் கக்கூஸ் பைப்பில் பிடித்தால் ஒவ்வொரு ஜொய்ன்ட் பிடித்து இறங்கலாம். நான்கு மாடிகள் தான். ஆனால் பக்கத்து பிளாட்காரன் பார்த்தால் கள்ளன் என்று கத்திவிடுவான். பிறகு சங்கு தான். ஓடுவது அடி முட்டாள்தனம். பேசாமல் திறக்கலாம். அது தான் பாதுகாப்பு. செல்வவடிவேல் வீட்டை மறுபடி மேலோட்டமாக பார்த்தான். குப்பை. படு குப்பை. அவசரமாக தன அறைக்குள் போய், கொம்பியூட்டரை ஷட்டவுன் பண்ணிவிட்டு, கட்டிலில் கிடந்த பெண்டரை எடுத்து அணிந்து, காற்சட்டையில் இருந்து சாரத்துக்கு மாறி, கம்பஸ் டிஷர்ட்டை மாட்டிக்கொண்டு மீண்டும் முன் கதவுக்கு வந்தான். மெதுவாக திறந்தான்.

விஸ்வவித்தியாலய கட்டியோ நே?

சிஐடி இன்ஸ்பெக்டர் ஜயரத்ன மொட்டைத்தலையை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே முன்னே வந்தார்.

“ஒவ் சேர் .. மொரட்டுவ யூனிவர்சிட்டி,  காட்டத்,கா … ஹூ … ஹூம் யூ வோண்டு டோக்டு?”

“சிங்கள தன்னத்த .. சிங்கள தெரியாது?”

“டிக்க டிக்க சேர்”

“நம மொகத்த? பேரு … பேரு நேம்?”

“சரவணபவானந்தராஜா செல்வவடிவேல் சேர்”

“செல்வா … பாதர்ஸ் நேம்?”

“தட் இஸ் மை நேம் சேர் .. சரவணபவானந்தராஜா இஸ் மை..”

ஜெயரத்னா சட்டைசெய்யாமல் முன் ஹோலை சுற்றும் முற்றும் பார்த்தார். நேற்று இரவு நடந்த பார்ட்டியும் கூத்தும் ரூம் காட்சியின் எச்சங்கள் அப்படியே வெறியில் கிடந்தன.

ஜிடிவியில் “செக்ஸ் அண்ட் த சிட்டி” போய்க்கொண்டிருந்தது. மேலே சீலிங் பாஃன் மூன்றாம் இலக்கத்தில் பேய்த்தனமாக டர் டர் என்று சுற்றிக்கொண்டிருந்தது. நேர் கீழே சாரம் விரித்து தாள் ஆட்டம். ஆறுபேர் ஆட்டம். “கேள்வி; உதவி; உதவி எண்டா மேலே; நூறு; விட்டாச்சு; பத்து; இருவது; டேய் நீ கேளு;  இருவதுக்கு விட்டாச்சு;” எல்லாமே கேட்டன. கொத்துரொட்டியை இடக்கையால் அள்ளி வாயில் போட்டபடியே சுரேஷ் கலாவறை வீத்தை வீசி அடித்தான்.  ஏழாங்கண், ஏசு, ஆடித்தன் கியூ எல்லாம் விழ, கடைசிக்கை பார்த்து கம்மாஸ் என்று எல்லாத்தாளையும் சடக்கென்று எறிந்தான் மயூரன். எறிந்தவன் பியர் போத்திலை எடுத்து ஒரே மண்டில் குடித்துவிட்டு நங்கென்று நிலத்தில் வைக்க, பியர் நிலம் முழுதும் சிந்திச்சிதறியது. கம்மாஸ் லேட் என்று பிரதீபன் சொல்ல,   ஏ ப்ளொக்கில் இருந்து விளையாட வந்த தயாளனும் ஆரூரனும் இல்லை என்று சண்டை பிடித்துக்கொண்டிருந்தார்கள். ரமா எழுந்து பாத்ரூமுக்கு போனான்.

நேற்றிரவு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிப்பது ஜெயரத்னவுக்கு அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

“நைட் பார்ட்டி த?”

“நோ … யெஸ் சேர் வந்து வெரி ஸ்மோல் பார்ட்டி”

சொல்லிக்கொண்டே செல்வவடிவேலும் தரையை பார்த்தான்.

“லிட்டில் பிட் பியர் அண்ட் கார்ட்ஸ் சேர், தட்ஸ் ஒல் .. அண்ட் சந்தி கடே கொத்துரொட்டி ஒன்லி”

“ஊது பார்ப்பம்”

“ஐ டோன்ட் ட்ரின்க் சேர்”

ஊதிக்காட்டினான். சிகரட் கப்பென்று நாற்றமடித்தது.

“யார் யாரு விளையாடினீங்க?”

“மயூரன், சுரேஷ் … ரமா.. பிரதீபன் .. ரெஜினோல்ட் அண்ட் ஐ .. மீ .. மைசெல்ப் சேர்”

“எல்லோரும் எங்க?”

சொன்னான்.

“ரெஜினோல்ட்… ?”

“ஹீ இஸ் புறம் கிளிநொச்சி சேர் .. யூ நோ பளை … வில்லேஜ்?”

“எங்க போயிட்டான்? பொலிஸ் ரிப்போர்ட் எடு”

கம்பஸ் பையில் இருந்து எடுத்துக்காட்டினான். எட்டாக மடிக்கப்பட்டு ஏற்கனவே துண்டு துண்டாக தொங்கிக்கொண்டிருந்தது. மங்கலாக போட்டோ கொப்பியில் பெயர், ஊர் விவரங்கள் இருந்தன.

“ரெஜினோல்ட் பெயர் இல்ல?”

“என்னட்ட அவனிண்ட ரிப்போர்ட் கொப்பி இல்ல சேர்”

ஜயரத்ன ஏனைய போலீஸ்காரர்களை திரும்பிப்பார்க்க அவர்களும் உள்ளே நுழைந்தார்கள். படுக்கையறைகள், சமையலறை என்று எல்லா இடமும் தேடத்தொடங்கினார்கள். செல்வவடிவேலுக்கு இரண்டு கால்களும் இலேசாக நடுங்க ஆரம்பித்தன.

“சேர் எனி ப்ரோப்ளம்? வீ ஆர் கம்பஸ் ஸ்டுடென்ட்ஸ் சேர் .. பாஃதர் இஸ் எ டீச்சர் .. இங்கிலீஷ்”

“உன்னோட ரூம் எது?”

காட்டினான். நுழையும்போது சிகரட் நாற்றம் மீண்டும் குப்பென்று. மூலையில் புழுதியும் வீபூதியும் படர்ந்த சாமித்தட்டு. குட்டி புத்தர் சிலை ஒன்று நடுவில் இருந்தது. முன்னாலே காய்ந்த அர்ச்சனை இலைகள், சீப்பு, பவுடர் டின் எல்லாமே பரவி கிடந்தன. தட்டுக்கு கீழே ஒரு கயிறு கட்டப்பட்டு அழுக்கு உடுப்புகள், சாரம், பெண்டர் தொங்கின. இழுத்து மூடப்பட்ட யன்னல் கரையோரம் ஒற்றை கட்டில். அதின் நடுவில் மண்ணிறம் மண்டிய ஈரத்துவாய் ஒன்று காயப்போட்டு கிடந்தது. மற்றப்பக்கம் சூட்கேசுகள், இன்னொரு உடுப்பு ராக், பாய், புத்தகங்கள், சிடிக்கள் எல்லாமே இரைந்து கிடந்தன. இந்தப்பக்கம் இருநூறு ரூபாய் மொரட்டுவ சப்பு பலகையில் செய்த மேசையில் டெஸ்க்டொப் கணனி. கீபோர்டில் கைவைக்க் படீர் என்று ஏர்த் கரண்ட் அடித்தது.

“உன் கொம்பியூட்டரா?”

“ஓம் சேர்”

ஜயரத்ன கொம்பியூட்டரை ஒன் பண்ணினார். லாச்சிகளை இழுத்துப்போட்டு சிடிகளை ஒவ்வொன்றாக செக் பண்ணினார். “இளையராஜா ஹிட்ஸ்”, “சிங்கள பைலா”, “சாமி”, “திரிஷா குளியல்” என்று பலவிதமாக பேனாக்களால் கிறுக்கி எழுதப்பட்ட சிடிக்கள். கொப்பி நோட்ஸ்களை படக் படக்கென்று தட்டினார். கொம்பியூட்டர் பாஸ்வேர்ட் கேட்டது.

“பாஸ்வேர்ட் என்ன?”

செல்வவடிவேல் டைப் பண்ண போனான்.

“சொல்லு”

“வந்து …தீபன் வன் டூ  த்ரீ போர்”

“தீபன் .. டபிள் ஈ … பி சேர் .. பி போர் பிஸ்கட்”

ஜெயரத்னா அவனை ஒரு மாதிரியாக திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் கணனித்திரையை பார்த்தார். சிம்ரன் இடுப்பை காட்டிக்கொன்று நின்றாள். வெறுமனே இரண்டு மூன்று போல்டர்களை கிளிக் பண்ணி பார்த்தார். கம்பஸ் படங்கள், வோர்ட் டோக்கியூமன்ட் என்று குப்பையாக கிடந்தது. வீடியோக்களை பிளே பண்ணினால், மிஷன் இம்பொசிபிள், காமசூத்ரா போன்ற படங்கள் வந்தன. முறைத்தபடியே எழுந்து சமையலறைக்குள் நுழைந்தார்.

காஸ் குக்கரின் மேல் இரண்டு சட்டிகள். ஒன்றில் இறைச்சிக்கறி மிச்சம் ஏதுமில்லாமல் பாண் துண்டால் வழிக்கப்பட்டு இருக்கவேண்டும். சோற்றுப்பானை திறந்துபார்த்தால் கப்பென்று நாறியது. டின்களை திருப்பும்போது, மூஞ்சூறு இரண்டு எங்கேயோ ஓடி மறைந்தன. சீனிப்போத்தல் முழுதும் கருப்பெரும்பு மொய்த்திருந்தது.

“வட் இஸ் திஸ்?”

“சொறி சேர் .. வெரி பிசி .. செமிஸ்டர் எக்ஸாம்ஸ் .. தட்ஸ் வை..”

ஜெயரத்ன அப்படியே குசினிக்கும் பாத்ரூமுக்குமிடையில் இருக்கும் குட்டி விறாந்தைக்குள் நுழைந்தார். கட்டிடத்தின் குப்பை போடும் மூடியை திறந்து உள்ளே தலையை உள்ளே விடப்போனவர், அழுகிய கெட்ட நாற்றம் மூக்கில் நேரே அடித்ததால் சடக்கென்று தலையை வெளியே எடுத்து ஓட்டையை மூடினார். பாத்ரூம் கதவை திறந்தார். குப்பென்று நாறியது. கைக்குட்டையை எடுத்து மூக்கை பொத்தியபடியே கேட்டார்.

“சூ போனா தண்ணி ஊத்திறதில்ல?”

“சொறி சேர் … ஐ ஆம் ஜாப்பனே டவுன் .. அதர் கைஸ் நாட் எடியுகேட்டட் சேர் … ”

ஜெயரத்னா மீண்டும் முன்ஹோலுக்குள் திரும்பினார். ஏனைய பொலிசாரும் தேடுதலை முடித்துவிட்டு சிகரட் பத்திக்கொண்டிருந்தனர். ஜெயரத்ன யாருக்கோ கோல் பண்ணி திட்டினார்.

“மேஹிங் மொக்குத்நா நே … அற கொல்லோயிங்..”

சிங்களத்தில் கெட்டவார்த்தையால் திட்டினார்.

“வட் ஹப்பின்ட் சேர்? சம் வன் கிவ் எனி ரோங் இன்போர்மேஷன்?”

ஜெயரத்ன முறைத்துப்பார்த்துக்கொண்டே சொன்னார்.

“ஒல் டுடே கம் டு கல்கிஸை ஸ்டேஷன் ஹரிட? யுவர் ஓனர் ஒல்ஸோ.. யூ ஷுட் கெட் நியூ ரிப்போர்ட்”

“ஓகே சேர் … பெடியள் வந்தோன பொலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கொண்டு வாறன்”

ஜெயரத்ன மீண்டும் ஒருமுறை வீட்டை நோட்டம் விட்டுவிட்டு வெளியேற ஏனைய பொலிஸ்காரர்களும் தொடர்ந்தார்கள். ஓடையால் அவர்கள் சென்று படிக்கட்டுகளில் இறங்கும்மட்டும் காத்திருந்த செல்வவடிவேல், வாசல்கதவை மீண்டும் உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு பாத்ரூமுக்குள் விரைந்தான்.

ஒரு வாளி தண்ணீரை பைப்பில் பிடித்து பவுலை ஊற்றி கழுவிவிட்டு, உடுப்புவாளியில் இருந்த உடுப்புகளை அவசரவசரமாக எடுத்து கீழே போட்டான். அடியில் பொலித்தீன் பையில் ஏதோ சுற்றப்பட்டு இருந்தது. அதை கவனமாக வெளியே எடுத்து துவாயால் மெதுவாக துடைத்தான். பையின் நுனியில் இருந்த கைப்பிடியை ஒரு இளக்கயிற்று துண்டால் கட்டினான். குப்பை போடும் மூடியை திறந்து உள்ளே கையைவிட்டு தேடி ஒரு ஆணியை கண்டுபிடித்து, அந்த பொலித்தீன் பையை நுழைத்து ஆணியில் கொழுவி பலம் பார்த்து, ஓகே என்றதும் தொங்கவிட்டான். மீண்டும் ஒருமுறை பையை இழுத்துப்பார்த்து, விழாது என்பதை உறுதிப்படுத்தி, பானையில் கிடந்த கெட்டுப்போன சோற்றை எடுத்து பையின் மேல் தடவிவிட்டு, தலையை துவாரத்துக்குள் நுழைத்து பார்த்தான். கும்மிருட்டில் பை தெரியவில்லை. திருப்திப்பட்டவனாய் துவாரத்தை மூடிவிட்டான்.

மீண்டும் பாத்ரூமுக்குள் வந்து வாளியை எடுத்து அழக்குத்துணிகளை நிரப்பி சேரஃப்எக்ஸல் இரண்டு கரண்டிகளை போட்டான். பின்னர் கவனமாக தண்ணீர் பைப்பை திறந்து மேலோட்டமாக சலசலம்ப செய்து, இன்னொரு வாளியில் மிகுதி துணிகளை போட்டு, சோப்பு தூள், தண்ணி கலந்து குதப்பும்போது,

படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

 

&&&&&&&&&&&

வியாழமாற்றம் 21-03-2013

$
0
0

 

Lanka-marina_1401367gஈழத்தமிழரும் தமிழக சம்பவங்களும்!

 

தமிழகம் கொதித்துக்கொண்டிருக்கிறது. கலைஞர் வழமை போல இன்னொரு ஸ்டண்ட் அடித்து உள்ளார். இதைப்பற்றி நீங்களும் வியாழமாற்றத்தில் எழுதி, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை காட்டவேண்டும்.


நண்பர் ஒருவரிடம் இருந்து வந்த ஈமெயில் இது. மாணவர் போராட்டம், தமிழக அரசியல் நிலைமை என்றெல்லாம் விரிவாக எழுதலாம் தான். தகுதி இருக்கிறதா? என்று கேட்டு யாரேனும் கன்னத்தை பொத்தி அறைவார்களோ என்ற எண்ணம் வந்தது. கருணாநிதியை கொலைஞர், கிழம் என்றெல்லாம் கீழ்த்தரமாக திட்டுவதையும், 2009 இல் இதை செய்யாமல் இப்போது செய்வதை நாடகம் என்று ஏசுவதையும் பார்க்க கொஞ்சம் சங்கடமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது.  காலம் தாழ்த்திய, தவறான முடிவுகளை எடுத்தவர்களை எல்லாம் இப்படித்தான் திட்டவேண்டும் என்றால் நாங்கள் சேர் பொன் இராமநாதனிடம் இருந்து ஆரம்பித்து, ஜிஜி பொன்னம்பலம், செல்வா, அமிர்தலிங்கம், பிராபகரன், என் அப்பா, உங்கள் அப்பா, நான், நீங்கள் வரைக்கும் வரிசைப்படுத்த வேண்டி இருக்கும். தவறு விட்டவர்களை சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது, facebook இருக்கிறது என்பதற்காக கையில் கிடைத்த கற்களால் அடிக்க ஆரம்பித்தோமானால் நாம் எல்லோருமே மண்டை உடைபட்டு கிடக்க வேண்டிவரும். அத்தனை தவறுகள். தவறுகள் இல்லாமல் எங்கள் போராட்டம் இந்த நிலைக்கு வந்திருக்காது. எங்களுடைய எல்லா தவறுகளுமே கியூவில் நின்றால், கலைஞரது தவறுகள் கல்வியங்காடு சந்தி தாண்டி குச்சொழுங்கைக்குள் போய் நிற்கும். வேண்டாமே. எல்லோரையும் நக்கல் அடித்து நக்கல் அடித்து யாருமே இல்லாத அநாதைகள் ஆகவேண்டாமே. ஆகியிருக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன்.

karunaமாணவர்களின் எழுச்சி, வாசிக்கும்போது, கேட்கும்போது, பார்க்கும்போது கை துறுதுறுக்கிறது. ஏதாவது செய்யவேண்டும் போல. தோள் கொடுக்கவேண்டும் போல. “வாருங்கள் தோழர்களே, ஒன்றாய் சேருங்கள் தோழர்களே, போகுமிடம் வெகு தூரமில்லை, சாவு எமக்கொரு பாரமில்லை” என்று Facebook இல் ஒரு ஸ்டேடஸ் போட்டேன் என்றால் அடுத்த கணம் நான் போராளி. தோழர். காம்ரேட்.  புதுமண தம்பதிகள் படத்துக்கு விழும் லைக்குகளை விட அதிகமாக விழும். ஆனால் மனச்சாட்சி என்ற ஒரு சனியன் அதை செய்யாவிடமாட்டுதாம். எனக்கு அதை செய்ய எந்த தகுதியும் கிடையாது. இங்கே பக்கத்தில், வெறும் எட்டு மணி நேர டிரைவிங்கில் கான்பரா வந்துவிடும். தமிழர்கள் கொஞ்சப்பேர் பார்லிமெண்டுக்கு முன்னாலே போய் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அழைத்தார்கள். நான் போகவில்லை. ஏன் என்றால் பயம். செம பயம். போனால் கொடி பிடிக்கவேண்டும். படம் பிடிப்பார்கள். கோத்தாவுக்கு போகும். இலங்கை போனால் விமானநிலையத்தில் வைத்து என்னை பிடிப்பார்கள். நாலாம் மாடியில் ஜட்டியோடு ஒரு கதிரையில் கட்டிவைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து, சேர் சேர் என்று கெஞ்சி, இல்லாத உண்மைகளை சொல்லி, யோசிக்கவே நடுங்குகிறது.

பயத்தில் தான் அந்த நாடே வேண்டாம் என்று ஓடி வந்தேன். கொஞ்சம் படித்ததால் படகேறவேண்டிய தேவை இருக்கவில்லை. மற்றும்படி அகதி தான். பின்னங்கால் பிடரியில் பட ஒவ்வொரு அடிக்கும் ஓடி ஓடி மெல்பேர்ன் வரைக்கும் வந்திருப்பவன். சுதந்திரம் என்றால் என்ன என்பதை இந்த நாடு கற்றுத்தருகிறது. சுவாசிக்கிறேன். ஆனாலும் திடீரென்று அலுவலகத்துக்கு மேலால் சுப்பர்சொனிக் ஜெட் போகும்போதோ, ரெஸ்கியூ ஹெலிகப்டர்கள் தாழ பறக்கும்போதோ அடிவயிற்றில் மட்டத்தேள் ஊரும். இந்த போலீஸ்காரர் ஹை மேட் என்றாலே ஐஸியை தேடி கை சட்டைப்பையை தடவும். அந்த பயம் இன்னமும் போகவில்லை. அது என் எழுத்திலும் இருக்கிறது. சிட்டிசன் எடுத்தால் சிலவேளை கொஞ்சம் வீரம் வரலாம். அவ்வளவே.

இப்போது சொல்லுங்கள், நான் எந்த மூஞ்சியோடு ஆதரவு தெரிவிக்க? ஆதரவு தெரிவிக்க ஒரு தார்மீக தகுதி வேண்டுமில்லையா? எனக்கு அது இஞ்சி கூட கிடையாது. அரையில் கோவணம் கூட இல்லாமல் இருக்கும் நான் அரசியல் ஸ்டேட்மென்ட் விடக்கூடாது. அனேகமானோர் இங்கே அம்மணம் தான். அவர்களுக்கும் அது தெரியும். ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனக்கு அது முடியாது. குட்டிக்குமுன்னாலே சின்னவயதில் நின்ற குமரன் இந்த கழுதை வயதிலும் மாறவேயில்லை.

இறங்கு கண்ணினன் நான், நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட மீண்டும் ஒரு முறை நின்றேன்

ஆனாலும் சேஃபாக நான் செய்யக்கூடியது சிலது இருக்கிறது. பதின்மூன்று வயது சிறுவன் ஒருவன் படலையை அண்மையில் லைக் பண்ணினான். படலையின் பத்து சதவீத வாசகர்கள் இருபது வயதுக்கு குறைந்தவர்கள். அவர்களுக்கு இது தான் தண்ணீர் என்று குளத்தை கொஞ்சம் சுவாரசியமாக, அலுப்படிக்காமல் காட்டலாம். சினிமாவை தாண்டி வாசிக்கவும் பொழுதுபோக்கவும் சிந்திக்கவும், சுவையான விஷயங்கள் இருக்கென்று சொல்லலாம். அவனுக்கு போரடித்து, பிரவுசரை கிளோஸ் பண்ண முதல் சொல்லவேண்டும். அது தான் சவால். சமாளித்துவிட்டால், அப்புறம் எனக்கு தெரியாத நீச்சலை அவன் தானாகே பழகுவான். முயன்றால் நானும் அவனோடு சேர்ந்து நீச்சல் பழகலாம்.


நவநீதம் பிள்ளை

navi-pillay (1)

இலங்கை அரசின் எத்தனை சுத்துமாத்துகளையும் மனிசி சும்மா சிம்பிளாக புறம்தள்ளும். “உங்களை மாதிரி ஆக்கள் என்ன பண்ணுவாங்கள் எண்டு எனக்கு தெரியாதா?” என்ற தோரணையில் அவருடைய பேச்சுகளும் பதில்களும் இருக்கும். உலகத்தின் மிகச்சிறந்த இராஜதந்திரிகளுக்கு நன்றாக அவித்து தூள் உப்பு போட்டு கொடுக்கப்பட்ட பருப்பு மனிசியிடம் மட்டும் எப்படி வேகாமல் இருக்கிறது என்ற ஆச்சர்யம் ஓரிரு வருடங்களாகவே பிடுங்கித்தின்றது. அவரைப்பற்றி கொஞ்சம் விவரம் சேகரிக்க, மனிசிக்கு முன்னால் எவனும் ரீல் விட முடியாது என்பது புரிந்தது.

1941, தென் ஆபிரிக்க, டேர்பனில் ஒரு ஏழை குடியிருப்பு பகுதியில் பிறந்தவர். தமிழ் வம்சாவளி. அப்பா பஸ் ஓட்டுனர். கூட இருந்த சக தமிழர்கள் செய்த உதவியில் படித்து 24 வயதில் சட்டத்தரணி ஆகிறார். அதே ஆண்டு திருமணம். கணவனும் ஒரு சட்டத்தரணி தான். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஹார்வார்டில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் தென் ஆபிரிக்கர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

DSC_0137-734793ஊரிலே படித்து முடித்தபின், வெள்ளையராக இல்லாததால் எந்த சட்ட நிறுவனங்களும் இவருக்கு வேலை கொடுக்கவில்லை. இவரே சொந்தமாக ஒரு சட்டநிறுவனம் ஆரம்பித்தார்.  நீதிபதிகளின் சேம்பருக்கு கூட வெள்ளையர் அல்லாதோருக்கு அனுமதி இல்லை. அப்படிப்பட்ட அடக்குமுறை காலத்தில் 28 வருடங்கள் சட்டத்தரணியாக, அடக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்தவர். அரசியல் கைதிகளின் மோசமான நிலைமையை வெளி உலகத்துக்கு கொண்டுவந்தவர்.  நெல்சன் மண்டேலா, மற்றும் ஏனைய அரசியல் கைதிகளுக்கான சட்ட உரிமைகளுக்காக போராடி பலவற்றை வென்று கொடுத்தவர். வெள்ளையர் ஆதிக்கம் முடிவுக்கு வந்தபின்னர்,  நெல்சன் மண்டேலா செய்த வேலை, நவநீதம்பிள்ளையை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்தது தான்.

பின்னர் ஆரம்பித்தது ஆட்டம். ரூவாண்டாவில் நடைபற்ற குற்றங்களை விசாரிக்கும் சர்வேதேச விசாரணைக்குழுவில் எட்டு வருடங்கள் வேலை பார்த்தார். யுத்தத்தின் போது செய்யப்படும் பாலியல் வல்லுறவுகள், பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல, அவையும் இன ஒழிப்பின் ஒரு கூறு தான் என்று ஆணித்தரமாக வாதிட்டு பல கொடியவர்களுக்கு தண்டனை வழங்கினார்.

navi-pillayபின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைவர் பதவி.  அப்புறம் 2008 முதல் ஐநா மனித உரிமை ஆணைக்குழு தலைவர். இந்த பதவியில் இருந்துகொண்டு தான் இலங்கையை ஒருவழிக்கு கொண்டுவர பிரயத்தனம் செய்கிறார்.  இந்த பதவி 2014 இல் முடிகிறது என்பது கொஞ்சம் கவலை அளிக்கும் விஷயம். அவருக்கு பிறகு வருபவர் மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பார். அதுவும் கமலேஷ் ஷர்மா, யசூசி அகாஷி வகையறாக்கள் வந்தால் சுத்தம்.

நவநீதம் பிள்ளை ஒருமுறை சொன்ன திருவாசகம் இது.

“From time immemorial, rape has been regarded as spoils of war. Now it will be considered a war crime. We want to send out a strong signal that rape is no longer a trophy of war”

“ஆதி காலத்தில் பாலியல் வல்லுறவு என்பது போரின் கெடுதல்களாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இனிமேல் அது ஒரு போர் குற்றமாகவே பார்க்கப்படும்.  பாலியல் வல்லுறவு என்பது போரில் அடைகின்ற வெற்றி கேடயம் கிடையாது, எல்லோருக்கும் இதை அழுத்தமாக அறிவுறுத்துகிறோம்”

இலங்கை இந்திய அரசுகள் நவநீதம்பிள்ளையை கண்டு நடுங்குவதற்கு காரணம் இருக்கிறது.


வேதவியாசர் எழுதிய திரில்லர் கதை!

“கதவு ஓட்டைக்கால செல்வா பார்க்கேக்க வெளிய நாலு பொலிஸ்காரங்கள் நிக்கிறாங்கள்”

இந்த முதல் வரியை கொண்டு எப்படி ஒரு கதை எழுதிமுடிப்பாய்? என்று கேதாவிடம் கேட்டேன். இடம் கேதா-வீணா வீடு. “விளங்கின மாதிரி தான்” என்றாள் வீணா. கேதா திடீரென்று கிடைத்த பட்டிங் சான்ஸை மிஸ் பண்ணாத சேகர் தவான் போல அடித்தாட தொடங்கினான். அவன் சொன்ன கதை நகைச்சுவையாக இருந்தது. முடிவும் நகைச்சுவையாக முடிந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

“இப்ப இதையே திரில்லர் ஆக்க வேண்டும் என்றால் என்ன செய்வாய்?”

பல திருப்பங்கள் சொன்னார்கள். எல்லாம் முடிந்து பொலிஸ் போனபிறகு, செல்வா கீழே பாண் வாங்க போகும்போது அவனை வெள்ளை வான் கடத்துகிறது என்ற வீணாவின் பதில் பிடித்திருந்தது. சிறுகதை வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்றேன். அப்படி என்றால் “பொலிஸிடம் மாட்டுப்பட போகிறேன் என்று தெரிந்த கணம், கக்கூஸ் பைப்பால் தப்பி ஓடுகிறான், பொலிஸ் சுடுகிறது என்று முடிக்கலாம் அண்ணே” என்றான் கேதா.  ஆக மூவருமே ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தோம். இதிலே சந்தேகநபர்/குற்றவாளி/போராளி யார் என்றால் அவன் செல்வா தான். அதே சமயம் செல்வா கதையின் முக்கிய பாத்திரமும் கூட. ஆக துப்பறியும் வேலையை பொலிஸ்காரரிடம் விடமுடியாது. செல்வா தான் குற்றவாளி என்று முதலிலேயே சொல்லிவிடவும் முடியாது. அப்படி என்றால் யார் அதை கண்டுபிடிப்பது? மூவருமே ஏகநேரத்தில் சொன்ன பதில் “வாசகன்”.

z_p-24-Facelift-02_thumb[1]

“வாசகன்” துப்பறிகிறான் என்றால் அவனுக்கு கதை பூரா துப்பு கொடுக்கவேண்டும்.  வாசிக்கும்போது அவன் அதை துலக்கிக்கொண்டே வர, முடிவில் “அட செல்வா தான் சந்தேக நபர்” என்று ஊர்ஜிதப்படுத்திய பிறகு செல்வா வாளியில் இருக்கும் பொருளை எடுத்து குப்பை ஓட்டைக்குள் தொங்கப்போடுகிறான்.  இங்கே பொலிஸ் செல்வாவை கோட்டை விடுகிறது. வாசகன் கண்டுபிடிக்கிறான். கதையில் துர்நாற்றம் ஒரு deterrent ஆக, கவனக்கலைப்பானாக பயன்படும். முடிவில் அந்த வாளி, குப்பை துவாரம். அவன் ஏன் குப்பை துவாரத்தில் முதலிலேயே தொங்கவிடாமல் வாளிக்குள் அதை ஒளித்து வைக்கவேண்டும்? இந்த கேள்விகளின் பதிலை வாசகனிடமே விட்டுவிடுவது. இது தான் ஸ்கெட்ச். டிசைன்.

இனி துப்புக்களை கொடுக்கவென்றே சம்பவங்களை கதையில் அமைக்கவேண்டும். “ஒண்டுக்கடிக்கிறான், தண்ணீர் ஊற்றவில்லை ஏன்?”. “உடனே திறக்காமல், தப்பி ஓடுவதை பற்றி ஏன் ஒரு கம்பஸ் மாணவன் சிந்திக்கவேண்டும்?”. “கம்பியூட்டரை ஏன் ஷட் டவுன் பண்ணவேண்டும்?”, “அவன் பெயர் செல்வா, ஆனால் கொம்பியூட்டரில் பாவித்த பாஸ்வேர்ட் வேறு, ஏன்?”, இவை எல்லாம் குட்டி குட்டி துப்புகள்.

முக்கியமான தடயம் அந்த கார்ட்ஸ் ஆட்டம் சொல்லப்பட்ட விதம். முன்னை நாள் நடந்த காட்சியை கதை விவரிக்கிறது. அந்த காட்சியில், விளையாடிய ஆறுபேரில், செல்வாவும், ரெஜினொல்டும் இல்லை. ஆனால் செல்வா தானும் விளையாடியதாக பொலீஸிடம் சொல்லுகிறான். பொய். அதை சொல்லும்போது கூட கீழே நிலத்தை பார்த்து என்ன நடந்திருக்கலாம்? என்று ஊகித்தபடி தான் சொல்லுகிறான். அது இன்னொரு துப்பு. குடிப்பழக்கம் இல்லாத செல்வாவுக்கு புகைப்பழக்கம் இருக்க சான்ஸ் இல்லை. அது இன்னொரு பொய். இப்படி கதை முழுக்க வாசகன் கண்டுபிடிக்கும் வண்ணம் பொய்களை திரும்ப திரும்ப சொல்லுகிறான். சிங்களம் தெரியாது என்பவனுக்கு போலீஸ் சிங்களத்தில் யாரோடோ பேசுவது புரிகிறது.

30-FC-Pic1இத்தனை தடயங்களும் செல்வாவிடம் சம்திங் ரோங் என்று சந்தேகப்பட போதுமானவை. வாசகன் நிச்சயம் எக்சைட் ஆவான் என்று நினைத்தேன். என் ராசி! நடக்கவில்லை! பொதுவாக வாசித்தவர்கள் அதனை ஒரு கொழும்பு தமிழ் இளைஞனின் வாழ்க்கை என்ற அடிப்படையிலேயே கருத்து சொன்னார்கள். ஏன் என்று யோசித்தேன். புரியவில்லை. லத்தீன் அமெரிக்க வாசகர்கள், கேரளா என்றால் இந்நேரம் இந்த கதையை கொண்டாடியிருப்பார்கள் என்று சும்மா டகால்டி விடமுடியாது. படலை வாசகர்கள் என்னை மண்டை காயவைப்பவர்கள். ஒருமுறை “கந்தசாமியும் கலக்ஸியும்”நாவலில் டார்க் மாட்டர் பற்றி எழுதும்போது ஒரு சின்ன சறுக்கல். கிழித்து எடுத்துவிட்டார்கள். ஆக வாசகனில் தப்பு இல்லை. அது என் கதையில் தான். ஏன் என்று நேற்று முழுக்க மண்டை காய்ந்தது. கஜன், “கார்ட்ஸ் விளையாட்டை தான் பகிடியாக தான் எழுதியிருக்கிறாய் எண்டு நினைச்சன்” என்றான். டொக் டொக் டொக்கதையை ஒரே மூச்சில் அட்சரம் பிசகாமல் உள்வாங்கி முதுகில் தட்டிக்கொடுத்த வாலிபன் இந்த கதையில் ஏனோ அரசியல் தேடினான். எங்கேயோ ஒரு பெரிய கோட்டை விட்டுவிட்டேன் என்று புரிந்தது. ஆனால் எங்கே?

“சட்டென நனைந்தது இரத்தம்”சிறுகதையிலும் இம்மாதிரி நிறைய முயற்சிகள் இருக்கும். எவற்றையும் தவறவிடாமல் வீணா அந்த கதையை உடைத்து விளக்கியபோது அப்பாடா என்ற நிம்மதி வந்தது. ஸோ இம்முறையும் வீணா தான் ஆள் என்று நினைத்து கேட்டேன். “அண்ணே சொதப்பீடீங்க” என்ற முதல் வரியுடன் ஆரம்பித்த சாட்டிங் அலுவலகம் முடியும் வரை தொடர்ந்தது. அந்த சாரம்சம் இன்னொருமுறை கதை எழுதும் பொது உதவலாம்.

முதல் தவறு, வாசகன் துப்பறிவாளன் என்றால், அதற்கு அவனை கதை தயார்படுத்தவில்லை. இது துப்பறியும் கதை என்று தெரியாத வரைக்கும் அவன் ஏன் தடயங்களை தேடப்போகிறான்? என்பது வீணாவின் வாதம். சரி முதல் தடவை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் முடிவு இப்படியான பின்னர், மீண்டும் வாசிக்கும்போது புலப்படும் இல்லையா என்றேன். இரண்டாம் முறை வாசிக்கச்செய்யும் அளவுக்கு முடிவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. “It was a surprising end but not an exciting one” என்றாள். கிளீன் போல்ட்.

இரண்டாவது தவறு, கதை சொல்லும்பாணியில்.  கதையில் செல்வாவின் எண்ண ஓட்டங்கள் விவரிக்கப்படுகின்றன. அப்படியானால் அவனை வாசகன் சந்தேகிக்கமாட்டான். சொல்லும் வார்த்தையில் பொய் இருக்கலாம். ஆனால் எண்ணங்கள் பொய் சொல்லாது, சிலதை செலக்டிவ்வாக மறைத்து சிலதை மட்டும் நினைக்காது இல்லையா? ஆக வாசிப்பவன் செல்வாவை சந்தேகிக்க சான்ஸ் குறைவு என்று வீணா சொன்னதை கேட்டபோது, என் மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்து விடவேண்டும் போல இருந்தது. அடச்சீ. இதை தானே தலைவர் படிச்சு படிச்சு சொல்லியிருக்கிறார். கணையாழியின் கடைசிப்பக்கங்களில் வந்த விஷயம் இது. 1972 இல் எழுதியிருக்கிறார்.

135192726_12a198aef5_o“மனதின் எண்ணங்களை விவரமாக தருவதில் தவறில்லை, ஆனால் இந்த “அவன்”, “இவன்” கதைகளில் அது எனக்கு பிடிப்பதில்லை. “இவன் மனதின் ஆழத்தில் என்னவோ பிசைந்தது” என்றால் உனக்கு எப்படி அய்யா தெரியும்? என்று கேட்கத்தோன்றுகிறது. “அவனுக்கு எப்பொழுதுமே விரை கொஞ்சம் பெரிசு” என்று வாசிக்கையில் “அவ்வளவு அன்யோன்யம் எப்படி ஏற்பட்டது?” என்று கேட்கத் தோன்றுகிறது”

அடிக்கடி எப்போது ஜேகே புத்தகம் வெளியிடப்போறீங்கள் என்று நண்பர்கள் கேட்பார்கள். அவர்களுக்கு என் பதில்.

அதற்கு ஏதாவது எழுத தெரியவேண்டுமே Sad smile


தனிமை தனிமையோ! கொடுமை கொடுமையோ!

“எல்லாமே முடிஞ்சுது, இட்ஸ் ஓவர்” என்று திடீரென்று அவன் வந்து சொன்னபோது எப்படி இருந்தது தெரியுமா? உனக்கெங்கே அது புரியப்போகிறது. சொன்னவன் திரும்பியேனும் பார்த்தானா? கேட்டால் இட்ஸ் ஓவராம்.  அப்படி முடிக்கமுடியுமா என்ன? கொஞ்சம் காலம் தான். இதுவும் கடந்துபோகும். எனக்கு இது புதிதல்லவே. ஆனால் இந்த நேரத்தை நிச்சயம் நிதானமாக நான் கடக்க விரும்புகிறேன். அவன் சொல்லிய வார்த்தைகளுக்குள் மறைந்திருந்த  சொல்லாத வார்த்தைகளை தேட எனக்கு அவகாசம் வேண்டும். அந்த வார்த்தைகள் எனக்கு பயன்படும். எதிர்காலத்தில், வயது ஏற ஏற, இன்னொரு தவறு நிகழாமல் இருக்க .. அது எனக்கு தேவை.

love_failure_how_much_percent_of_girls_do_like_this

இப்ப நான் என்ன செய்வது? உன்னை விட்டால் எனக்கு யாரு தான் கதி? உன்னிடம் வந்து சேருவோம் என்றால் இந்த சனியன் பிடித்த மலை இன்னமும் முன்னால் நிற்கிறது. தாண்டவேண்டும். ஏறி கடக்கவேண்டும். மொத்த உலகமுமே என் தோளில் ஏறி மிதித்தால் நான் எப்படி ஏறுவேன் சொல்லு?  ஏற ஏற குளிர் வேறு ஏறுகிறது. நல்ல காலம், முகிழ்களுக்கிடையில் தெரிகின்ற சூரிய ஒளிகள், அது தரும் வெப்பம் . இந்த குளிருக்கு இதமாக, என்னை கணகணப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் எனக்கு அந்த சூரியன் வேண்டாம். இதோ இந்த நிமிடம் கிடைக்கும் இந்த காதல் போதும். சூரியன் தூர இருந்து ஒளி தர தான் லாயக்கு. அட என்று அருகில் போனால் சுட்டு பொசுக்கி விடும். வேண்டாம். எனக்கு நீ, பக்கத்தே நிலவு, அது போதும். எரிக்காது. இதமான இரவிலும் உன் மடி வைத்து தலை சாய்த்தால் எறிக்கவும் செய்யும். வேறொன்றும் வேண்டாமே.

இந்த வலி, காயம் எல்லாமே போதும் போதும் என்னுமளவுக்கு பார்த்துவிட்டேன். இனி முடியாது. ஒருத்தி எத்தனை ஏமாற்றங்களை தான் தாங்கிக்கொள்வாள்? நான் என்ன பெண் இல்லையா? இதெல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றாலும் அது முடியுதில்லை. ஒரு பக்கம் தனிமை துரத்துகிறது. அதிலிருந்து தப்ப காதலை தானே தேடவேண்டி இருக்கிறது. இவ்வளவு தூரம் ஏறியும் ஆயிற்று. இனி இறங்கவும் முடியாது. இறங்கினாலும் அந்த தனிமை. வேண்டாம்.

Love-Girl

நீ என்றதும் ஏன் இத்தனை குறுகுறுப்பு? ஒன்றுமில்லை, என்ன தான் இந்த காதல்? அது தெரியவேண்டும். அதை நீ மட்டுமே எனக்கு காட்டமுடியுமடா. என்ன தான் இந்த காதல்? உணரவேண்டும். அதையும் உன்னால் தான் எனக்கு உணர்த்த முடியும்.  உள்ளுணர்வு சொல்லுகிறது. அதை நம்பலாம். உள்ளுணர்வு ஒன்றும் ஆகாயத்தில் இருந்து வருவதில்லையே.  அனுபவங்களில் இருந்து தானே வருகிறது. என் அனுபவங்களை விட வேறு சிறந்த பாடங்கள் எங்கே கிடைக்கப்போகிறது? உன்னை தான் இனி நம்பியிருக்கிறேன். சிக்கென பிடித்தேன் தேவனே. எழுந்தருள ஏன் இந்த தயக்கம்? பார் என்னை. மலை உச்சியில், தன்னந்தனிச்சியாக, ஒளிந்து கொள்ள கூட இங்கே இடமில்லை. என்னது அது. எங்கிருந்தோ வந்து எட்டும் தூரத்தில் திடீரென்று வந்து நிற்கிறாயே. இது நீதானா? என்ன இது கண்ணாமூச்சி ஆட்டம். இது இது தான் அந்த புள்ளியா? கடையில் கண்டுவிட்டேனா. என் காதல் என்னை கண்டுவிட்டதா? இது தான் அதுவா?

சொல்லு சொல்லு சொல்லு…இப்போது பரவுகிறதே? இந்த உணர்வா? நான் பேசுகிறேனே இதுவா? மறைக்காதே சொல்லு.  எனக்கு புரிகிறது. புல்லரிக்கிறது பாரு. காதல். பார்த்தியா. நான் தான் ஏறவேயில்லையே. எல்லோரும் முடியாது என்று ஏளனம் செய்தார்களே. மலையை கடக்கமாட்டேன் என்று நினைத்தவர்களை எல்லாம் தவிடு பொடியாக்க, மலையையே குன்றாக்கினாயே என் தேவ? இன்னும் ஏன் தயங்குகிறாய். வாயேன் பேசுவோம். காதலை, திகட்ட திகட்ட பேசுவோம்.  இந்த காதலை சொல்லித்தா. இதுவரை நான் செய்தது எல்லாமே காதலே இல்லை என்று சொல்லு. மேலும் இது தான் காதல் என்று சொல்லு. சொல்லு. சொல்லு!

 

80களில் வெளியான இந்த பாடலை மீண்டும் வடிவமைத்திருக்கிறார்கள். மரியா அதற்கு உயிரும் உள்ளமும் கண்ணீரும் சேர்த்திருக்கிறார். முதன்முதலில் அவர் American Idol இல் நான்கு வருடங்களுக்கு முதல் பாடியபோது என்னை வசப்படுத்திய பாட்டு. அன்றே டவுன் லோட் பண்ணி கேட்டு கேட்டு மீண்டும் கேட்டு, ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதுசாக ஒரு cry இருக்கும் பாட்டு இது. டிவைன்.

Angels-Cry-Video-mariah-carey-11056793-500-342

மேஜர் நோட்டில் ஆரம்பிக்கிற பியானோ, திடீரென்று மைனருக்கு போவது, காதல் உணர்வு வந்த பெண் திடீரென்று தன் பழசை நினைத்து அச்சமுறுவதை காட்ட.  அது முடிய மெல்லிய சாரீரத்தில் “I want to know what love is” என்று மரியா கிரே பாடி கொஞ்சம் கொஞ்சமாக மலை ஏறும் உணர்வு இருக்கிறதே. அதை தான் தமிழில் எழுத முயன்று தோற்றிருக்கிறேன். இசையும் வரியும் அதை நிஜமான உணர்வோடு பாடும் குரலையும் வெறும் வாரித்தைகளுக்குள் வடிக்கும் வல்லமை என் எழுத்துக்கு இன்னமும் படியவில்லை. ஆனாலும் ஒரு முயற்சி தான்.


பத்த வச்சிட்டியே பரட்டை!

மச்சான் இளையராஜா ப்ரோகிராம் மெல்பேர்னில நடக்குது. டிக்கட் வாங்கிட்டியா?
இல்லை மச்சி, அது ஷுவரா நடக்குமோ தெரியாது. எதுக்கும் முதல்நாள் போய் வாங்குவம்.
direcrors193313_206ஏன் என்ன ப்ரோப்ளம்?
இல்லடா, போன வருஷம் நவம்பர் மாசம் என்று கனடாவில வைக்கவிடாமா தடுத்தாங்களே
அதுக்கென்னடா .. இது மே மாசம் தானே.
அதாண்டா யோசினையா இருக்கு. எவனாவது மே மாசம், சோகமான மாதம், நிகழ்ச்சி வைக்க கூடாது என்று Facebook ஸ்டேடஸ் போட்டு அதை ஒரு பத்து பேர் ஷேர் பண்ணினா கதை கிழிஞ்சுது
டேய் தெரியாம தான் கேட்கிறன்.  உண்ட நாலு வயசு பெடியனுக்கு பேர்த்டே பெப்ருவரி தானே வந்தது.
ஓம் மச்சி அதுக்கென்ன?
நல்ல காலம் அந்த டைம் ஒருத்தரும் ஸ்டேடஸ் போடேல்ல .. போட்டிருந்தா… சரி விடு!

&&&&&&&&&&&&&

வியாழமாற்றம் : 28-03-2013 - யாழ்தேவி

$
0
0

 

downloadஉரிஞ்சான்குண்டிச் சிறுவர்
ஓடிவந்து கையசைக்க வேகமெடுக்கும்.
இருமருங்கும் சணல்விளைந்த வயலூடு
மஞ்சள் பூவிடை மறைந்தும் எழுந்தும்
அது வரும்.
அறுவடை முடித்த வயலூடு போகும்.
வெறும் இரும்புக்கூடெனினும்
எத்தனை நாள் பார்த்தாலும் அலுக்காது.
தொட்டுப்பார்த்தால் சுகமிருக்காது
எனினும்
புகைவண்டிமீது எமக்கு பகையில்லை.

இன்றேன்
தண்டவாளங்களிருந்த தடயங்களற்று
விதவைக்கோலத்தில் புகையிரதப்பாதை?
சிலிப்பர் கட்டைக்கும்
சிக்னல்
மரத்துக்கும்
என்ன நடந்தது?
எவர் பிடுங்கிச்சென்றார்?
இரும்புப் பாதையேன்
இல்லாமற் போச்சு?
ஸ்ரேசன் கட்டிடங்கள் கூரையற்று
குட்டிச்சுவரானதேன்?
சொந்தமற்றுப்போன தேசத்துடனான
உறவைத்துண்டித்தது ஓரினம்.
36225512இனத்தின் முகத்தைச் சிதைத்தவரின்
இரும்புப்பாதை இல்லாமற்போனது.
நூலறுந்த பட்டத்துக்கு வாலெதற்கு?
பகையற்றிருந்த வரை
ஊர்களை புகைவண்டி இணைத்தது.
உறவற்றுப் போனதும்
தொடர்பற்றுப் போனது.

தண்டவாளத்துக்கு என்ன தெரியும்?
அது பேசாமற்கிடந்து
துருப்பிடித்துப் போனதால்
பிடுங்கி எடுத்துக்கொண்டோம்.

ஒருகட்டத்தில் அழகாயிருந்தன தான் எல்லாம்.
இந்துசமுத்திர மாங்கனியை
“அந்த” அணில்கள்தான் அரித்தன.
நாங்கள் எமக்குரிய பாதியைப் பவுத்திரப்படுத்த
காம்பாய்க் கிடந்த இரும்புக்கம்பிகள் கழன்றன.
சிலிப்பர் கட்டைக்கும்
சிக்னல் மரத்துக்கும்
நடந்தது இதுதான்.

-- புதுவை இரத்தினதுரை, வெளிச்சம் பங்குனி, 1996ம் ஆண்டு இதழ். “பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும்” என்ற தொகுப்பிலிருந்து.

இன்றைக்கு மீண்டும் யாழ்தேவி யாழ்ப்பாணம் வரை ஓடினால், இந்த கவிதை சொல்லும் ஆதாரமான செய்தியின் வீரியம் என்னவாக இருக்கும்? சொல்லுங்களேன்.


 

ஆச்சி பயணம் போகிறாள்!

ஆச்சிக்கு அறுபத்தொன்பது வயசு. யாழ்ப்பாணத்திலே பிறந்து வெளியுலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டாள்.  பஸ்ஸை வசு என்று சொல்லும் தலைமுறை அவளது. “அந்த காலத்தில பத்து சதத்தோட வெளிக்கிட்டால் குடும்பத்துக்கு தேவையான எல்லாம் வாங்கலாம், இப்ப பத்து ரூபாய் கொண்டு போனாலும் காணாது” என்று 1969ம் ஆண்டு விலைவாசியை நொந்துகொள்கிறாள். சுருட்டு குடிப்பாள். முற்போக்குவாதியும் கூட. அவ்வப்போது அரசியல் கடிகள் விடுவாள். முசுப்பாத்தியான ஆச்சி. அவளின் வாழ்நாள் ஆசை இன்றைக்கு தான் நிறைவேறப்போகிறது. ஆச்சியின் கடைக்குட்டி சிவராசா ஒருவழியாக அவளை கதிர்காமம் கூட்டிப்போக சம்மதித்துவிட, முதன்முதலாக கோச்சி ஏறி,

ஆச்சி பயணம் போகிறாள்.

3.4பயணத்துக்கு இரண்டு கதாபாத்திரங்கள் போதாதே. அதுவும் ஒரு இளம்பெண், காதல் இருந்தால் தானே பயணம் குளிச்சியாக இருக்கும். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வி இவர்களோடு இணைகிறாள். சிவராசாவும் பேராதனையில் படித்தவன் தான். செல்விக்கு சிவராசன் மச்சான் முறை. திருமணம் முற்றாகியிருக்கிறது. இவ்வளவும் போதும் கதிர்காமம் மட்டும் கதை நகர்த்த. கோண்டாவில் “றெயில் டேசனில்” இருந்து கதை நகர்கிறது. ஆச்சியின் அலப்பறைக்களோடு.

“ஈழத்து நகைச்சுவை வரலாற்றில் இந்த நூல் ஒரு திருப்புமுனை” என்று இதை எழுதிய செங்கை ஆழியான் சொல்லிக்கொள்கிறார். அப்படியா? நகைச்சுவைகள் எல்லாம் லொள்ளுசபா வகை கடி ஜோக்குகள். சாம்பிளுக்கு இரண்டு.

“மாத்தையா மொனவத பொண்ட”

“போண்டாவாமே, சுசியம் இருந்தா தரச்சொல்லு”

இது யாழ்தேவி ரயில் கண்டீன் வெய்ட்டருக்கு ஆச்சி சொல்லும் பதில். “எப்பா” என்று சிங்களத்தில் சொன்னால் “அப்பாவோ.. எங்கை பிள்ளை” என்பாள். இப்படி சிங்கள வசனங்களுக்கு நாவல் பூரா ஆச்சி கவுண்டர் குடுத்துக்கொண்டே இருக்கும். சிவராசா செல்வி இருவரும் ஆச்சி கவனிக்காத போது செய்யும் சில்மிஷங்களும் குறைவில்லை. நுள்ளுவார்கள். கிள்ளுவார்கள். ஆச்சி அரவம் கேட்டு என்னெவென்று கேட்டால் சமாளிப்பார்கள். குகைக்குள்ளால் ரயில் போய் வெளிவரும் போது செல்வி அவனைப்பார்த்து “காவாலி” என்பாள். இப்படி பல நடக்கும். சண்டையும் பிடிப்பார்கள். சிவராசா தான் ஒரு “விண்ணன்” என்று காட்டிக்கொள்வான். செல்வி எது சொன்னாலும் மட்டந்தட்டுவான். அவள் ஆங்கிலேயரை உயர்வாக பேசினால் சிவராசா இல்லை என்று ரஷ்யாவையும் சீனாவையும் உயர்வாக பேசுவான். இப்படி ஒரு காதலர் ஜோடி அனேகமான செங்கை ஆழியான் கதைகளில் வந்தே தீரும். வருகிறது.

பார்க்கபோனால் இது ஒரு பயண நாவல். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு போய்,  பல்கலைக்கழக சூழல், பேராதனை பூங்கா, தலதா மாளிகை காட்டிவிட்டு, அப்புறம் பஸ் பயணத்தில் கதிர்காமம் போகும் நாவல். போகிற போக்கில் அந்த காலத்து வாழ்க்கை, கொஞ்சம் அரசியல் இவை தான் இந்த நாவல். இதில் தேவையில்லாமல் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. செங்கை ஆழியானிடம் எப்போதுமே இயல்பான நகைச்சுவை இருக்கும். அவரின் வயோதிப பாத்திரங்கள் மிகவும் ஆளுமை மிக்கதாக இருக்கும். இதிலே மிஸ்ஸிங். இலங்கை வானொலி நாடகங்கள், தெனாலி கமல் ரக நகைச்சுவை இது. நாடகத்துக்கு ஒகே. நவீனத்துக்கு ஒட்டவில்லை.  மணிரத்தினத்துக்கு ஒரு கடல் போல செங்கை ஆழியானுக்கு “ஆச்சி பயணம் போகிறாள்”.

இதற்கு அணிந்துரை எழுதிய செம்பியன்செல்வன், “உயர்ந்த நகைச்சுவையானது மனித குலத்தின் ஆத்ம பரிசீலனையாகும், அதை இந்த நாவல் செய்கிறது” என்கிறார். சிரிப்பு வந்தது. அறுபதுகளிலேயே இப்படி நகைச்சுவை எழுதியிருக்கிறார்களே. அப்போது இப்படி எல்லாம் எழுதவும் முடியுமா? என்று யாராவது கேட்டால், பதிலுக்கு தலைவரின் தலைவரை துணைக்கு அழைக்கவேண்டும்.  “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” என்று ஒரு சிறுகதை. சில பகுதிகளை சும்மா சாம்பிளுக்கு தருகிறேன்.

கடவுள் கந்தசாமிப்பிள்ளையின் வீட்டுக்கு வருகிறார். வரம் கொடுக்க தயாராகும் கடவுளிடம் கந்தசாமிப்பிள்ளை சொல்லுகிறார்.“ஒய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்ட செல்லாது. நீர் வரத்தை கொடுத்து விட்டு உம்பாட்டுக்கு போவீர்; இன்னொரு தெய்வம் வரும். தலையை கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக்கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தை தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல!”

கடவுள் கந்தசாமிப்பிள்ளையின் குழந்தைக்கு லட்டு வாங்கிக்கொடுக்கிறார். குழந்தை அதை எடுத்து சாப்பிட்டவாறே கடவுளுக்கும் நீட்டுகிறது.“இதைத்தின்னு பாரு, இனிச்சுக்கெடக்கு” என்கிறது. வாங்கிச்சாப்பிட்ட கடவுள், குழந்தையின் மனதை குளிர்விக்கவெண்ணி“பாப்பா உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு”என்பார். குழந்தை முழு லட்டை கையில் வைத்துவாறே யோசித்துவிட்டு சொல்லும்.

“தாத்தா முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே, உதுத்தா உனக்கென்னு சொல்லுதீயே, அப்பா எனக்கு இல்லையா?”

புதுமைப்பித்தன் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” எழுதியது 1943ம் ஆண்டு!


 

ஸ்டேசன் மாஸ்டரின் தாலி!

கவனித்திருப்பீர்கள். ரெயில்வே ஸ்டேஷனில் ரெயில் நிற்கும்போது டிரைவர் ஒரு வளையத்தை ஸ்டேஷன் மாஸ்டரிடம் வீசி எறிவார். பதிலுக்கு இவர் டிரைவரிடம் இன்னொரு வளையத்தை நீட்டுவார். இன்றைக்கும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்த நடைமுறை இருப்பதை காணலாம். சிரித்திரன் சுந்தர் அதை ஸ்டேஷன் மாஸ்டரின் தாலி என்று நக்கலடித்து கார்ட்டூன் வரைந்திருப்பார்.

சயந்தன் சிலவாரங்களுக்கு முன்னர் ஆங்கிலத்தில் எழுதினபோதுதான், அட இதை இவ்வளவு காலமும் எழுதாமல் விட்டோமோ என்று வருத்தம் வந்தது. அந்த ஸ்டேஷன் மாஸ்டரின் தாலிக்கு பின்னால் ஒரு கொம்பியூட்டர் அல்கோரிதமே இருக்கிறது. அது ஒருவித சாவி. அது கையில் கிடைக்காமல் ரயில் வண்டி ஒரு அடி கூட முன்னே நகரமுடியாது. எப்படி என்று பார்ப்போம். இடுப்புப்பட்டியை இறுக்கிக்கொள்ள்ளுங்கள்.

ஆரம்பத்தில் ரயில் பாதைகள் ஒருவழிப்பாதைகளாகவே இருந்தன. அதாவது இரண்டு நிலையங்களுக்கிடையில் ஒரே ஒரு பாதை தான். எல்லா ரயில்களும் அதில் தான் பயணிக்கவேண்டும். டைமிங் மிஸ்ஸானால் நேருக்கு நேரு இரண்டு வண்டிகளும் நடுவழியில் மோதிக்கொள்ளும் ஆபத்து இருக்கின்றது. மோதலை தவிர்க்க தான் இந்த தாலி. கலியாணம் போல.

Capture

உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தில் பிரபலமான காங்கேசன்துறை, சுன்னாகம், கோண்டாவில் கொக்குவில் என்ற நான்கு ரயில் நிலையங்களை எடுத்துக்கொள்வோம். யாழ்தேவி ரயில் காங்கேசன்துறையில் இருந்து புறப்படுகிறது. டிரைவர் கையில் சிவப்பு தாலி இருக்கும். சுன்னாகம் நிலையத்தில் சிவப்பு தாலியை கொடுத்துவிட்டு பச்சைத்தாலியை ஸ்டேஷன் மாஸ்டரிடம் டிரைவர் வாங்கிக்கொள்வார். இப்போது சுன்னாகத்திலிருந்து கோண்டாவிலுக்கு வண்டி பயணிக்கும், டிரைவர் கையில் பச்சைத்தாலி.

அதே சமயம் கொக்குவிலில் இருந்து உத்தரதேவி மெதுவாக புறப்படுகிறது, அந்த டிரைவரின் கையில் இப்போது நீலதாலி இருக்கும். உத்தரதேவி ஒரு ஸ்லோ கோச்சி. ராகுல் டிராவிட் ரகம். பாய் போட்டு படுத்தபடியே வரும். அது கோண்டாவிலை அடையும் முன்னமேயே யாழ்தேவி கோண்டாவிலை அடைந்துவிடும். ஆனால் கோண்டாவிலில் இருந்து கொக்குவிலுக்கு யாழ்தேவி போகவேண்டுமானால் நீல தாலி வேண்டும். அது இப்போது உத்தரதேவியிடம் அல்லவா. ஆக உத்தரதேவி வந்துசேரும் மட்டும் யாழ்தேவி கோண்டாவிலில் காத்துக்கிடக்கவேண்டும். வந்தபின்னர், யாழ்தேவி நீலதாலியையையும் உத்தரதேவி  பச்சைதாலியையும் எடுத்துக்கொண்டு அதது திசையில் பயணிக்கும். புரிகிறதா? இரண்டு வண்டிகளுமே இடைவழியில் மோதிவிட சாத்தியமில்லை.

இதை கொஞ்சம் சிக்கலாக்குவோம். பயணிகள் அதிகரித்ததால் புதிதாக ஒரு ரெயில் சேவையை அறிமுகப்படுத்துகிறார்கள். சாரதாதேவி என்று வைத்துக்கொள்வோம். யாழ்தேவி புறப்பட்டு அரைமணி நேரத்தில் சாரதாதேவி காங்கேசன்துறையில் இருந்து புறப்படதயாராகிறது. ஆனால் புறப்படுவதற்கு சிவப்பு தாலி வேண்டும். ஆனால் தாலியை யாழ்தேவி கொண்டுபோய் சுன்னாகத்தில் கொடுத்துவிட்டிருக்கும் அல்லவா? உத்தரதேவி அதை எடுத்துக்கொண்டு வரும்வரை காத்திருக்கவும் முடியாது. எப்படி சமாளிப்பது?

IMG_8030அந்தக்காலத்தில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ஒரு குதிரை வைத்திருப்பார்களாம். இப்படியான நிலைமைகளில், அதாவது ஒரே திசையில் போகும் இரண்டாவது வண்டி வந்து தாலி கிடைக்காமல் தரித்து நின்றால், ஒருவர் குதிரையில் வேகமாக அடுத்த ஸ்டேஷனுக்கு போய் அந்த தாலியை எடுத்துக்கொண்டு வருவார். அவருக்கு அதுக்கு சம்பளம். கவுன்மேந்து உத்தியோகம். அவர் அதை கொண்டுவந்து டிரைவரிடம் கொடுத்தபின்னர் தான் ரெயில் காங்கேசன்துறையில் இருந்தே புறப்படும். பகிடியாக இருக்கிறது இல்லையா? பயணிகள் உயிரோடு விளையாடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. பின்னர் இந்த முறை மாறி, டோக்கன் டிக்கட் சிஸ்டம், கொண்டுவந்தார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக விருத்தியாகி, சிக்கலாகி, சிங்கப்பூரில் டிரைவர் இல்லாமல் எம்ஆர்டி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஆனா ஆவன்னா மாறவில்லை. இரண்டு வண்டிகள் மோதாதவகையில், கால தாமதமில்லாமல் எப்படி போக்குவரத்தை ஒழுங்குபண்ணுவது? அது தான் கேள்வி.

ஐடி துறையில் இருப்பவர்கள் இந்த கேள்விக்கு பதிலை அடிக்கடி பலவிடயங்களில் தேடுவார்கள். லொக்கிங்(Locking) என்று பொதுவாக சொல்லப்படும் பொறிமுறை இது. டேட்டாபேஸ்(Database) படிப்பவர்களுக்கு பரிச்சயமாக இருக்கும். மொத்த டேபிளையும் லொக் பண்ணுவதில் ஆரம்பித்து, ஒரு வரிசையை மட்டும் லொக் பண்ணினால் போதாதா என்று யோசிப்பது எல்லாமே இதே தாலி விஷயம் தான். ஒபெரேட்டிங் சிஸ்டம் என்கின்ற இந்த விண்டோஸ், லினக்ஸ் போன்ற இயங்குதளங்களில் இந்த பொறிமுறை சகட்டுமேனிக்கு இருக்கும். மியூட்டெக்ஸ்(Mutex)  என்பார்கள். யாராவது கேட்டால் “பூ.. இது ரயில் தாலி தான்” என்று சொல்லுங்கள்.  சின்ன உதாரணம். ஒரு வேர்ட் டொக்கியூமெண்ட் இருக்கிறது. ஒரே சமயத்தில் இருவர் அதை எடிட் பண்ணுகிறார்கள் என்றால் குழப்பம் வராது? ஆக ஒருவர் எடிட் பண்ணும்போது மற்றவர் எடிட் பண்ணாதபடி லொக் போடலாம். பின்னர் மொத்த டொக்கியூமெண்டுக்கு பதிலாக குறிப்பிட்ட எடிட் பண்ணுகின்ற அந்த ரெண்டு மூன்று வரிகளை மாத்திரமே லொக் பண்ணலாம். இது கணனியின் ஆதாரமான விஷயங்களில் எல்லாம் பயன்படுத்தப்படும். டுவல் கோர்(Dual Core), குவாட்கோர்(Quadcode) என்று லேப்டாப் வாங்கபோகும்போது கடைக்காரன் பீலா விட்டிருப்பான். அங்கேயும் இது தேவை. ஒரே ஒரு ஹார்ட்டிஸ்க், ஒரே ஒரு மெமரி ஆனால் நான்கு ப்ரோசசர் என்றால், எங்கேயும் குழப்பம் வராமல் இருக்க தாலி வேண்டும். ப்ரோகிராமிங் அதுவும் ஜாவா என்றால் திரட் ப்ரோகிராமிங்கில்(Thread Programming) இம்மை மறுமை இல்லாமல் லொக், இந்த தாலி இருக்கும். செய்யும்போது புல்லரிக்கும்.

திருமணங்களில், தாலி, மோதிரம், இந்த மெட்டி சமாச்சாரம், ஆழ யோசித்தால், இதே அல்கோரிதம் தான். இது தெரிந்து தான் “வாழ்க்கை ஒரு ரயில் பயணம்” என்றார் நம்ம டீ ஆர்.


 

கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி!

 

197921_10150111999848170_6085810_n“புதுவருடம் அன்று தாஜ்மகாலுக்கு போனா ஏதாவது ஒரு காதல், பொண்ணு சரிவரும்” என்று சயந்தன் சொன்ன அடவைசை நம்பி ஜனவரி முதலாம் திகதி ஆக்ரா பயணம் என்று முடிவாகிறது. ஏழு மணி ரயிலுக்கு நாங்கள் ஆறரைக்கே டெல்லி நிசாமுதீன் நிலையத்தில் ஆஜர்.  அங்கே ஆக்ரா போகும் வண்டி மூன்று மணிநேரம் தாமதம் என்றார்கள். வெளியில செம குளிர். கணகணப்புக்கு கொஞ்ச நேரம் டெல்லிப்பெண்களை பார்க்கலாம் என்று மீண்டும் சயந்தன் அடவைஸ் பண்ண முறைத்துப்பார்த்தேன். அந்த ஸ்டேஷனுக்கு வருபவர்கள் எல்லாம் டெல்லியின் முனியம்மா, மயிலம்மாக்களாகவே இருந்தது. கத்ரீனா கைப், பிரீத்தி ஜிந்தா எல்லாம் கோனோட் பிளேசில் தான் இருப்பார்கள் என்றார்கள். இது கிட்டத்தட்ட புறக்கோட்டை, அதைவிட மோசம். பேசாமல் டைம்ஸ் ஒப் இந்தியாவும், ஹிந்துவும் வாங்கி வாசித்தபடி ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் உட்கார்ந்தோம். தூங்கினோம். அதுவும் அலுப்படிக்க, கிடைக்கும் வரைக்கும் லாபம் என்று சயந்தன் முனியம்மாக்களை மேயத்தொடங்க, புலி பசித்தாலும் புல்லை தின்னாதடா என்று சொல்லி நான் மீண்டும் பேப்பர் விரித்து சாய்ந்தேன்.

250047_10150184340446415_3726415_n (1)

மூன்று மணிநேர பயணம், பனிப்படலத்தால் நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் சென்றது. ஆனாலும் அலுக்கவில்லை. அதற்கு காரணம் ஒரு தேவதை. ஸ்ரீநகரில் ஏதோ ஒரு பூர்வீக கோயிலுக்கு போய்விட்டு உத்தரபிரதேசத்து ஜஸ்வந்த்நகருக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவளோடு அவள் தம்பி, அம்மா அப்பா, சின்ன குடும்பம் தான். அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் தள்ளி ஒரு இருக்கையில் இராமா ஜெயம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எங்கள் இருக்கைக்கு பக்கத்தே ஒரு தாய் சின்னக்குழந்தையுடன் இருந்தார். அவர் குழந்தை ஒரு சுட்டி. அழும், திடீரென்று எங்களிடம் வந்து டாட்டா காட்டிவிட்டு மீண்டும் போய் அழும். நாங்கள் மூன்று பேரும் ஒருபக்க சீட்டில். முன்னே அவளும் தம்பியும். அவனுக்கு ஒரு பதினைந்து வயது இருக்கலாம். இந்த விவரணங்களை ஸ்கிப் பண்ணிவிட்டு அவளிடம் போவோம்.

பிகொம் இறுதியாண்டு. ஐந்தடி ஏழு அங்குலம். ஆங்கிலம் நுனிநாக்கு. லோ ஹிப்பில், நைலக்ஸ் சேலை கட்டி திரும்பி நின்றால் இலியானா காலி. மெல்லிய சின்ன மூக்கு, கேர்லி ஹேர், “அன்பே அன்பே கொல்லாதே” பாட்டில் ஆடும் ஐஸ்வர்யாராய் ஜீன்ஸ், டீசேர்ட் போட்டபடி எங்கள் சீட்டுக்கு முன்னாலே இருந்தால் எப்படி இருக்கும்? இருந்தாள். புதுவருஷம், தாஜ்மகால் பயணம், போக முன்னமேயே காதலா? சயந்தனை பார்த்து தாங்க்ஸ்டா என்றேன்.

மூன்றாவது இடியட்டான ஹர்ஷா இவ்வளவு டீடைலிங்குக்கு மெனக்கெடவில்லை. முதலில் பேச்சுக்கொடுத்தான். “ஏன் இந்தியப்பெண்கள் வெளியாரிடம் பேச வெட்கப்படுகிறார்கள்” என்ற முதல்கேள்வி. அர்த்தமற்ற கேள்வி போல எனக்குப்பட்டது. ஆனால் ஆச்சர்யமாக கேள்வி வேர்க் அவுட் ஆனது. “அப்பிடி இல்லை, அதெல்லாம் அந்த காலம்” என்று அவள் பேசத்தொடங்க, ஹர்ஷா “இரவில் ஒருக்களித்துப்படுக்க பிடிக்குமா? விட்டத்தை பார்த்தபடி படுக்க பிடிக்குமா?” வரைக்கும் டிஸ்கஸ் பண்ண தொடங்கியபோது தான் எனக்கு அன்பே அன்பே பாட்டு சீன் முடிந்திருந்தது. சுதாரிக்கமுதல், சயந்தன் திடீரென்று அவள் தம்பியிடம், “உமக்கு செஸ் விளையாட தெரியுமா? நான் ஸ்ரீலங்கன் சாம்பியன்” என்று சொல்ல, எனக்கு உதறலெடுத்தது. "விளையாட்டு காட்ட தொடங்கீட்டாங்கள்” என்று தெனாலி கமல் மைன்ட் வோய்ஸில் சொல்லக்கேட்டது. ஏதாவது செய்யடா ஜேகே. இம்ப்ரஸ் ஹேர்!

163147_478828411414_8206617_nகையில் இருந்த “Kite Runner” உதவி செய்யும் போல தெரியவில்லை. அவளைப்பார்த்தால் மகாபாரதம் தான் கடைசியாக படித்த நாவல் என்று சொல்லுவாள் போல தோன்றியது. ஏதாவது செய்யவேண்டும். “பாக்கியராஜின் இன்று போய் நாளை வா” ஞாபகம் வந்தது.  உடனேயே பக்கத்து சீட்டில் அழுதுகொண்டிருந்த அந்த பிள்ளையை கையில் வாங்கி, விளையாட்டு காட்டினேன். குழந்தை சிரித்தது. திடீரென்று குழந்தையை அவளின் கையில் கொடுத்துவிட்டு பையில் இருந்த பிஸ்கட்டை எடுத்து அதனிடம் நீட்ட, குழந்தை தாங்க்ஸ் சொன்னது. அவள் “ச்சோ கியூட்” என்று குழந்தையின் கன்னத்தை முத்தமிட,  ஐந்து நிமிடம் காஷ்மீர் போய் கோஸ்டியூம் மாற்றி “புது வெள்ளை மழை” பொழிய ஆசையாய் இருந்தது. அவகாசம் இல்லை. கீப் த போஃகஸ் ஜேகே.

உடனேயே “ஏ ஆர் ரகுமான் பிடிக்குமா?” என்றேன். “பிடிக்குமாவா?” என்றுவிட்டு “தில் கபி கண்டா, கபி ஹே நெக் பண்டா, தில் க பரோசா கெய்ஷே கொய் கரே” என்று ஹம் பண்ணினாள். அம்மாளாச்சி கைவிடவில்லை. அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ். “தில் கபி தண்டா, கபி ஹே அடம் போம்ச, ம்ம்ம்ம் ம்ம்” என்று வரிகள் தெரியாமல் டியூன் கொடுத்தேன். எசப்பாட்டு பாஸ். “வா….வ்” என்று வாய் அகன்றாள். இருவருமே ஒரே கோரஸில் “நஸ்ரின் மிலானா” என்றோம். முழுப்பாட்டும் இப்படியே போனது.

சயந்தன் கடுப்பில் செஸ் பெட்டியை படாரென்று அடித்து மூடினான். ஜானா டு யா ஜானா பாட்டெல்லாம் முடிய ஆக்ரா வந்தது. நாங்கள் இறங்கவேண்டும். மனமேயில்லை. நம்பர் கொடுத்தேன். தந்தாள். அடுத்தநாளே டெல்லி ஏர்போர்டில் வைத்து கோல் பண்ணினேன்.

Jaane-Tu-Ya-Jaane-Na“ஹே திஸ் இஸ் ஜேகே … ரிமெபர் மீ? .யூ நோ. ஏ ஆர் .. ”
“ரஹ்மான் .. வாவ் நஸ்ரின் மிலானா?’
“யா .. நஸ்ரின் … மிலானா .. ஆப் நாம் … ..  தும் .. மாதும் .. தும் .. ஐ டோன்ட் நோ”
“கமோன் ஜேகே .. யூ ஆர் ஒல்மோஸ்ட் தேர்”
“மாதும் ஸியே பியார் கர்தாகேஹும்”
“வாவ் … பேனும் தான்”
“பேனா? யூ மீன் ஹெட் லைஸ்?”
“நோ நோ … அதான் .. மீ டூ .. இன் தமிழ்!”
அடக்கடவுளே அது “நானும் தான்”

காதல் தொடர்ந்தது. Facebook  இல் மாறி மாறி இருவரும் போடும் மொக்கை ஸ்டேடஸ் எல்லாம் லைக் பண்ணினோம். அவள் ஹிந்தியில் போட்டாலும் லைக்கினேன். என்னவோ தெரியவில்லை. திடீரென்று என்னை புளோக் பண்ணிவிட்டாள். வலித்தது. தாங்கமுடியவில்லை. அது கூட பரவாயில்லை. சரி இது நமக்கென்ன புதுசா, போடீ என்று விட்டுவிட்டேன்.

ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சயந்தனின் தமிழ் ஸ்டேடஸ் ஒன்றை அவள் லைக் பண்ணியிருந்தாள்.

டேய் துரோகி!

பிற்குறிப்பு : சயந்தனின் வேர்ஷன் இங்கே!


 

ரயில் விடு தூது.

ரயிலில் போய்க்கொண்டிருக்கும் போது தான் இந்த சம்பவமும் நிகழ்ந்தது. மெல்பேர்னில்.  எனக்கு பக்கத்தில் இருந்த பெண்ணோடு அப்போது தான் உள்ளே நுழைந்த ஒருவன் பேச்சு கொடுத்தான். அது மெல்பேர்னில் சகஜமானது. இருவரும் இயல்பாக, வேலை, வெதர், விளையாட்டு என்று பேசிக்கொண்டார்கள். வேறு பலவும் பேசினார்கள். புரியவில்லை. அப்போது எனக்கு மெல்பேர்ன் புதிதானதால் யார் பேசினாலும் ரிக்கி பொண்டிங் பேசுவது போலவே இருக்கும். சுத்தமாக விளங்காது. பத்து சொற்கள் சொன்னால் அதில் இரண்டை தட்டுதடுமாறி கண்டுபிடித்து, மிகுதியை டக் டிக் டோஸ் போட்டு தான் புரிந்துகொள்வேன்.

அவர்கள் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவன் இறங்கவேண்டிய நிலையம் வருகிறது. பை பை சொல்லிவிட்டு ரயிலின் கதவடிக்கு போனவன், ஏதோ யோசித்தவனாய், திரும்பிப்பார்த்து “How about a coffee?” என்கிறான். இவள் சிரிக்கிறாள். அவன் கதவை திறந்துவைத்துக்கொண்டே நிற்கிறான். கதவு மூடாமல் வண்டி புறப்படாது. மீண்டும் கேட்கிறான். அவள் கொஞ்சம் வெட்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ஒல்ரைட் என்று சொல்லி எழுந்துபோகிறாள்.

அன்றைக்கு முழுக்க அந்த காட்சி கண்ணைவிட்டு மறையவில்லை. என்ன ஒரு காட்சி.ஒரு ரயில் சந்திப்பில் டேட்டிங். அந்த பாதிப்பில் அன்றிரவே ஒரே மூச்சில் எழுதிய கதை தான் “Coffee”. என் செல்லக்குழந்தை இந்த கதை. அதையே படலை ஆரம்பித்தபின் தமிழில் “என்ர அம்மாளாச்சி” என்று எழுதினேன். இரண்டாவது குழந்தை!

இந்த பாட்டை கேட்கும்போது எனக்கு அந்த காட்சி ஞாபகம் வரும்.

ரயிலில் எந்தப்பெண் எனக்குப்பிடித்த புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாலும், அவள் அறுபது வயது பாட்டியாக இருந்தாலுமே காதல் வந்து சேரும். ஒருமுறை Interpreter of Maladies வாசித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் “இந்த புத்தகம் வாசிக்கும் ஒருவரை ரயிலில் சந்திப்பது சர்ப்பரைஸ்” என்று சொல்லியிருக்கிறேன்.

இந்த பாட்டில் வரும் நாயகியும் அந்த ரகம். கையில் இர்விங் வாலஸ் (Irving Wallace) புத்தகம். ஜனரஞ்சக கதைகளை புத்திசாலித்தனமாக எழுதுபவர் என்று இர்விங்கை பற்றி குறிப்பிடுவார்கள்.  கனிகா வாசிப்பது “The Second Lady”. மசாலா கதை. அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை கடத்திவிட்டு, அவரைப்போலவே தோற்றமளிக்கும் ரஷ்ய உளவாளியை ஆள்மாற்றுகிறார்கள். இறுதியில் இருவரையுமே கொல்ல முயற்சி செய்கிறார்கள். ஒரு பெண் சாகிறார். மற்றவர் தப்புகிறார். தப்பியது முதல் பெண்மணியா இல்லை உளவாளியா என்பது இறுதிவரை சொல்லாமலேயே விட்டுவிட வாசகன் மண்டை காயும்!

பாட்டின் வரிகளும் சுவையானவை. காதலன் ரயிலை தூதுவிடுவது யாழ்ப்பாணத்தாருக்கு புதுசில்லை. காதலுக்கு “புக்காரா”, “முள்வேலி”, “யாழ்தேவி” என்று பலவற்றை தூதுவிட்டு கவியரங்கம் செய்திருக்கிறார்கள். நம்ம வாலிபனின் அண்ணன்காரன் கூட தூதுவிட்டவர்களில் ஒருவர். 90களில் நான் ஆவென்று பார்த்து ரசித்த அரங்கம் அது.

248770_10150184341151415_5038922_nஉலகெங்கும் நீ போகிறாய் வருகிறாய்
இவளை போல் பெண்ணை எங்கு நீ பார்கிறாய்

சிவப்பு நிறமது வழியில் தெரிந்ததும் நிற்பாயே நீயும்
இவளின் இதழ் நிறம் பார்த்ததும் என் இதயம் நிற்காதா பாவம்

ஏ ரயிலே உன் மேலே நான் தோள் சாயும் தோழன்
எனக்கு நீ எனக்கு போய் பெண் பார்த்து சொல்வாயா

பா.விஜய் எழுதியதாம். “ரயிலே உன் மேலே நான் தோள் சாயும் தோழன்” என்ற வரிகளில் வித்தகக்கவிஞராக ஜொலிக்கிறார்.

 

&&&&&&&&&&&&&&&&&&&&&

நாளை இன்று நேற்று!

$
0
0

 

download (1)

2123ம் ஆண்டு மே மாதம். 25ம் திகதி, இடம் யாழ்ப்பாணம் சென்றல் நேர்சிங்கோம்.

ஏழாம் நம்பர் பிள்ளை… அதான் கலைத்துறையில் நல்லா இருக்கப்போறார்!

முணுமுணுத்தபடி நேர்ஸ் பிறந்த நேரத்தை குறித்துக்கொண்டிருக்கும்போதே அவசரமாக உள்ளே நுழைந்த யாழ்ப்பாணம் கம்பன் கழக செயலாளர் வில்வராஜா தொட்டிலில் கிடந்த வயோதிபரை கண்டதும் நிம்மதிப்பெருமூச்சு விட்டார்.

“அப்பாடி .. எங்க டைமிங் பிழைச்சிடுமோ எண்டு பயந்திட்டன் .. வெளியீட்டு விழாவுக்கு நேராமாச்சுது .. ஐயாவை கெதியா ரெடிப்பண்ணுங்க”

“ஐயா” ஆறடித்தொட்டிலில் ஆவென்று விட்டத்தை பார்த்து கொட்டாவி விட்டார்.  பிறந்து அரைமணிநேரமே ஆகியிருக்கும். தலையில், மயிர்கள் பலது நரையோடும், சிலது கறுப்போடும்  பெரும்பாலும் வெட்டவெளியாகவும் இருந்தது.   மீசை தாடி இல்லை. “கிளீன் ஷேவாக இப்போதெல்லாம் கிழடுகள் பிறப்பதே அரிது” என்று நேர்ஸ் குனிந்து அந்த ஐயாவுக்கு முத்தம் கொடுத்தாள். வைத்தியர் வந்து மூளையை ஸ்கான் பண்ணி எடுத்த ரிப்போர்ட் பிரிண்டை மேலோட்டமாக நோட்டம் விட்டார்.

“எண்பத்தொரு வயதில் பிறந்திருக்கிறார் .. மூளையின் டிசைன் ஆச்சர்யமாக இருக்கு… இவர் ஒரு ஜீனியஸ்”

“தாங்க்யூ டொக்டர்”

ஐயா முதன் முதலில் வாய்திறந்தார். சிரித்தார். வில்வராஜா மீண்டுமொருமுறை வந்து அவசரப்படுத்த, நேர்ஸ் ஐயாவுக்கு வேட்டி கட்டி, சேர்ட் பட்டன் போட்டுவிட்டாள். ரெடியானதும் வெளியே நின்ற பென்ஸ் காரில் ஐயாவை தட்டுத்தடுமாறி ஏற்றிவிட்டார்கள். ஐயா அசுவாரசியமாக உலகத்தை பார்த்தார். “இந்த உலகத்தோடு தான் மாரடிக்கவேண்டுமா?”

நேர்சிங்கொமில் இருந்து வண்டி புறப்பட்டு கோயில் வீதியை அடைகிறது. வழிநெடுக பதாகைகள் முழுதும்  பிரெஞ்சுதாடியில் ஒருவர் சிரித்துக்கொண்டிருந்தார்.  நல்லூர் பின்வீதியில் “எழுத்தாளர் திலகமே வருக வருக” என்று அறுபதடி பனர் ஒன்று கட்டப்பட்டு பாலூற்றப்பட்டிருந்தது.  வண்டி கம்பன்கோட்டத்தில் நிற்க, எல்லோரும் முண்டியடித்தபடி கதவை திறந்து ஐயாவை வரவேற்றார்கள். வடக்கு வாசல் மணல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமேடை. நடுவிலே அரியாசனம் போன்ற இருக்கையில் “ஐயாவை” இருத்தினார்கள். பேச்சுக்கள் சூடுபிடிக்கத்தொடங்கின.

“இன்று பிறந்த நாகலிங்கப் பூவே, நீ பிறந்தவுடனே தமிழுக்கு சேவை செய்ய வகை செய்த விதிப்பயனை விதந்து தொழுகிறேன். இருநூற்று நாற்பத்தேழு புத்தகங்கள், நாற்பத்தேழு சாகித்திய அக்கடமிகள், “நேற்று என்பது வெறுங்கனவு” நாவலுக்காக நோபல் பரிசு வாங்கும்போது கூட மேடையில் “எல்லாப்புகழும் இந்த நாகலிங்கத்துக்கே” என்று தற்பெருமை பேசப்போகும் தன்மானச்சின்னமே”

வாழ்த்தா? இல்லை உயர்வு நவிற்சியா என்று புரியாதவகையில் பேச்சு இருக்க, ஐயா சலிப்பில் முன்னே ஸ்டூலில் இருந்த புத்தகத்தை கையில் எடுத்தார்.

“நேற்று இன்று நாளை - நல்லை நாகலிங்கம்”

சிக்கலான கதையாயிற்றே, எடுபடுமோ என்ற சந்தேகத்திலேயே பக்கங்களை புரட்டினார். எண்ணூறு பக்கங்கள். எழுத எத்தனை நாட்கள்? சரியாக எட்டு மாதங்கள், பதினொரு நாட்கள் எடுக்கப்போகிறது. இந்த நாவலுக்காக அடுத்த எட்டுமாதங்களில் தூக்கம் தொலைக்கப்போகிறேன். பசி தொலைக்கப்போகிறேன். சற்குணம் சசிகலாவை ஏமாற்றிவிடுகின்ற இடத்தில் கண்ணீர் விட்டு அழப்போகிறேன். இதெல்லாம் எதற்கு செய்யப்போகிறேன். யாரோ ஒருவன், புத்தகத்தையே வாசிக்காமல் மேடையில் ஏறி இந்த கத்து கத்துவதற்கா?  எல்லாம் கமலாதேவிக்காக. அவள் இல்லாத காலத்தை எழுதி எழுதி கழிப்பதற்காக. யாருக்கு இது தெரியப்போகிறது? இந்த கதையாவது யாருக்கும் புரியுமா? கதையின் முடிவை யாராவது கடந்த காலத்தில் கண்டுபிடித்து இருப்பார்களா? இல்லை எனக்கு மட்டும் தான் அது வெளிச்சமா? நானே இந்த கதையை எட்டு மாதத்தில் மறந்துவிடுவேனே. நினைக்க, நினைக்க நாகலிங்கத்துக்கு வருத்தமாக இருந்தது. என்ன நியதி இது?

**********

384748_10151190740138313_1602173834_nபூமியின் இயக்கம் ஆச்சர்யமானது. இங்கே எல்லாமே நியதிப்படி இயங்குகிறது. விதியை வரைந்து அதன்படி வாழ்ந்து முடிப்பது வாழ்க்கையின் ஆதாரமாகிறது. இன்று பலனை அனுபவித்துவிட்டு அதற்கான வினையை நாளை விதைக்கவேண்டும். கமம் செய்வதை போல. கமத்திலும், இன்றைக்கு சமைக்கும் உருளைக்கிழங்கு கறிக்கு ஆறுமாதம் கழித்து தான் பயிர் நடுதல் வேண்டும் அல்லவா. இங்கே ஞாபகங்கள், பதிவுகள் எல்லாமே எதிர்காலம் சார்ந்தே இருக்கும். அதைவைத்து இறந்தகாலத்தில் என்ன நிகழ்ந்திருக்கலாம் என்ற ஊகங்கள் செய்யலாம். ஜோசியர்கள் சாதகம் குறிக்கலாம். அவ்வளவே.

இன்றைக்கு காதலிக்கு முத்தம் கொடுக்கிறோம் என்றால், நான்கு நாட்களுக்கு பின்னர் அவளிடம் காதலை சொல்லவேண்டும். காதலியை பார்க்கும் போது வாந்தி வருகிறதா? ஓங்கி கன்னத்தில் அறையவேண்டும் போல இருக்கிறதா? ஆனாலும் நாற்பது நாட்களுக்கு பின்னர் அவளை துரத்தி துரத்தி காதலித்தே ஆகவேண்டும். காலை எழுந்தவுடன், தலையிடி, ஊதினால் வாயில் கள்ளு குப்பென்று நாறுகிறதா? அடுத்தநாள் நண்பர்களுடன் குடித்து கும்மாளமிடவேண்டும். நமக்கு முன்னே இருக்கும் வாழ்க்கை மாத்திரமே நன்றாக தெரியுமே ஒழிய கடந்து போன வாழ்க்கை எதுவும் எமக்கு தெரிய சந்தர்ப்பமில்லை. ஆக நேற்று நடந்த சம்பவத்துக்கு தான் இன்றைக்கு ஏதோ செய்கிறோம் என்று புரியுமே ஒழிய, நேற்று என்ன நிகழ்ந்தது என்பதை சுத்தமாக மறந்துவிடுவோம்.  நேற்றை பற்றிய கனவுகளுடமும், நாளை பற்றிய நனைவிடை தோய்தல்களுடனும் வாழ்க்கை இங்கே வாழ்ந்து கழியும்.

**********

download (2)நாகலிங்கம் தன் மனைவிக்காக நீண்டகாலம் காத்திருக்கவேண்டிய தேவை இருக்கவில்லை. கமலாதேவியும் எட்டு வருடங்களில் பூவோடும் பொட்டோடும் பிறந்துவிட்டாள். பிறந்தநாள் முதல் அவளுக்கு நிமோனியா காய்ச்சல் அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அது இழுத்தடித்து போய்ச்சேர இன்னமும் இருபது நாட்கள் எடுக்கும் என்று நாகலிங்கத்துக்கு தெரியும். வைத்தியசாலைக்கும் வீட்டுக்குமாய் கடந்த சிலநாட்களாய் நாயாய் நாகலிங்கம் அலைந்தார். காலையிலேயே கண்ணன் லொட்ஜில் இடியப்பம் பார்சல் வாங்கிக்கொண்டு போய், ஆஸ்பத்திரியில் வைத்து நாகலிங்கமும் கமலாதேவியும் சாப்பிடுவார்கள். நாகலிங்கம் ஒரு ஓய்வுபெற்ற வைத்தியராக இருந்ததால் எந்த நேரமும் கமலாதேவியை போய் வார்டில் சந்திக்கும் சௌகர்யம் இருந்தது. நட்பு காரணமாக சிறப்பாக வைத்தியர்கள் கமலாதேவியை கவனித்துக்கொண்டார்கள். அதனால் தானோ என்னவோ, பொதுவாக பிறந்து நான்கைந்து நாட்களில் மாறிவிடும் நிமோனியா நோய், கமலாதேவியை தேவையில்லாமல் நாட்கணக்காக இழுத்தடித்தது.

எட்டுவருடங்கள் கமலாதேவியை எதிர்பார்த்திருந்த ஏக்கத்தில், அவள் பிறந்தவுடனேயே, விட்டுப்பிரிய மனமில்லாமல் நாகலிங்கம் சதா ஆஸ்பத்திரியே கிடையாக கிடந்தார். அவள் முழித்திருக்கும் தருணங்களில் இருவரும் எதிர்காலத்தில் தாங்கள் செய்யப்போகும் விஷயங்களை நினைவுபடுத்தி சிரிப்பார்கள். இப்போது செடில் காட்டும் இஞ்சினியர் மகன் சுதாகர் இன்னும் நாப்பத்தைந்து வருஷத்தில் வயித்தில் இருப்பான், பின்னர் அவனை சந்திக்கவே மாட்டோம் என்று நாகலிங்கம் சொல்ல கமலாதேவி முகத்தில் கவலை படர்ந்தது. இருமினாள்.

“உனக்கு விசரே, அதுக்கு இன்னும் நாப்பத்தைந்து வரியம் இருக்கு, இப்ப யோசியாத”

என்று சொன்னவுடன் சிரித்தாள். ஒருநாள் அவள் கண்ணயர்ந்த சமயத்தில் ஞாயிறு வீரகேசரியை புரட்டினார். எட்டாம் பக்கத்தில் அவருடைய தொடர்கதை “நாளை நடந்த கொலை” எட்டாம் அத்தியாயம் வெளியாகி இருந்தது. “அடடா இந்த சனியனை வேறு ஒப்பேத்தி ஆசிரியருக்கு அனுப்பவேண்டுமே” என்று கதையை வாசிக்கத்தொடங்கினார்.  வாசிக்க வாசிக்க விழிகள் ஆச்சர்யத்தில் விரியத்தொடங்கின. “அட, இவ்வளவு டெக்னிக்கலாக எழுதியிருக்கிறோமோ, இந்த அத்தியாயத்தை இரண்டு நாளில எழுதி முடிக்கிறது சீவன் போற வேலையாயிற்றே” என்று அலுத்துக்கொண்டார்.

**********

வருடங்கள் உருண்டோடின. நாகலிங்கத்துக்கு நாற்பத்தொரு வயசு ஆகியது. ஒரு மே மாதம் இருபதாம் திகதி அவர் அம்மா வர்ஷா பிறந்தார். வைத்தியராகையால் அம்மா பிறந்தபோது அருகிலேயே இருந்தார். அன்றைக்கு நாகலிங்கத்துக்கு சந்தோசம் தாங்கவில்லை. எல்லோருக்கும் சொக்கலேட் வாங்கிக்கொடுத்தார். Facebook இல் “அம்மா … நீ பெற்ற பிள்ளை, இங்கே நிக்குது பார் முல்லை” என்று ஸ்டேடஸோடு வயதான வர்ஷாவை கொஞ்சுவது போல படம் போட்டு டாக் பண்ணினார். என்ன கோபமோ தெரியாது கமலாதேவி தன்னை டாக் பண்ணவேண்டாம் என்று சொல்லிவிட்டாள். வர்ஷா பிறந்த நாள் முதலாய் கமலாதேவியின் நடவடிக்கைகள் கொஞ்சம் மாறத்தொடங்கியது. வர்ஷாவோடு தேவையில்லாமல் விரோதம் பாராட்டதொடங்கினாள். ஒரு நாள் பேசாமல் இருப்பார்கள். அடுத்தநாள் பயங்கரமாக சண்டை பிடிப்பார்கள். அதற்கு அடுத்தநாள் இருவருமே சேர்ந்து புடவைக்கடை போவார்கள். நாகலிங்கம் இவர்கள் சர்ச்சையில் பெரிதாக தலைபோடுவதில்லை. பத்து வருஷங்களுக்கு பிறகு இருவரும் காதலிக்கும்போது, அது அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காமல் போகும், அம்மா வீட்டு வாசற்படி மிதிக்கமாட்டேன் என்று சபதம் இடுவாள் என்று அவருக்கு தெரிந்ததால் நடப்பது எல்லாமே விதிப்படி என்று பேசாமல் விட்டுவிட்டார்.

**********

கமலாதேவி கர்ப்பமாக இருந்தபோதுதான் வர்ஷா நாகலிங்கம் வீட்டுக்கே முதன்முதலில் வந்தார். தனக்கு தெரியாமல் நாகலிங்கம் வேறுசாதிப்பெண்னை திருமணம் முடித்தது வர்ஷாவுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. அன்று முதல் அவர்களோடு பேசுவதையே விட்டுவிடுவாள். இன்றைக்கு கர்ப்பம் என்று கேள்விப்பட்டவுடன் இவர்கள் வீடு தேடி வந்திருக்கிறாள். எது இவர்களை இயக்குகிறது? இப்படி வரவைக்கிறது? பேரப்பிள்ளை எப்படி இருக்கும் என்றே தெரியப்போவதில்லை. ஆனாலும் ஏதோ ஒரு சக்தி இந்த பெண்களை இப்படி இழுக்கிறது என்று நினைத்துக்கொண்டார். “நாளைக்கு அம்மா வீட்டில் இருக்கமாட்ட .. இருக்கும் வரைக்கும் அந்த மனிசியை நன்றாக கவனி” என்று கமலாதேவிக்கு அவர் உத்தரவு போட்டார். இன்றைக்கு கவனித்தாலும் கமலாதேவியும் அம்மாவும் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் சண்டை பிடித்திருக்கலாம்,  எவன் கண்டான் என்றும் நினைத்துக்கொண்டார்.

**********

நாகலிங்கத்துக்கு முப்பது வயது. அன்றைக்கு அவன் நாள் முழுதும் படபடப்பாக இருந்தான்.  கமலாதேவியும் தான். வீடு முழுதும் ஆட்கள் குறுக்கும் நெடுக்குமாக வந்து போய்க்கொண்டிருந்தனர். ஒரு சிலர் தகரக்கதிரைகளை அடுக்கி லாண்ட்மாஸ்டரில் ஏற்றுகின்றனர். சமையல்பாத்திரங்களை கிணற்றடியில் வைத்து பலர் கழுவிக்கொண்டிருந்தார்கள். பந்தல்காரன் ஒவ்வொரு அலங்காரமாக பிடுங்கிக்கொண்டிருந்தான். கமலாதேவி மெல்லிய கருநீல மைசூர்சில்க்கில் ஜொலித்தாள். கைகள் பூராக எட்டடுக்கு காப்புகள். நடுவில் கனடா மாமன்காரன் கொடுக்கப்போகும் பூட்டுகாப்பு மின்னியது. கழுத்தில் ஒன்பது பவுண் தாலி. தலையில் கனகாம்பரப்பூ கோர்த்திருந்தாள். நாகலிங்கம் பட்டுவேட்டி, மார்ட்டின் சேர்ட் போட்டு மேல் பட்டன் திறந்து விட்டிருந்தான். இரண்டிருக்கை கதிரையில் இரண்டு பக்கமும் குட்டி குஷன்கள் மினுங்க, நடுவில் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். கைகள் கோர்த்தபடி.

“மன்னிக்கோணும் டாக்குத்தர் நாளைக்கு உங்கட கலியாண வீட்ட வரமுடியேல்ல .. அதால தான் இண்டைக்கு வந்தனான் …  எல்லாமே நல்லா நடக்குமா?”

கார்த்திக் மாமா “எல்லாமே நல்லா நடக்குமா?” என்று கேட்க நாகலிங்கம் கதிரைப்பின்பக்க பின்னல் ஓட்டை வழியாக கமலாதேவி இடுப்பை இஸ்க்கென்று நோண்டினான். “ஐயோ அம்மா” என்று திடுக்கென்று எழுந்தாள் கமலாதேவி. கார்த்திக் மாமா “என்ன பிள்ளை மூட்டையோ?” என்று கேட்டுவிட்டு மெதுவாக அண்மையில் பிறந்திருந்த மதுமிதா ஆச்சியை பார்க்கவென்று என்று நைசாக நழுவினார்.

5368_158187923312_7100338_n“என்ன சேட்டை இது நாக்? ஆக்களுக்கு முன்னால…”

“மாமா கேட்டாரே .. எல்லாமே நல்லா நடக்குமா?… ஞாபகம் இருக்கா?”

“என்ன இருக்கா?”

“ஏய்... இண்டைக்கு எங்களுக்கு முதலிரவு .. ”

“தெரியும் தெரியும் .. ஏதோ புதுசா செய்யப்போற மாதிரி .. நாளைக்கு கலியாணம் … இவ்வளவு காலம் என்ன எல்லாம் பண்ணியிருப்பமோ ..”

“என்ன இருந்தாலும் முதலிரவு இஸ் டிஃபரேன்ட் … இல்லையா … என்ன எல்லாம் செய்யப்போறம் எண்டு யோசிச்சியா?”

“அதை நினைக்கத்தாண்டா டென்ஷனா இருக்கு … நாய் மாதிரி நிப்பாயேடா”

“விடுடி … இதாண்டி கடைசி இல்லையா … நாளைக்கு கலியாணம் .. அதுக்கு பிறகு ம்ஹூம் ஒண்ணுமே கிடையாதே?”

“ஆ .. நம்பிட்டோம் .. அப்ப இன்னும் ஐஞ்சு வருசத்தில மெடிக்கல் காம்ப் போவோமே? அங்க நடக்கப்போறதுக்கு பெயர் என்னவாம்?”

நாகலிங்கம் பதில் சொல்லமுதல் மறுவீட்டழைப்புக்காக கமலாதேவி வீட்டுக்காரர் காரில் வந்திறங்க, வீடு மீண்டும் அமளி துமளிப்பட்டது.

**********

உயர்தர பரீட்சைக்காலம். அன்றைக்கு பௌதீகவியல் பரீட்சை நாள். பரீட்சை முடிந்து ஏதோ ஒரு டென்ஷனில் அவசர அவசரமாக நாகலிங்கம் கச்சேரி நல்லூர் ரோட்டில் சைக்கிள் மிதித்துக்கொண்டிருக்கும் போதுதான் “நாக் நில்லு … ” என்று பெண் குரல் கூப்பிடுவது கேட்டு திரும்பிப்பார்த்தான். கமலாதேவி. ஏசியா பைக்கில், சுண்டுக்குளி டை தோளுக்கு மேலால் போய் பின்பக்கம் விழுந்து கிடக்க, மூசி மூசி பெடல் மிதித்தபடி வந்தாள். ஸ்லோ பண்ணினான்.

“எக்ஸாம் முடிஞ்சா எனக்காக வெயிட் பண்ண மாட்டியா? ஒல் படிக்கேக்க மணித்தியால கணக்கா வந்து சுத்துவாய் தானே அப்ப பார்ப்பம்”

“அப்ப தான் இப்ப நடக்கிறது ஒண்டும் ஞாபகம் இருக்காதே!”

நாக் சிரித்தான். அவள் முகத்திலும் ஒரு சிரிப்பு தெரிந்தது. இலகுவில் இப்படி சிரிக்கமாட்டாள். இன்றைக்கு ஏதோ சந்தோஷத்தில் இருக்கவேண்டும்.

“எப்பிடி எக்ஸாம்?”

“நல்லா செய்திருக்கிறன் போல தான் கிடக்கு. எம்சீகியூ எல்லாம் மண்டைக்கேள்விகள் .. ஆனா எல்லாமே எங்களுக்கு தெரிஞ்ச கணக்குகள் .. அம்பத்தஞ்சு சரிவந்திருக்கும் எண்டு நினைக்கிறன் .. அம்பது வந்தாலே ‘ஏ’ தானே .. உனக்கெப்படி?”

“அதாண்டா .. தெரிஞ்ச கேள்விகள் .. ‘ஏ’ வந்திருக்கும் .. வந்திருந்தா எவ்வளவு நல்லம் .. இரண்டு பேருக்குமே மெடிகல் பஃகல்டி கிடைச்சிருக்கும் … எல்லாமே நல்லா நடந்திருந்தா .. நாங்க கலியாணம் கட்டி பிள்ளை எல்லாம் பெத்திருப்போம்டா.. ”

“அத நினைக்க தான் டென்ஷனா இருக்கு”

“என்ன சொல்லுற?”

“வாழ்க்கைல இது இது நடந்திருக்கும் எண்டு கனவு காணுறதுக்கு .. நிறைய உழைக்கோணுமே .. இப்ப பாரு .. எக்ஸாம் ஈஸியா போயிட்டுது .. இதுக்கு அடுத்த ரெண்டு வருஷம் மொங்கி மொங்கி படிக்கோணுமே?”

“படிப்போம்டா .. எங்கட இறந்தகாலம் நல்லா இருந்ததுக்காக எதிர்காலத்தை தியாகம் செய்யிறதில பிழையில்ல.. அதுவும் சேர்ந்து படிக்கபோறமே .. ஸோ ஒகே.. அதுவும் நீ எவ்வளவு யோக்கியன்! .. மூன்று வருஷத்தில ஒரு கிஸ் கூட குடுக்கமாட்டாய் .. அதான் எக்ஸாம் முடிஞ்சுதே .. இனி சதா படிப்பு தான் .. ஒருக்கா .. ஒரே ஒருக்கா ஒரு கிஸ் தந்தா குறைஞ்சிடுமா?”

“நோ வே .. அதெல்லாம் ரெண்டு பெரும் டொக்டரானா பிறகு குடுத்திருப்போம். இப்ப படிப்ப பார்ப்போம்”

“அரக்கன்டா நீ .. உன்னை கட்டி என்ன எல்லாம் கஷ்டப்பட்டேனோ!”

*************

downloadவருடங்கள் கழிந்தன. நாகுக்குட்டிக்கு இப்போது மூன்று வயது. வர்ஷா மடியில் இருந்து தவண்டு கொண்டிருந்தான். கொஞ்சும் மழலை தமிழில் “ஓடி விளையாடு பாப்பா” என்று அட்சரம் பிசகாமல் பாரதியார் பாட்டு பாடினான்.  இவன் இன்னமும் இரண்டு வருடங்களில் பேசமாட்டானே என்று நினைத்து கண் கலங்கினாள்.  “ஏனம்மா அழுறாய்? நான் வேணுமெண்டால் நேர்சரி ரைம் சொல்லட்டா?” என்று நாகுக்குட்டி கேட்க, வர்ஷா முகத்தில் கண்ணீர் வழிய “ஆராரோ .. ஆராரோ” என்று நூறாண்டு கழித்து வரப்போகின்ற Life of Pi பாடலை பாடினாள். மூன்று வருடங்களில் இவனை பார்க்கவே மாட்டோமே என்ற நினைப்பு வர தாங்கமுடியவில்லை அவளுக்கு. குரல் அடைத்தது.

**********

அந்த மூன்று ஆண்டுகளும் விறுக்கென்று ஓடிவிட்டது. அந்த நாளும் வந்தது. ஐயா, நல்லை நாகலிங்கம், நாக், நாகுக்குட்டி என்றெல்லாம் வாழ்க்கை முழுதும் அழைக்கப்பட்ட நாகலிங்கம், வாழ்க்கையில் என்ன சாதித்தான் என்ற சுவடே தெரியாமல், அவன் விஞ்ஞானியா, மருத்துவனா, பஸ் ஓட்டுனரா? பைலட்டா, வெட்டியா? அவன் மனைவி யார், மகன் யார், மகள் யார் என்று எதுவுமே தெரியாமல் சக மனிதனோடு எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாதவனாக, குழந்தையோடு குழந்தையாய் சமத்துவத்தோடு இறந்த நாள். இந்த நாள். இந்த இடம்.

2042 மே மாதம். 25ம் திகதி, இடம் யாழ்ப்பாணம் சென்றல் நேர்சிங்கோம். பிரசவ விடுதி.

வீல் என்று பிரசவ வேதனையில் அலறினாள் வர்ஷா.

 

&&&&&&&&&&&&

 

படங்கள்: கேதா
www.colourshades.com.au

வியாழமாற்றம் 04-04-2013 - குப்பை

$
0
0

 

images“என்னடா இன்றைக்கு எழுதுவோம்?” என்று கஜனிடம் கேட்டபோது “ஏதோ ஒரு குப்பையை எழுதி ஒப்பேத்து” என்றான். அவன் சொன்னது போல குப்பையையே ஒரு சவாலாக எடுத்து எழுதிப்பார்க்கலாமா என்று நினைத்துப்பார்க்க குப்பை பற்றிய விஷயங்கள் கோபுரமாய் எழுந்து நின்றது. குப்பையை சாதாரணமாக குப்பை என்று மூக்கைப்பொத்திக்கொண்டு கடந்துபோக முடியாது. எங்கள் கலாச்சாரத்தில் அனேகமான விஷயங்கள் குப்பையில் தான் கிடக்கின்றன. அதை கொஞ்சம் நாற்றத்துடன் ட்ரை பண்ணியிருக்கிறேன். இந்த வாரம் ஒரு குப்பை வாரம்.


யாழ்ப்பாணத்தில் குப்பை!

குப்பைக்கும் பங்கருக்கும் ஏகத்துக்கு தொடர்பு இருக்கும். இந்தியன் ஆர்மி வந்தபோது முதன்முதலில் வெட்டிய பங்கர்; பின் அவர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய காலத்தில் பங்கரின் தேவை இல்லாததால் அது குப்பைக்கிடங்கானது. பின்னர் அவர்கள் போன பின்னர் இலங்கை இராணுவத்துடன் சண்டை. முற்றத்தில் பங்கர். கொஞ்சக்காலத்தில் முன் வீட்டில் புலிகளின் நிதர்சன அலுவலகம் வந்ததால், ரிஸ்க் என்று முன் வளவில் வெட்டிய பங்கரை பின் வளவுக்கு மாற்றினோம். இப்போது முன்னது குப்பைக்கிடங்கு ஆகியது. சந்திரிக்கா வந்து கண்டோஸ், மண்ணெண்ணெய் எல்லாம் அனுப்ப, பதிலுக்கு புலிகளும் வரவேற்று கடிதம் அனுப்ப, சரி இதோட சமாதானம் தான் என்று பின்னாலே இருந்த பங்கரையும் குப்பைக்கிடங்கு ஆக்கினோம். பின்னர் சந்திரிக்கா முன்னேறிப்பாய, மீண்டும் பங்கர். இம்முறை மாமரத்துக்கு கீழே. அதுவும் பின்னர் குப்பைக்கிடங்கு. இந்த பட்டேர்ன் வன்னிக்கு போனபோதும் தொடர்ந்தது.

கோட்டை அடிபாட்டு நேரம் தாவடிக்கு இடம்பெயர்ந்திருந்தோம். ஒரு நாள் மாலை, குப்பைகளை கூட்டி துப்புறவாக்கி பின் வளவில் போட்டு எரித்துவிட்டிருந்தோம். எங்கள் கெட்டகாலம், அன்றைக்கு இரவு ஹெலி ஒன்று, வேறு அலுவல் இல்லையோ என்னவோ எங்கட ஏரியாவையே சுற்றி சுற்றி தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தது. வீட்டுக்கு மேலாலே சன்னங்கள் பரந்தன. நாங்கள் எல்லாம் குசினி அடுப்படி சீமெந்து பிளாட்டுக்கு கீழே விழுந்து படுத்துவிட்டோம். பதினைந்து இருபது நிமிஷமாக இது நடந்தது. சுத்திறது, சுடுறது. சுத்திறது. சுடுறது. என்ன இழவுக்கு என்று தெரியவில்லை. சுற்றுவட்டாரத்தில இயக்கத்திண்ட காம்ப் ஒன்றும் கிடையாது. கொஞ்சநேரம் கழித்து தான், பக்கத்துவீட்டு அண்ணாவுக்கு விஷயம் உறைத்தது. குடிக்கவென்று தண்ணீர் அள்ளி வைத்திருந்த பானையை எடுத்துக்கொண்டுபோய், ஹெலிக்காரன் சுத்த போயிருந்த சமயம், இன்னமும் எரிந்துகொண்டிருந்த குப்பைக்கு மேலே ஊற்றி அணைத்து எங்கள் இடத்தை கும்மிருட்டாக்கினார். அதற்கு பிறகு தான் ஹெலிக்காரன், எங்களை விட்டுவிட்டு வேறு யார் வீட்டு குப்பையையோ தாக்க போய்விட்டான். நாங்கள் நிம்மதியாக அதற்கு பிறகு நித்திரை கொள்ளக்கூடியதாக இருந்தது.

எட்டாம் வகுப்பில் “Life Skills” என்று ஒரு பாடம் இருந்தது. அதில் மரக்கன்று நடுவதற்கு ஆளாளுக்கு 25 பால்மா பாக்குகள் (லக்ஸ்பிரே, நெஸ்பிரே, அங்கர் பைகள்) கொண்டுவரசொல்லிவிட்டார்கள். யார் அதிகம் கொண்டுவருகிறார்களோ அவருக்கு சிறப்பு பரிசு என்றும் அறிவித்துவிட, பொறுக்கத்தொடங்கினேன். ஒவ்வொரு வீட்டு குப்பைகள், வீதியில் போகும்போது குவிந்துகிடக்கும் குப்பைகள், கோயிலடி, முனிசிப்பல் ஏரியா, முன் வீடு, பக்கத்து வீடு, மாமி வீடு, தின்னவேலி சந்தை என்று எல்லா இடமும் அலைந்து திரிந்து பொறுக்கி சேர்த்ததில் மொத்தமாக் 127 பைகள் சேர்த்துவிட்டேன். போய் பார்த்த பின்தான் புரிந்தது, வகுப்பில் எல்லோருமே என்னை விட சிறந்த பொறுக்கிகள் என்று. அதுவும் கீர்த்தி முன்னூறு பை சேர்த்து வந்து வகுப்பின் முதல் பொறுக்கியானான்.

எது குப்பை என்பது ஒரு வித சார்ப்புக்கோட்பாடு தான். அப்போது வரும் சிந்தாமணி பேப்பரில் விஞ்ஞான உலகம், பொது அறிவு, விஷயங்களை எல்லாம் கட்டம் கட்டி வெட்டி, ஒரு பைஃலில் சேர்த்து வைத்திருந்தேன். அம்மா குப்பை என்று எறிந்துவிட்டார். ஜேஆரும், ராஜீவ்காந்தியும் கை எழுத்து போடும் படம், இந்தியா டுடேயில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். என்னுடைய கப்பேர்டில் ஒட்டி வைத்திருந்தேன். பின்னர் குப்பையானது. அப்போது எல்லாம் கணக்கு செய்யவென்று பில்கட்டுகளை கடைக்காரரிடம் வாங்கி பயன்படுத்துவோம். அதில் நிறைய கதைகள் ட்ரை பண்ணியிருக்கிறேன். எல்லாமே உல்டா கதைகள். என் இனிய இயந்திரா வாசித்தால், என் வீட்டு ஆட்டுக்குட்டி ரோபோ ஆகும். சங்கர்லால் துப்பறிந்தால்,  நான் உடனே எனது பெயரிலேயே கச்சேரியடியில் நடந்த கொள்ளை சம்பவத்தை துப்பறிய தொடங்குவேன். இப்படி கோழி கிறுக்காய் நிறைய எழுதின விஷயங்கள். அம்மாவுக்கு இந்த எழுத்து பாட்டு என்று டைம் வேஸ்ட் பண்ணினால் பிடிக்காது. பெடியன் கெட்டுப்போயிடுவான். விளைவு எல்லாமே குப்பைக்கூடைக்குள் போனது. கவிதையை கூட யாருக்கும் தெரியாமல் களவாக எழுதிய காலம் அது. இன்றைக்கு “நாளை இன்று நேற்று”என்று என் சந்தோஷத்துக்காக வாசிப்பவர்களை மண்டை கிறுகிறுக்க வைத்தாலும் யாருமே கேள்வி கேட்கமுடியாது. என்னை தவிர வேறு யாரும் இது குப்பை என்று தூக்கி வீசமுடியாது. வாசகர்கள் வீசுவது வேற விஷயம்!இந்த சுதந்திரம், இந்த நொடி … எப்போதும் இருக்கவேண்டுமே.

Kuppai Podubavarkalகுப்பை விஷயத்தில் எங்கள் ஆக்களின் வண்டவாளம் நல்லா வெளியே வரும். பொதுவாக அக்கம் பக்கத்து வளவுகளில் ஆள் இல்லை என்றால் தங்கள் வீட்டு குப்பையை இரவோடு இரவாக மதிலால் எட்டி போட்டுவிடுவார்கள். வாழைக்குலை பழுத்துவிட்டால், அதை சந்தையில் விற்றுவிட்டு, ஓலைகளையும், தண்டுகளையும் கொண்டுவந்து ஒழுங்கையிலோ வீதியிலோ போட்டுவிடுவார்கள். யாழ் இந்து கல்லூரிக்கு பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டுக்கு என்ன ராசியோ, ஊருலகத்தில இருக்கிறவன் எல்லாம், குப்பையை கொண்டுவந்து அந்த வீட்டு மதிலுக்கு முன்னால தான் போடுவான். வீட்டுக்காரர் டென்ஷனாகி, ஒரு நாள் மதிலில கரித்துண்டால் “இங்கே குப்பை போடவேண்டாம்” என்று கொட்டை எழுத்தில் எழுதிவிட்டார். அடுத்தநாள் கலியாணவீட்டு சாப்பாட்டு இலைகளை எவனோ போட்டுவிட்டு போய்விட்டான்.  இவர் டென்ஷனாகி “தயவு செய்து இங்கே குப்பை போடவேண்டாம்” என்று எழுதினார். காலையில் பார்த்தால் யாரோ ஒருவன் கரியில் எழுதியிருந்த எழுத்துக்கு மேலே ஒண்டுக்கு அடித்துவிட்டு போயிருந்தான். சிங்கன் கடுப்பாயிட்டார். “நாய்கள் மட்டுமே இங்கே குப்பை போடும்” என்று எழுதினார். இம்முறை நாய் வேறு அலுவல் பார்த்துவிட்டு போய்விட, தலைவர் தளரவில்லை. நாய்களை அழித்துவிட்டு பேய்கள் என்று மாற்றினார். யாழ்ப்பாணத்தானுக்கு நாயென்ன பேயென்ன. அவன் தன் அலுவலை சரியாகவே பார்த்தான்.

நம்மாள் கடைசில வேறு வழியில்லாம “தயவு செய்து இங்கே உங்கள் குப்பைகளை போடவும்” என்று எழுதினார். “அதென்ன நீ சொல்லி நான் போடுறது” என்றோ என்னவோ, அடுத்தநாள் எவனுமே அங்கே குப்பை போடவில்லை.

யாழ்ப்பாணத்தான் யாழ்ப்பாணத்தான் தான்.


வெளிநாட்டு குப்பை!

bangladeshi-sgசுத்தமான தேசத்துக்கு சிங்கப்பூரை எல்லோரும் சொல்லுவார்கள். அந்த நாட்டின் சுத்தத்துக்கு மூன்று முக்கிய காரணங்கள். அங்கே கையில் குப்பையுடன் எங்கே போடுவது என்று அலையதேவையில்லை. பார்க்குமிடமெல்லாம் குப்பைத்தொட்டி இருக்கும். அப்படியும் தவறி கீழே போட்டுவிட்டாலும், அது நிலத்தில் போய் விழுவதற்கு முன்னரே காட்ச் பிடிக்க ஒரு பெங்காலிக்காரன் இருப்பான். சுத்திகரிப்பு பணியாளர்கள் என்று சாரை சாரையாக பங்களாதேஷில் இருந்து, நிறைய கனவுகளுடனும், காத்திருக்கும் கண்ணீர்களுடனும் வருகின்ற பங்களாதேஷ்காரர்களில் அடிமை வாழ்க்கை சிங்கப்பூரின் சுத்தத்துக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது. அவர்கள் ஏஜெண்டுக்கு கட்டவேண்டிய காசை சேர்க்கவே இரண்டுவருடம் குப்பை பொறுக்கவேண்டும். அதற்கு பிறகு தான் வீட்டுக்கு கலர் டிவியோ, தங்கச்சிக்கு நோக்கியாவோ, மனைவிக்கு பெர்ஃபியூமோ வாங்கி அனுப்பலாம். வாரத்தில் ஆறு நாளும் வேலை. ஏழாம் நாள், ஞாயிறு அன்று செரங்கூன் போய், டெலிபோன் கார்ட் வாங்கி, வீட்டுப்பிரச்சனையை ரோட்டு பப்ளிக் போனில் வைத்து தீர்த்துவிட்டு, மசூதிப்பக்கம் இருக்கும் பங்களா கடையில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு எம்ஆர்டி பிடித்துப்போய் டோமெட்ரியில் படுத்தால், காலை ஐந்து மணிக்கெல்லாம் அள்ளிக்கொண்டு போக வாகனம் வந்துவிடும். மீண்டும் குப்பை பொறுக்க.

Singaporeசிங்கப்பூர் சுத்தமாக இருக்க மூன்றாவது காரணம், பயம். றோட்டில் போட்டு பொலிஸ் பிடித்தால் இருநூறு டொலர் தண்டப்பணம் கட்டவேண்டும் என்று மூலைக்கு மூலை எழுதிப்போட்டிருப்பார்கள். தண்டிக்கிறார்களோ இல்லையோ, அந்தப்பயம் தலைமுறை தலைமுறையாக பரவிவிட்டது. அதனால் ஏன் வம்பு என்று கேள்வியே கேட்காத ஒரு தலைமுறை அந்த நாட்டில்.

அவுஸ்திரேலியா அந்த விஷயத்தில் வித்தியாசம். இங்கே பயத்தினால் எதையுமே சாதிக்கமுடியாது. காரணம் பிள்ளைகளை பயம் காட்டாமல் சுதந்திரமாக வளர்ப்பது தான் இந்த நாட்டின் ஆதாரமான கொள்கை. குழந்தை மரத்தில் ஏறும்போது வேடிக்கை பார்த்து, விழும்போது போய் பிடிக்கும் கொள்கை. அந்தப்பிள்ளைக்கு “குப்பை போட்டால் பைஃன் அடிப்பேன்” என்று சொன்னால் நமக்கு நடுவிரல் காட்டும்.! ஒரே வழி, குப்பை ஏன் போடக்கூடாது என்று சொல்லிக்கொடுப்பது தான். அது ஓரளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது. இங்கே படித்த, பலகாலம் வாழ்கின்ற மக்களுக்கு அந்த பழக்கவழக்கங்கள் இயல்பாகவே வருகிறது. அக்காவின் மகள், நான் கையில் குப்பை வைத்திருந்தால், “மாமா போய் ரபிஷில போடுங்க” என்று தத்தித்தத்தி சொல்லுவாள். பொதுவாக வீதிகளிலோ பொது இடங்களிலோ, ஏன் பிக்னிக் ஏரியாக்களில் கூட இந்த மனப்பான்மை New 3 bins (2)இருக்கும். பாபிகியூ போட்டால், அடுப்பை அழகாக சுத்தப்படுத்தி, அடுத்தவர் பயன்படுத்தும் வண்ணம் தயார்படுத்திவிட்டே போவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் குப்பைக்கு ஒன்று, ரீசைக்கிளுக்கு ஒன்று, புல்லு பூண்டுகளுக்கு ஒன்று என்று மூன்று பின்கள் இருக்கின்றன. தவணை முறையில் வாரம்தோறும் எடுத்துச்செல்ல வாகனம் வரும். இதெல்லாத்துக்கும் சேர்த்து கவுன்சில் வரிப்பணம் என்று வருடம் தோறும் கட்டவேண்டும். சில இடங்களில் குப்பைகளின் அளவுக்கேற்ற வரிப்பணம் என்ற நடைமுறையும் இருக்கிறது.

ஒரு பிரதேசம் சுத்தமாக இருக்க,  ஆங்காங்கே குப்பை தொட்டில்கள்,  சுத்திகரிப்பு பணியாளர்கள், மக்களின் கலாச்சாரம் மூன்றுமே தேவையாக இருக்கிறது. இலங்கையில் நான் இருக்கும் வரையில் இந்த மூன்றுமே பூச்சியம். குப்பைத்தொட்டில்கள் எங்கேயாவது அகப்பட்டாலும் அது நிரம்பி வழிந்து, எட்டிப்போடும்போது ஏதாவது புழு எழுந்து ஹாய் மச்சி என்று சொல்லும். நாங்களும் பதிலுக்கு வாந்தி எடுத்துவிட்டு வரவேண்டும். இது எல்லாவற்றையும் விட மக்களின் மனநிலை. இந்த உலகத்தில், தன் வீடு தவிர மிகுதி எல்லாமே குப்பைத்தொட்டி தானே என்ற மனநிலை. பலகாலமாய் உறுத்தும் கேள்வி இது.

அதெப்படி எங்களுக்கு மாத்திரம் வீதியை இறங்கியவுடன் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை எச்சில் துப்பவேண்டும் போல இருக்கிறது?


Q & A

விகாஸ் சுவார்ப் எழுதிய இந்த நாவலை தான் சிலம்டோக் மில்லியனார் என்று குதறினார்கள். ராம் முஹமட் தோமஸ் என்ற தராவியில் வசிக்கும் இளைஞன் Who will win  a Billion? என்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற நிகழ்ச்சியில் பன்னிரண்டு கேள்விகளுக்கும் எப்படி சரியாக பதில்சொல்லி பில்லியன் ரூபாய்கள் வெல்கிறான்? என்கின்ற கதை. படத்தில் வந்த கதை தான். ஆனால் கேள்விகளும் அதற்கு பின்னால் இருக்கும் சம்பவங்களும் வித்தியாசம்.

200px-Q_and_A_-_black_swan_editionசம்பவங்கள் இந்தியா முழுதும் பயணிக்கும். ராம் எப்படி தோமஸ் ஆகி மொகமட் ஆகிறான் என்று விளக்கும். திமோதி என்கின்ற சேவை மனப்பாங்கு நிறைந்த பாதிரியார், அனாதை ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் போது,  ராம் தோமஸ் ஆகிறான். கிறிஸ்தவ நிறுவனத்துக்குள் வெள்ளைக்கார பாதிரியார்கள் சிலரில் வண்டவாளங்கள், அவர்கள் செக்ஸ் படம் பார்ப்பது எல்லாம் கதையில் வரும். பிரேம்குமார் என்கின்ற பாலிவுட் ஹீரோ எப்படி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கிறான் என்று இன்னொரு சம்பவம். அவுஸ்திரேலியாவை சேர்ந்த இராஜதந்திரியின் வீட்டில் இவன் வேலை செய்கிறான். அங்கே அவுஸ்திரேலிய உச்சரிப்புகளை பழகுகிறான் (No worries, Maite, fair enough). அந்த இராஜதந்திரி ஒரு உளவாளி என்று தெரியவருகிறது.  உளவாளியை போட்டுக்கொடுத்துவிட்டு தப்புவது. பின்னர் ஒரு நடிகையின் வீட்டில் வேலை செய்வது. தாஜ்மகாலில் டூரிஸ்ட் கைட் வேலை. அங்கே தான் நீதாவை சந்திக்கிறான். அவள் ஒரு விலை மாது. காதலிக்கிறான். கதை வெகு இயல்பாக நகரும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அந்த சம்பவம் சார்ந்த கேள்வியும் அதற்கு அவன் சரியாக பதிலளிப்பதாயும் இருக்கும்.

பதினொறாவது கேள்வி ஷேக்ஸ்பியரின் எந்த படைப்பில் கொஸ்டார்ட் என்ற பாத்திரம் வருகிறது? Ask the friend மூலம் தான் உதவிய டீச்சரை அழைத்து அவரிடம் சரியான பதிலை கேட்கிறான். கடைசிக்கேள்வி பீத்தோவன் சம்பந்தமானது. அந்த கேள்விக்கு இவனுக்கு சுத்தமாக பதில் தெரியாது. கையில் இருக்கும் நாணயத்தை சுண்டி, தலை விழுந்தால் ஒப்ஷன் A என்று தீர்மானிக்கிறான். தலை விழுகிறது. வெற்றி பெறுகிறான்.

படத்தில் நடந்தது போலவே அவனை போலீசில் மாட்டுகிறார்கள். அங்கே ஒரு பெண் வக்கீல் இவனுக்கு உதவுகிறாள். இறுதியில் இவன் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட, வெற்றிப்பணம் கைக்கு வர, டிவி நிறுவனம் திவாலாகிறது. கதை முடிவில் அவனுடைய அதிர்ஷ்ட நாணயத்தை அந்த வக்கீல் வாங்கிப்பார்க்கிறாள். அந்த நாணயத்தின் இரண்டு பக்கமுமே தலை தான். “Its my lucky coin, but luck has nothing to do with it” என்று சொல்லி சிரிக்கிறான்!

திரைப்படத்தில் நிறையவிஷயங்களை வெட்டி, இந்தியாவை எவ்வளவுக்கு எவ்வளவு குப்பை நாடாக காட்டமுடியுமோ அப்படி காட்டியிருப்பார்கள். நாவல் அப்படி இல்லை. ஒரு சராசரி இந்தியாவை அதன் நல்லது கெட்டதுகளுடன் எழுதியிருப்பார் விகாஸ். நாவலில் நாடகத்தன்மையோ, நீதாவும் ஜமாலும் கிஸ் அடிப்பதோ எதுவுமே இல்லை. கக்கூஸ் குழிக்குள் விழுந்து எழுந்து ஓடிப்போய் அமிதாப்பிடம் ஓட்டோகிராப் வாங்கும் தராவி குழந்தையும் இல்லை. சொல்லப்போனால் அவன் இறுதியில் தான் தராவியில் வசிக்கிறான். ஆரம்பம் டெல்லியில் தான்.

இந்தப்புத்தகம், திரைப்படம் வெளியாகி தலைவர் இசை என்று தெரிந்தவுடம் ஓடிப்போய் வாங்கி வாசித்த புத்தகம். முடித்த சூட்டோடு படத்தையும் பார்த்து சூடுபட்டுக்கொண்டது தான் மிச்சம். Five Point Someone க்கும் இது தான் நிகழ்ந்தது. ஆனந்த தாண்டவம், கரையெல்லாம் செண்பகப்பூ எல்லாமே சேம் ப்ளட். இதிலே The Namesake ஓரளவுக்கு நாவலுக்கு நேர்மை சேர்த்த திரைப்படம்.

வாசிக்கும்போது நாமே டீஆர் போல கலை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் எல்லாம் சிருஷ்டித்து வாசிப்பதால், நாவல் தரும் அனுபவத்தை எந்த திரைப்படமும் நெருங்ககூட முடியாது என்பது மீண்டும் இதில் நிரூபணமானது.


குப்பை கிளறி!

dumpster-diveகுப்பைகளை கிளறி அதற்குள் இருந்து பயனுள்ள பொருட்களை எடுப்பது. பாவிப்பது. விற்பது என்பது தனியான ஒரு தொழில். Profession. ஆங்கிலத்தில் இதை Dumpster Diving என்று சொல்லுவார்கள். ஒரு ஆங்கில திரைப்படமே வெளிவந்திருக்கிறது. தளபாடங்கள் ஏதுமில்லாத ஒரு வெறுமையான வீட்டுக்குள், எதுவுமே கொண்டுவராமல் உடுத்த உடையுடன் குடியேறிய ஒரு ஜோடி, கொஞ்சம் கொஞ்சமாக சல்லிக்காசு செலவழிக்காமல் குப்பைகளை கிளறி, அவரவர் வேண்டாம் என்று ஒதுக்கிய பொருட்களை வைத்தே அந்த வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டுநடத்துகிறார்கள். Dumpster Diving என்று சும்மா கூகிளில் தேடிப்பாருங்கள். எப்படி குப்பை கிளறுவது, அதில் இருக்கும் நெறிகள், வழிமுறைகள், வாராந்திர கூட்டங்கள், Facebook page என்று அந்த உலகம் தனியாக கலக்கிக்கொண்டிருக்கிறது. இங்கே பழுதான, தேவையில்லை, உபயோகப்படாது என்று நினைக்கும் பொருட்களை வீடுகளில் பரணில் மேல் தலைமுறை தலைமுறையாக போட்டு வைத்திருக்கமாட்டார்கள். எடுத்து வீட்டுக்கு வெளியே வைத்துவிடுவார்கள். அது வேறு பலருக்கு மிகவும் தேவையானதாக இருக்கலாம். டிவி, பிரிட்ஜ், கட்டில் மெத்தை முதல்கொண்டு கொம்பியூட்டர் வரை இப்படி சேகரிக்கலாம். நான் கூட, கராஜுக்கு தேவை என்று இரண்டு கதிரைகள், ஒரு கொம்பியூட்டர் டேபிள் அப்படி எடுத்துவைத்திருக்கிறேன்!

julian_assange_2010-front1விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் ஆசானே. அமெரிக்காவுக்கு கண்ணிலே எண்ணைவிட்டு ஆட்டுபவர். எல்லோருக்குமே தெரிந்ததே. தெரியாத விஷயங்கள் பல இருக்கின்றன. இவர் ஒரு மண்டைக்காய். சின்ன வயதிலேயே(Underground என்ற ஒரு ஆவணப்படம் இருக்கிறது. இயலுமென்றால் பாருங்கள்) கொம்பியூட்டர், கொமுனிகேஷன் சார்ந்த ஹாக்கிங்கில் ஈடுபாடு கொண்டவர். வளைகுடா யுத்தம் நடைபெற்ற காலம். இவருடைய தாய் போருக்கு எதிராக குரல்கொடுக்கும் இயக்கத்தில் இருந்தவர். ஆர்ப்பாட்டம் எல்லாம் போய் செய்வார்கள். ஐந்தாறு பேரு தான் ஆர்ப்பார்ட்டத்துக்கு போவார்கள். அப்போதே தாயிடம் இது வேலைக்காகாது என்று சொல்லி, தனது திறமையால் அமெரிக்க பாதுகாப்புத்துறை கணணி கட்டமைப்பை ஊடறுத்து அங்கிருந்த பல முக்கிய தடயங்களை வெளிக்கொண்டுவந்தார். குறிப்பாக, பாதுகாப்பு வலயம் ஒன்றில் இருந்த மக்களை, அங்கே மக்கள் இருந்தது தெரிந்தும் குண்டு போட்டு தாக்க சொன்னார்கள் என்ற சம்பவத்துக்கான ஆதாரத்தை, படங்கள் மூலம் வெளிக்கொண்டு பலத்த சர்ச்சையை உண்டு பண்ணினார். அப்போதே ஆசானேக்கு ஒரு கொள்கை இருந்திருக்கிறது.

“தகவல்களை திருடி உலகுக்கு வெளிப்படுத்த வேண்டுமே ஒழிய, தகவல்களை மாற்றுவதோ, அதை விற்று பணம் சம்பாதிக்கவோ கூடாது.”

சின்னவயதில் இருந்த இந்த கொள்கை விக்கிலீக்ஸ் வரைக்கும் நீடித்தது. விக்கிலீக்சை கொண்டுநடத்த தான் அவர் பணம் கேட்டாரே ஒழிய, அந்த ரகசியங்களை வேறு ஒரு நாட்டுக்கு விற்று பணம் பார்க்கும் வேலையை அவர் செய்யவில்லை. அந்த வகையில் அவர் ஒருவித எதிக்கல் ஹக்கர் (Ethical Hacker).

udnerground-660x400இவருக்கும் குப்பைக்கும் கூட தொடர்பு இருக்கிறது. சின்ன வயதில் அவுஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிலையத்தின் மொடம்களை தொடர்பு கொண்டு அதன்மூலம் இலவசமாக வெளிநாட்டு எக்ஸ்சேஞ்களை இணைத்து, அமெரிக்க பாதுகாப்பு தளத்தை ஊடறுக்க அவருக்கு உள்ளூர் மொடம்களின் ரெஜிஸ்டர் லிஸ்ட், பாஸ்வேர்ட் எல்லாம் தேவைப்பட்டது. அதற்கு அந்த நிறுவனத்துக்கு பின்னாலே கிடந்த குப்பைக்கூடைக்குள் போய் அவ்வப்போது தேடிப்பார்க்க ஒருநாள் அது கிடைத்தேவிட்டது. அதை வைத்து நெட்வொர்க் சிஸ்டத்துக்குள் புகுந்து, அமெரிக்க நெட்வேர்க் வரைக்கும் ஊடுருவினார் ஆசானே.

ஆசானே இப்படி குப்பைத்தொட்டியில் போய் பாஸ்வோர்ட் மற்றும் தகவல்களை தேடியதை, Computer Security என்ற பாடத்தில் Dumster Diving பற்றிய செக்ஷனில் படிப்பித்தார்கள். எதை குப்பையில் போடுகிறோம் என்பதில் அவதானமாக இருக்கவேண்டும்.  முக்கியமான டோக்கியூமண்டுகள், படங்கள், பழுதடைந்த ஹார்ட்டிஸ்க்குகள், சிடிகள் இவற்றை குப்பையில் போடமுதல் நன்றாக நிர்மூலமாக்கிவிட்டே போடவேண்டும்.

1332247490565_6443162

இந்த சுத்திகரிப்பு பணி ”Facebook இலும் முக்கியம். மூன்று வருடங்களுக்கு முதல் ஏதோ ஒரு கெத்தில் “ஐ லவ் யூ நமிதா” என்று போட்டவர்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ் மாறியதும் அவசர அவசரமாக அவற்றை அழித்த சம்பவங்கள் பார்த்திருக்கிறேன். On a serious not, தனி நபர் கருத்து என்பது அடிக்கடி மாறக்கூடியது. இன்றைக்கு கொம்யூனிஸ்டாக இருப்பவன் நாளைக்கு முதலாளித்துவத்துக்கு மாறலாம். கடவுள் இல்லை என்பவன், இருக்கலாம் என்று மாறி இரண்டு வருடங்களில் மாரி ஆத்தாவுக்கு கூழ் ஊத்தலாம். இந்த மாற்றங்களை அவரவர் டைம் லைனில் கூர்ந்து கவனித்தால் அவதானிக்கலாம். இது இயல்பு தான். இப்படியே விட்டுவிடுவதில் எந்த பாதகமும் இல்லை தான். ஆனால் எங்கள் மத்தியில் ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். “நீ அன்னிக்கு அப்பிடி சொன்னாய், இன்னிக்கு இப்பிடி சொல்ற, ஏன் மாத்திற? ஏமாத்திற!” என்றெல்லாம் குறை கண்டுபிடிக்கும். இவர்களை ஒதுக்கவும் முடியாது. Whistle blowers. நல்லதை சொல்லுபவனை விட, அவனில் குறை காணுபவனை தான் கூட்டம் அதிகம் லைக் பண்ணும். இந்த சிக்கல்களை தீர்க்கத்தான் என் Facebook timeline ஐ நான் அடிக்கடி கிளீன் பண்ணிவிடுவேன். தேவையில்லாத ஸ்டேடஸ்கள், அவ்வப்போது போட்ட மொக்கைகள், அர்த்தமில்லாமல் போன விஷயங்கள், எனக்கும் எவருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை என்று தெரியும் விஷயங்கள், எல்லாமே ஒரே டிலீட் தான். நீண்ட காலத்தில் தேவையற்ற மனச்சோர்வை தடுக்க இந்த கிளீன் அப் ப்ரோசஸ் உதவி செய்யும்.

படலை கூட விதிவிலக்கில்லை. ஆரம்பத்தில் நிறைய Gadgets போட்டிருந்தேன். இப்போது side bar கூட தேவையில்லை என்று தூக்கிவிட்டேன். “மீனுக்கு உணவு கொடுங்கள்”, “பார்த்தியா எனக்கு இத்தனை ஹிட்டு”, “லண்டனில் இருந்து வரும் வாசகரே வணக்கம்”, “எனக்கு பிடித்த படம் உதிரிப்பூக்கள், God Father” வகை Gadgets படலையில் கிடைக்காது.  எது குப்பை என்பது நாளுக்கு நாள் புரிய ஆரம்பிக்கிறது. “உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்” கதையில் கூட ஏகப்பட்ட தவறுகள், தேவையில்லாத பாசாங்குகள். திருத்தவேண்டும். அல்லது தூக்க வேண்டும். ஒரு நாள் மொத்த படலையே குப்பை என்று அறியும்போது தளமே இல்லாமல் போகும் சாத்தியமும் இருக்கிறது!


குப்பை மேட்டில் ரோஜா செடி பூப்பதில்லையா?

boys1-1பாய்ஸ், வெளிவந்த சமயம் பலத்த சர்ச்சைகளை உருவாக்கிய திரைப்படம். குறிஞ்சி முதல் ஷோ போய்ப்பார்த்துவிட்டு வந்து “என்னடா இவ்வளவு வல்கரா எடுத்திருக்கிறாங்கள்” என்று குறைப்பட்டான். “வேஸ்ட்டு படம் பார்க்காதீங்கடா” என்றான். “இல்லடா நாளைக்கு சினிசிட்டிக்கு போகப்போகிறோம். பாட்டுக்காகவே பார்க்கலாம்” என்று நானும் கஜனும் சொல்ல. “எல்லோரும் போனா, ஒகே நானும் வாறன், ஒரு கொம்பனிக்கு” என்று சொல்லி அடுத்தநாள் காலை எட்டுமணிக்கே வீட்டில் அவன் ஆஜர். மூன்று மணி நேர படம் ஆவென்று பார்த்துவிட்டு முடிந்து வெளியே வரும்போது மீண்டும் சொன்னான்

“என்னடா இவ்வளவு வல்கரா எடுத்திருக்கிறாங்கள்?”.

boysஇது அமெரிக்கன் பை, போர்கீஸ் போன்ற ஸ்டைலில் வந்த படம் இது. அதை ஷங்கர் எடுத்ததால் சரோஜாதேவி படம் பார்த்தவன் எல்லாம் தன்னை உத்தமனாக காட்டவேண்டிய நிலை வந்தது. பாய்ஸ் இளைஞர்களுக்கான படம். ஒரு என்டர்டெய்னர், பார்த்தமா, விசில் அடிச்சமா படம் முடிய ரோலக்சில் மட்டன் புரியாணி அடிச்சமா என்ற ரீதியில் கடந்துவிடவேண்டிய படம். இது தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் என்று கூச்சல் போட்டார்கள். சங்கர் நினைத்தால் தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கலாம் என்றால், அவ்வளவு வீக்கான கலாச்சாரமா எங்களது என்ற சந்தேகம் வருகிறது. அதை விட அமெரிக்க கலாச்சாரம் ஒன்றும் அத்தனை கெட்டதும் இல்லை. ஐன்ஸ்டீன் Federal culture பற்றி எங்கேயோ குறிப்பிட்டதாக ஞாபகம் வருகிறது. கெடுவதற்கு சந்தர்ப்பம் இருந்தும் கெடாமல் எந்த ஒரு இனம் சமாளிக்கிறதோ அந்த இனத்தின் கலாச்சாரமே நிஜமான கலாச்சாரம். துப்பாக்கி முனையிலும், கத்தி முனையும், இழுத்துப்போர்த்தியும், கூழ் முட்டை எறிந்தும் ஓரளவுக்கு மேலே எந்த கலாச்சாரத்தையும் காப்பாற்றமுடியாது. அப்படிப்பட்ட கலாச்சாரம் மனித இனத்துக்கு தேவையும் கிடையாது. Without a composer, what can an award do? என்று இளையராஜா சொன்னது போல!

பாய்ஸின் மிகப்பெரிய பலம் பாடல்கள்.  ஒரே பலம் என்றும் கூட சொல்லலாம். “யாரைக்கேட்டு எந்தன் நெஞ்சில்”  பாடல் எல்லாம் ரகுமான் என்ற எட்டாவது அதிசயத்தால் மாத்திரமே முடியக்கூடிய பாடல். படத்தில் பிட்டாக வந்த “ப்ளீஸ் சேர்”, ஐயப்பா, பாடல்கள் கூட கிளாசிக்காக இருக்கும். எதற்காக அல்பத்தில் வெளியிடவில்லையோ தெரியாது.

இந்த பாட்டும் ரகுமானின் ஒரு மாஸ்டர் பீஸ். சரணம் எல்லாம் எல்லாம் சான்ஸே இல்லை. வரிகளும் அப்படியே. வித்தியாசமான ஐடியா. அதை அப்படியே இயல்பாக எடுக்காமல் தேவையில்லாமல் விட்டலாச்சார்யார் வேலை செய்வது தான் ஷங்கரின் பிரதான பலவீனம். இதே ஐடியாவை “காதலிக்கும் பெண்ணின் கைகள்” பாட்டிலும் பயன்படுத்தியிருப்பார். ஆனால் தலைவர் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் வண்ணம் அந்த பாட்டில் திடீரென்று ஒரு தவில் தாளத்தை நுழைப்பாரே. ஐயோடா.

 

குப்பைக்கவிதை!

நீயும் குப்பை, நானும் குப்பை
சேர்ந்து பொறுக்கினோம் அதுவும் குப்பை
நிலவின் ஒளியில் நீயும் நெளித்து
நெடித்து வளைத்து நிற்க கண்டு
dhritarashtra_and_gandhari_by_vachalenxeon-d5pqsefரெண்டும் ஒண்டு எண்டு நினைச்சு
மதியை இழந்து தளர்ந்த நேரம்
காமம் கடுகென உடலது பரவிட
கலப்பை உழுது கண்ட கமத்தில
விளைஞ்சது எதுவோ ஆறடி பயறோ?
பூனைக்கு ஏதும் பிறந்திடும் புலியோ?
அதுவும் வளர்ந்து ஆனது குப்பை.
குப்பைக்குள் குண்டு மணிவரு மென்றுநம்பி
இது தான் கடைசின்னு பலமுறை கெஞ்சி
இனியும் ஏலாது எண்டு காந்தாரியும் சொல்லி
ஓய்ஞ்சு ஒடிஞ்சு நிமிர்ந்து பார்த்தா
கண்ணுக்கு முன்னாலே நிக்குது நூறு
நூறும் சேர்ந்து நாறும் வாயால்
நம்மைப்பார்த்து உறைக்கச்சொன்னது
நீரும் குப்பை, நாமும் குப்பை
நாம சேர்ந்தா நாடே குப்பை!

 

&&&&&&&&&&&&&&

வியாழமாற்றம்-11-04-2012 : அஞ்சு அழகிகள்

$
0
0

 

சோதி அக்கா

pukal2[3]எண்பதுகளின் இறுதி அது. டிவியில் மகாபாரதம் போய்க்கொண்டிருந்த சமயம். விளக்குமாற்று ஈர்க்கை வளைத்து தையல் நூலால் வில்லு சரிக்கட்டி வைத்திருப்பேன். நான்கைந்து ஈர்க்குகள் என் காற்சட்டைக்கு பின்னால் செருகி இருக்கும். வாழைமரங்களுக்குள் ஒளிந்திருந்து, அம்புறாத்துணியில் இருந்து ஒரு ஈர்க்கை எடுத்து, வில்லில் ஏற்றி இழுத்து விட்டால் அடுத்த வாழையில் போய் சரக்கென்று குத்தி நிற்கும். குத்திய இடத்தில் வாழைச்சாயம் இரத்தமாய் ஓடும். “இன்று போய் போர்க்கினி நாளை வா” என்று ராமன் டயலாக்கை வாழையை பார்த்து சொல்லுவேன். அந்த சண்டையில் இராமன் பீஷ்மன் வாலி அர்ச்சுனன் எல்லாம் ஒவ்வொரு வாழைக்கு பின்னால் அம்போடும் வாளோடும் நிற்பார்கள்.

நன்றாக ஞாபகம் இருக்கிறது. இப்படி குருஷேத்திரம் அகோரமாக நடந்துகொண்டிருந்த தினத்தில் அக்கா கேட்டடியில் வந்து தட்டினார். ஓடிப்போய் கேட்டை திறந்துவிட்டு, அம்மாவிடம் “சோதி அக்கா வந்திருக்கிறா” என்று கூவிவிட்டு மீண்டும் போர்க்களத்துக்கு தயாரானேன். “டேய் டேய் இங்க வாடா” என்று கூப்பிட்டார். கூச்சமாக இருந்தது. பின்னால் வேறு ஈர்க்கு ஒன்று டீப்பாக இறங்கியும் விட்டது. சங்கடத்தோடு “என்னக்கா?” என்றேன். “என்ன விளையாடுறாய்?” என்று கேட்டார். தயங்கியபடி, சும்மாதான் மகாபாரதம் விளையாடுறன் என்று சொல்ல, “நீ யாரு?” என்று திரும்ப கேட்டார். “அர்ஜுனன்” என்றேன். “பார்த்துடா, இந்த முறையாவது சில்லை ரிப்பயர் பண்ணுற நேரத்தில கர்ணன் மேலே அம்பை விட்டிடாத” என்றார். புரியாவிட்டாலும் “ஒகே அக்கா” என்று சொல்லிவிட்டு நான் வாழைத்தோட்டத்துக்குள் ஓடிவிட்டேன்.

சோதி அக்கா அப்போது யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கிறார். அப்பாவின் மாணவி. நெருங்கிய சொந்தம் என்பதால் வீட்டுக்கு அடிக்கடி வந்து படிப்பார். அவருடைய தகப்பன் தமிழரசுக்கட்சிகாரர், தமிழறிஞர். கவிஞர். கவிதை மகளுக்கும் தொற்றியது. கவிதாயினி. அவ்வப்போது எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவார். கவிதைகள் எல்லாமே விடுதலை, புரட்சி சார்ந்த கவிதைகள் தான். அவர் கவிதைகள் எதுவும் இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். ஒன்றிரண்டு முத்துகள் மாட்டின. இப்பிடி எல்லாம் எழுதியிருக்கிறீங்களா அக்கா?

அடுத்த
கிறிஸ்மஸ் கரோலில்
என்னிடம் நீ
அன்றேல்
உன்னுடன் நான்!

அந்தவயதில் அவரின் கவிதை எனக்கு புரியவில்லை. ஆனால் பலர் அவர் கவிதைகளில் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். “அவள் பிரச்சாரத்திலேயே பல பெட்டைகள் இயக்கத்துக்கு போனதுகள்” என்று அம்மா சொல்லுவார்… சோதி அக்காவும் ஒருநாள் இயக்கத்துக்கு போய்விட்டார்.

பயிற்சி முடிந்து வந்து, அப்போது SALT என்று அழைக்கப்பட்ட மாணவர் இயக்கத்தில் இருந்தார். பரமேஸ்வரா சந்தியடியில் சிவன் ஸ்டோர்ஸ் கடைக்கு பக்கத்திலே இருக்கே ஒரு இரண்டு மாடி கட்டிடம். அது தான் சோல்ட் முகாம். முன்னர் இந்தியன் ஆர்மி அங்கே இருந்து, இயக்கம் அதற்கு சக்கை வைக்க முயன்றது எல்லாம் “விறகிலே” வந்திருக்கிறது . மாணவர் இயக்கத்தில் பிரச்சாரம், சிவில் நிர்வாகம் என்று பல பொறுப்புகளில் இருக்கிறார். எங்கள் வீடு அருகிலேயே இருந்ததால் அடிக்கடி வந்து போவார். அவர் வரும் ஸ்டைலே அழகாய் இருக்கும். இரட்டைப்பின்னல் தலைமயிர் அள்ளி சுருட்டி முடியப்பட்டிருக்கும். செக் சேர்ட் வெளியே டக் பண்ணாமல் விட்டு, சிலவேளைகளில் நடுவில் பெல்ட் கட்டுவார். சிலவேளை இருக்காது. லேடிஸ் சைக்கிள் தான். சிரித்தால் எங்கள் ஊரான நயினாதீவு லுக் அப்படியே இருக்கும். “அவளை போல நல்ல பிள்ளைய பார்க்கவே முடியாது, ஒரு சொல்லு குத்திற மாதிரி கதைக்கமாட்டாள்” என்று நேற்று கேட்டபோதும் அப்பா சொன்னார்.

பங்கர் ஒன்று டிசைன் பண்ணி, லெவல் புள்ளிகள் கணக்கிடவேண்டும் என்று அப்பாவிடம் ஒருநாள் உதவிக்கு வந்தார். கோவில் வீதியில் கந்தன்கருணைக்கு பின் வளவில் இருந்து ஆரம்பித்து இரண்டு மூன்று வளவுகள் நீண்டு போகும் பெரும் பங்கர் டிசைன் அது. அப்பா பயந்துவிட்டார். என் அப்பா அல்லவா. “உங்களுக்கு இதை செய்து குடுக்கிறது வெளிய தெரிஞ்சா நான் கொழும்பு பக்கமே போகேலாது, நீயே படிச்சத வச்சு மனேஜ் பண்ணு” என்று சொல்லிவிட்டார். அக்கா சிரித்தபடியே, “சும்மா கேட்டா செய்யமாட்டீங்க, பங்கருக்குள்ளேயே கொண்டுபோய் வச்சா அளக்கதானே வேண்டும்” என்று பகிடியாக மிரட்டினார். அப்பா நேற்று இதை ஞாபகப்படுத்தி “அவள் சீரியஸாக சொன்னாளோ பகிடியா சொன்னாளோ, எனக்கு வயுத்த கலக்கீட்டுது” என்றார். பின்னர் அந்த பங்கரை வேறு யாரையோ வைத்து டிசைன் பண்ணி கட்டி முடித்துவிட்டார்கள். நீண்டகாலமாக பாவனையில் இருந்த புகழ் பெற்ற பங்கர் அது.

அதற்கு பிறகும் அக்கா அடிக்கடி வருவார். தண்ணி குடிக்க, டீ குடிக்க… அம்மாவிடம் கேட்டேன். அவ்வளவாக ஞாபகம் இல்லை என்றார். கொஞ்ச நாளிலேயே இந்த மாணவர் இயக்கம் எல்லாம் வேண்டாம் அடிபாட்டுக்கு போகப்போகிறேன் என்று சொல்லிவிட்டு புஃரொன்ட்லைனுக்கு  போய்விட்டார். யாரோடும் தொடர்பில்லை. தகவல்கள் எதுவும் இல்லை. அந்த வருட ஜூலையில் ஆனையிறவு அடிபாடு தொடங்கி இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.  விடியக்காலமை சந்திக்கடையில் பேப்பரை வாங்கி அவசர அவசரமாக பிரட்டியபோது தான் சோதி அக்காவின் படம்போட்டு தோற்றம் மறைவு விவரங்களோடு கண்ணீர் அஞ்சலி இருந்தது. அவரது இயக்கப்பெயர், என் கதைகளில் கூட அவ்வப்போது தலைகாட்டும். டக்கென்று ஒரு பெண் பெயர் வேண்டுமென்றால் அது தான் முதலில் வந்து விழும். உறுதியான மாற்றங்களை ஏற்படுத்திய என்னை கவர்ந்த பெண்களை பற்றி எழுத ஆரம்பித்துவிட்டு சோதி அக்காவை விட்டுவிட்டால், திண்ட சோறு செமிக்காது.

சோதி அக்கா வேறு யாருமில்லை. அவர் தான், முன்னால் மத்திய கல்லூரி அதிபரான சண்முகநாதபிள்ளையின் மகளான, பெண் மாவீரர்களில் முதன் முதலில் உயர் ராங் வாங்கிய

“கப்டன் வானதி”


மார்கரட் தட்சர்

3980674-3x2-700x467எழுபதுகளின் இறுதியில் பிரிட்டனில் தொழிற்கட்சி ஆட்சியில் இருக்கிறது. இடதுசாரி கொள்கைகள் உச்சத்தில் இருந்த சமயம். நாட்டின் பொருளாதார நிலைமை மகா மோசம். பிரிட்டனின் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக ஒடிந்துபோய், வளம் என்பது அதன் எல்லைக்குள்ளேயே சுருங்கிவிட்டது. அரசுடைமையான மையப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பு, இறுக்கமான சட்ட அமைப்பு என்று எல்லாமே வீண் செலவுகளுடன் அப்படியே இருக்கிறது. வரவுக்கு மீறிய செலவு. பணவீக்கம். மக்களும் அப்படியே. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உருவான வேலையில்லா திண்டாட்டாம் மக்கள் மனதில் ஆழமான எண்ணத்தை விதைத்துவிட்டது. எப்பாடுபட்டாவது ஒரு வேலையை தேடுதல் வேண்டும். அந்த வேலையிலேயே காலம் முழுக்க குப்பை கொட்டுதல் வேண்டும். ரிஸ்க் எடுத்தால் வேலை போய்விடும். தொழில் தொடங்கினால் எப்போது சரியும் என்று தெரியாது. வேலை முக்கியம். சங்கங்கள் ஆரம்பித்தனர். வேலையை காப்பாற்றிக்கொள்ள எல்லாவகை முயற்சிகளையும் செய்தார்கள். முன்னேற்றம் என்பது முதலைக்கொம்பானாது. ஆளாளுக்கு கப்பல் கட்டி தேசங்கள் தேடிய பிரிட்டன் கலாச்சாரம் ஒழிந்துவிட்டது. நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் தப்பினால் போதும் என்ற நிலை தான். விளைவு?

சம்பளஉயர்வு அரச துறையில் இல்லை என்று அறிவித்து விட, தொழிற்சங்கங்கள் கொதித்து எழுந்தன. எங்கேயும் வேலை நிறுத்தம். வைத்தியசாலை தொழிற்சங்கங்களில் இருந்து குப்பை அள்ளும் தொழிலாளர் வரை எல்லோருமே வேலை நிறுத்தம் செய்தார்கள். மயானத்தில் புதைகுழி தோண்டுபவர்கள் கூட மண்வெட்டியை தூர வீசிவிட்டார்கள். அந்த குளிர்பருவத்தில் மொத்த பிரிட்டனுமே நாறியது. “Winter Discontent” (குளிர்பருவ அதிருப்தி), என்கின்ற ஷேக்ஸ்பியரின் பிரபலமான வாக்கியத்தால் அந்த நிலைமையை குறிப்பிடுவார்கள்.

தேர்தல் வருகிறது. தாராளமய திறந்த பொருளாதார கொள்கைகளை முன்னிருத்தி கொன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வருகிறது. பிரதமராக மார்கரட் தட்சர். தட்சரின் கொள்கைகள் இலகுவானவை. ரிஸ்க் எடுப்பவர்கள், தொழில் முயற்சி செய்பவர்கள் தான் ஒரு நாட்டின் ஆதாரமான பொருளாதார வளங்கள். அவர்கள் இல்லாவிட்டால் அரசாங்கம் இயங்க முடியாது. ஏழை எளியவர்களுக்கும் உதவமுடியாது. தட்சர் ஆபிரகாம் லிங்கனின் இந்த வசனங்கள் எழுதப்பட்டிருந்த துண்டுச்சீட்டை எப்போதும் தன் கைப்பையில் வைத்திருப்பாராம்.

You cannot strengthen the weak by weakening the strong.
You cannot bring about prosperity by discouraging thrift.
You cannot help the wage-earner by pulling down the wage-payer.

இது முதலாளித்துவத்தின் அடிப்படை தத்துவம். தட்சருக்கு இன்னொரு பக்கமும் இருந்தது. வரவுக்கு மீறி செலவு செய்பவன், அதுவும் கடன் வாங்கி செலவு செய்பவன் ஒரு மகாபாவி என்பது அது. இந்த இரண்டு கொள்கைகளும் கலக்கும் புள்ளியை தான் Fiscal Policy என்பார்கள். அதன் தமிழ் எனக்கு தெரியாது.  ரொனால்ட் ரேகன் இதை வைத்தே அமெரிக்காவை இலாவகமாக நிமிர்த்தினார். தட்சரும் நிமிர்த்தினார். ஆனால் இலாவகமாக இல்லாமல் சுத்தியலால் அடித்து! அதனால் தான் அவரை இரும்பு பெண்மணி என்றழைக்கிறார்கள்.

தட்சரின் அப்பா ஒரு பலசரக்கு வியாபாரி. எந்த பொருளை கொள்முதல் செய்யலாம், தன வியாபாரத்துக்கு எவ்வளவு வங்கிக்கடன் வாங்கலாம், வியாபாரத்தை எப்படி பெருக்கலாம் என்ற பல வித யோசனைகளை சில்லரை வியாபாரத்தில் இருக்கும். அங்கே ஐஞ்சு லட்சம் ரூபாயை போட்டு ஒரு பொருளை வாங்குவது கூட ரிஸ்க் தான். சின்ன வயதில் கடையில் அப்பாவோடு இருந்து வியாபாரத்தை நோட்டம் விட்ட தட்சருக்கு இந்த விஷயங்கள் ஆழப்பதிந்துவிட்டன. கணவரும் ஒரு பிஸினஸ்காரன் தான். ஆட்சிக்கு வந்தபின் தட்சர் அந்த போஃர்மியூலாவையே கொஞ்சம் பரந்த அளவில் பயன்படுத்தினார்.

முதலில் செலவை கட்டுப்படுத்தினார். நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட நிவாரணங்கள் காலி. கூடவே நாணயமதிப்பை மிதக்கவிட, ஆரம்பத்தில் நிலைமை இன்னமும் மோசமானது. வேலையின்மை அதிகரித்தது. இது வேலைக்காகாது என்று இறுதியில் பல நிறுவனங்களை தனியார்மயப்படுத்தினார். தொழிற்சங்க சட்டங்களை மீள வரையறுத்தார். யாராவது ஸ்ட்ரைக் பண்ணுவதாக இருந்தால், முதலில் உறுப்பினர் மத்தியில் வாக்கெடுப்பு நிகழ்த்தி பெரும்பான்மை இருந்தால் மாத்திரமே ஸ்ட்ரைக் பண்ணலாம் என்ற சட்டம் அதில் முக்கியமானது. அதை எதிர்த்து ஒன்றிரண்டு ஸ்ட்ரைக் நிகழ்ந்தாலும் அதையும் அடக்கி ஆள, முதலீட்டாளர்களுக்கு பிரிட்டனில் நம்பிக்கை வர, பொருளாதாரம் கிடு கிடுவென வளர்ந்தது.

ரொனால்ட் ரேகனும், தட்சரும் நம்பிய, கடைப்பிடித்த Fiscal Policy அடுத்த முப்பது வருடங்களில் அனேகமான உலக நாடுகளை ஆட்கொண்டது எனலாம். வெற்றியும் பணவெறியும் பேராசையும் அதை அதள பாதாளத்துக்கு உலகை, குறிப்பாக மேற்குலகை கடந்த பத்தாண்டுகளாக கொண்டு சென்றாலும், அதை முதலாளித்துவத்தின் தோல்வியாக கொள்ளலாமா? என்றால் அது சந்தேகமே. கார்ல் மார்க்ஸ் சொன்ன முதலாளித்துவத்தில் உருவாகப்போகும் புரட்சி இன்னமும் வரவேயில்லை. காரணம் அதற்கான மாற்றீடுகள் இல்லாமையே. முதலாளித்துவத்தை சரியாக கடைப்பிடித்தால் தப்பிக்கலாம் என்று அவுஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிஸ் போன்ற நாடுகள் நிரூபித்திருக்கின்றன. அமேரிக்கா கூட குலைந்துவிடவில்லை. கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது. இது 92இலும் உருவானது. பில் கிளிண்டன் வந்து நிமிர்த்தினார். மீண்டும் புஷ் வந்து சொதப்பினார். மற்றும்படி இதை முதலாளித்துவத்தின் தோல்வி என்று அலறுவது வெறும் prejudice.

தட்சர் வட அயர்லாந்து போராட்டத்தை கொடூரமான முறையில் அடக்கியவர், ஆசிய குடிவரவை கடுமையாக எதிர்த்தவர், இனவாதி என்றெல்லாம் கறுப்புபக்கங்களை கொண்ட பெண் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அதற்காக அவரை முற்றுமுழுதாக புறக்கணிக்க முடியாது. தட்சரை தொழிலாளர் வர்க்கத்தின் எதிரி, முதலாளித்துவத்தின் அடிமை அது இது என்று ஏச்சு பேசுபவர்கள் இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்தபோது சிலர் கொண்டாடியிருக்கிறார்கள். பிரிட்டன் இன்றைக்கு இருக்கும் நிலையோடு 1979ம் ஆண்டை ஒப்பிட்டுப்பார்த்தால் தட்சரின் முக்கியத்துவம் புரியும்.  எப்படி செய்தார்கள் என்பதை விட என்ன செய்தார்கள் என்பதை வைத்தே தலைவர்களை சரித்திரம் தீர்மானிக்கிறது. தட்சர் இரும்புப்பெண்மணி தான்.  ஆனால் முக்கியமான தலைவர். அதுவும் எண்பதுகளில் பிரிட்டனுக்கும் உலகத்துக்கும் தேவைப்பட்ட தலைவர்.


 

இந்திரபிரியதர்ஷினி

css1255நம் எல்லோருக்கும் பரிச்சயமானவர். ஆனாலும் தட்சரை பற்றி எழுதிவிட்டு இந்திராவை கடந்து போக முடியாத அளவுக்கு இரண்டு பெண்களிடமும் அவ்வளவு ஒற்றுமை இருக்கிறது.  தட்சர் ஆட்சிக்கு வந்தபோது பிரிட்டன் என்ன நிலையில் இருந்ததோ அதே நிலையில் தான் இந்திரா வந்தபோதும் இந்தியா இருந்தது. அதற்கு மருந்தாக தட்சர் முதலாளித்துவத்தை பாவித்தார் என்றால் இந்திரா சோஷலிசத்தை பாவித்தார் அவ்வளவே. உடனே இந்திராவை கொம்யூனிஸ்ட், கொம்டேர் என்று எண்ணிவிடவேண்டாம். பங்களாதேஷ் பிரிவினையின் போது தான் இந்திய அமேரிக்கா உறவுகள் அதலபாதாளத்துக்கு சென்றது. உதவிகள் நிறுத்தப்பட்டது. உடனே இந்திரா சோவியத் பக்கம் சாய்ந்தார். உதவிகள் பெற்றார். அமெரிக்காவையும் முதலாளித்துவத்தையும் சாடத்தொடங்கினார். கம்யூனிசம் பற்றிய ஒரு தவறான புரிதலும் இந்திராவுக்கு இருந்தது. வறுமையை போக்க கம்யூனிசம் ஒரே வழி என்று நம்பினார். தனியார் நிறுவனங்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. எதிர்த்தவர்கள் ஈவு இரக்கமில்லாமல் ஒடுக்கப்ட்டார்கள். கோதுமை இறக்குமதி விஷயத்தில் மீண்டும் அமெரிக்காவுடன் சச்சரவு. விளைவாக தன்னிறைவு பொருளாதாரத்தின் அவசியத்தை உணர்ந்தார். பசுமைப்புரட்சியை ஊக்குவித்தார்.

தட்சர் முறை தான் இங்கேயும். ஆனால் கொள்கைகள் ஏறுக்கு மாறு. ஆச்சர்யமாக அது வேலை செய்தது. பணவீக்கம் குறைந்தது. பணம் வந்தது. தட்சர் எதையெதை தனியார் மயப்ப்டுத்தினாரோ அதெல்லாம் இங்கே அரசுடமையானது. நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், நெசவு, காப்புறுதி என்று எல்லாமே.  நாணயப்பெறுமதியை மிதக்கவிட்டார். ஆனால் வேறு பல சிக்கல்கள் வந்தன. தேர்தல் மோசடி செய்தார் என்று நீதிமன்றம் அறிவித்துவிட,  திடீரென்று எமர்ஜென்சி கொண்டுவந்தார். எதிரிகள் எல்லாம் உள்ளே போனார்கள். திமுக ஆட்சியும் குஜராத் ஆட்சியும் தான் அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்கள். இரண்டு சட்டசபைகளையும் கலைத்தார்.

தட்சருக்கு Falklands தீவுகளில் ஆர்ஜெண்டீனாவோடு போர் என்றால் இந்திராவுக்கு பாகிஸ்தானோடு போர். தட்சர் வட அயர்லாந்து போராட்டத்தை ஈவு இரக்கமில்லாமல் ஒடுக்கினால், இந்திரா சீக்கிய புரட்சியை ஒடுக்கினார். தட்சர் கொலை முயற்சியில் இருந்து மயிரிழையில் தப்பினார். இந்திராவால் தப்ப முடியவில்லை. அவருடைய வீட்டில் வைத்தே மெய்க்காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த இடத்தை நேரில் பார்த்திருக்கிறேன். இந்திராவின் வீட்டை அணு அணுவாக சுற்றிப்பார்த்து வியந்திருக்கிறேன். டெல்லியில் எனக்கு மிகவும் பிடித்த இடம் அந்த வீடு. அதவும் அவருடை அறையை பார்க்கவேண்டுமே. புத்தக அலுமாரிகள் எல்லா மூலைகளிலும். கரையில் ஒரு ஈசி சேர். படிக்கும் மேசை. அற்புதமான வீடு அது. கண்காட்சிக்காக திறந்துவிட்டிருக்கிறார்கள். டெல்லி போனால் மிஸ் பண்ணீடாதீர்கள்.

167156_478824236414_3180668_n

ஸ்ரீமாவோ பண்டாராநாயக்கா இந்திராவை கொப்பி பண்ணி தான்  பொருளாதார கொள்கைகள் வகுத்தார். அந்த காலத்தில் இந்திராவுக்கு இலங்கை மீது ஒரு நல்லெண்ணம் இருந்தது.  ஆனால் ஜே ஆர் வந்து தாராளமய கொள்கைகளை புகுத்தியதை அடுத்து அவரை அமெரிக்காவின் ஊதுகுழல் என்று இந்திரா வர்ணித்தார். 83 கலவரத்தின் போது ஜேஆருக்கு இந்திரா தொலைபேசியில் அழைத்து கிழி கிழி என்று கிழித்தது எல்லோருக்குமே தெரிந்ததே. ஆனால் என்ன காரணத்தாலோ இராணுவத்தை அப்போது அனுப்பவில்லை. 

இந்திரா உயிரோடு இருந்திருந்தால் இலங்கை பிரச்சனை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும் என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். இன்னும் சிலர் டெல்லியில் தப்பியிருந்தாலும் ஸ்ரீபெரும்புதூரில் செத்திருப்பார் என்பார்கள். அப்படி யோசித்து பிரயோசனமில்லை. What if என்று கடந்த காலத்தை யோசிக்க ஆரம்பித்தோமேயானால் விஜயனும் அவன் சகோதர்களும் எங்கள் நாட்டில் காலடியே எடுத்துவைத்திருக்கமாட்டார்கள்!


அவ்வையார்

தமிழ் வரலாற்றில் பெண்ணை தெய்வமாக, அம்மாளாச்சியாக, குத்துவிளக்காக பார்த்தோமே ஒழிய பெண்ணை பெண்ணாக பார்க்கும் தைரியம் ஆண்களுக்கு வரவேயில்லை. காட்டவேண்டும் என்று பெண்களும் பெரிதாக நினைக்கவில்லை. Stubborn என்று ஆங்கிலத்தில் சொல்லும் அந்த குணாதிசயம் எங்களது புகழ்பெற்ற “அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு” என்ற எந்த பயறு லிஸ்டிலும் சேர்க்கப்படவில்லை. எங்கள் இலக்கியங்களில் நிலவு பெண்ணானது. சூரியன் ஆணானான். கொஞ்சம் இதிலிருந்து விலகிய மங்கயர்க்கரசி வகை பெண்களை கூட ஆண் குணம் கொண்ட பெண் என்றார்களே ஒழிய அந்த குணத்தை கொண்டாடவில்லை. ஆ ஊ என்றால் “கண்ணகி” காப்பிய பாத்திரத்தை வைத்தே நம்மவர் காப்பி ஊற்றி சமாளித்துவிடுவார்கள். பெண்ணை தெய்வமாக பார்த்த கலாச்சாரம் என்று டிஸ்கி விடுவார்கள்.

large_163446220அப்படி பார்க்கும்போது அவ்வையார் ஒரு ரெபல். போராளி. சரித்திரத்தில் ஆறு அவ்வையார்கள் இருந்திருக்கிறார்கள் என்கிறார்கள். சிலர் வள்ளுவரோடு டீ குடித்திருக்கிறார்கள். ஒரு சிலர் கம்பர் ஓட்டக்கூத்தனோடு; இன்னொருத்தர் அதியமானோடு நட்பு பாராட்டியிருக்கிறார். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் மூளாமல் காத்தவர் அவ்வையார் என்கிறார்கள். அவ்வை தொண்டைமானின் அரண்மனைக்கு போனாராம். அவ்வைக்கு தன் படைப்பலத்தை காட்டினால், அவள் போய் அதியமானிடம் அதை சொல்லி மிரளவைக்கலாம் என்று தொண்டைமான் நினைத்திருக்கிறான். தன் ஆயுத பலத்தை காட்டியிருக்கிறான். எல்லாமே மினுங்குகின்றன. “பார்த்தியா நம்ம பலத்தை” என்று சொல்லியிருக்கிறான்.  “மினுங்கல் ஒகே, ஆனா எல்லாமே புதுசா இருக்கும் போல கிடக்கே, அங்கே அதியமானிண்ட கருவிகள் எல்லாம் அடிபாட்டுக்கு போய் இரத்தகறையாவும் உடைஞ்சும் அல்லோ கிடக்கு, உன்னாலே அவன் போரனுபவத்தை மீறி வெல்ல முடியுமா?” என்று அவ்வை ஒரு போடு போட்டிருக்கிறார். இந்த கவிதை புறநானூற்றில் வருகிறது. தரலாம். ஆனால் ரெண்டாம் நூற்றாண்டு. முதல் சங்கம். மொழி பிரெஞ்சை விட சிக்கலாக சங்கறுக்கிறது. பேசாமல் புரியக்கூடிய கவிதை ஒன்றுக்கு போவோம்.

vlcsnap-2011-01-06-23h35m45s142நம்மாளுக்கு கவிதை என்றால் பிடிக்கும். அவ்வை என்றால் உயிர். ஆனால் மாப்பிள்ளை கலியாணம் கட்டின மனிசிக்காரி கொஞ்சம் பொசசிவ். கொஞ்சம் என்ன, பயங்கர பொசசிவ். அண்ணன் ஒருநாள் ஏதோ தமிழ் வெப்சைட் ஓபன் பண்ண, ரெண்டு மூன்று பொப்அப் விண்டோ வந்திட்டுது. ஒன்றில் “ஹாய் பேப், யூ வோன்ன சாட்?” என்று இரண்டு மூன்று வெள்ளைக்காரிகள் இடுப்பில் மட்டும் ரெண்டு இஞ்சி துணியுடன் நின்றபடி கேட்க, இவர் “என்னடா சனியன்” என்று அவசர அவசரமாக குளோஸ் பண்ணியிருக்கிறார். அதற்கு முதல் மனிசிக்காரி நோட் பண்ணீட்டுது. “யாரது?” என்று கேட்க “இல்லேம்மா .. அது தானா ஓபின் ஆயிட்டுது, ஸ்பாம்” என்றிருக்கிறார். “நீ பல்லு இளிக்காம அவள் ஏன் அவுத்துப்போட்டு நிக்கிறாள்?” என்று கேட்டுவிட்டு இடியப்ப உரலால மனிசி நம்மாளுக்கு தலையிலே ரெண்டு தட்டு தட்டியது. அதுக்கேன் பாஸ் நீங்க தலையை தடவுறீங்க? பேசாமல் விஷயத்துக்கு போவோம்.

ஒருநாள் சந்திக்கடையடியில் அவ்வையார் போவதை நம்மாள் பார்த்துவிட்டார். அவ்வையார்? அட, “அறஞ்செய்ய விரும்பு” சொன்ன ஆள்.  அப்பிடியே விட்டுவிட முடியுமா? ஆளை மறித்து “வீடு வந்தே ஆகவேண்டும்” என்று மாப்ள கேட்டிருக்கிறார். அவ்வையோ “வேண்டாம் போகோணும்” என்று சொன்னாலும், இவரு வடிவேலு கணக்கா “இல்ல நீங்க வந்தே ஆகணும், அல்லாட்டி அழுதுடுவன்” என்று வற்புறுத்த, அவ்வையும் சரி என்று வீடு வந்திருக்கிறார். அங்கே ஆரம்பித்தது ஆட்டம்.

நம்மாளு ஒரு ஆர்வத்தில் அழைத்து வந்துவிட்டாலும், கேட்டடியில் மனிசி ஞாபகம் வந்து ஜீன்ஸ் நனைந்துவிட்டது. அவ்வையை கதிரையில் இருத்திவிட்டு “திரிபு குட்டி” என்று சொல்லிக்கொண்டே குசினிக்குள் போகிறார். மனிசிக்காரி ஏற்கனவே குசினி யன்னலால் அவ்வை வருவதை பார்த்துவிட்டாள். இவர் “திரிபு செல்லம்“ என்று மீண்டும் கூப்பிட , திரிபு என்கின்ற திரிபுரசுந்தரி திரும்பி ஒரு லுக்கு விட்டாள் பாருங்கள். சந்திரமுகி ஜோதிகா தோற்றாள். சுப்பர் ஸ்டார் சில்வர் ஜூப்ளி அன்று ஹட்ஸ் ஒப் சொல்லியிருப்பார். அப்படி ஒரு எக்ஸ்பிரஷன். இவன் தொபுகடீர் என்று காலில் விழுந்துவிட்டான். “பிளீஸ் பிளீஸ், அவ்வையார்டி, சின்ன வயசு இன்ஸ்பிரேஷன், எனக்கு இருக்கிற சாப்பாட்டையாவது குடுக்கலாம்” என்று கெஞ்ச, மனிசி ஓங்கி ஒரு அறைவிட்டு கெட்ட தூஷணத்தால் ஏசியிருக்கிறாள். இவன் அழுதிருக்கிறான். அரட்டியிருக்கிறான். சுளகால் இம்முறை அடி விழுந்தது.  அவ்வை எழுதுகிறாள் பாருங்கள்.

imagesஇருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்

இவனோ அழுதுகொண்டே “அம்மான இதான் கடைசி தடவை” என்று சொன்னதால் சரி என்று அவளும் சாப்பாட்டு தட்டத்தொடு வெளியே வருகிறாள். அவ்வையை பார்த்து சின்ன சிரிப்பு கூட இல்லை. இலையை குனியாமல் வீசி எறிய, அது ஆடி அசைந்து அவ்வை முன்னாலே புறப்பக்கமாக விழுகிறது. சோறை லபக்கென்று போடுகிறாள். சாம்பாரு ஊற்றும்போது அவ்வையின் வெள்ளை சேலையில் ஒரு முருங்கைக்காய் துண்டு வந்து விழுகிறது. குழம்பை ஊற்ற, தெறித்து கண்ணுக்குள் தெறிக்கிறது. அவ்வைக்கு வந்ததே கோபம். இலையை தூர வீசிவிட்டு அந்த அடங்காபிடாரியை பார்த்து காறித்துப்பி விட்டு, இவனை ஏளனமாக பார்க்கிறாள். பெண்ணோ ஆணோ, புதுமையும் புரட்சியில் சேர்ந்து இருக்கவேண்டும். ஆனால் பிடாரியாகவோ கொடுங்கோலனாகவோ இருக்ககூடாது. அப்படியானவர்களுடன் வாழ்வதை விட நெருப்பில் விழுந்து செத்து அழிவதே மேல். அவ்வை எப்படி சொல்லுகிறார் பாருங்கள்.

சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு
கொண்டாளைப் பெண்டு என்று கொண்டாயே-தொண்டா
செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.

நேரிசை வெண்பா. இதிலே அவ்வை ஒரு மாஸ்டர். எளிமையாக எழுதுவார். எங்களையும் எழுத சொல்லி திட்டுவார். “பிறர் சொல்லக் கேட்டோ, தானே முயன்றோ வெண்பா கல்லாதவனையும், ஓலையில் எழுதத் தெரியாதவனையும் பெற்ற பெண்பாவி நகைப்புக்கு உள்ளாவாள்” என்று அவ்வை சொன்னதை ஒருமுறை வாசித்தேன். சன் டிவி பார்த்துக்கொண்டிருந்த அம்மாவையும் பார்த்தேன். எதுக்கு வம்பு என்று இரண்டு நாள் முக்கி முனகி வெண்பா நேரிசை வெண்பா கற்றுக்கொண்டாயிற்று.

அவ்வையின் இந்த பாட்டு ஏற்கனவே இரண்டு முறை படலையில் வந்திருக்கிறது. கம்பவாரிதியைபற்றி எழுதும்போது குறிப்பிட்டிருக்கிறேன். “காடு திறந்து கிடக்கிறது” என்ற சிறுகதையில் யோசிக்காமலேயே இந்த வரிகள் இயல்பாக வந்து விழுந்தது.

“நானா? கவிதையா? கவிஞர்கள் உலகில் தவறிப்பிறந்த கவிப்பொருள் நான். மற்றவர்கள் எழுத முதுகும் கொடுத்து பொருளும் கொடுக்கும் அதிசய சடையப்பன்”

“அதிலும் ஒரு அங்கதம் .. உன் பிழைப்புக்கு தான் “நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்” என்றாளே அவள்”

“யாரவள் அவ்வையா?”

“அட .. அவ்வையும் அறிந்தவன் ஏன் இந்த காட்டில் திக்கித்திணருகிறாய்? பேசாமல் வீடு போய் சேர்”

இப்படி எங்கேயாவது இலக்கியத்தை செருகுவதில் ஒரு சந்தோசம். யாருமே கவனிக்காவிட்டாலும் காட்டிலே நிலா எறிக்கும் தானே! (குவாண்டம் அது சந்தேகமே என்று சொல்லும்!)

அவ்வையை வயது முதிர்ந்த பிராட்டியாகவே பார்த்து பழகிவிட்டோம். ஆனால் எல்லா அவ்வைகளும் கேபி சுந்தராம்பாள் மாதிரி ஹை பிட்சில் கத்திக்கொண்டிருப்பார்கள் என்று நம்புவது கஷ்டமாக இருக்கிறது. அவ்வை இளம் பெண்ணாக இருந்திருக்கலாம். காதலித்திருக்கலாம். லவ் பெயிலியர் கூட அவ்வைக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணீரம் பற்றாக் கிடையேபோல் – பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாகாரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

எத்தனை ஆண்டுகள் நீரில் கிடந்தாலும் ஈரம் ஊறாமல் மிதக்கும் பிளாஸ்டிக் டப்பா போல, ஆணும் பெண்ணும் கூடி “அலுவல்” பண்ணாமல் வெறும் துறவறமோ, பதிவோ, படலையோ எழுதி என்ன பயன்? என்கிறார்.


சுதா!

சாதாரண அலுவலகத்தில் கிளார்க்காக இருக்கிறாள். வீட்டில் தாத்தா தங்கை மாத்திரமே. வாடகை வீட்டில் குடியிருப்பு. குடும்ப பொறுப்பு முழுதும் இவள் தலையில். அலுவலகத்தில் கூட வேலை செய்யும் ஒருவனோடு காதல். அவனுக்கு ரெண்டு தங்கச்சிகள். இப்படியான சூழ்நிலையில் வீட்டுக்காரன் காலி பண்ண சொல்லிவிடுகிறான். வீடு எதுவும் இவர்கள் வசதிக்கு குறைந்த வாடகைக்கு கிடைக்கவும் இல்லை. என்ன செய்ய என்று கையை பிசைந்துகொண்டிருக்கும் போது, அலுவலகத்தில் லோன் எடுத்து பேசாமல் வாயைக் கட்டி, வயிற்றை கட்டி ஒரு வீட்டையே கட்டிவிடலாம் என்று நண்பர் ஒருவர் சொல்ல, அதை நம்பி,

சுதா வீடு கட்ட ஆரம்பிக்கிறாள்.

veedusisterவீடு கட்டுவது என்பது, அதுவும் தனியனாக ஒரு பெண் முன்னின்று கட்டுவது என்பது எவ்வளவு சவால் என்று அடுத்த இரண்டு மணி நேரங்களில் நச்சென்று புரியும்படி சொல்லியிருப்பார்கள்.  அவசரத்துக்கு பணம் புரட்டமுடியாது, லோன் சாங்க்ஷன் பண்ணிய மேலதிகாரி திடீரென்று மகாபலிபுரம் போவோமா என்று கேட்பான். கட்டிட கொன்றாக்டர் சீமெந்து திருடுவான். வீட்டில் நிம்மதி போகும். தங்கையை கோபிப்பாள். பிறந்தநாளுக்கு ஆயிரம் ரூபாய்க்கு சேலை வாங்கித்தரும் காதலனை திட்டுவாள். பின்னர் வருந்துவாள். எல்லோரும் ஏமாற்றும்போது எதிர்பாராத இடங்களில் இருந்து நண்பர்கள் கிடைப்பார்கள்.  ஐயாயிரம் ரூவாவின் பெறுமதி பணக்காரனுக்கும் மிடில்கிளாசுக்கும், ஏழைக்கும் எப்படி மாறுபடும் என்று ஒரு காட்சியில் சொல்லுவார்கள். எல்லோரும் ஏமாற்றும்போது போது ஒரு ஏழை கூலி வேலை செய்பவள் இவளுக்காக குத்தி முறிவாள். மொத்த வீட்டு வேலையையும் தன் தலையில் போட்டு செய்வாள். அவளுக்கு சுதா கொடுக்கும் பரிசு வெறும் பாவித்த சேலை தான். இப்படி நுணுக்கமான காட்சிகள்.

veedu.0பாலுமகேந்திரா எடுத்த வீடு மாத்திரம் இன்றை தேதியில் வெளிவந்திருந்தால் உலகமே ஆவென்று பார்த்து வியந்திருக்கும். அப்படி ஒரு படம். அதுவும் அந்த கிளைமக்ஸ்.  சான்சே இல்லை. “வீடு கட்டி முடித்து எல்லோரும் சந்தோஷமாக சிரிக்கிறார்கள்”,  அல்லது “வீடு கட்டி முடிக்க முடியாமல் எல்லாவற்றையும் இழந்து பாலச்சந்தர் ஹீரோயின் போல சோகமாக சுதா போவாள்” என்று எதிர்பார்த்திருந்தேன். இரண்டுமே இல்லாமல் வெகு இயல்பாக பாலு முடித்திருப்பார். What an ending.

படத்தின் குறை என்று ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும் என்றால் அது பின்னணி இசைதான். தலைவர் பின்னணி இசை. How to name it? இசையை அகப்பட்ட இடத்தில் பாலுமகேந்திரா கேட்டதற்காக பயன்படுத்தியிருக்கிறாரோ என்னவோ. ஒட்டவில்லை. முக்கியமாக துருத்திக்கொண்டு இருக்கிறது. “அட ராஜா பின்னியிருக்கிறாரே” என்று படம் பார்க்கும்போது எண்ண தோன்றுகிறது. அப்படி தோன்றினால் அது பின்னணி இசையில் இருக்கும் தவறு தான். சத்தம்போடாமல் வெகு சப்டிலாக இருந்திருக்கவேண்டிய இசை. ராஜாவை அவர் போக்கிலேயே விட்டிருந்தால் கலக்கியிருப்பாரோ என்னவோ. Sometimes even the almighty can falter!


 

மேகலா!

இருபது சிறுகதைகளில் குறைந்தது ஆறிலாவது மேகலா வருகிறாள். வியாழமாற்றங்களில் வந்து கேள்வி கேட்டிருப்பாள். பதிவுகளிலும் தலை காட்டியிருக்கிறாள். ஏதோ நான் ஏங்கியும் எட்டாத தேவதையை பற்றி தான் எழுதுகிறேன் என்று நினைக்கிறார்கள். கேட்கிறார்கள். தேடுகிறார்கள். தினம் ஒரு மெசேஜ் Facebook  இல் வந்து விழுகிறது. விழாவிட்டால் நானே அந்த கேள்வியை என்னிடம் கேட்டுக்கொள்கிறேன். யார் தாண்டா அந்த மேகலா?

உல்டா தான். சுஜாதாவின் ஆரம்பகால கதைகளில் கணேஷ் பிரியா ஜோடி தான் இருந்தது. சேர்ந்தே துப்பறிவார்கள். கணேஷ் ஒருவித ரிசெர்வ்ட் லோயர். பிரியா fun loving, ஜோவியல், ஆங்காங்கே நக்கலடிக்கும் புத்திசாலிப்பெண். தலைவருக்கு திருமணம் ஆகியபின் வேண்டாம் சிக்கல் என்று பிரியாவை வசந்த் என்று மாற்றிவிட்டார். ஆகாததால் இன்னமும் மேகலா உலாவுகிறாள். அவ்வளவே.

life_of_pi_8-440x250

கொஞ்சம் டீப்பாக யோசித்தால் மேகலா வேறு யாருமில்லை. கண்ணம்மா தான். உஷ் இது கடவுகள் துயிலும் தேசத்தில்வந்த கிரிஷாந்தி கூட மேகலா தான். புத்திசாலி, அடிக்கடி அவனை டீஸ் பண்ணுவாள், ஆளுமை நிறைந்தவள், ஆனால் அதற்குரிய துளி ஈகோ இல்லாதவள். பிறக்கும் பெண்ணுக்கு கண்ணம்மா என்று பெயர்வைக்க யோசிக்கிறாள் தனக்கு நடக்கப்போவது அறியாமலேயே!

துஷியோடு பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னது. மேகலா எனக்குள் இருக்கும் பெண். நான் விரும்பும், என்னிடம் இல்லாத குணங்களை பெண் உருவில் புகுத்தி பேசிக்கொள்ளும் தேவதை. தன்னந்தனியனாக கடலில் சிக்கித்தவிக்கும் ரிச்சார்ட் பார்க்கரான எனக்கு நம்பிக்கையும், ஆதரவும், பேச்சும் கொடுக்கும் ஒரு பை (Life of Pi).  மேகலா, சுந்தரகாண்டம், வானம் மெல்ல கீழிறங்கிபோன்ற சிறுகதைகளில் வருகின்ற மேகலாக்களில் அந்த ஆதரவும், அன்பும், வழி நடத்தலும் தெரியும். ஒரு விதத்தில் கடவுள் தான். ஆங்கிலத்தில் எழுதிய “The God’s Coming”என்ற சிறுகதையில் நேரடியாக கடவுளையே பாவித்திருப்பேன். கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையை உள்வாங்குவது சிரமமாக இருந்தாலும் கடவுளின் தேவை அனேகமானவருக்கு போல எனக்கும் இருக்கிறது. அதற்காக நானே உருவாக்கிக்கொண்ட கடவுள் தான் மேகலா. இதை கொஞ்சம் கவிதையாக முயன்றிருக்கிறேன்.

709970_156யார் மேகலா?
அவன் என்பார் அவனறியாதார்!
அவள் என்பார் அவளறியாதார்!
அதுவென்பார் சிலர்.
அசையாதென்பார்!
அரி என்பார் அரன் என்பார்!
ஹரிஹரன் பாடும் கமகம் என்பார்!
அவர் அறியாதன எல்லாம் அறிந்திட முனைவார்
அவளோ அவனோ அதுவோ எதுவோ
அவரவர் வடிவில் உருவம் எடுக்கும்
சமயத்தில் இசை போல் அருவமும் எடுக்கும்
இருளிடை ஏறிய இறையே என்றால்
எதுவுமே புரியாமல் மலைத்திட இருப்பர்!

&&&&&&&&&&&&&&&&&&&&

 

கிருத்திகா, மேரி கியூரி, இந்திரா நூயி போன்ற பெண்களையும் எழுதுவதாக இருந்தது. பதிவு நீண்டுவிட்டதால் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துகொள்ளலாம்.

வியாழமாற்றம் 18-04-2013 - ஓடு ஓடு ஓடு.

$
0
0

 

திடீரென்று சூரியன் இருந்த இடம் இல்லாமல் போய்விட்டால் அதன் உடனடி தாக்கம் எப்படியாக இருக்கும்? பூமியில் நிலைமை என்னவாக இருக்கும்? அடுத்தகணமே இருண்டுவிடுமா? விலகி போய்விடுமா? ஈர்ப்பு விசைக்கு என்ன நடக்கும்?

 

கனவு மெய்ப்படவேண்டும்!

vasul_12_800“வாழ்க்கையில் என்னவாக வரப்போகிறாய்” என்ற சின்ன வயது கேள்விக்கு ரெடிமேட்டான பதில் “டொக்டர்” தான். எனக்கும் வளர்ந்து FRCS முடித்து ஏழைகளுக்கு இலவச சத்திரசிகிச்சை செய்யவேண்டும் என்று ஐந்து வயதில் ஒரு ஆசை இருந்தது. கஜனிடம் சொன்னேன். தனக்கு மூன்று வயதிலேயே அது வந்தது என்றான்.

தன் பிள்ளைகளில் ஒருவராவது டொக்டராக வரவேண்டுமென்பது அப்பாவின் கனவு, அந்த கனவு குடும்பத்தில் ஒரு நல்ல கணிதவல்லுனரை உருவாகவிடாமல் செய்தது. என் அக்கா செம மண்டைக்காய். ஜியோமற்றியில் ஒரு கரை கண்டவர். நிறுவல் எல்லாம் சின்னதவறு செய்தாலே என் தலை கொழுக்கட்டை கணக்காய் வீங்கும். அப்பிடி குட்டுவார். ஓஎல் கணக்கு பரீட்சை முடிந்து வீட்டுக்கு திரும்புகிறேன். பரீட்சைக்கு போகும்போதே, விடைகளை வினாத்தாளில் குறித்துக்கொண்டு வந்துவிடு என்று சொல்லியிருந்தார். கொண்டுவந்து கொடுத்தவுடனேயே கட கடவெண்டு செய்து பார்த்துவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் தலையில் நங் என்று இரண்டு குட்டு. முப்பது கேள்விகளில் இரண்டை தவறாக செய்துவிட்டேனாம். “எண்ட தம்பி எண்டு வெளிய போய் சொல்லிடாதே, வெட்கக்கேடு” என்றார். அவரை வலுக்கட்டாயமாக பயோ சயன்ஸ் படிக்கவைத்தார் அப்பா. அக்காவுக்கு மனமே இல்லை. வேண்டாவெறுப்பாக நாலு பாடத்தையும் சப்பிப்பார்த்தார். சரிவரவில்லை. ஆனால் அந்த கணக்கு நெருப்பு அக்காவிடம் இப்போதும் இருக்கிறது. தானே வகையீடு தொகையீடு படித்து மற்ற மாணவர்களுக்கு சிங்கப்பூரிலே இப்போது சொல்லிக்கொடுக்குமளவுக்கு இருக்கும் நெருப்பு. “படலையில் தேவையில்லாம லொள்ளு பண்ணாத, நாளை இன்று நேற்றுமாதிரியே எழுதிக்கொண்டிரு” என்பார். “அப்பிடியே நல்ல ஆமர்பூட்டு வாங்கி அனுப்புங்க, இழுத்து மூடலாம்”.

எது எமக்கு வரும் என்பதும் இந்த காதலி மாட்டார் போல சின்ன வயதில் இருந்தே டிமிக்கி காட்டிக்கொண்டிருந்தது. கம்பவாரிதியை ரசிக்கும்போதெல்லாம் பேசாமல் கலைப்பீடத்தில் நுழைந்து தமிழிலக்கியம் கலக்கவேண்டும் என்று ஆசை வரும். வீட்டில் கூட சொல்லியிருக்கிறேன். சண்முகநாதன் மிஸ் படிப்பிக்கும்போது அந்த ஆசை ஆங்கில இலக்கியத்துக்கு தாவும். எப்போதுமே என் கதைகளில் வரும் ஒரு பாத்திரம் ஆங்கில இலக்கியம் பேசும் சூட்சுமம் இதுதான். வன்னியில் படித்தபோது பரமோதயன் அண்ணா படிப்பிச்ச கொமர்ஸிலும், சேர்ந்து படிச்ச தாரணியிலும் மயங்கி, கொமர்ஸ் போல அழகான பாடம் ஒன்றுமே இல்லை என்று கொஞ்சநாள் தோன்றியது.

ஆனால் இதை எல்லாமே தாண்டிய வசதியான ஒரு பாடம். பாட்டு கேட்டுக்கொண்டே படிக்கலாம். கஷ்டமுமில்லை. முக்கி முனக தேவையில்லை. கணிதம். இயல்பாக வந்தது. அதுவும் இளையராஜா கேட்கும்போது இன்னமும் நன்றாக வந்தது.  கரும்பலகையில் கணக்கை செய்து முடித்துவிட்டு கீழே ரெண்டு கோடு சர்க் சர்க்கென்று இழுத்துவிட்டு எட்டிப்போய் நின்று பார்த்து ரசிக்கும் அனுபவம் தனி. நள்ளிரவு தாண்டி ரேடியோவில் ஏ எம் ராஜாவும் ஜிக்கியும் மட்டுமே நிலவும் மலரும் என்பார்கள். அப்போது செய்யும் applied கணக்குகள் அலுக்கவே அலுக்காது. கூடவே பிசிக்ஸ் என்ற ஆச்சர்யம். அப்போதே பூனையை கண்டால் ஷ்ரோடிங்கர் என்று அழைக்குமளவுக்கு குவாண்டம் பைத்தியம். இப்போது கூட, முதன்முதல் கேதா வீட்டில் ஒரு கறுப்பு பூனையை கண்டவுடன் ஷ்ரோடிங்கர் என்று கூப்பிட்டது ஞாபகம் வருது. மறக்கமுடியுமா அந்த பூனையை? அதை சரியாக புரிந்துகொள்ளாமல் “நான் பார்க்க முன்னர் நீ எப்படி இருந்தாய்? நான் பார்த்ததால் தான் நீ பூனையாக மாறினாயா?” என்றெல்லாம் யோசித்த மடையன் நான். இந்த மடையனுக்கு இப்போது நிறைய மட்டி நண்பர்கள் இது பற்றி பேச இருக்கிறார்கள். அப்போது ஒரே ஒருவன் இருந்தான்.

அந்த மட்டி பெயர் குகன். Non conformist, crazy and rebel. நாங்கெல்லாம் இதயம், தவளை என்று ஆய்வுகூடத்தில் வெட்டி பரிசோதனை செய்தோமல்லவா? குகன் அதை வீட்டில் செய்தான். பின் வளவில் அவனுக்கென்று ஒரு ஆய்வு கூடம், அத்தனை இரசாயன ஐட்டங்களும் கேகேஎஸ் ரோட்டில் வாங்கிவந்து வீட்டில் வைத்து குடைவான். ஒரு நாள் கை எல்லாம் எரிந்து கட்டோடு பாடசாலை வந்தான். என்னடா என்றால் தலைவர் தவளையை வெட்டி பிரிச்சு பரிசோதனை செய்திருக்கிறார். அதன் கால்களை நிறுத்திவைக்க மெழுகு பாவிப்பார்கள். உருக்கி ஊற்றும்போது கையில் ஓடிவிட்டது. இந்த விஷயம் எல்லாம் சமாதான காலத்தில் நடந்த விஷயமல்ல. புலிகளின் ஆட்சியில்; யாழ்ப்பாணத்தில்; ஒரு பக்கம் பொருளாதார தடை, மேலால கீழால என்று குண்டு. திடீரென்று ஆனையிறவு, மண்டைதீவு என்று அடிபாடுகள். பிரசாரம், ஆட்சேர்ப்பு. எல்லாவற்றுக்கும் மத்தியில் பதினைந்து வயது பெடியன் இதை செய்தான்.  இப்படி பல குகன்கள்.

குகன் என்னுடைய நெருங்கிய நண்பனாக ஆகியிருக்கவேண்டியவன். 95 இடம்பெயர்வு பிரித்துவிட்டது. பன்னிரண்டு பதின்மூன்று வயது இருக்கும். அப்போதே வீட்டு வாசலில் வந்து நின்று அவன் பேச தொடங்கினால் அம்மா திட்டி அனுப்பும் மட்டும் பேசிக்கொண்டே இருப்பான். பேச்சு கிட்டத்தட்ட குட்டி வியாழமாற்றம் போல இருக்கும். கொஸ்மோலஜியை அதன் பெயர் தெரியாமலேயே அலசியிருக்கிறோம். பதிவின் ஆரம்பத்தில் கேட்டிருக்கும் கேள்வியின் ஆதாரத்தை அப்பவே யோசித்த ஆள் அவன். அப்போதே ஒளியாண்டு கணக்கு எல்லாம் சொல்லுவான். பிரபஞ்சம் விரிவடைவது உண்மை என்றால், இப்ப கண்ணுக்கு தெரியுதே அருந்ததி, அது உண்மையிலேயே அந்த இடத்திலேயே இருக்காதுடா” என்று சொல்லுவான். குகன் IBM Watson, CERN போன்ற நிலையங்களில் ஆராய்ச்சியாளராக இருக்கவேண்டியவன். எங்கள் கல்வித்திட்டம், புத்தகத்தை அப்படியே கரைத்து குடிக்க தெரியாத அவனின் குணம், இன்றைக்கு ஓடிட்டராக டை கட்டிக்கொண்டு.. ச்சே.

கஜன் என்று இன்னொருவன். சாதாரண தரத்தில் வர்த்தகப்பாடம் என்றால் பின்னுவான். எப்போதும் நூறு தான். ஐந்தொகை எத்தனை சிக்கல் என்றாலும் சமப்படும். இலாபநட்ட கணக்கு எல்லாம் பக்கா. உயர்தரத்தில் வர்த்தகம் படிப்பதாக இருந்தான். இங்கேயும் அப்பா தான் வில்லன். அவனை வர்த்தகத்தில் விட வேண்டாம் அன்று அவன் அப்பா பிரின்சிபல் வரைக்கும் போய் மிரட்ட, அவனும் வேறு வழியில்லாமல் பயோ படித்தான். விருப்பமே இல்லாமல் படித்தவன், ஏஎல் முடிந்த மறுநாளே CIMA படிக்க ஆரம்பித்து இன்றைக்கு மிகப்பெரிய நிலையிலே இருக்கிறான். ஆரம்பத்திலேயே படிக்கவிட்டிருந்தால் மூன்று வருடங்களை பொட்டனி, சூ என்று வேஸ்ட் பண்ணியிருக்கமாட்டான்.

எங்களோடு கூட இருந்த இந்த மாதிரியான நீல் போருக்கும், பிலாங்குக்கும், மேரி கியூரிக்கும், பில் கேட்ஸ், டாட்டா பிர்லா. எல்லோருக்குமே எதிரிகள் யார் என்றால் பெற்றோர்கள் தான். தன் பிள்ளை நிரந்தரமான நிம்மதியான வாழ்க்கை வாழவேண்டுமென்ற நியாயமான கவலை பிள்ளைகளின் எதிர்காலத்தை சாதரணமாக்கி விடுகிறது. அவர்களை மீறி, பிள்ளைகளை அவர்கள் இஷ்டப்படி செயற்பட விடும் கலாச்சாரமோ, சுதந்திரமோ இல்லாத நாடு அது. பதினெட்டு வயதில் ஒரு இளைஞன் தொழில் தொடங்க முடியாது. சாப்பாட்டை பற்றி கவலைப்படாமல் பொசனுக்குள் என்ன இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யமுடியாது. இது பெரும் சோகம்.

students 3_CI

இதைவிட பெரும் சோகம் எங்கள் கல்வித்திட்டம். எல்லாத்திட்டங்களும் ரோம் நகருக்கே போகும். திரும்பி பெர்லினுக்கு போகப்போகிறேன் என்றால் ஊரே சேர்ந்து கல்லால் அடிக்கும். நானோ நீயோ கெட்டிக்காரன் என்பதை மூன்று மணிநேர பரீட்சை இலகுவாக தீர்மானித்துவிடும். எனக்கு தெரிந்து ஒரு அறுப்பும் புரியாமல் முப்பது வருட வினாத்தாள்களை மட்டும் மீட்டியே ஒருவன் எல்லாப்பாடத்துக்கும் “ஏ” எடுத்தான். அதே ஷாட் விளையாடி பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பு சித்தி அடைந்தான். ஆனால் காமசூத்ரா சீன் டிவியில் போனால் “ஏண்டா இவங்கள் கட்டிப்பிடிக்கிறாங்கள்?” என்பான். Wisdom, Conscience என்ற சொற்களே அவன் அகராதியில் கிடையாது. தேடல் சுத்தம். ஆனால் சமூகம் அவனை அழைப்பது அறிவாளி என்று. அதே நேரம் நிஜமான புத்திசாலிகள், ஒழுங்காக வகுப்புக்கு போகாமல் தன் பாட்டுக்கு லோனியின் கணக்கு செய்து, சிலபஸ்ஸில் இல்லாத பாடங்களை படித்தவர்கள் வெளியே இருந்தார்கள். பல்கலைகழக அனுமதி மறுக்கப்பட்டது.  படகு பிடித்து வெளிநாடு போய், ஒரு சாதாரண, திறமைக்கேற்ற வேலை செய்யாமல்…. அவர்களோடு ஒரு மணிநேரம் பேசிப்பார்த்தாலே புரியும். அவர்கள் எங்கேயோ இருக்கவேண்டியவர்கள்.

தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை இங்கே தான் வருகிறது. படிக்கவேண்டும் என்று நினைக்கும் மாணவனை, “இல்லடா உனக்கு மண்டைல மாட்டர் இல்ல, நீ இதை தான் படிக்கோணும்” என்று ஒரே பரீட்சையில் முடிவு செய்ய எவனுக்கு தகுதி இருக்கிறது? உயர்தரத்து வினாத்தாள் தயாரிக்கும் பேர்வழிகள் கூட சொந்த கணக்கை தயார் பண்ணுவதில்லை. வெள்ளைக்காரன் போட்ட கணக்கை ட்ரான்சிலேட் பண்ணுவது தான் அவர்கள் தொழில். அவர்களுக்கு குகன் போன்றவர்களின் தகுதியை தீர்மானிக்கும் தகுதியே கிடையாது. தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை இலங்கையில் மிக அவசியம். அப்போது தான் அரச பல்கலைகழகங்களும் நல்ல நிலைக்கு உயரும். திறமைசாலிகளுக்கு ஸ்கோலர்ஷிப் கிடைக்கும். ஏனையவர்களுக்கு தாம் விரும்பிய துறையில் தேர்ச்சிபெற சந்தர்ப்பம் கிடைக்கும். இதை ஏன் பலர் வேண்டாம் என்கிறார்கள் என்று யோசித்துப்பார்த்தேன். ஒரே ஒரு காரணம் தான்.

Survival instinct!


ப்ரோகிராமிங்

ஒருமுறை ஹர்ஷால், அவன் மனைவியோடு பேசிக்கொண்டிருக்கும் போது வந்த டொபிக் இது.  “எது பிடிக்குதோ, அதையே வாழ்க்கைல செய்யோணும். அப்போது தான் வெற்றி வரும்” என்று சச்சின், ஏ ஆர் ரகுமானை உதாரணமாக்கி சொன்னான். அதற்கு அவன் மனைவி கேயா சொன்ன பதில் யோசிக்க தூண்டியது. எல்லோருக்குமே இசை பிடிக்கும் அதற்காக எல்லோருமே இசை கலைஞர் ஆகிவிட முடியாது. கிரிக்கட் பிடிக்கும் என்றதுக்காக சச்சின் ஆக முடியாது. வென்றவன் ஒருவன் சொல்லும் பேச்சை கேட்டு வெல்லாதவன் லட்சம் பேரின் வாழ்க்கையை மறந்துவிட கூடாது. அதைவிட இந்திய கலாச்சாரத்தில் பலமுகத்தன்மை இல்லை. எது உனக்கு பிடிக்கும் என்ற வட்டம் மிகச்சிறியது. அதனால் முன்முடிபு செய்யாமல் தேடு. உன் திறமைக்கு சவாலான வேலை அமையும் போது அதை இயல்பாகவே காதலிக்க தொடங்குவாய்.

ஸ்டீவ் ஜொப்ஸ் இதை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருப்பார்.

If you haven't found it yet, keep looking. Don't settle. As with all matters of the heart, you'll know when you find it. And, like any great relationship, it just gets better and better as the years roll on.

சின்னவயதில் சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால் எஞ்சினியரிங் செய்யாமல் பிசிக்கல் சயன்ஸ் செய்து, தியரிட்டிகல் பிசிக்ஸில் மூழ்கி முத்தெடுத்திருக்கலாம் என்று அவ்வப்பொது நண்பர்களிடம் சொல்லி கவலைப்படுவதுண்டு. செய்யவில்லை. வளர்ந்து சொந்தக்காலில் நிற்கும்போது அந்தப்பக்கம் திரும்பலாம் என்று நினைத்து ஒத்திப்போட்டது. இப்போது முத்து எடுக்க முடியாவிட்டாலும் பழைய ஆசையில் சின்ன டைவ் அடிப்பதில் ஒரு சந்தோசம். தேவமாறன் என்ற நண்பனிடம், தமிழர்கள் யாராவது குவாண்டம் பிஸிக்ஸ் பிஎச்டி செய்கிறார்களா? என்று கேட்க, ஒருவரை தெரியும், அறிமுகப்படுத்துகிறேன் என்றான். கூடவே ஒரு தொகை புத்தகங்கள் லிஸ்ட் அனுப்பினான். “How to teach your dog physics”, “The Age of Entanglement: When Quantum Physics Was Reborn, Erwin Schrodinger and the Quantum Revolution”. இதிலே எண்டாங்கில்மெண்ட் பற்றி வியாழமாற்றத்தில் ஒரு முறை முயன்றிருக்கிறேன். ஷ்ரோடிங்கர் பூனை வராத படலை பதிவே இல்லை எனலாம். பிக் பாங், ஹிக்ஸ் பொசன் எல்லாம் வந்திருக்கிறது. கூடிய சீக்கிரம் General Theory Of Relativity அதிலிருந்து எப்படி பிரபஞ்சம் விரிகிறது என்பதை விளக்கி, அங்கிருந்து Cosmology பற்றி ஒரு நாள் படலையில் சாத்தவேண்டும்!

பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் துறை தெரிவுசெய்திருக்கலாம். “படிச்சு என்ன செய்யப்போறாய். இலங்கைல ஸ்கோப் இல்லை” என்றார்கள். கொஞ்சம் குழப்பத்துடன் தான் கணணித்துறையை தெரிவு செய்தேன். அதுவும் இரண்டாம் மூன்றாம் வருடங்களில் சில கவனக்கலைப்பான்கள், என் பொறுப்பின்மை, ”இனி எதுக்கு படிப்பான்?” என்ற எண்ணம் சேர்த்து அதளபாதாளத்துக்கு கொண்டுபோனது. அப்புறம் ஆறு மாதம் ட்ரைனிங். திடீரென்று ஒருநாள் XML என்று ஒரு தொழில்நுட்பம் வந்திருக்கிறது என்றார்கள். இன்னும் சில தொழில்நுட்ப பெயர்கள். இங்கே வேண்டாம். சொன்னார்கள். ஒரே வாரத்தில் படித்து செய்யவேண்டும். அங்கே ஆரம்பித்தது பிக்அப். அதற்கு பின்னர் இறுதி ஆண்டு படிக்கும்போதே ஒரு கொம்பனியில் வேலை கிடைத்துவிட, அசுவாரசியமாக ஆரம்பித்த துறை, இரண்டே மாதம் தான். ப்ரோகிராமிங் ஒரு டிவைன் என்று புரிய ஆரம்பித்தது.

ப்ரோகிராமிங் என்பது ஒருவித போதை. இசை போல. எழுத்து போல. அதில் வசப்பட்டுவிட்டால் நேரம் காலம் தெரியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு வினாடியும் நீங்கள் ஏதாவது சிக்கலை தீர்த்துக்கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு தடவையும் சிக்கல்கள் புது வகையில் இருக்கும். அதை நண்பர்களோடு சேர்ந்து டிஸ்கஸ் பண்ணுவது தனி அனுபவம். வெள்ளை பலகையில் டிசைன் போட்டு, அன்றைக்கே எழுதி, அது சரிவரும் போது கிடைக்கும் சந்தோசம் அனுபவித்தால் மாத்திரமே புரியக்கூடியது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வீட்டுக்கு போகாமல் அலுவலகத்திலேயே இருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இரு என்று யாருமே சொல்லவில்லை. ஒரு சிக்கல் உருவாகி அதை தீர்க்கமுடியாமல் வீட்டுக்கு போனாலும் நித்திரை வரப்போவதில்லை. அதனால் தான் அந்த டேரா. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது புது புது விஷயங்கள் வாசிக்கலாம் படிக்கலாம். வேலை செய்யும்போது பாட்டுக்கேட்கலாம். விரும்பிய நேரம் போகலாம், வரலாம். வீட்டுக்கு போகவேண்டும் என்ற மனமே வராது. புதுக்காதலியை சந்திக்கப்போகும் அனுபவத்தை தினந்தோறும் கொடுக்கும் துறை அது!

இந்த துறையில் இருக்கும் இன்னொரு முக்கிய விஷயம் நண்பர்கள். நான் அடிமுட்டாளாய் இருப்பதோ என்னவோ, என்னோடு நெருங்கிப்பழகும் அத்தனை நண்பர்களும் என்னைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். உடனே ஞாபகம் வருபவர்கள் ஹர்ஷா, அமுதா, சயந்தன் மற்றும் பீட்டர். நேபாளத்துக்கு ஹர்ஷா, சயந்தன், நான் என மூவரும் ஒரு விசிட் அடிக்கிறோம். இமயமலை குளிர். ஹோட்டல் ரூமில் ஹீட்டர் இல்லை. குளிர் குலப்பனிடிகிறது. போர்ப்பதற்கு ஆளுக்கொரு மெல்லிய போர்வை. இப்படி ஒரு சூழ்நிலையில் ஹர்ஷா என்ன செய்தான் தெரியுமா? யன்னல்களை இறுக்கமாக சாத்திவிட்டு, மின் விசிறியை அதி உச்ச வேகத்தில் இயக்கிவிட்டான்.  நானும் சயந்தனும் கெட்ட தூஷணத்தில் திட்டினோம். But it worked. கொஞ்ச நேரத்தில் குளிர் ஓடிவிட்டது. ஏன் என்று யோசியுங்கள்! சாதரணமாக படிக்கும் பிசிக்ஸ் தான். அந்த இடத்தில் அவன் பயன்படுத்தினான்.

சயந்தன் யோசிக்கும் பல விஷயங்கள் ஆச்சர்யமாக என்னோடு ஒத்துப்போகும். பல தடவைகள் அவன் ஆங்கிலத்தில் எழுதுவதை படலையில் தமிழ் படுத்தியிருக்கிறேன். ஆங்கிலத்தில் அவனைப்போல எழுதமுடிவதில்லையே என்று போறாமைப்பட்டிருக்கிறேன். நான் ஆயிரம் சொற்களில் எழுதுவதை ஐந்து வரிகளில் முடிப்பான். அகில இலங்கை செஸ் சம்பியன். அவன் வேலையிலோ, அல்லது Yarl IT Hub இலோ எடுக்கும் நகர்வுகளை எதிர்த்தபடியே ரசித்திருக்கிறேன். நான் ஒரு எடுத்தான் கவுத்தான் கேஸ். அதை நாசூக்காக செய்வதில் சயந்தன் தேர்ந்தவன். அவனிடம் படிக்க பலது இருக்கிறது.

அமுதா, சிங்கப்பூரில் கிடைத்த நண்பி. கணவன் ஒரு ஐஐடி காரன். இருவருக்குமே தமிழ் தெரியாது. அலுவலக பழக்கம் ஒன்றாக ஸ்குவாஷ் விளையாடி, அவர்கள் வீட்டிலேயே குளித்து, சாப்பிட்டு, இரவு பதினொரு மணிக்கு ஸ்விம்மிங்பூல் பக்கம் ப்ளேன்டீ குடித்தபடி கடவுள் முதல் காதல் வரை எந்த டவுட்டையும் இருவரோடும் பேசி தெளியலாம். Never let your emotions to lead your intellectuality என்று அமுதா அடிக்கடி குட்டி குட்டி சொல்லும் விஷயம். இப்போதும் சாட்டில் வந்து “என்னடா .. யாராவது கேர்ளை இப்பவாச்சும் பார்க்கிறியா?” என்று கேட்டால், “தெரியேல்லையே” என்பேன். “திருத்தமுடியாது” என்று திட்டு விழும்.

இப்போது பீட்டர் முறை. எனக்கும் அவனுக்கும் பிடிக்கும் பொது விஷயம் குவாண்டம். இன்டர்வியூவில் கூட இதை கேட்டிருந்தான். சொன்னபோது சிரித்தான். அப்போதே தெரிந்தது வேலை நிச்சயம் என்று. ஐன்ஸ்டீனின் மூவிங் ரோட்ஸ் (Moving Rods) பரிசோதனை ஒன்று இருக்கிறது. சார்புத்தத்துவத்தின் மிகச்சிக்கலான படிமம். வேலை நேரம் மீட்டிங் ரூம் புக் பண்ணி, இருவரும் இரண்டு மணி நேரம் அதை விவாதித்து மண்டை காய்ந்திருக்கிறோம். குகனுக்கு பிறகு சீரியஸாக ஐன்ஸ்டீன் தேடும் ஒரு நண்பன். ப்ரோகிராமிங் துறைக்கு வந்திருக்காவிட்டால் கிடைத்திருக்கமாட்டான்.

சிறுவர்கள், இளைஞர்கள் கணணித்துறையை “ஸ்கோப்” உள்ள துறை என்று நினைத்து தயவு செய்து நுழையாதீர்கள். அதை ரசியுங்கள். “இந்த ப்ராப்ளத்தை நான் தீர்க்காமல் வேறு எவன் தீர்ப்பான்?” என்ற ஒருவித தன்னம்பிக்கை உதவி செய்யும். இதில் ஒரு “முடிவு கட்டியே தீருவோம்” என்று சொல்லிக்கொண்டு நுழையுங்கள். அப்போது அதன் அண்டசராசரம் விரியும். மூழ்கிப்போய் திளைப்பீர்கள்.

இல்லையா? Facebook இல் ப்ரோகிராமிங்கை பற்றி நக்கல் அடித்து யாராவது போடும் நிலைத்தகவலை ஷேர் பண்ணி லைக் பண்ணுவீர்கள்.


ஒரு ஐடியா!

 

sujathaசுஜாதாவை அடிக்கடி நான் சிலாகிக்கும்போது சிலர், அதுவும் நெருங்கிய சில நண்பர்கள் முகம் சுளிப்பதுண்டு. “என்ன எப்ப பார்த்தாலும் சுஜாதாவை தூக்கிப்பிடிக்கிறீங்க, அவரை விட எத்தனை பேர் என்னமா எழுதியிருக்கிறார்கள்?” என்பார்கள். இருக்கலாம். ஆனால் சுஜாதாவை வெறும் இலக்கியவாதி என்பதற்காக ரசிப்பதில்லை. அவர் ஒரு ஐடல். என்னை போன்ற காட்டுப்பயலுகளுக்கெல்லாம் குளத்தை காட்டி, குடிடா என்றவர். அதை எந்த பள்ளிக்கூட ஆசிரியரும் எனக்கு செய்யவில்லை. தமிழ் பாட புத்தகத்தில் நளவெண்பா இருந்தாலும் எவரும் வெண்பா எழுத தூண்டவில்லை. குமரன் மாஸ்டர் மூன்று வருடங்கள் பிசிக்ஸ் படிப்பித்தார்.  ஒருநாள் கூட நியூட்டனின் விதிகள் தவறு என்று சொல்லவில்லை. அவருக்கே அது தெரியுமோ தெரியாது. இலத்திரன், புரோத்திரன் தவிர ஏனைய கூறுகள் பற்றி மூச்சு விடவில்லை. லைட் குவாண்டா, குவார்க், பொசன் பற்றி சுத்தம். ஒரு சிறுகதை எழுதுவது எப்பிடி? வாசிப்பது எப்படி? என்னெல்லாம் உலகத்தில் இருக்கு? அரசியல், விளையாட்டு, சினிமா என்று கிணற்றை விட்டு எம்மை தூக்கி வெளிய போட்ட ஆளு சுஜாதா. “Conventional Wisdom can often go wrong” என்று அவர் சொல்லித்தான் எங்களுக்கு தெரியும். “எழுத்தில் தவிர்க்க பாருங்கோ” என்பார்கள். முடியாது. “நாடி நரம்பு மூளை முடுக்கு எல்லாம் ஊறிக்கிடக்கும்” விஷயம் இந்த சுஜாதா. பத்து வயதில் இருந்தே இது நடக்கிறது. இப்போது நானே நினைத்தாலும் மாற்றமுடியாது.

படலையால் கிடைத்த முகம் தெரியாத நண்பர்களில் துஷியும் ஒருவன். எப்போதாவது ஒருமுறை சாட் பண்ணுவோம். அப்படி ஒருநாள் அண்மையில் சாட் பண்ணிக்கொண்டிருக்கும்போது தான் புத்தக வாசிப்பு பற்றி வந்தது. Yarl IT Hub தன்னுடைய நிஜமான நோக்கத்தை அடையோணும் என்றால், கண்ணுக்கு தெரியாத மூலையில், தன் இஷ்டத்துக்கு ஒரு புத்தகத்தை வாசித்தபடி, அடிக்கடி விட்டத்தை பார்க்கின்ற, வாத்தியால் “மொக்கன்” என்று அழைக்கப்படுகின்ற அந்த சிறுவனை தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்று சொன்னேன். “அண்ணே முன்னே மாதிரி இல்ல, இப்ப யாழ்ப்பாணத்தில வாசிப்பு எண்டது குறைஞ்சு போச்சு” என்றான். “இப்பிடித்தான் என் காலத்திலும் சொன்னார்கள், வாசிப்பு ஒரு லவ் போல, எப்பவுமே இருக்கும். எங்கேயுமே இருக்கும். ஆனால் வாசகனை கண்டுபிடிப்பது தான் சவால்” என்றேன்.  “எப்படி செய்யலாம்?” என்று யோசித்தோம். எண்டாங்கில்மெண்ட் தான். அனேகமான வாசகர்கள் பொதுவாக introverts(இதுக்கு என்ன சரியான தமிழ்?). அவர்கள் தங்களுக்கு வசதியான வட்டத்துக்குள் தான் உரையாடுவார்கள்.  கொஞ்சம் சுவாரசியமான, வித்தியாசமான சிந்தனைகளை தோற்றுவிக்கும் புத்தகங்களை அந்தவகை மாணவர்களுக்கு காட்டிவிட்டால் ஆச்சர்யங்கள் இருபது வருடங்களில் நிகழ்த்துவார்கள். அந்த விதையை இங்கே போடவேண்டும். எப்படி?

299472_399602143441648_1167340463_nசும்மா, நூறு புத்தகங்களை நூலகங்களுக்கு கொடுப்பது வேலைக்காகாது. இலக்கிய சந்திப்புகளில் அரசியல் வந்துவிட்டது. தவிர நான் இங்கே பேசும் விஷயம் இலக்கியமே கிடையாது. இளைஞர்கள் எழுத்தாளர் விழா, இலக்கியம் என்றாலே பாத்ரூம் போய்விடுகிறார்கள். கொஞ்சம் நவீன முறையில் இந்த இளைஞர்களை ஆர்வப்படுத்தவேண்டும். பல வழிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு சின்ன ஐடியா.

ஐம்பது மாணவர்கள் கூடுகிறார்கள். பத்து குரூப்பாக பிரியுங்கள். ஒவ்வொரு அணிக்கும் “என் இனிய இயந்திரா” வின் ஒவ்வொரு அத்தியாயம் கொடுப்போம். அவர்கள் முன்னர் அந்த நாவலை வாசிக்கவில்லை. அடி நுனி தெரியாது. கொடுக்கப்பட்ட அத்தியாயத்தை மாத்திரமே வாசிக்கவேண்டும். முப்பது நிமிடங்கள். முடிய ஒவ்வொரு அணியும் தம் அத்தியாயத்தை எல்லோருக்கும் ப்ரெசென்ட் பண்ணவேண்டும். அது முடிந்தபின், மீண்டும் ஒவ்வொரு அணியும் மொத்த நாவல் கதையை இப்போது ஊகித்தறிந்து பிரசென்ட் பண்ணவேண்டும். எப்படி இருக்கும்?

இது நடக்கும் பொது நிறைய வாத பிரதிவாதங்கள் நடக்கும். அந்த நாவல் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்று ஆளாளுக்கு சொந்தமாக யோசிப்பார்கள். அது ஒருவகை கிரியேட்டிவிட்டி. இதை கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் பண்ணி, “Alice in the wonder world”, “Mort”, “Restaurant at the end of universe” என்று விரித்து இன்னும் மேலே “Evolution of physics” வரைக்கும் போகலாம். பாடசாலைகளில் Science Club, Tamil Union போன்றவை இதை செய்யவேண்டும்.

இது ஒரு ஐடியா தான். இப்படி தினுசு தினுசா யோசிக்கலாம். நடைமுறை படுத்தவேண்டும். Yarl IT Hub செய்யும் என்று நம்புகிறேன். இதை நம்பி எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கூச்சசுபாவம் உள்ள சிறுவன், வெட்கத்தை விட்டு எங்கள் மீட்டிங்குக்கு வருவான் என்று நம்புகிறேன்.

வருவான்.


எழுத்தாளர் விழா

“சினிமா விமர்சனம் போல வாராவாரம் “நூல் அறிமுகம்” செஞ்சு இம்சிக்கிறாய். ஆனா உண்ட “கந்தசாமியும் கலக்ஸியும்” நாவலை எவனும் சீண்டவே இல்லையே”

கஜன் கேட்டபோது என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. அதை நாவல் என்று ஏற்றுக்கொள்வதில் மூன்று சிரமங்கள் இருக்கிறது. முதலில் இணையத்தில் வெளிவந்ததால் அது நாவலாகுமா? என்பது. அதில் நாவலுக்குரிய அம்சங்களே இல்லையே என்பது இரண்டாவது.  மூன்றாவது அதை சிறுவர்கள்(வயதடிப்படையில் அல்ல) எவரும் இன்னமும் வாசிக்கவில்லை. இலக்கியம் என்பது மிகவும் யதார்த்தமாக எங்கட ஊரில போயிட்டுது. அதுவும் ஈழத்து எழுத்தாளன் “ஐயோ அம்மா வலிக்கிறது” என்று வாய்விட்டு தன் அழுகையை கூவி விற்றால்தான் போய் சேருகிறது. சனநாயகம், சோஷலிசம், கொம்ரேட்,  தலித்தியம்(இந்த சொல்லே ஈழத்தில் பாவனையில் இருக்கவில்லை என்று சொன்னால் அடிக்க வருகிறார்கள்), பெண் விடுதலை மட்டுமே இங்கே கருப்பொருட்களாகின்றன. எழுத்தில் அடிக்கடி “காத்திரமான” என்ற வார்த்தை வேறு வந்து தொலைக்கவேண்டும்.

310691_10150312965606415_753825724_n[3]

நான் எழுதிய நாவல்ஒருவேளை தரமற்றதாக இருக்கலாம். ஆனால் அது எடுத்த கருப்பொருள் முக்கியமானது. பன்னிரண்டு வயது சிறுவன் வாசித்தால் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற குட்டி நம்பிக்கையில் எழுதியது. தலைவர் போன பின்னர் யாருமே அந்த ஏரியாவில் கை வைக்கிறார்கள் இல்லையே என்ற ஆதங்கத்தில் நான் ஆடிய வான்கோழி ஆட்டம். இந்த ஆட்டத்தை பார்த்தாவது ஒரு கானமயில் ரோஷம் வந்து ஆடாதா? என்ற நப்பாசை தான்.

புத்தகங்கள் மூலம் ஒரு புரட்சியை செய்யலாமா? அரசியல் புரட்சி அல்ல, தத்துவமும் அல்ல, நான் சொல்வது ஒருவகை தொழிற்புரட்சி, economic enlightenment என்பான் கோபி. நான் அதை கிரியேட்டிவிட்டிக்குள் அடக்கிவிட நினைக்கிறேன். இப்போது எங்களால் ஒரு நல்ல சினிமாவை பிரித்து மேய தெரிகிறது அல்லவா? கடல் படத்தின் கிளைமாக்ஸ் மொக்கை என்று சொல்ல தெரிகிறது இல்லையா. பேஸ் நோட் நிர்ஜானிக்கு எட்டுதே இல்லை என்று சொல்லுகிறோமோ?. அதற்கு காரணம் எங்கள் புத்தியை, எங்கள் திறமையை சினிமாவும், டிவியும் கிரிக்கட்டும், இசையும் ஆக்கிரமித்து இருக்கின்றன.  கொஞ்சம் நல்ல எழுத்தாளர்கள், துறை சார் வல்லுனர்கள் அவர்கள் துறைகளை சுவாரசியமாக பகிர தொடங்கினால், அது எழுத்தென்றில்லை, ஒரு யூடியூப் வீடியோவாக கூட இருக்கலாம், ஒரு ஐம்பது சிறுவர்களை, விஞ்ஞானத்தின் பக்கமோ, பொருளியல் பக்கமோ திருப்பலாம். கொஞ்சம் யோசிச்சு பாருங்கள். நாங்கள் கருணாநிதியையும், இளையராஜாவையும், இளையதளபதியையும் பின்னி பெடலெடுப்பது போல, ஒரு ஐம்பது சிறுவர்கள் ஐன்ஸ்டீனையும் பிலாங்கையும் .. ஏன் லாரி பேஜ், கோஸ்லிங்க் ஆக கூட இருக்கலாம், பிரித்து மேய்ந்தால் எப்படி இருக்கும்? அதற்கு பத்துவயது சிறுவனை டார்கட் பண்ணி, அவன் அப்படியான விஷயங்களை ரசிக்கும்படியான சூழலை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அந்த சூழலை புத்தகங்கள் இலகுவாக கொடுக்கும். ஒரு புத்தகமே போதும், ஒருவனின் வாழ்க்கையை மாற்றியமைக்க. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனியில் அது நிகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் நிகழ்ந்தது.

எங்களுக்கும் நடக்கலாம். நாங்கள் மனது வைத்தால்.

சனிக்கிழமை அன்று சிட்னியில் நடைப்பெறப்போகும் எழுத்தாளர் விழாவில் இதை பற்றி கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.  இங்கே இதை பேசுவதில் என்ன பலன்? என்று கேட்கலாம். வேறு இடங்களில் பேச சந்தர்ப்பம் இல்லை பாஸ். ஆற்றில் போட்டு குளத்தில் தேடும் மாட்டார் தான். ஆறு சிலவேளை ஐட்டத்தை அடித்து தள்ளிக்கொண்டு குளத்தில் சேர்த்தாலும் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் பேசப்போகிறேன்.

லண்டன் இலக்கிய சந்திப்பில் குத்துப்பாடு என்று அருளினியன் எச்சரிக்கை கொடுத்துவிட்டதால், பேச்சை தயார் பண்ணி பேசுவது ஜீன்சுக்கும் என் ஜட்டிக்கும் கூட சேஃப்  என்று நினைக்கிறேன். மற்றபடி சிட்னியில் யாராவது படலைப்பக்கம் மழைக்கு ஒதுங்கியிருந்தால், குடை பிடித்திருந்தால், வாருங்கள். பேசுவோம்!

இடம் : Homebush Boys’ High School.

 

&&&&&&&&&&&&&&&&&&&


ஆத்தில வாசகன் … குளத்தில எழுத்தாளன்!

$
0
0

 

1950s-photo-of-two-boys-r-007

“என் இனிய இயந்திரா”, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்து வகுப்பறைகளில் அந்த புத்தகம் தவணை முறையில் கை மாறும். யார் அன்றைக்கு அதை வீட்டுக்கு கொண்டு போவது என்று போட்டி இருக்கும். அந்த இயந்திர நாயை பற்றி மாணவர்கள் கலந்து பேசுவார்கள். அடுத்த சில நாட்களில் “ஏன் எதற்கு எப்படி” என்ற இன்னொரு நூல் இதே போன்று ஒரு சுற்று வரும். மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நூலகத்தில் உறுப்பினராக இருப்பர். அம்புலிமாமா, ராணி காமிக்ஸில் ஆரம்பிக்கும் வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், அகிலன் வரைக்கும் நீளும். எழுத்தாளர் விழாக்கள் எல்லாம் பாடசாலை முடிந்தபின் மதியம் இரண்டு மணிக்கு, உச்சி வெயிலில், பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில், சமாந்தரமாக துவிச்சக்கரவண்டிகளில் பயணம் செய்யும்போது தினம் தினம் இடம்பெறும். சில மாணவர்கள் பாலர் கவிதைத்தொகுப்பு வெளியிடுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை சிறுகதை எழுத சொல்லுவார்கள். மாலை ஆறு மணிக்கு மேசைவிளக்கில் படிக்கும் சிறுவனை எட்ட நின்று கவனித்தால், புத்தகம் நடுவே செங்கை ஆழியானின் கடல்கோட்டை இருக்கும். கதிரையை இழுத்து முற்றத்தில் போட்டு, பக்கத்தில் அரிக்கன் இலாம்பை வைத்து நிலவு வெளிச்சமும் கூட இருக்க, அக்கா வந்தியத்தேவனோடும் குந்தவையோடும் மூழ்கிக்கிடப்பார். புத்தகங்களும் வாசிப்பும் ஈழத்து வாழ்க்கையில் இன்றியமையாத பின்னிப்பிணைந்த தோழனாக, தோழியாக, சுற்றமாக எப்போதுமே இருந்திருக்கிறது.

z_p-36-To-Jaffna-01

இன்றைக்கு இருபது வருடங்கள் கழித்து, ஏதாவது நூல்கள் இப்படி மாணவர்கள் மத்தியில் உலவுகிறதா? மாணவர்கள் நூலகங்களில் தவம் கிடக்கிறார்களா? இரவில் கணணி, செல்லிடப்பேசி எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு நிலவு ஒளியிலே பதின்மத்து இளைஞனோ இளைஞியோ புத்தகத்துடன் மூழ்கிக்கிடக்கின்றனரா? இந்தக்கேள்விகளுக்கு வெறுமனே இல்லை என்று ஒற்றை சொல்லில் பதில் சொல்வது சரியல்ல. வாசிப்பு என்பது ஒரு படித்த சமூகத்தின் ஆதாரமான விஷயம். அது அப்படியே இரு தசாப்தங்களில் ஒழிந்துபோக சந்தர்ப்பம் இல்லை. ஆனால் குறைந்து போயிருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. இதற்கு காரணமாக பேஃஸ்புக், செல்லிடப்பேசிகள், திரைப்படங்கள் போன்றவற்றை சொல்வதும் சரியா என்ற சந்தேகம் வருகிறது. இவை காலத்தின் பரிமாணங்கள். எல்லா கலாச்சாரங்களிலும் இவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதற்காக வாசிப்பு ஏனைய கலாச்சாரங்களில் குறைந்துபோனதாக செய்தியில்லை. வாசிப்பு குறைந்துவிட்டது, புத்தகவிற்பனை அருகிவிட்டது என்ற புலம்பல்கள் ஆங்கில படைப்பு சூழலில் வருவதில்லை. ஆனால் தமிழில் இது இருக்கிறது. ஒரு தலைமுறையே திரையுலகம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. எங்கே தவறு இருக்கலாம்?

dvs081170ஒரு காலை நேரத்தில் மெல்பேர்ன் புகையிரதப்பயணம். பாடசாலை மாணவர்கள். அலுவலம் செல்கின்ற பயணிகள். பல்வேறு வகையான பதவிகளில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என்று விதம் விதமான வயது வித்தியாசங்கள். அனேகமான பயணிகள் ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தனர். பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள். Kindle, iPad போன்ற கருவிகளில் இருக்கும் மின்நூல்கள். அவர்கள் வாசித்துக்கொண்டிருந்த புத்தகங்களை குறிப்பெடுக்க தொடங்கினேன். “Italy a short history”, “A song of ice and fire”, “Echo Rising”, “How Branding Grows”, “Call the midwife”, “Restaurant at the End of Universe” , “Life of Pi”, “Outliers”. ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையான நூல்கள். சிலது நாவல்கள். சிலது பயணம் சார்ந்தது. சிலது ஆன்மிகம். சிலது சிந்தனைக்கு விருந்தளிக்க கூடியது. சிலது தொழில்சார்ந்தது. சிலது விஞ்ஞானம். முக்கியமான விஷயம் அனேகமான புத்தகங்கள் துறைபோன இலக்கியவாதிகளால் எழுதப்படவில்லை. பல் துறை சார்ந்த நிபுணர்கள், அவர்கள் துறைசார்ந்து படைப்பிலக்கியத்தையோ அல்லது அவர்களுடைய தொழில்சார் நூல்களையோ எழுதுகிறார்கள். விளைவு, படைப்புகளில் ஒருவித பரம்பல் தன்மை இருக்கிறது. விரும்பிய துறையில் ஒரு புத்தகத்தை தேர்வு செய்து வாசிக்கமுடிகிறது. நடைமுறை வாழ்க்கை படைப்பில் வருகிறது. வாசிக்கும்போது எம்மால் அந்த நூல்களின் பாத்திரங்களோடோ, கதை சொல்லியோடோ, விஷயங்களோடோ பயணிக்க முடிகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு பன்னிரண்டு வயது இருக்கும். அப்போது குடும்ப நண்பர் ஒருவர் ஐன்ஸ்டீனுக்கு பரிசாக கொடுத்த புத்தகம் “மக்களுக்கான இயற்கை விஞ்ஞானம்(People’s Natural Science)”. அந்த புத்தகத்திலே இருக்கின்ற ஓடும் ரயில் சார்ந்த சுவாரசியமாக விளக்கப்பட்ட விஞ்ஞான பரிசோதனை சிறுவன் ஐன்ஸ்டீனின் மூளையில் பசுமரத்தாணி போல ஏறிவிட, பின்னாளில் உலகையே வியக்கவைத்த சார்புவிதியை ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்க அது காரணமானது.

Dont-panic-douglas-adams1டக்ளஸ் அடம்ஸ், தொழில்நுட்பத்தை படைப்பிலக்கியத்தில் சுவாரசியமாக சூடு குறையாமல் கொண்டுவந்த ஜாம்பவான். எழுபதுகளில் அவர் எழுதிய Hitchhiker’s Guide To Galaxy (ஒரு வழிப்போக்கனின் பிரபஞ்ச வழிகாட்டி), அன்றைய இளைஞர்களின் பைபிள். புதுமையான எண்ணங்களை, வித்தியாசமாக சிந்திக்கவைக்கும் ஆற்றலை அந்த தலைமுறை இளைஞர்கள் மத்தியில் இவருடைய படைப்புகள் ஏற்படுத்திக்கொடுத்தன. சமகாலத்தில் சிலிக்கன் வலியில் இடம்பெற்ற தகவல் தொழில்நுட்ப புரட்சியின் ஊற்றுகளான ஸ்டீவ் வொஸ்னியாக், ஸ்டீவ் ஜொப்ஸ், பில் கேட்ஸ் போன்றவர்கள் தொடங்கி, பின்னாளில் உருவான கூகிள் நிறுவனத்து எரிக் ஷிமிட், லாரி பேஜ் போன்ற, தொழில்நுட்பம் மூலம் சிறந்த நிறுவனங்களை ஆற்றுப்படுத்தி முன்னுக்கு வந்த எல்லோருக்குமே டக்ளஸ் அடம்ஸ் ஒரு பிதாமகன். கூகிள், அன்றோயிட், பேபில் போன்ற மென்பொருள் பெயர்கள் கூட இவர் நாவல்களில் இருந்தே எடுக்கப்பட்டன. இத்தனைக்கும் அடம்ஸ் ஒரு நாவலாசிரியர் மாத்திரமே. ஆனால் ஆச்சர்யமான நாவலாசிரியர். பண்ணைகளையும், குதிரைவீரர்களையும், குடும்பத்து யதார்த்தங்களையும் சுற்றிக்கொண்டிருந்த எழுத்தை புதுமைப்படுத்தி பிரபஞ்ச சூழலுக்கு கொண்டு சென்றார். பூமியில் நிகழும் எல்லாமே எவ்வளவு அபத்தமானதாக இருக்க கூடும் என்று உணர்த்த கிரகம் கிரகமாக வாசகர்களை பயணிக்கவைத்தார். விளைவாக அடம்ஸ் புதுமையாக சிந்திக்கும் ஒரு தலைமுறையையே உருவாக்கினார்.

சயந்தன் என்ற ஈழத்தை சேர்ந்த இளைஞன். ஒரே வாரத்தில் மூன்று புத்தகங்கள் வாசிப்பவன். புத்தகங்களை ஒலிவடிவில் கேட்பவன். “ஏன் நீ தமிழ் புத்தகங்களை வாசிப்பதில்லை?” என்று கேட்டேன். “Non Fiction, வகை விஞ்ஞான, பொருளியல் சார்ந்த, நவீன உலகத்துக்குரிய புத்தகங்களை தமிழில் தன்னால் இனம் கண்டுகொள்வது சிரமமாக இருக்கிறது” என்றான். “ஆங்கிலத்தில் அது அதிகம் கிடைக்கிறது. சிறந்ததை, எனக்கேற்றதை தேர்ந்தெடுக்க கூடியதாக இருக்கிறது, தமிழில் எல்லாமே இலக்கியமாக இருக்கிறதே” என்று சிரித்தான்.

சயந்தனை எப்படி தமிழில் வாசிக்கவைப்பது? தமிழிலக்கிய சூழலில் டக்ளஸ் அடம்ஸ், டெர்ரி பிரச்சட் போன்ற ஜாம்பவான்கள் ஏன் உருவாகவில்லை? ஏன் மக்களுக்கான விஞ்ஞானத்தை நம் பிள்ளைகளுக்கு நாம் வாங்கிக்கொடுப்பதில்லை? உலகமயமாக்கல் சார்ந்த பொருளாதார, வியாபாரம் சார்ந்த நூல்கள் ஏன் தமிழில் இல்லை? என்ற கேள்வி இப்போது எழுகிறது. அப்படியே வெளிவந்தாலும் அது ஏன் மக்களை சென்றடைவதில்லை? அப்துல் கலாமின் அக்கினிச்சிறகுகள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். புதுமைப்பித்தன் நாற்பதுகளில் இந்த அதிசயம் தமிழில் ஓரளவு முடியும் என்று கோடி காட்டினார். பின்னாளில் சுஜாதா அதை பல படிகள் மேலே கொண்டு சென்றார். ஆனால் அவை தவிர அனேகமான தமிழ் படைப்புகள், இலக்கியங்கள் என்று அடைப்புக்குள்ளேயே சுருங்கிவிட்டன. அ.முத்துலிங்கம் போன்ற துறை போனவர்கள் கூட ஒரு எல்லையை விட்டு வெளியே வர முயலவில்லை.

sujathaஎழுத்து என்பது இங்கே இலக்கியவாதிகளுக்குள் சுருங்கிவிட்டது. முறையாக வாசித்து, உலக இலக்கியங்களை படித்து, கூட்டங்களுக்கு சென்று, வரையறைகளை வகுத்து எழுதும் எழுத்தாளர்களின் படைப்புகளில் அந்த இலக்கியத்தன்மை இயல்பாகவே ஒட்டிக்கொண்டு விடுகிறது. புதுமை, சுயத்தை அங்கே சில மாற்றுக்கள் குறைந்துவிடுகிறது. வாழ்க்கையை அதன் யதார்த்தங்களோடு தருவது மட்டுமே இலக்கியம் என்ற கருத்தியல் மீதான கொண்டாட்டம், சுஜாதா என்ற மாபெரும் தலைமுறை எழுத்தாளனுக்கு சாகித்திய அக்கடமி விருதை கைக்கெட்டாமல் செய்தது.

பல்துறைசார் நிபுணர்கள் தமிழில் அவர்கள் அனுபவங்களை கோர்த்து ஒரு படைப்பை அமைப்பது என்பது குறைந்துவிடுகிறது. அப்படி எழுதுபவர்கள் கூட தங்கள் துறையை மறுத்து மீண்டும் குடும்ப வாழ்க்கையையும், போரின் அல்லல்களையும் எழுத்தின் கருப்பொருள் ஆக்குகின்றார்கள். இந்த தலைமுறை இளைஞர்கள் செய்யும் தொழில்கள் ஏதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தின் கணனித்திரையின் முன்னேயோ அல்லது வங்கி முகாமைத்துவ முன்றலிலோ இருக்கும்போது, தமிழ் நூல்கள் கிராமத்தையும், நனைவிடை தோய்தலையும், குடும்ப சிக்கல்களையும், சாதியம், பெண்விடுதலை, கம்யூனிசம் என்ற வழமையான கருப்பொருட்களுடனேயே சுற்றிவருகின்றன. வரக்கூடாது என்றில்லை. ஆனால் அவை மட்டுமே வருவது, வாசகனை தமிழை விட்டு அவனுக்கு தேவையான அனுபவத்தை கொடுக்கும் ஆங்கிலத்துக்கு அழைத்துச்செல்கிறது. நல்ல வாசகனை தமிழுக்குள் இழுத்துவைத்திருக்க, அவனுக்கேற்ற எழுத்தை நாம் தரவேண்டும். காலத்தை ஒட்டிய எழுத்துக்கள் நமக்கு வேண்டும்.

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்தரோமீடாவுக்கு பயணம் செய்த என் அண்ணா திரும்பும் போது வயது குறைந்து தம்பியாக மாறி இருந்தார்”

என்று ஐன்ஸ்டீனின் சார்புத்துவத்தை வைத்து இளமையான நாவல் எழுதலாம். விஞ்ஞானம் விளக்கலாம்.

“முதல் நாள் அலுவலகம்; முன்னே 21இஞ்சி கணனித்திரை, கொமாண்டுகள் எதுவுமே புரியவில்லை. பக்கத்தில் இருந்தவனோ இரண்டு காதுகளிலும் ஏ ஆர் ரகுமானை அலறவிட்டுவிட்டு ஜாவாவில் வெளுத்துக்கட்டிக்கொண்டிருந்தான். கேட்கலாம் தான். அவன் சொன்னால் கூட புரியவா போகிறது?”

என்று ஒரு நாவலின் இடை வரி இருக்கலாம்.

இதைத்தான் வாசகனாக இன்றைக்கு தேடிக்கொண்டிருக்கிறேன். எழுதினால் இன்றைய இளைஞன் இதை வாசிக்காமல் போகமாட்டான். செங்கை ஆழியான் சொல்லித்தந்த வன்னியையும் நெடுந்தீவையுமே இன்றைக்குமே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி? அதற்கு தான் செங்கை ஆழியான் இருக்கிறாரே. எங்கள் அவல நிலையை சொல்லத்தானே அதற்குள் அகப்பட்டு அல்லலுற்ற ஏராளமான எழுத்தாளர்கள் இருக்கிறார்களே? எழுதுகிறார்களே? அதை ஏன் எல்லோருமே எழுத முயலுகிறார்கள்? எவ்வளவு காலத்துக்கு நனைவிடை தோய்ந்துகொண்டே கிடப்பது?

ஒரு எழுத்தாளனை இதைத்தான் எழுதவேண்டும் என்று கட்டுப்படுத்தமுடியாது, கூடாது.  எங்கள் உடனடித்தேவை கலப்படமில்லாத புது இரத்தம். பல்துறை களத்தை தமிழுக்கு கொண்டுவர, இலக்கியவாதிகள் அல்லாதோர் எழுத தொடங்கவேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் ஏராளமான கதைகள் அனுபவங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு கொஞ்சம் கற்பனை சேர்த்தால் அழகான நாவல்கள், படைப்புகள் நிச்சயம் கிடைக்கும். இன்றைக்கு என் எழுத்தை வெளியிட பதிப்பாளர் இல்லையே, எவருமே வாசிக்கமாட்டார்களே என்ற கவலையும் கிடையாது. இணையம் இருக்கிறது. பதிவுலகம் இருக்கிறது. வாசகன் தீனி இல்லாமல் இங்கே பட்டினி கிடக்கிறான். எழுத்தாளனோ அவனை விடுத்து வேறு யாருக்கோ எழுதிக்கொண்டிருக்கிறான். இருவரும் இணைந்தால் ஆச்சர்யங்கள் நிகழலாம். இணையத்தில் காப்பு பணம் கிடைக்காது. சல்லி பெயராது. ஆனால் வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமிடையில் சம்பாஷனை இருக்கும். கருத்து வேறுபாடுகள், கலந்துரையாடல்கள் என்று ஈற்றில் எழுத்தாளனும் வாசகனும் ஒரே புள்ளியை அடையும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். நிஜமான எழுத்தாளனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

இன்னுமொன்று, வாசிப்பு தளம் என்பது இங்கே மாறிவிட்டது. தேடல் காகிதங்களில் இருந்து இடம்பெயர்ந்து இணையத்தில் விரிந்து கிடக்கிறது. மின் நூல்கள், இணையத்தளங்கள், பதிவுலகம், Facebook, Twitter என்பதில் இருந்து Ted (ted.com), Khan Academy(www.khanacademy.com), pod casts, ஒலி நூல்கள் என்று படைப்பாளியும் தேடுபவனும் சேரும் புள்ளிகள் பரந்திருக்கின்றன. தமிழ் எழுத்துக்கள், ஓரளவுக்கு இதை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டாட ஆரம்பித்தாலும், இன்னமுமே பின் தங்கியே இருக்கிறது. அப்படியே கொண்டாடினாலும், அவற்றை அரசியலுக்கும், சினிமாவுக்கும், தீவிர இலக்கியத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சொல்லும் தளம் மாறியிருக்கிறது. ஆனால் சொல்லும் விஷயம் இன்னமுமே அப்படியே.

Professional Blogger Boss

ஒரு பொறியியலாளன் கட்டட நிர்மாண களத்தை வைத்து, அதில் புதுமை சேர்த்து படைப்பை சிந்திக்கட்டும். மென்பொருள் துறையாளன் அந்த துறையின் அதிசயங்களை தமிழ் படுத்தட்டும். வைத்தியன் தமிழில் மருத்துவம் சார்ந்த எழுத்துகளை தரட்டும். ஆசிரியன், விஞ்ஞானி, வியாபாரி, தொழிற்சாலையில் வேலை செய்பவர் எல்லோருமே எழுத ஆரம்பிக்கவேண்டும். தொடர்ந்து எழுதவேண்டியதில்லை. ஒரு நாவல் கூட போதுமானது. ஏன், ஒரு சிறுகதையே காலத்துக்கும் நிலைக்கும். அவர்கள் எழுதுவதற்கு கம்பரையும், ஷேக்ஸ்பியரையும் படித்திருக்கவேண்டிய அவசியம் கிடையாது. இரவிரவாக வாசிக்கும் ஒருவன் முயன்றால் நாலு வரி எழுதலாம் என்று தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும். எழுத்து ஒரு போதை போன்றது. ஆரம்பித்துவிட்டால் அப்புறம் யாருமே தடுத்து நிறுத்தமுடியாது. சித்திரம் போல அது கைப்பழக்கம். எழுத எழுத படியும், வளரும். ஆரம்பிக்கவைப்பது தான் சவால். அதை செய்தோமானால் புற்றீசல் போல எழுத்துக்கள் கிளம்பும். அவற்றில் பல சொதப்பும் தான். ஆனால் நூறு கிளம்பும்போது பத்து தேறும். அதில் இரண்டு புரட்சி செய்யும். ஒன்று தலைமுறையை மாற்றியமைக்கும். அந்த ஒரு நூல் வெளிவர நாங்கள் இத்தனை அத்திவாரங்கள் போடவேண்டும். எழுத்தாளன் எழுத தொடங்கினால் தான், ஆங்கிலம் பக்கம் சாய்ந்திருக்கும் இளைய தலைமுறை வாசகன் தமிழ் பக்கம் தலைவைத்து படுப்பான்.

எழுத்தாளர் விழா அதை செய்ய ஒரு கல்லை எடுத்து வைக்கும் என்று நம்புவோம். தமிழ் மேலான உணர்ச்சிவசப்பட்ட தன்மையை மீறி, மொழியை ஊடகமாக கொண்டு எழுதப்படும் விஷயங்கள், அதன் பரப்புகள் இலக்கியம் தாண்டி விரியட்டும். பல்வேறு துறைபோனவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் எழுத தூண்டுகோல் புரியட்டும். பழமை மதிக்கப்பட்டு புதுமை படியேற ஆரம்பிக்கட்டும்.

நன்றி

இந்த கட்டுரை சிட்னியில் 2013-04-20 அன்று நடந்த எழுத்தாளர் விழாவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மீள்வாசிப்பு செய்து திருத்தங்கள் முன்மொழிந்த சக்திவேல் அண்ணா, வாலிபன், சயந்தன், கேதாமற்றும் வீணாவுக்குமிகவும் நன்றிகள்.

படங்கள் : இணையம்(Ofcourse!)

என் கொல்லைப்புறத்து காதலிகள் : கக்கூஸ்

$
0
0

 

timthumbநடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக போவதென்றால் அது ஒரு பெரிய அரசியல் பிரச்சனை. தனியாக போகமுடியாது. செத்துப்போன தாத்தா பத்திக்குள்ளே சுருட்டு பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் வேறு நிற்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரையில் இருக்கும் அம்மாவை எழுப்பவுவது. முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார்.

“பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”

கேட்டுக்கொண்டே தலைமாட்டில் இருக்கும் மண்ணெண்ணை விளக்கை தடவி எடுத்து கொளுத்துவார். முதலில் கிணற்றடிக்கு போய் வாளியில் தண்ணி அள்ளிக்கொண்டு அப்படியே டோய்லட் பக்கம் போய், அம்மாவை வெளியே பேய், பிசாசுகள் வராதவாறு காவல் காக்க சொல்லிவிட்டு, டோய்லட் சுவரின் மேற்பகுதியில் இருக்கும் பெட்டி வடிவ ஓட்டை ஒன்றில் விளக்கை வைப்பேன். ஏற்கனவே மண்ணெண்ணெய் விளக்கின் புகை படிந்து அந்த நான்கு ஓட்டைகளும் கரிப்பிடித்து போய் கிடக்கும். கூர்ந்து கவனித்துப்பாரத்தால் அதன்மேல் மென்மையான கறுத்த குட்டி குட்டி திட்டுக்கள் அதன்மேல் ஒட்டி இருக்கும். நடுப்பக்க சுவரில் அதே கரியாலேயே “எங்கிட்ட மோதாதே, நான் ராஜாதி ராஜனடா” என்று நான் எழுதியிருந்ததை, அம்மா தண்ணி போட்டு கழுவ முயற்சி செய்திருப்பது தெரியும். டோய்லட்டின் ஒவ்வொரு யன்னல் ஓட்டையிலும் ஒவ்வொரு விஷயங்கள். ஒன்றில் நெருப்பு பெட்டி இருக்கும். இன்னொன்றில் கார்ப்பிக் இருக்கும். இன்னொன்றில் நுளம்புத்திரி கூட இருக்கும்!

p156

இப்போது இராமன் இலங்கை புகும் படலம். கக்கூஸ் கதவெல்லாம் சும்மா தள்ளினா திறக்காது. ஏற்கனவே கீழ் பிணைச்சல் அறுந்து, மேல் பிணைச்சலில் தான் அதுவே தொங்கிக்கொண்டிருக்கும். கதவை கவனமாக தூக்கி திறந்துக்கொண்டு உள்ளே போனால், அங்கே ஒரு குட்டி தெகிவளை மிருகக்காட்சி சாலை இயங்கிக்கொண்டிருக்கும். ஒரு பெரும் தவளையார் முன்னுக்கு நின்று டிக்கட் கொடுப்பார். மேலும் ஆளுக்கொரு மூலையில் ஏனைய தவளைகள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கும். அது கூட ஒகே. இந்த தேரை என்று ஒன்றிருக்கிறது. அது ஆளில் பாய்ந்தால் வளர்ச்சி குறைந்துவிடும் என்று யாரோ கதைகட்டிவிட்டு போய்விட, தேரையை பார்த்தாலே ஒரு நடுக்கம் வரும். அது எந்தப்பக்கத்தால எப்பிடி மூவ் எடுக்கும் என்றெல்லாம் உய்த்தறிவது கஷ்டம்.  ஒரு ஆங்கிளில் ஊதி, தண்ணீர் தெளித்தால், கதவுப்பக்கமாக வெளியேறிவிடும்.

அடுத்தது தண்ணீர் பைப். அதன் டப்பை எவனோ ஒரு வேதாளத்துக்கு பிறந்தவன், நாங்கள் இந்தியன் ஆர்மி டைம் இடம்பெயர்ந்திருந்த சமயம் பார்த்து கொத்திவிட்டான். விளைவு வெறும் உடைந்த பைப் மட்டும் தான் மிச்சமிருந்தது. அந்த குளாயினூடாக கரப்பான்கள் வன் பை வன்னாக வந்து “ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டூ யூ டூ” சொல்லும். உட்பக்கமாக சாத்திவிட்டு கதவு ஓட்டமட்டிக் ரிட்டேர்ன் வராதவாறு ஒரு கொங்கிரீட் கல்லை நகர்த்தி வைக்கவேண்டும் அல்லவா? அதை நகர்த்தும்போது இரண்டு மட்டத்தேள் கல்லுக்கு கீழால் இருந்து வேறு சரக்கென்று வெளியேறும். அதை காலில் போட்டிருக்கும் செருப்பை கழட்டி அடித்தாலும், இரண்டாக பிய்ந்து இரண்டு திசையில் ஓட ட்ரை பண்ணும். இதற்கிடையில் ஆங்காங்கே பிக்னிக் போகும் சிவப்பு, கறுப்பு, மஞ்சள் அட்டைகளை பற்றி பேசவேதேவையில்லை

சரி இதெல்லாம் கூட தமிழ் மக்களின் யதார்த்த தார்மீக காத்திரமான போராட்ட விழுமியங்களின் ஒரு அம்சம் தான் என்று சொல்லி மனதை தேற்றிக்கொண்டு அவசர அவசரமாக உட்கார்ந்துவிடலாம். ஆனால் தப்பித்தவறியும் மேலே பார்த்துவிட கூடாது. பார்த்தால் ஸ்ட்ரைட்டாக தலைக்கு மேலே ஒரு பெரிய சிலந்தி இருக்கும். கதை கம்மாஸ். புலிநகச்சிலந்தி கடித்தால் அடுத்த கணமே ஆள் குளோஸ் என்பார்கள். அப்பிடியே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போனாலும் எதுவும் ஆகப்போவதில்லை. “பெரிய புலிநகச்சிலந்தி ஒண்டு நிக்குது” என்று அம்மாவை உதவிக்கு அழைப்பேன். “உவத்திரமடா” என்று அலுத்துக்கொண்டே உள்ளே வந்து அம்மா டொக் டொக் என்று சுவரை தட்டுவார், அது கட கடவேண்டும் ஒரு மூலைக்கு ஓடும்.  “இது பட்டுப்பூச்சி, சும்மா எதுக்கெடுத்தாலும் பயப்பிடாத” என்று சொல்லிக்கொண்டே, தவளை தேரை எல்லாவற்றையும் அடித்து விரட்டி, அம்மா ஏரியாவை கிளியர் பண்ணி தருவார். இனி நிம்மதியாக அட்டாக் தொடங்கலாம் என்று உட்கார்ந்தால் கதவு கீழ்ப்பகுதி எல்லாம் உக்கி உதிர்ந்து வெளியிலே ஜிம்மி கடகத்துக்குள் படுத்து தூங்குவது நன்றாக தெரியும். என்னை பார்த்து அனுங்கும்!

அட்டாக் ஆரம்பிக்கிறது. அது எதற்கு  இங்கே? வேண்டாம். அட்டாக் ஒரு பக்கத்தால் போய்க்கொண்டிருக்கும்போது தான் என்னுடைய தமிழ்பேச்சு ரிகேர்சலும் இடம்பெற தொடங்கும். நேரம் இரவு ஒரு மணி. அம்மா வெளியே செத்துப்போன தாத்தா வராமல் இருக்க காவல். தூங்கி வழிந்தபடியே. என் பேச்சு ஆரம்பிக்கிறது.

“என்னை இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே. (செருமல்) எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடிகளை என் சிரமேற் பணிந்து வணங்கி, பெருமதிப்புக்குரிய நடுவர் அவர்களே. கனம் அதிபர் அவர்களே (அதிபர் தனபாலனை பார்த்து ஒரு சிரிப்பு). ஆசிரியர் பெருந்தகைகளே. (இந்த சமயம் தேரை என்னை நோக்கி பாயும்போல இருப்பதால், தண்ணி எடுத்து ரெண்டு தெளி தெளிக்கிறேன். ஓடிவிட்டது) என் சக மாணவர்களே. எல்லோருக்கும் பணிவான வணக்கங்கள்.(கைதட்டல்கள்) நான் இன்றைக்கு பேச எடுத்துக்கொண்ட விடயம் “தமிழன் என்று சொல்லடா தலை நிமிரிந்து நில்லடா””.

இப்போது அடிபாடு முனைப்பு பெறுவதால் பேச்சுக்கு கொஞ்சம் ப்ரேக். கொஞ்சம் முக்கல். ஒபரேஷன் லிபரேஷன் சத்தங்கள். சக்கை லொறி முகாமுக்குள் இறங்குகிறது. கொஞ்சம் துவக்கு சூடுகள். காம்ப் சரண்டர். ஆசுவாசமாக மூச்சுவிடல். பேச்சு ஆரம்பிக்கிறது.

“கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய எங்கள் மூத்த தமிழானது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது!  (கைதட்டல்) அய்யன் வள்ளுவன் அகரமுகர வில் ஆரம்பித்துவைக்க”

மீண்டும் ஒரு ப்ரேக். ஹெலியால் கொண்டுவந்து ஆர்மியை இறக்கி இருக்க வேண்டும். கரக் முரக் சத்தங்கள். ஹெலிக்கு இப்போது 50கலிபர் தாக்குதலை மெடிகல் பஃக்கல்டி கிரவுண்டில் வைத்து அடிக்கிறோம்.

“கவிச்சக்கரவர்த்தி கம்பன், இளங்கோ, அவ்வை என்று தொடர்ந்து புரட்சிக்கவி பாரதி வரை தமிழை வளர்த்துச்சென்றார்கள். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

பேச்சு சூடுபிடிக்கும்போது தான் சடக்கென்று டவுட் வந்தது.

“அம்மா”

சத்தமில்லை. மீண்டும் பலமாக கத்தினேன்.

“அம்மோய்…”

“என்னடா?”

“ஒண்டுமில்ல … இருக்கிறீங்களா எண்டு செக் பண்ணினான்”

***********

கக்கூஸ், லவட்டிரி, லட், டோய்லட் என்று தமிழ் அல்லாத வேறு எல்லா மொழிகளிலும் அழைக்கப்படும் மலசலகூடத்தை கொல்லைப்புறத்து காதலியாக எழுதலாமா? எழுதினால் “நாறாதா?” என்று நேற்று கேதாவிடம் கேட்டேன். “இது தான் அண்ணே உண்மையான ‘கொல்லைப்புற’ காதலி” என்று சொல்லி சிரித்தான். சரி காதல் மாட்டர் என்றாலே இறுதியில் “நாறும்” விஷயம் தானே என்பதால் துணிந்து இறங்கியாயிற்று.

சிறுவயது முதலே டோய்லட் எனக்கு ஒருவித போதிமரம் தான். ஏராளமான சிந்தனைகள் அங்கேயே ஆரம்பித்து அங்கேயே முடிந்துவிடும். எக்ஸாம் நேரத்தில் ரிவிஷன் எல்லாம் நடக்கும். என் டோய்லட்டில் நானே ராஜா. டிவி நிகழ்ச்சிகள், பத்திரிகை செய்திகளில் எல்லாம் என் சம்பந்தமான விஷயங்கள் இடம்பெறும். அந்த ஒரு பத்து நிமிஷத்தில் பலர் என்னை பேட்டிகள் கூட எடுத்திருக்கிறார்கள். நான் ஒரு செலிபிரிட்டியாம், ஒபரா வின்ப்ரே என்னை உட்கார வைத்து கேள்வி கேட்பாராம். எல்லாமே தரவரிசை வகை கேள்விகள் தான்.

“உங்களுக்கு பிடித்த ஐந்து விளையாட்டு வீரர்கள்?”

“ரோஜர் பெடரர், சவுரவ் கங்குலி, ஷேன் வோர்ன், விஸ்வநாதன் ஆனந்த், ஜஸ்டின் ஹெனின் … வெயிட் வெயிட் … ஆறு பேரு எண்டு மாத்துங்க .. சச்சின்!”

20070904_102_350x263“உங்களுக்கு பிடிச்ச ஐஞ்சு விஞ்ஞானிகள்?”

“ஐன்ஸ்டீன், ஷ்ரோடிங்கர், நீல் போர் … நியூட்டன் …ம்ம்ம்.. மேரி கியூரி”

“பிடிச்ச ஐந்து மியூசிக் டிரேக்டரஸ்”

“ஏ எம் ராஜா, எம்எஸ்வி, இளையராஜா, ஏ ஆர் ரகுமான் ….  வித்தியாசாகர்”

“டூ யூ ரிமெம்பர் யுவர் பஃர்ஸ்ட் எவர் டிஸ்ப்ளேஸ்மண்ட்?”

“யெஸ் .. ஐ வோஸ் செவின் இயர்ஸ் ஓல்ட். இட் வோஸ் தி ஐபிகேஎப் டைம். வி ஒல் மூவ்டு நல்லூர் டெம்பிள். யூ னோ நல்லூர் டெம்பிள்? இட்ஸ் லைக் எ சேர்ச் .. பட் கோட் இஸ் திஃபரேன்ட், சிவன்’ஸ் சன் .. ஐ மீன் நல்லூரான் இஸ் எ சன் ஒஃப் கோட்”

“ஜீசஸ் ஓல்சோ எ சன் ஒஃப் கோட்!”

இப்படி எனக்கும் ஒப்ராவுக்கும் இடையில் அந்த பேட்டி நீளும். இடை நடுவில் செண்டிமெண்டாக பேசி, ஒபரா அழுதவிஷயங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. உங்களில் எத்தனை பேருக்கு இப்படி அனுபவங்கள் இருக்கோ தெரியாது. டோய்லட்டில் இவ்வாறான விஷயங்கள் எல்லாம் சகட்டு மேனிக்கு இடம்பெறும். உதாரணமாக தமிழ் சினிமாவில் இடம்பெறாத ஐடியல் கொம்பினேஷன் எது?

“மணிரத்னம், சந்தோஷ்சிவன், சுஜாதா, ரஜனிகாந்த், மதுபாலா, ஏ ஆர் ரகுமான், வைரமுத்து”

********

கொஞ்சம் கிராமப்பகுதி, தீவுப்பகுதி என்றால் அந்த நாட்களில் டோய்லட் கட்டியிருக்கமாட்டார்கள். அங்கே ஒரே ஒரு மெதட் “சுழல்” தான். வெட்டவெளியில் சுழல். அந்த மெதட்டை ஏன் சுழல் என்று சொன்னார்கள் என்று வளர்ந்த பின்னர் தான் புரிந்தது.  விளக்கத்தை நான் இங்கே கொடுக்கமுடியாது. முடிந்தவர்கள் யாராவது ட்ரை பண்ணுங்கள். இன்னொரு வகை மண்ணெண்ணெய் பரல். கிடங்கு வெட்டி மண்ணெண்ணெய் பரலை தாட்டுவிட்டு அதற்கு மேலேயே செட்டப் செய்வது.

வன்னியில் மாயவனூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் இருக்கும் ஊர் அது. 1996ம் ஆண்டு கிளிநொச்சி அடிபாட்டு சமயம் நாங்கள் அங்கே இடம்பெயர்ந்திருந்தோம்.  அவசரமாக வட்டக்கச்சியில் இருந்து ஓடிப்போய் யாரென்றே சரியாக தெரியாத ஒருவீட்டில் அன்றைக்கு அடைக்கலம். இப்படியான அந்தரமான நேரங்களில் தான் “அதுவும்” வந்துவிடும்.  அங்கே ஒரு டோய்லட் இருந்தது. நான்கு பக்கமும் கிடுகால் வேயப்பட்ட டோய்லட். அட பரவாயில்லையே என்று தோன்றியது. முதலில் போன அக்கா போன வேகத்திலேயே திரும்பினார். “எதென்றாலும் வட்டக்கச்சி போய் பார்ப்பம், இங்க வேண்டாம்” என்றார். “உங்களுக்கெல்லாம் சொகுசா வளர்ந்ததால வந்த வினை. எந்த சிட்டுவேஷனையும் சமாளிக்க பழகிறவன் தான் மறத்தமிழன்” என்று சொல்லியபடி வாளியில் தண்ணி அள்ளிக்கொண்டே உள்ளே நுழைந்தேன். உள்ளே பார்த்தால் வெறும் முதிரைக்கட்டை கொட்டு. முதிரை மரத்துக்கு இயல்பாகவே ஒரு “வழுக்கும்” இயல்பு இருக்கிறது. அதை கொஞ்சம் சீவி வாய்க்கால் போலே அமைத்து, அப்படியே தாட்டுவைத்திருந்த மண்ணெண்ணை பரலோடு தொடுத்திருந்தார்கள். முதிரை கட்டைக்கு இரண்டு புறமும் இரண்டு கொங்கிரீட்கற்கள்.  அது வேறு பலன்ஸ் இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்துகொண்டு முதிரைக்கொட்டுக்குள் இருப்பதென்பது இந்த மறத்தமிழனுக்கே சவாலான விஷயமாக இருந்தது. வெளியே வந்து அக்காவிடம் சொன்னேன்.

“என்ன இருந்தாலும் அதில இருந்த இஞ்சினியரிங் டிசைனை யாராலேயும் அடிக்க ஏலாது. நிச்சயமா ஒரு மரத்தமிழன் தான் இதை செய்திருப்பான்.”

வட்டக்கச்சியில் நாங்கள் இருந்த வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு தென்னஞ்சோலை. அங்கே தான் கௌசல்யா அக்காவின் குடும்பம் குடியேறியிருந்தது. அத்தான் ஒரு சிவில் எஞ்சினியர். அந்த மண்வீட்டை கூட இஞ்ச் இஞ்சாக தானே பார்த்து பார்த்து கட்டினார். கக்கூசும் அப்படியே. அது ஒரு பெரிய கதை.

வீட்டுக்கு பின்னால் கொஞ்சம் தள்ளி பத்து இருபது கற்களை அடுக்கி, எங்கிருந்தோ எடுத்துக்கொண்டு வந்த ஒரு உடைந்த பவுலை வைத்து மண்ணாலே மெழுகினார். பின்னர் அதற்கு மேலே கிலோ நூறு ரூபாய்க்கு சீமெந்து வாங்கி குழைத்து பூசினார். இப்போது ஒரு சின்ன மேடை தளத்தின் மேலே பவுல் கட்டியாயிற்று. மறைப்பு எப்படி? என்று கேட்டேன். நான்கு பக்கத்துக்கும் கதிகால் நட்டு ஒரு உர பாக்கை சுற்றிவிட்டார். உள்ளே போய் உட்கார்ந்தால் தோளுக்கு மேலே எல்லாமே வெளியே தெரியும். “மூஞ்சி வெளியே தெரியுதே அத்தான், அந்தரமாக இருக்காதா?” என்றேன். “மறைக்கவேண்டியத்தை மறைச்சால் போதும்” என்றார். கூரை வேறு கிடையாது. “மழை பெய்தால் என்ன செய்வது?” என்றதற்கு, “குடை பிடிச்சுக்கொண்டு இருக்கவேண்டியது தான், பாவிக்காத நேரத்தில ஒரு பாத்திரத்தால பவுலை மூடினா தண்ணி உள்ளுக்க போகாது” என்றார். எஞ்சினியரிங் டிசைனின் உச்சம் இது. இருக்கிறதை கொண்டு சமாளிக்கிறது. அந்த கணமே வளர்ந்து படிச்சு எஞ்சினியர் ஆகோணும் என்று முடிவு எடுத்துவிட்டேன்.

ஆனால் அதெல்லாம் அடுத்தநாள் காலைவரை தான். விடியக்காலமை எழும்பும்போது லேட் ஆகிவிட்டது. வயிற்றை கலக்குகிறது. சரி என்று அந்த டோய்லட்டுக்குள் போய் உட்கார்ந்தேன். மழை வேறு இலேசாக தூறிக்கொண்டிருந்தது.  தூரத்தில் அக்கா முற்றம் கூட்டிக்கொண்டிருக்கிறார். அவரை கவனிக்காமல் நேரே பார்த்தால் முன் வீட்டு சந்திரிக்கா, என்னுடைய வகுப்பு தான், அவள் வீட்டில் சரவச்சட்டி கழுவிக்கொண்டிருந்தாள். என்னை பார்த்து சிரித்தாள். “என்ன குமரன் இங்கால பக்கம்?” என்றாள். அவள் சும்மாவே ஒரு நக்கல்காரி.  இந்த விஷயம் அடுத்தநாள் வட்டக்கச்சி மகாவித்தியாலயம் முழுக்க பரவிவிடும் என்று புரிந்தது. உலகமே கூடி நின்று பார்க்கும்போது ஒண்டுக்கே போக முடியாது. அதில ரெண்டு என்றால் சுத்தம். கெட்ட குடியே கெடும் என்பது போல மழைவேறு கொஞ்சம் பலத்து பெய்ய ஆரம்பிக்க, இடையில் விட்டு விட்டு உள்ளே ஓடமுடியாத நிலைமை. “தம்பி குடை கொண்டுவரட்டா?” என்று அக்கா வீட்டுக்குள்ளே இருந்து கேட்கிறார். “இல்லை அக்கா, சிட்டுவேஷன் அண்டர் கொன்ரோல்” என்கிறேன். அவர் கேட்கவில்லை. “உனக்கு ஆ ஊ எண்டால் அஸ்மா வந்திடும்.. இந்தா குடையை பிடி” என்று எடுத்துக்கொண்டு கிட்ட வந்து தந்தார்.  வெட்கம் பிடுங்கித்தள்ளியது. தாங்க்ஸ் சொல்லி குடையை வாங்கி பிடித்தவாறே அவசர அவசரமாக மாட்டரை முடிப்போம் என்றால் அது வேறு டென்ஷனில் ஆகுதில்லை. இருதலைக்கொல்லி எறும்பு சிட்டுவேஷன். சரவச்சட்டி கழுவிக்கொண்டிருந்த சந்திரிக்கா இப்போது விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

கட்டைல போகட்டும் இந்த அத்தானின் இந்த கக்கூஸ் டிசைன்.

*******

டோய்லட் எதிக்ஸ் என்று சிலது இருக்கிறது. யாழ்ப்பாணத்திலும் இருந்தது. வெளிநாட்டிலும் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் டோய்லட்டுக்கு போனால், அடுத்து அவசரத்தில் வருபவருக்காக தண்ணீர் அள்ளி வாளியில் நிரப்பி வைக்கவேண்டும் என்பது ஒரு நடைமுறை. அதேபோல பேப்பர் டோய்லட் என்றால், நாங்கள் பாவிக்கும் போது பேப்பர் ரோல் முடிந்துவிட்டால், இன்னொன்றை எடுத்து கொழுவிவிட்டு போகவேண்டும். இதை சில லூசுகள் செய்வதில்லை. ஒண்டுக்கு போனால் நன்றாக அடித்து தண்ணீர் ஊற்றுவதில்லை. கொமோட் வகை டோய்லட்டுகள் இப்போது எல்லா இடமும் வந்துவிட்டது அல்லவா. அதிலே டோய்லட் சீட் என்று ஒன்று இருக்கிறது. ஆண்கள் ஒண்டுக்கு போவதென்றால் அதை நிமிர்த்திவிட்டே போகவேண்டும். எங்கட ஆட்களிடம் அந்த பழக்கமே கிடையாது.  சீட்டையும் தூக்கி வைக்கமாட்டார்கள். டார்கட் பண்ணி அடிக்கவும் தெரியாது. “பெய்யன பெய்யும் மழை” போல உலகமெங்கும் பெய்துவிட்டு போவார்கள். அடுத்து வருபவர் அந்த சீட்டிலே எப்படி இருக்கமுடியும் என்ற விவஸ்தையே இருக்காது. இதிலே இன்னுமொரு நெறி இருக்கிறது. வீடுகளில் பெண்கள் இருக்கிறார்கள் என்றால், பெய்து முடித்தபின்னர், நிமிர்த்தி இருக்கும் சீட்டை மீண்டும் மடித்துவிட்டே போகவேண்டுமாம். பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் மரியாதை அது என்கிறார்கள். இப்படி டோய்லட் எதிக்ஸ் என்றே பல விஷயங்கள் இருக்கின்றன. முன்னர் ஒருமுறை விரிவாக வியாழமாற்றத்திலேஎழுதியிருக்கிறேன்.

emptytpaசிங்கப்பூருக்கு மாற்றலாகி சில வாரங்களே ஆகியிருந்த சமயம். புது நாடு, சிங்கிலிஷ் என்ற புது மொழி. புது மூக்கு பெண்கள். ஈவு இரக்கமே இல்லாமல் பந்தாடும் வேலைத்தளம். இத்தனையையும் என் நிறுவனம் சார்பாக ஒரே ஆளாக சமாளிக்கும் வேலை.  “இவன் வெட்டியாடுவான்” என்று ஹர்ஷா கொடுத்த நம்பிக்கையில் தூக்கி ஆற்றிலே போட்டுவிட்டார்கள். சேர்வர் ரூமிலே டிஸ்கஷன் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு எக்குத்தப்பான கேள்வி ஒன்று கேட்டுவிட்டார்கள். சடக்கென்று பதில் வரவில்லை. சொல்லப்போனால் அதற்கு பதில் இல்லை. யோசித்து எதையாவது நானே முடிவெடுத்து சொல்லவேண்டும். சுற்றிவர இருந்த சீனத்துப்பெண்கள் நிலைமையை இன்னமும் மோசமாக்கிக்கொண்டார்கள். திடீரென்று உதித்த ஐடியாவில் சொன்னேன் “ஐ நீட் டு கோ டு டோய்லட்”.

டோய்லட் போய் கதவை சாத்திவிட்டு பாட்டு பாடினேன். “வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே, வானோடு நீலம் போலே இணைந்து கொண்டது இந்த உறவே”. ஒரே கணம் தான். ஐடியா வந்தது. சின்ன டிசைன் சேஞ். பெரும் வேலை இல்லாமலேயே கேட்டதை செய்துகொடுக்கலாம். உடனேயே போய் அவர்களுக்கு பதிலை சொல்லி, ஆச்சர்யப்படுத்தி, இவனுக்குள்ளும் ஏதோ இருக்கென்று நம்பவைத்த ஆக்கிமிடிஸ் மொமென்ட் அன்றைக்கு டோய்லட்டுக்கு போயிருக்காவிட்டால் இடம்பெற்றே இருக்காது. டென்ஷனானால், யாரோடும் பேசும்போது என் பக்கம் வீக்காக இருப்பதாக உணர்ந்தால் உடனே நாடுவது டோய்லட்டை தான். அங்கே போய், கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி, ஒரு பாட்டை ஹம் பண்ணி முடிப்பதற்குள் ஐன்ஸ்டீன் யுரேகா சொல்லிவிடுவார் என்று வையுங்களேன்.

3d-man-reading-on-toilet-7d2fd1முதல் முறை கேதா வீட்டுக்கு போயிருந்த போது ஒரு டிஸ்கஷன் ஆரம்பித்தது. ஒரு பக்கம் கேதா பிரம்மாஸ்திரம் விட்டுக்கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் வீணா நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேலே எய்யக்கூடாது என்ற ரூலையும் தாண்டி வரிக்கு வரி போட்டுத்தாக்கிக்கொண்டிருக்க என் நிலைமை படு மோசமாக போய்விட்டது. எஸ்கியூஸ்மீ சொல்லிவிட்டு அவர்கள் டோய்லட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தினால் ஆச்சர்யம் காத்திருந்தது. கொமோட் டாங்குக்கு மேலே எஸ் ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் இருந்தது. அட. நம்மை போல பல கேசுகள் இருப்பது அன்றைக்கு தெரிந்தது. டோய்லட்டில் வாசிப்பதற்கென்றே தனியாக ஒரு புத்தகம் என்னிடம் எப்போதும் இருக்கும். அதை ட்ரைனிலோ அல்லது படுத்திருக்கும்போதோ வாசிக்கமாட்டேன். இப்போது என் டோய்லட்டில் இருக்கும் புத்தகம் அசோகமித்திரனின் “தண்ணீர்”.

*********

சில நண்பர்கள், குறிப்பாக தமிழரல்லாத நண்பர்கள், “உனக்கேன் இலங்கையை பிடிப்பதில்லை?எப்போது பார்த்தாலும் வெறுப்பாகவே பேசிக்கொண்டிருக்கிறாயே?” என்பார்கள். அமுதா ஒருமுறை கேட்டபோது நான் சொன்னது ஒரு சம்பவத்தை. நிஜத்தில் நடந்தது. நடந்து சரியாக இருபத்துமூன்று வருடங்கள்.

அப்போது தான் இலங்கை அரசாங்கம் சகடை என்று ஒரு பெரிய யுத்தவிமானத்தை கொள்வனவு செய்திருந்தது. அது ஒரு தாட்டான் ப்ளேன். ஸ்லோவாக தான் நகரும். கோட்டைக்கு குண்டு போடுவதென்றால் உரும்பிராய்க்கு மேலே இருக்கும்போதே குண்டை தள்ளிவிடும். இதெல்லாம் கீழே இருந்தபடி வடிவாக கவனிக்கலாம். ஒரு வெள்ளை நிற குண்டு அது. ஸ்லோவாக நகர்ந்து நகர்ந்து ஒரு கண் மட்டுக்கு கோட்டை, கொட்டடிப்பக்கம் போய் விழும். பத்து விழுந்தால் ஐந்து தான் வெடிக்கும். வெடித்தால் விழுந்த இடத்தில் இருந்த வீடு தரைமட்டம் ஆகும். யாழ்ப்பாண கம்பஸ் பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேர் எதிரே, இராமநாதன் ரோட்டுக்கு அடுத்தபக்கமாக ஒரு இரண்டு மாடி வீடு இருந்தது. ஒரே ஒரு சகடை குண்டு தான். வீடு தரை மட்டம். அடுத்தநாள் பூசி மெழுகலாம் என்ற நிலையில் அந்த இடம் இருந்தது.

housebombedசகடைக்கு முதல் வந்த விமானம் தான் அவ்ரோ. ஒருவித பிரவுன் கலர் விமானம். வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்கு ஒருமுறை குண்டுபோட்டுவிட்டு போட்ட வேகத்திலேயே பழுதடைந்து நாவற்குழியில் ஒருமுறை விழுந்துவிட்டது. நல்லூர் கண்காட்சியில் அதன் பாகங்களை அப்போது அடிக்கடி காணலாம். “அவரோ வாறார்” என்று நக்கலாக அழைப்பதுமுண்டு.

1990ம் ஆண்டு. எனக்கு பத்துவயசு. ஒரு நாள், ஒக்டோபர் மாசம் என்று நினைக்கிறேன், இந்த அவ்ரோ வழமை போல வருகிறது. குண்டு போடுகிறது. வெள்ளை நிறத்தில் இருக்கும் குண்டு இன்றைக்கு கறுப்பு நிறத்தில் இருக்கவே, அம்மாவுக்கு சொல்லுகிறேன். “என்ன சனியனோ தெரியாது, பங்கருக்குள் போயிரு” என்கிறார். குண்டு விழுகிறது ஆனால் வெடிப்பதாக இல்லை. மீண்டும் மீண்டும் வந்து குண்டை போடுகிறது. இது தான் இடம் என்றில்லாமல் யாழ்ப்பாண நகரம் முழுதும் எழுந்தமாற்றுக்கு குண்டுகள் விழுகின்றன. ஆனால் எதுவுமே வெடிப்பதாக இல்லை. சத்தம் இல்லை. எல்லாம் முடிந்து அரை மணி கழிந்திருக்கும். ஏதோ ஒரு நாற்றம். “டோய்லட்டுக்கு போனனி, தண்ணி ஒழுங்கா ஊத்திணியா?” என்று அக்கா என்னை திட்டுகிறாள். ஆனால் ஊர் முழுக்க நாறுகிறது. கடையடிக்கு போயிருந்த அண்ணா மூக்கை பொத்திக்கொண்டே வீட்டுக்கு வந்தார். அவருக்கு ஓங்காளித்துக்கொண்டு வந்தது.

“அறுவாங்கள் கக்கூசை சாக்கிலை கட்டி ஊர் முழுக்க தள்ளியிருக்கிறாங்கள்”

“பிரேமதாஸா போட்ட பீக்குண்டு” என்று அடுத்தநாள் உதயனில் தலைப்புச்செய்தி வந்தது. ஆரியகுளத்தடியில் அந்த “பீக்குண்டு” தலையில் விழுந்து சைக்கிளில் போன ஒருவர் ஸ்தலத்திலேயே அவுட். பலருக்கு தொத்து வியாதிகள் பரவியது. அந்த "நாற்றம்” நான்கைந்து நாட்களுக்கு ஊர் முழுதும் உலாவியது. அந்த வியாதிகளை விட, அது கொடுத்த அவமானம் பலமடங்கு அதிகமானது. சிலது மறக்க நினைத்தாலும் மறக்காது. இது அந்த வகை. இதை நான் சந்தித்த அத்தனை சிங்கள நண்பர்களுக்கும் சொல்லியிருக்கிறேன். வெளிநாட்டவருக்கும் சொல்லியிருக்கிறேன். நான் வீரன் கிடையாது. அரசியல் அறிவு எனக்கு சுத்தம். ஆனால் பத்து வயசு சிறுவனுக்கு பீக்குண்டு போட்டுவிட்டு இப்போது வந்து “சகோதரர்கள், ஒரே நாடு, ஒற்றுமை, மண்ணாங்கட்டி, மட்டை” என்று எவனாவது எனக்கு அட்வைஸ் பண்ணி, எதுக்கு இப்படி இருக்கிறாய்? என்று கேள்விகேட்டால் என் பதில்.

“They shit on us”

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கக்கூஸ் சிறுகதை
ஏனைய கொல்லைப்புறத்து காதலிகள்
படங்கள்: siragu.com, இணையம்

வியாழமாற்றம் 02-05-2013 : கள்ளக்காயச்சல்

$
0
0

 

604145_436509086438264_1618075806_n

உரைநடை

இது ஒருவித ரெடிமேட் காய்ச்சல்.  ஹோம் வோர்க் செய்யாமல் விடுவது தொடக்கம் மூலைவீட்டு லாவண்யா சாமத்தியப்படுவது வரைக்கும் பலவேறு காரணங்களுக்காக வரும். முதல்நாள் அன்று எந்த சிலமனும் இல்லாமல் கம்மென்று இருப்பவன் விடியக்காலமை ஏழு மணி தாண்டியும் எழும்பவில்லை என்றாலே சம்திங் ரோங் என்று அம்மாவுக்கு தெரிந்துவிடும்.

“அப்பன் எழும்படா”

சத்தம் இருக்காது.

“ஸ்கூலுக்கு நேரமாயிட்டு .. எழும்பு”

தலைவரிடம் இருந்து மெல்லிதாக ஒரு இழுப்பு வரும்.

“உன்னோட விடிய வெள்ளன மினக்கடேலாது … எழும்பு”

அம்மா வந்து போர்த்தியிருந்த பெட்ஷீட்டை இழுத்து எறியும்போது சிங்கன் கொடுக்கும் ரியாக்ஷனுக்கு மகளிர் மட்டும் நாசர் தோற்றுப்போவார். கான்சர் வந்து சோர்ந்து போயிருந்த கடைசிநாள் ஸ்டீவ்ஜொப்ஸ் மாதிரி காய்ந்து போய் கிடப்பார் நம்மாளு. கண்ணை திறக்கவே முடியாதாம்.

“தலை கனக்குது அம்மா .. கொத்தமல்லி அவிச்சு தாறீ..?”

“ங்களா?” என்பது வெறும் மூச்சாகவே வரும். அம்மாவிண்ட அனுபவத்தில இப்படி எத்தினை விளையாட்டு பார்த்திருப்பார்?.

“இந்த நடிப்பெல்லாம் என்னட்ட செல்லாது .. எழும்பு”

“நான் எதுக்கு நடிக்க போறன்? .. உடம்பெல்லாம் நோகுது .. கழுத்தை தொட்டுப்பாருங்க .. கொதிக்குது”

அம்மா கிட்டவந்து தொட்டுப்பார்க்கிறார்.

“என்னடா கழுத்து ஈரமா இருக்குது .. பெட்ஷீட்டை வாயால ஒத்தி கழுத்தில வச்சியா? அப்பரிண்ட அத்தினை தில்லுமுல்லுகளையும் நல்லா பழகு வை”

அப்பா எதுக்கு இந்த வேலை பார்த்திருக்கவேண்டும்? என்ற சந்தேகம் லைட்டாக வந்தாலும், அதைப்பற்றி யோசிக்க தலைவருக்கு நேரமில்லை.

“காய்ச்சலில வேர்த்திருக்கன .. வருத்தக்காரனை கூட கவனிக்கிற இரக்கம் இல்லாத குடும்பம் .. இந்த வீட்டில இருந்து தின்னிறதுக்கு பதிலா பேசாம நான் இயக்கத்துக்கே போகலாம்”

எங்க எப்பிடி எந்த இடத்தில ஸ்கட் ஏவுகணையை விடோணும் என்று தலைவருக்கு நன்றாகவே தெரியும். கள்ளக்காய்ச்சலா? கண்ணீர் அஞ்சலியா? என்று அம்மா ஒருகணம் பயந்திருக்கலாம். ஒருநாள் தானே.

“சரி இண்டைக்கு மட்டும் நில்லு .. ஆனா கொஞ்சம் சுகமான உடன கொப்பி புத்தகம் எடுத்து படிக்கோணும் சரியா?”

வேர்க் அவுட் ஆகிவிட்டது. ஆனால் உடனே ரியாக்ட் பண்ண கூடாது. பதில் சொல்லாமல் போர்த்து இன்னொரு அரை மணித்தியாலம் சமாளிக்கவேண்டும். பின்னர் அக்காக்கள் எல்லோரும் ஸ்கூலுக்கு போன பிறகு மெல்ல எழுந்து, பெட்ஷீட்டை “தேவதை இளம் தேவி” கார்த்திக் ஸ்டைலில் வீசி போர்த்துக்கொண்டே, குசினியடியில் ஒரு சின்ன தங்கப்பதக்கம் இருமலையும் போட்டால், அம்மா கொத்தமல்லி நிஜமாகவே .. ஆஆஆஆ. வலி தாங்காமல் கத்தினேன்.

விடுடி விடுடி .. ப்ளீஸ்.

கேட்காமல் இன்னமும் காதையே திருகிக்கொண்டிருந்தாள் மேகலா.


 

மேகலா

541779_320623358038256_1408934519_n“என்னடி … இப்ப என்ன பிரச்சனை?”

“அம்மான .. நீயே ஒருக்கா வாசிச்சுப்பாருடா.. .. சளி பிடிக்குது”

“ஏன் மப்ளர் கொண்டு போகேல்லையா?”

“அது கூட பறுவாயில்ல.. இந்த தரித்திரம் பிடிச்ச நனைவிடை தோய்தலை நீயா நிறுத்திரியா? இல்லை கோத்தாவுக்கு அறிவிக்கட்டா?”

“நோ நோ  .. அப்பிடி ஸ்டார்ட் பண்ணீட்டு அப்புறமா விஞ்ஞானத்துக்கு ..”

“தெரியம்டா ..விஞ்ஞானத்துக்கு தாவீட்டு … பிறகு ஒரு பாட்டு போட்டு பீல் பண்ணுவாய் .. அப்புறமா அரசியல் தெரியாது என்று சொல்லிக்கொண்டே ரெண்டு செருகு செருகுவாய்.. ஏண்டா உனக்கு இந்த பிழைப்பு?”

“ஈழத்து எழுத்தாளன் எண்டா அப்பிடி ஏதாவது பிட்டு போட்டு ரெண்டு காம்ரேட், தோழர், இலக்கியம் என்று பீலா விட்டா தான் நம்மாளு பீல் பண்ணுறான் மேடம்.”

“வேணாம்டா … இட்ஸ் நோட் யூ .. இல்லாத காதலியை வச்சே இருபது கதை எழுதி எல்லார் மண்டையையும் காய வச்ச ஆளு .. இண்டைக்கு இந்த விஞ்ஞானம் அரசியல் இல்லாம கொஞ்சம் கம்பா ஒன்றை எடுத்து விடேன்?..”

“கம்பா எடுத்து விடவா? பப்ளிக் பப்ளிக்?”

“ஊப்ஸ் அது வந்து … ஆ .. வெண்பா .. அதை எடுத்து விடு?”

“வெண்பா .. உன்னை பற்றியே எழுதவா?”

“சுத்தம் … முதல் பந்தியிலே எழுதினியே .. கள்ளக்காயச்சல் .. அதையே வெண்பாவாக எழுத ட்ரை பண்ணு.. ஆனா எழுதி முடித்த பிறகு, நேரிசை வெண்பா, விருத்தப்பா, இலக்கணம், ஈரசை தளை மாட்டர் எல்லாம் நீ சொல்லக்கூடாது. வாசிக்கிறவனுக்கு அதுவா விளங்கோணும்”

“அட்லீஸ்ட் .. கவிஞர்கள் நிச்சயம் முதலில் மரபு படிக்கோணும், அப்புறமா தான் மயூ மனோ போல “மௌனம் கசியும் இரவும், உறவும்..!!” என்று ஒரு வரி கவிதை எல்லாம் எழுதி இருநூறு லைக் வாங்கோணும் என்று அட்வைஸ் பண்ணவா?”

“கொலை விழும்!”

“ஒகே .. கீழே பாரு”


936160_443226049099901_605184209_n

வெண்பா

காலமை வெள்ளன ஏழரை ஆகியும்
காந்தனை எழும்பென பெத்தவ கத்தியும்
கட்டில விட்டவன் எட்டலை கண்டனை – பெட்ஷீட்டை
பட்டென இழுத்தனள். பொட்டென கிடந்தனை.

அம்மாவின் அழைப்பு ஆகுதியில் கரைந்தது.
அண்ணலின் நடிப்போ மகாநதியானது
அணலை தொட்டதும் தணலாய் கொதித்தது -  ஒத்திய
புனலின் ஈரத்தில் களவு வெளுத்தது.

வெள்ளம் முட்டினாலும் பள்ளிக்கு போகோணும்
கள்ளம் நெடிப்பெல்லாம் சல்லிக்கு பெயராது – எள்ளி
நகையாடிய அன்னைக்கு வயிற்றில் ஆப்பு வைத்தான்
வசை மொழிந்து ஈற்றில் இயக்கம் போவேன் என்றான்.

இடி விழுந்த மலையானாள் வடு சொன்ன சுடு சொல்லில்
மடி கொடுத்த தலைமகளால் பொடி தாங்க முடியுமோ? -  கொத்த
மல்லி இலை அவித்து சீனி போட்டு கொடுத்தாள்
பள்ளிக்கு கள்ளமடித்த காய்ச்சல்கார ..ஆஆஆஆ!

நாளும் பொழுதும் நனைவிடை தோய்ந்தால்
நாளைய தலைமுறைக்கு விடுவது எதுவோ? – மேகலா
நாக்கை அறுப்பது போல நாலு கேள்வியை முறுக்கினாள்.
வாக்கை கொடுக்கும் வரை ஆளு காதினை திருகினாள்!

ஆஆஆஆ. வலி தாங்காமல் கத்தினேன்.

விடுடி விடுடி .. ப்ளீஸ்.

கேட்காமல் இன்னமும் காதையே திருகிக்கொண்டிருந்தாள் மேகலா.


 

கடிதங்கள்

“I am unable to come to work as I am suffering from fever.”

வேலைக்கு போவோரின் போனில் நிரந்தரமாக சேவ் பண்ணப்பட்டிருக்கும் டெக்ஸ்ட் மெசேஜ் இது. அவுஸ்திரேலியாவில் வருடத்துக்கு பத்து நாள் மெடிக்கல் லீவ் எடுக்கலாம். அதில் ஐந்து நாட்கள் சேர்டிபிகட் காட்டாமலேயே எடுக்கலாம். ஆக எல்லோருமே மினிமம் ஐந்து தடவை இதே டெக்ஸ்டை மனேஜருக்கு அனுப்பி “No worries, get well soon” ரிப்ளை வாங்கியிருப்பார்கள். 

இந்த கடிதங்கள் பற்றி யோசிக்கும்போது நம்ம கஜன் எழுதிய காய்ச்சல் கடிதம் ஞாபகம் வருகிறது. அன்னார் கம்பஸில் படிக்கும்போது சகட்டு மேனிக்கு கட் அடிப்பார். பொதுவாக முகர்சிங் கச்சேரிக்காக தான் அந்த கட் இருக்கும். ஒருமுறை அவசரத்தில் எழுதிய கடிதம் இது.

“I was unable to attend the lecture due to heavy diaria. Please execute me”

576434_348176768616248_399558619_nகாய்ச்சலுக்கு நிகராக நடக்கும் இன்னொரு விஷயம் அம்மம்மாவை கொலை செய்வது. ஒரு முறை நல்லூர் தேருக்காக எங்கள் பாட்ச்சில் இருபதுக்கும் மேற்பட்ட அம்மம்மாக்கள் அவசரமாக இறந்துபோனார்கள். இப்படி கடிதங்கள் எழுதுவதற்காக என்னுடைய ரூமுக்கு ஆட்கள் வருவதுமுண்டு. வளரும் பயிர் முளை மாட்டர் பாஸ். கண்டீனில் ஒரு வடை, ப்ளேன் டீ கொண்டிஷனில் எழுதிக்கொடுக்கும் கடிதம் இது.

“My grandmother passed away last week and I had to attend the funeral henceforth. Sorry couldn't come to the last lecture.”

வடையோடு சாப்பாடும் வாங்கித்தந்தால், கடிதம் பிளாட்டினம் ஸ்டாண்டர்டாக மாறும்.

“With my heavy heart and sorrow, which I cannot still bear, I lost my sweet grand mother last week in Jaffna Teaching Hospital. I am sorry I couldn’t afford to make it to the last lecture”

இலக்கண தவறு இருந்தாலும் கடிதத்தில் இருந்த ஒரிஜினாலிட்டி விரிவுரையாளரை கவுக்கும் என்று நானும் நம்பினேன். எழுதி வாங்கிக்கொண்டு போனவனும் நம்பினான். இப்போது யோசித்துப்பார்த்தால் தேவையில்லாமல் ரெண்டாவது கடித்ததில் மானே தேனே போட்டிருக்கிறேன். Excuse letters எல்லாமே கடமைக்காக கேட்கப்பட்டு, எழுதப்பட்டு, எதிர்ப்பார்க்கப்படுவது தான். அது பொய்யென்று எழுதுபவனுக்கும் தெரியும். வாசிப்பவனுக்கும் தெரியும்.

இப்படி கள்ளமாக மெடிக்கல் லீவு எழுதி வாங்குவதற்கென்றே வெப்சைட் வைத்திருந்திருக்கிறார்கள்.  நாற்பது தொடக்கம் ஐம்பது டொலர்களில் ஒரிஜினல் போன்றே டுப்ளிகேட் மெடிக்கல் கடிதங்கள் தருவார்கள். இந்த விளம்பரத்தை பாருங்கள்.

For around $40 – $50, you can suffer a sudden infliction of:

  • Anything contagious
  • Jury duty
  • A dead family member
  • Lower, upper, inner or outer pain of any kind
  • A nervous breakdown
  • Any other ailment that your brain can concoct.

மெடிக்கல் லீவு சம்பந்தமாக ஒரு சட்டம் இருக்கிறதாம். நான் என்னுடைய முதலாளிக்கு காய்ச்சல் என்று கடிதம் குடுத்தால் முதலாளி நம்பத்தான் வேண்டுமாம். அப்படி நம்பாமல் பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு என்னை அனுப்பி எனக்கு உண்மையிலேயே காய்ச்சல் இருக்கா? என்று அறியும் உரிமை முதலாளிக்கு இல்லை என்கிறார்கள். அதை சட்ட ஓட்டை இங்கே பயன்படுகிறது. ஆனால் மெடிக்கல் செர்டிபிகட்டின் முகவரியை தொடர்பு கொண்டு, உண்மையில் நீங்கள் தான் இந்த சேர்டிபிகட் குடுத்தீர்களா? என்று அங்கே செக் பண்ணலாமாம். அப்படி பண்ணினால் சங்கு தான். எது எப்படியே அரசாங்கங்கள் இந்த வெப்சைட்டை இப்போது தடை செய்துவிட்டதாம்.

http://echoreply.us/tech/2007/10/26/my-excused-absence-busted/


வெங்காயம்

கமக்கட்டுக்குள் வெங்காயமோ உள்ளியோ வைத்தால் அடுத்த நிமிடமே காய்ச்சல் வரும் என்பது கள்ளக்காயச்சல் வந்த எல்லோருக்குமே தெரிந்தவிஷயம். அதென்ன கமக்கட்டு? என்ற டவுட் இருந்தாலும் இன்றைக்கு தான் இன்டர்நெட்டில் செக் பண்ணினேன். சுவாரசியமாக இருந்தது.

உள்ளி, வெங்காயத்தில் ஒருவித நோய் எதிர்ப்பு மாட்டர்கள் இருக்கின்றனவாம். பைட்டோன்சைட்ஸ் என்று அதன் பெயரை இங்கே எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. நோய் எதிர்ப்பு கூறுகள். அது தான் முக்கியம். இப்போது கமக்கட்டுக்குள் வெட்டிய வெங்காயத்தையோ உள்ளியையோ வைத்தால், இந்த நோய் எதிர்ப்பு கூறுகள் உள்ளே உடலுக்குள் புகுந்து இரத்தத்தில் சேர்ந்துவிடும். உடனே மேலே மூளைக்கு மெசேஜ் போகும். இரத்தத்தில் “நோய் எதிர்ப்பு கூறுகள்” அதிகரித்ததை கவனித்த மூளை, அடடா ஏதோ டேஞ்சர், அதுதான் “நோய் எதிர்ப்பு கூறுகள்” உடலில் உற்பத்தியாகி இருக்கின்றன என்று தவறாக நினைத்துவிடும். விளைவு, உடல் முழுதும் எலார்ம் அடித்து, வெப்பநிலையை கூட்டி மூளை ஒரு சீன் போட்டுவிடும். அதனால் தான் இந்த காய்ச்சல் வந்த கொஞ்சநேரத்திலேயே உயர்ந்து பின்னர் “அட நாம தான் ஏமாந்திட்டம்” என்று சுதாரித்தவுடன் மூளை சுனாமி வோர்னிங்கை பின்வாங்கிவிட கள்ளக்காய்ச்சல் பறந்துவிடும்!

இதை எதற்கு கமக்கட்டு என்று கேட்கலாம். கமக்கட்டில் நிறைய குட்டி குட்டி சென்சிடிவ் துவாரங்கள் இருக்கின்றனவாம். அதனால் தான் தெர்மாமீட்டரை அங்கேயே வைப்பார்கள். உள்ளக வெப்பநிலையை ஈசியாக அறியலாம். இது தவிர அடிநாக்கு கூட அப்படிப்பட்ட இடம் தான். ஆனால் வெங்காயம் அங்கே வைத்தால் வாய் நாற்றத்திலேயே கள்ளம் பிடிபட்டுவிடும். மூன்றாவது ஒப்ஷன் ஆசனவாயில். அங்கே போய் .. அதுக்கு பேசாம பள்ளிக்கூடத்துக்கே போயிடலாமே!

அலைகள் ஓய்வதில்லை என்று ஒரு உலக மகா மொக்கை படம் ஒன்றை, இளையராஜா, ராதா என்ற இருவரின் இளமையை நம்பி எடுத்து ஓட்டினார் பாரதிராஜா. அதிலே இந்த வெங்காய சீன் வருகிறது. இதை இன்றைக்கு கொடுக்கவென யூடியூபில் தேடினேன். கிடைக்கவில்லை. அடிச்சேன் பாரு ஒரு டெலிபோன் நம்ம மன்மதகுஞ்சுவுக்கு.

“மச்சி .. அலைகள் ஓய்வதில்லை பிட்டு ஒண்டு வேணும்”

“ஒட்டுத்துணியில்லாம வெறும் தாமரைப்பூவை ராதாவிண்ட பொடில கார்த்திக் தடவுவானே அந்த பிட்டா மச்சி?”

“இல்லடா அந்த வெங்காய சீன்”

“ஓ அதுவா … கமக்கட்டுக்க செருகமுதலா இல்ல பின்னேயே?”

“டேய் .. ஒரு பேச்சுக்கு தான் பிட்டு எண்டு .. அதுக்காக இப்பிடியா?”

“ஓகே ஒகே .. ஒரு மணித்தியாலம் டைம் கொடு”, என்றவன் நாற்பத்தைந்து நிமிஷத்தில் லிங்க் அனுப்பினான். “ஏண்டா இவ்வளவு நேரம்?” என்று கேட்டேன்.

“பின்னே .. முழுப்படத்தையும் டவுன்லோட் பண்ணி இந்த சீனை மட்டும் வெட்டி தந்திருக்கிறன் மச்சி”

“நண்பேண்டா!


காதல்

நேற்றுவரைக்கும் நெடுவனம் கண்டு, ஒற்றைக்காலில் உயரத்தில் நின்று, மஞ்சள் மாலை மழையில் நனைந்து, சித்திரை மாதம் வெயிலும் சுமந்து இத்தனை தவங்கள் செய்தாலும், இந்த சமந்தா பொண்ணு, போடா சட்டத்தில் உள்ளே போன போக்கத்த சித்தார்த் பயல் தான் வேணும்னு அடம்பிடித்ததில் நானு கொஞ்சம் அப்சட்.

“ஊமைக்கு பாடலென்ன? கோழைக்கு காதலென்ன?” என்று மொக்கை பாட்டு வரிகளை சொல்லி அழுதபோது தான், நம்ம படலைல அடிக்கடி படுத்து தூங்கிற அஹமத் சாஜ்பயபுள்ள, ரம்ஜானுக்கு மூணு மாசத்துக்கு முன்னாலேயே புரியாணி போட்டிட்டான். நேற்று ஒரு பொண்ணை அறிமுகப்படுத்தினான். அண்ணனுக்கு இவதான் தோதுன்னு அருந்ததியை அத்தனை ஒளியாண்டு தூரத்தில இருந்து அடுத்தகணம் மண்ணில எறக்கினான். கவிதைடா கவிதை!  கலியாணம் கட்டினவன் எவனாவது பார்த்தான் என்றால் அடுத்த கணமே மனைவியை பார்த்து ஹூர் ஆர் யூ? என்பான். காதலியின் Facebook profile ஐ உடனேயே புளோக் பண்ணுவான். இரண்டுமே இல்லாத சிங்கிள் பசங்க படத்தை பார்த்தே ------------- (கீறிட்ட இடத்தை நிரப்பவும்)

ஆனா இந்த படலை எழுதுறவனோ நேரே போய் காலில விழுந்துடுவான். அவ்ளோ அழகு!

149092_434831436606029_1478605790_n

பெயர் நஸ்ரியா நசீம். வயது இன்னும் ஆறு வருடங்களில் இருபத்தைந்து.  தமிழனின் கோவணத்தை கொஞ்சநாளுக்கு உருவ வந்திருக்கும் இன்னொரு ஓமணக்குட்டி. “நேரம்”, “திருமணம் என்கின்ற நிக்கா”, “நையாண்டி” என்று மூன்று சூப்பர்ஹிட் படங்களில் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் இந்த தேவதையை பற்றி கவிதை பாடுவோம் என்றால், எல்லா கற்பனைகளும் “என்னால முடியாதுப்பா” என்று வெட்கத்தில் ஒதுங்கிவிட்டன.

ஹாய் நஸ்ரியா ... ஐ ஆம் ஜேகே ...

நான் இதை சொல்லியே ஆகனும்...
நீ அவ்வளவு அழகு...
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு...
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க
And I am love in with you..

கிட்டாரோட பாட்ட போடுங்கடா!!!

**********************

வியாழமாற்றம் 09-05-2013 - இளிச்ச வாய் பூனை

$
0
0

 

eye

 

சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்!

கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும் நான்கு மாசங்கள் கூட இல்லை. ஆனால் இந்த சிட்டை கணக்கு மட்டும் சிவகாமிக்கு சமப்படுதே இல்லையாம். படிக்கும்போது அப்பா தலையில் ஒரு குட்டு போட்டு விட, கிளுக் என்று அழுதபடியே அதே வேகத்தில் நெல்லி மரத்தில் ஏறியவள் தான். வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் டெசிபலில் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்.

இப்படியே எவ்வளவு நேரத்துக்கு அழுவது? நிறுத்திவிட்டு நெல்லிக்காய் சாப்பிடலாம் என்றால் அப்பா கூப்பிட்டுவிடுவார். ஒன்று சிட்டையை சமன்பட வைக்கவேண்டும். இல்லை அப்பாவுக்கு சமன்படாமல் இருக்கவேண்டும். அல்லது சிட்டை செய்யதேவையில்லாத இடமாய் பார்த்து இடம்பெயரவேண்டும். அண்ணா இப்படித்தான் வெளிநாடு போனார். தானும் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது தான் கீழே கோழிக்கூடு வாசல் வழியாக கிடு கிடு வென்று வெள்ளைநிற கழுத்துவெட்டி கோழி வெளியே போனது. இது முட்டை இடும் நேரம் ஆச்சே, உள்ளே கடகத்து உமிக்குள் இருக்காமல் எங்கே வெளியே போகிறது? என்று கூர்ந்து பார்த்த சிவகாமி துணுக்குற்றாள். அழுகையை மறந்து கண்களை கசக்கி திரும்பவும் பார்த்தாள். அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மீண்டும் மீண்டும் கண்களை கசக்கி கழுத்து வெட்டியையே பார்த்தாள். என்ர கடவுளே.

கழுத்துவெட்டி ஒரு காலில் முட்டையை வைத்து பலன்ஸ் பண்ணியபடி ஒற்றைக்காலில் கெந்தி கெந்தி போய்க்கொண்டிருந்தது.

ஒரு கோழி, காலில் முட்டையை வைத்து பலன்ஸ் பண்ணுமா? என்ற விஷயம் சிவகாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது. பற்றாக்குறைக்கு கோழி எதையோ பேசிக்கொண்டிருந்தது போலவும் தோன்றியது. மீண்டும் காதுகளை தீட்டி கூர்ந்து கேட்டாள். “நேரம் போச்சு நேரம் போச்சு …சொர்க்கவாசல் மூடப்போறாங்கள்” என்று கோழி முணுமுணுத்துக்கொண்டிருந்தது. அடிக்கடி செட்டைக்குள் இருந்து எதையோ எடுத்து நேரம் வேறு பார்த்தது. அட ஹான்ட்போன்.

566090-alice-in-wonderland

சிவகாமி சத்தம்போடாமல் நெல்லிமரத்திலிருந்து நைசாக இறங்கி கோழியை பின் தொடர்ந்தாள். கோழி இவள் பின் தொடர்வதை கவனிக்கவில்லை. அதன் கவனம் முட்டையை பாலன்ஸாக வைத்திருப்பதிலும், அடிக்கடி அதை தூக்கி எறிந்துவிட்டு விழுகின்ற காப்பில் ஹான்ட்போனை எடுத்து நேரத்தை செக் பண்ணுவதிலும் இருந்தது. கோழி இப்போது முன்வீட்டு புரோக்டர் வளவு வேலிக்குள்ளால் நுழைந்து உள்ளே இருந்த  பற்றைக்குள் புகுந்தது. தயங்கிய சிவகாமி, அக்கம் பக்கம் திரும்பிப்பார்த்துவிட்டு தானும் தாமதிக்காமல் பற்றைக்குள் புகுந்தாள். மறுகணமே.

அம்மா என்று அலறியபடி அதளபாதாளத்துக்குள் விழ ஆரம்பித்தாள்.

ஒன்று அவள் மெதுவாக விழுந்திருக்கவேண்டும். இல்லை பாதாளம் மிகவும் ஆழமானதாக இருந்திருக்கவேண்டும். சிவகாமி நீண்ட நேரம் விழுந்துகொண்டிருந்தாள்.  அலுப்படித்தது. திரும்பிப்போகலாமா என்றால் எப்படிப்போவது? விழுந்துகொண்டிருக்கும்போது எழ முடியாது. “நாலு தர ஆறு பதின்மூண்டு அல்லோ .. ச்சிக்.. இருவத்துனாலு எண்டு போட்டதால தான் சிட்டை சமப்படேல்ல”, சிவகாமிக்கு பளிச்சென்று மூளைக்குள் உதித்தது. அப்பாவிடம் போகவேண்டும் என்று ஆர்வம் வந்தது. உடனடியாக போகவேண்டும். “நாலாறு பதின்மூன்று கண்டுபிடிச்சிட்டன்” என்று சொல்லவேண்டும். எப்படி திரும்புவது? எங்கே அந்த கழுத்துவெட்டி? யோசித்துக்கொண்டிருக்கும்போதே படீரென்று ஒரு பற்றைக்கு மேலே வந்துவிழுந்தாள் சிவகாமி. தடுமாறியபடி எழுந்துநின்றால் அங்கே இன்னொரு “அட” காத்திருந்தது.

சிவகாமி நின்றுகொண்டிருந்தது ஒரு அறை. அறையில் ஒரு பக்கம் ஒரு குட்டி கதவு. ஐஞ்சு இஞ்சி உயரத்தில் குட்டி கதவு. என்னடா இது? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது தான் எதிர்ப்பக்கத்தில் ஒரு தண்ணீர்குடம் தெரிந்தது. குடத்தின் மேலே ஒரு பேணி. “இந்த தண்ணியை குடி” சுவரில் எழுதியிருந்தது. விழுந்த களை. வேறு வேலையும் அங்கே இல்லை என்பதால் சிவகாமி தண்ணீரை குடிக்கலாமா என்று யோசித்தாள். தயங்கினாள். அவசரப்படக்கூடாது என்று நினைத்தவள் குடத்தை மெதுவாக தூக்கி இந்தப்பக்கம் வைத்தாள். இப்போது குடத்து பக்க சுவரில் “இந்த தண்ணியை குடி” என்ற வாசகம் இல்லை. சிவகாமிக்கு பதட்டமாக இருந்தது. குடத்தை சுற்றி சுற்றி வந்தாள். ம்ஹூம் “சிறுவர்கள் குடிக்ககூடாது” என்று எங்கேயும் குடத்தில் எழுதியில்லை.  அப்படி ஏதாவது எங்கேயும் எழுதியிருந்தால் அதை குடிக்ககூடாது, நஞ்சு என்று சுகாதார பாட சேர் சொல்லியிருந்தார். நல்லவேளை அப்படி எதுவும் எழுதியில்லை, இதை குடிக்கலாம் என்று நினைத்தாள். பேணியால் தண்ணியை மொண்டு குடித்தாள். டேஸ்ட்டாக இருந்தது. சர்ரென்று ஏதோ இறங்கியது போல ஒரு பிரமை. திரும்ப இன்னொரு பேணி. இன்னொரு பேணி… என்ன ஆச்சர்யம்?

சிவகாமி கொஞ்சம் கொஞ்சமாக குள்ளமாக தொடங்கினாள்.

குள்ளமாகிக்கொண்டே இருந்தாள். குள்ளமாக குள்ளமாக அவளுக்கு சந்தோசம். நல்லா குட்டையானல் இந்த கதவுக்குள்ளால் போகலாமே என்று நினைத்தாள்.  அது தான் நடந்தது. ஐஞ்சு இஞ்சி சைஸ் வந்திருப்பாள். இதற்கு மேலும் குறையவேண்டி வருமோ என்று கொஞ்சநேரம் வெயிட் பண்ணிபார்த்தாள். ம்கூம் இங்கே தான் சிட்டை சமப்படும் லிமிட் போல. அதற்கு மேல் குறையவில்லை. கதவைத்திறந்துகொண்டே வெளியே வந்தாள். அங்கேயும் இன்னொரு “அட” காத்திருந்தது.

சொர்க்கம். சொர்க்கமாக இருக்கலாம். சொர்க்கம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும். அம்மாவுக்கு சொல்லவேண்டும் போல இருந்தது. சிவகாமி சிட்டை சமப்பட்ட விஷயத்தை மறந்துவிட்டாள். இரண்டு அடி எடுத்துவைக்க அம்மாவுக்கு சொல்ல தேவையில்லை என்று நினைத்தாள். அடுத்த இரண்டு அடியில் சொல்லதேவையில்லை என்று நினைத்ததையே மறந்துவிட்டாள். துள்ளிக்கொண்டே எழுந்தமாற்றுக்கு போக தொடங்கினாள். திடீரென்று அந்த கழுத்துவெட்டி கோழி பாதைக்கு குறுக்கே பாய்ந்து பூங்கன்றுகளுக்குள் ஓடி மறைந்தது. இம்முறை அதன் இரண்டு கால்களிலும் இரண்டு முட்டைகள் இருந்தன. சிவகாமி அதை கணக்கெடுக்கவில்லை. நடந்துகொண்டிருந்தாள். சுற்றி சுற்றி பார்க்க அந்த இடமே கொஞ்ச நாளைக்கு முதல் கொழும்பில தியேட்டரில பார்த்த அவதார் படத்து பண்டோரா கிரகம் போல இருந்தது. நிஜ த்ரீடி.  சந்தோஷமாக தொட்டாசிணுங்கி இலைகளை தொட்டு தொட்டு ரசித்தபடி போகும்போது தான், குரல் கேட்டது.

“யாரு நீ?”

காடா பேசுகிறது? இவ்வளவு சின்னவயசுப்பெண்ணோடு காடு பேச காரணமில்லை! சுற்றும் முற்றும்பார்த்தாள். “இந்தா, இந்த வேப்பமரத்தில இருக்கிறன்” என்ற குரல் திசையில் திரும்பினால் ஒரு பூனை. கொப்பில் இருந்தபடி இளித்துக்கொண்டு இருந்தது. கட்டக்கறுப்பு பூனை, இரண்டு பற்கள் மட்டும் வெளியே தெரியே, அதன் சிரிப்பில் கொஞ்சம் நரி தெரிந்தது.

Cheshire_Cat_Tenniel

“நரி மாதிரி சிரிக்கிற பூனையை இண்டைக்கு தான் பார்க்கிறன்”

“நரி சிரிச்சு பார்த்திருக்கிறியா?”

“இல்ல .. ஆனா இங்கிலீஷ் படிப்பிக்க வாற கஜன் சேர் இப்பிடி தான் சிரிப்பார்”

“நக்கல் .. நீ யாரு எண்டு சொல்லு”

“அது குழப்பமா இருக்கு .. காலமை நான் கொஞ்சம் பெரிய பிள்ள … சிட்டை சமப்படேல்ல எண்டு அப்பா மொக்கு பிள்ளை எண்டவர். ஆனா கழுத்துவெட்டியோட விழேக்க நாலாறு பதின்மூன்று எண்டு கண்டுபிடிச்சிட்டன், அப்ப விழுந்த நேரம் நான் கெட்டிக்கார பிள்ளை ஆயிட்டன் தானே.. ஆனா அந்த தண்ணியை குடிச்சதால இப்ப குள்ளமாகி நிக்கிறன். கடைசி ஒரு மணித்தியாலத்திலேயே நான் இவ்வளவு மாறீட்டன் … நான் யாரு?”

“நான் .யாரு. கேட்டியே ..அந்த நான் .. நீ .. அதை சொல்லு .. நீ யாரு”

“சொல்ல ஏலாது .. ஏனென்டா இப்ப நான் நானில்லை”

“நானில்லைக்கு முதல் இருந்த நான் .. அந்த நானை தான் யாரு எண்டு கேட்கிறன்”

இதற்கு அப்பாவின் குட்டு பரவாயில்லை என்று தோன்றியது. இந்த பூனையை சமாளிக்க ஒரே வழி, திருப்பி கேட்பது தான்.

“ஏய் பூனை நீ யாரு என்று சொல்லு முதலில”

“ஏன் சொல்லோணும்?”

இப்போது பூனை மேல் கோபம் வந்தது. என்ன சேட்டையா விடுறார்? சிவாகாமி திரும்பி,

“அதானே ஏன் சொல்லோணும் .. சொல்லாத”

என்று முணுமுணுத்தபடியே நடக்க தொடங்கியவள்,  ஏதோ ஒரு உள்ளுணர்வு வந்தவளாய் திரும்பிப்பார்த்தாள். பூனை இன்னமும் இளித்துக்கொண்டிருந்தது. திரும்பினாள். இந்த பூனை நான் பார்க்கும்போது தான் இளிக்கிறதா? இல்லை நான் பார்க்காதபோதும் இளிக்கிறதா? சிவகாமிக்கு அதை அறியவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. சடக்கென்று திரும்பினாள். இளித்துக்கொண்டிருந்தது. திரும்பினாள். ஒரு பாட்டை ஹம் பண்ணியவள் பூனை எதிர்ப்பார்க்காத சமயம் பார்த்து மீண்டும் திரும்பினாள். அதே இளிப்பு. நான் பார்க்காதபோதும் இந்த பூனை இளிக்கிறதா என்று எப்படி கண்டுபிடிக்க? சர்ரென்று திரும்பினாள். ம்ஹூம். அதே இளிப்பு. கோபம் கோபமாக வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இளிப்பு பிரகாசமாக இருந்தது போல. இல்லை இல்லை கொஞ்சநேரத்துக்கு முதல் கருப்பாக இருந்த பூனை இப்போது செம்படை நிறமாக மாறியிருந்தது. இது ஆச்சர்யபூனை என்று தெரிந்தது. கொஞ்சம் புத்திசாலியும் கூட.  கெட்டித்தனமாக வேறு குழப்புகிறது. கண்டபாட்டுக்கு அலையாமல் எங்கே போகவேண்டும் என்று இதனிடமே கேட்கலாம் என்று தோன்றியது.

1book22“ஏய் பூனை .. நான் இப்ப ..”

“ஆ .. அந்த நான் யாரு எண்டு சொல்லு”

“ஏன் சொல்லோணும்?”

பூனையில் விளையாட்டை பூனைக்கே காட்டினாள் சிவகாமி.

“மெய் தான் … என்ன விஷயம் சொல்லு சிவகாமி!”

“வந்து .. நான் இப்ப எந்த பாதையால போகோணும் எண்டு சொல்லுறியா ப்ளீஸ்?”

“அது நீ எங்க போறதெண்டதில தங்கியிருக்கு”

“எல்லாமே ஒகே .. எங்க எண்டாலும் ஒகே”

“அப்பிடி எண்டா எந்த பாதைல போனாலும் ஒகே”

இந்த பூனை கொஞ்சம் சேட்டை விடுவது போன்று சிவகாமிக்கு தெரிந்தது.  கேள்வியை மாற்றிப்பார்க்கலாம் என்று நினைத்தாள்.

“இந்த ஊரில எப்பிடிப்பட்ட ஆக்கள் இருக்கிறினம்?”

“இந்தா .. இந்த கிழக்கு திசை பக்கம் போனா சபாநாயகத்தாரிண்ட வீடு வரும், மேற்கே போனி எண்டால் சிவலிங்கத்தார் இருப்பார்.. விட்டிட்டு வடக்க போனா இரண்டு பேர்ல ஒருத்தர் இருப்பார் .. எந்த திசையிலயும் போலாம் .. ஆனா எல்லாருமே யாழ்ப்பாணத்தான் தான் .. பயங்கர கெட்டவங்கள்”

“ம்ம்ம் .. கெட்டவங்கள் எனக்கு வேண்டாம் .. நான் சின்ன பிள்ளை .. நல்லவங்கள் ஒருத்தருமே இல்லையா?”

“சான்சே இல்லை .. இங்க எல்லாருமே கெட்டவங்கள் .. சிவலிங்கம், சபாநாயகம், காசிப்பிள்ளை .. பயங்கர ஆட்கள் .. நானும் கெட்டவன் .. நீயும் தான்”

“நான் கெட்டவள் எண்டு உனக்கெப்படி தெரியும்?”

“இல்லாட்டி இங்க வந்திருக்க மாட்டாய்”

“உன்னையும் கெட்டவன் எண்டு நீயே ஏன் சொல்லுறாய்?”

“என்னை கெட்டவன் என்று சொல்லுற அளவுக்கு இங்க வேற ஒருத்தனும் நல்லவன் கிடையாது .. அதால நானே சொல்லுறேன்”

சிவகாமி இப்போது மீண்டும் பூனையை பார்த்தாள். பூனை இளித்துக்கொண்டிருந்தது. கறுப்பாக இருந்த பூனை, செம்படையாக மாறி இப்போது அதுவும் இல்லாமல் இருப்பது இப்போது தான் சிவகாமிக்கு புரிந்தது. அட பூனை நிறம் மாறவில்லை. மாறாக கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்தது. மஞ்சள் வெள்ளை, வெள்ளை அருகி அருகி அற்றுப்போய், என்னது இது? யாரிந்த பூனை? பூனை மறைந்து மறைந்து மறைந்து, அதன் இளிப்பு மட்டும் தனியே தெரிய ஆரம்பிக்க “இளிக்காத பூனையை பார்த்திருக்கிறன்… ஆனா பூனையே இல்லாத இளிப்பை இப்பதான் பார்க்கிறன்” என்று சிவகாமி மனதுக்குள் நினைத்தபடி தெற்கு திசையில் நடக்கப்போனவள், ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த, ஒரு பாட்டை ஹம் பண்ணியபடியே சடக்கென்று திரும்பிப்பார்த்தாள்.

“மறைந்த பூனை இன்னமும் இளித்துக்கொண்டிருந்தது”.

24cheshire_cat_fading

&&&&&&&&&&&


Alice in Wonderland

எங்கள் ஊரில் சிறுவர் புத்தகங்கள் என்றால் அரசன் நகர்வலம் வருவான், இல்லை முனிவர் சீடர்களோடு ஆறு கடப்பார். மூன்று கோடாலிகளை ஒரு தேவதை எடுத்துவந்து விறகுவெட்டிக்கு காட்டி பிரகாஸ்ராஜ் மாதிரி கேள்வி கேட்கும். அதற்குமேல் அம்மியும் நகராது. கதையின் ஆதாரமான செய்திகள் நல்லவனாய் இரு, பொய் சொல்லாதே வகையறாக்களாக இருக்கும். இதற்குள் கணிதமும், லொஜிக்கும் எப்போதாவது மகாபாரத கிளைக்கதைகளில் யாராவது பிரசங்கங்களில் சொன்னால் தான் உண்டு. அம்புலிமாமா சுத்தம்!

images

அதற்கு காரணம் இருக்கிறது. இங்கே சிறுவர் இலக்கியம் எழுதுபவர்கள் யார் என்றால் தமிழாசிரியர்கள். யாரு தமிழாசிரியர்கள்? எங்கள் காசிநாதன், கந்தசாமி, பொன்னுச்சாமி போன்ற ஆசிரியர்கள். “குற்றியலுகரம் எனப்படுவது” தொடங்கி “வாங்குவளை காட்டிடை” வாசித்து கூடவே பொருளையும் வாசித்து விளக்கும் ஆசிரியர்கள். அவர்கள் எழுதும் புத்தகத்தை வாசிக்கும் மாணவர்களும் வளர்ந்து ரமணிச்சந்திரன், லஷ்மி என்று முன்னேறி அப்படியே கொஞ்சம் புதுமைப்பித்தன், சுஜாதா வாசித்தாலும் வாழ்க்கைக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் இந்த அம்புலிமாமாக்கள் ஏதாவது செய்திருக்குமா என்றால்? சட்டியில போட்டா தானே அகப்பைல வரும்?

Alice in Wonderland புத்தகத்தை எழுதியது ஒரு சுப்பனோ குப்பனோ கிடையாது. சார்ல்ஸ் டோட்ஜ்சன் ஒரு கணிதமேதை. தன் கணித திறமையை சகட்டு மேனிக்கு புத்தகத்தில் பாவித்திருப்பார். அது சிறுவர்களுக்கு விளங்குமா? என்று கேட்டால் இல்லை விளங்காது தான். அதற்காக தான் அந்த சுவாரசிய பாஃண்ட்ஸி.  ஐஞ்சு வயசில் வாசிக்கும்போது கதையை தெரிந்து வை. பத்துவயதில் வாசிக்கும்போது சில விஷயங்கள் ஏன் வருகின்றன என்று ஆச்சர்யப்படு. இருபது வயதில் காரணங்களை தேடு. முப்பது வயதில் அதிலிருந்து உனக்கு என்ன வேண்டும் என்று எடுத்துகொள். இது தான் சார்ல்ஸ் இந்த கதையை வடிவமைத்தவிதம். எங்கள் கோளாறு என்னவென்றால் ஐந்து வயதுக்கு பிறகு நாங்கள் Alice In Wonderland ஐ வாசிக்கவேயில்லை!12976444-alice-in-wonderland-and-cheshire-cat-on-mushroom

முப்பது வயதில்(டேய் டேய் .. ஒகே ஒகே..) Alice In Wonderland ஐ படலையில் எழுதும்போது எனக்கு என்ன பிடிக்கிறதோ அதை மட்டும் எடுத்து அடித்தாட முயன்றிருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முதல் எழுதியிருந்தால் Modula N எல்லாம் எழுதியிருக்கலாம். இப்போது ஆர்வம் அங்கே இல்லை. அது வேறு எங்கோ. அதனால் தான் நோன்-யூகிலிடியன் கணிதம் சிவகாமி கதையில் வருகிறது. அதென்ன நான்-யூகிலிடியன்?


முக்கோணத்துக்கு எத்தினை பாகை?

“கணக்கு, விஞ்ஞானம், குவாண்டம் என்று நீ பத்தியை தொடங்கினால் ஸ்கிப் பண்ணீட்டு ஸ்ருதிகாசனின் மக்ஸிம் படம் பார்க்க போய்க்கிட்டே இருப்பேன் மச்சி”

என்றான் கஜன். ஸ்கிப் பண்ணுவதற்குள் பத்தொன்பதாம் நூற்றாண்டு கணிதம் சொல்லுவது கஷ்டம். ஸோ ஒரு சின்ன உதாரணம்.

எட்டாம் வகுப்பில் முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூட்டுத்தொகை நூற்றெண்பது பாகை என்று படித்ததை அனேகமாக மறந்திருக்கமாட்டீர்கள். மணி டியூஷனில் படித்திருந்தால் இரண்டு கோணம் அறுபது பாகைகள், என்றால் மூன்றாவது கோணம் எவ்வளவு? என்று மொக்கை கேள்வியை கேட்டு சரியாக பதில் சொல்லுபவனுக்கு ரெனோல்ட்ஸ் பேனையை வேலாயுதம் வாத்தியார் கொடுத்திருப்பார். ஞாபகம் இருக்கா?

அவர் பேனை கொடுத்தது பிழை என்று சொல்லுவது தான் நோன்-யூகிலிடியன் கணிதம்.

முக்கோணம் தட்டையாக இருக்கும் வரைக்கும் தான் இந்த நூற்றி எண்பது பாகை மாட்டரெல்லாம். ஒரே மட்டத்தில் இருக்கும் போது, ஒரு சின்ன வீட்டை கட்டவோ, அல்லது கணக்கு செய்யவோ இந்த அளவிடைகள் பிழைக்காது. ஆனால் பெரிய அளவில் யோசிக்கும்போது, உதாரணமாக லண்டன், நியூயோர்க், டெல்லி இந்த மூன்று ஊர்களையும் இணைத்து ஒரு முக்கோணம் வரைந்து பாருங்கள்.  அந்த முக்கோணத்தின் மூன்று கோணங்களையும் கூட்டினால் நூற்றி எண்பது பாகை வருமா? ம்ஹூம். வராது. கொஞ்சம் அதிகம் வரும்? ஏன் என்றால் இந்த முக்கோணம் ஒரே மட்டத்தில் இருக்காது. வளைந்து இருக்கும். பூமி வளைந்து இருக்கிறது இல்லையா? இந்த படத்தை பார்த்தால் புரியும்.

350px-Triangles_(spherical_geometry)

இது ஒரு நோன்-யூகிலிடியன் கணிதத்தின் ஜுஜுபி விஷயம். இதை மையமாக வைத்து, கொஞ்சம் ஈர்ப்புவிசையை யோசித்து மொத்த பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் ஐன்ஸ்டீன் உய்த்தறிந்தார் என்றாலோ,  அல்லது பின்னாளில் நீல் போர் அணுவுக்குள் நுழைய அதை பயன்படுத்தினாரோ என்று நான் சொல்ல போனால், சுருதிஹாசனின் இன்னொரு படமும் மக்ஸிமில் வந்துவிட்டது பார்த்தியா மச்சி? என்பீர்கள்.

நோன்-யூகிலிடியன் அறிமுகமானபோது அதை ஆதரித்தவர்களுக்கும் எதிர்த்தவர்களுக்குமிடையில் பெருத்த சண்டை. பலரும் அதை ஏளனம் செய்தார்கள். அர்த்தமில்லாத கணிதம்,  வாழ்க்கைக்கு உதவாத கணிதம் என்றெல்லாம் சொன்னார்கள். இந்த சண்டை Alice in Wonderland கதை முழுதும் அடிக்கடி வரும். மசுக்குட்டியும் பூனையும் கதைக்கும் விஷயங்களில் சகட்டு மேனிக்கு இந்த சண்டையை நக்கலாக சார்ல்ஸ் எழுதியிருப்பார். சிறுவர் இலக்கியம் பாஸ்.

நாங்கள் மாயாவி, ஹீரோ, டெவில், டமால், டுமீல் என்று மெனக்கட்டதில் எவ்வளவு மிஸ் பண்ணிவிட்டோம்? .


யாழ்ப்பாணத்தில் Yarl IT Hub சந்திப்பு

இரண்டு வருடங்களுக்கு முன்னர் “தொடங்குவோமா?” என்று சயந்தன் கேட்டபோது, யாழ்ப்பாணத்தை சிலிக்கன் வாலிஆக்கோணும், நிறைய பேர் கொம்பனி தொடங்கோணும் என்று பெரிய பெரிய கனவுகளை, Time Zone பிரச்சனைகளை தாண்டியும் கண்டாலும் எனக்கு கூடவே ஒரு சின்ன சந்தோசமும் இருந்தது. அது சின்னவயதில் மிஸ் பண்ணியதை இதற்கூடாக கொஞ்சம் டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் என்பது தான். வளர வளர எதையெல்லாம் அம்மாவும் அப்பாவும் அக்காவும் பள்ளிக்கூட வாத்தியும் சயன்ஸ் ஹோலும்,  நண்பர்களும் சொல்லித்தரவில்லையே என்று கவலைப்பட்டேனோ அதெல்லாம் Yarl IT Hub க்கூடாக சொல்லிக்குடுக்கவேண்டும். சொல்லிக்குடுக்கும் சாக்கில் நாமாவது அதை படிக்கவேண்டும் என்பது. அந்த கனவு. அது என்னோடு சேர்த்து இதை ஆரம்பித்த அத்தனை நண்பர்களுக்கும் இருந்ததும், இல்லாதவர்களை கூட கட்டிலில் வலுக்கட்டாயமாக போட்டு நித்திரையாக்கி கனவு காண வைத்ததும் சந்தோஷமான விஷயங்கள்.

“இப்போதெல்லாம் யாழ்ப்பாணத்திலே எப்ப பார்த்தாலும் IT மீட்டிங் தான், இதில நாங்க எதுக்கு இன்னொரு மீட்டிங் வைக்கோணும்?” என்று சயந்தன் கேட்க எழுந்து நின்று கை தட்டினேன். இந்த IT மீட்டிங் என்று யாராவது சொன்னாலே கூடவே தூக்கமும் வந்துவிடுகிறது. தமிழ் வளர்க்கிறோம் என்று சொல்லி தொல்காப்பியத்தை  எவனாவது படிப்பிப்பானா? IT வளர்க்க டெக்னோலொஜியை சொல்லிக்கொடுப்பதும் அப்படித்தான். இன்டர்நெட்டில் தேவை என்றால் தேடி எடுக்ககூடியதை மீட்டிங் போட்டு, இது இப்படி தான் என்று சொல்வதில் அர்த்தமில்லை. எனக்கு யாராவது திடீரென்று புதிதாக Clojure என்று ஒரு கணணி மொழி வந்திருக்கிறது. படிக்க போறியா? என்று கேட்டால், போடாங். தேவை என்றால் நானே படிக்க போகிறேன். நீ என்ன சொல்லி குடுக்கிறது?

4413409946_52c21b243f[3]

அப்படி என்றால் IT சந்திப்புகள் எப்படி இருக்கவேண்டும்? என்று கேட்கலாம். அங்கே IT என்பதே இருக்ககூடாது என்பது தான் எங்கள் வாதமே. எப்படி சார்ள்ஸ் “Alice in Wonderland”  புத்தகத்தில் சத்தம் போடாமல் கணிதத்தை சகட்டு மேனிக்கு விதைத்து தள்ளினாரோ, அது போல தான் IT இலும் செய்யவேண்டும். புத்திசாலி இளைஞர்களுக்கு தண்ணியை காட்டினால், குடிச்சு, குளிச்சு, உடுப்பு தோச்சு, நீந்தி, கப்பல் விட்டு .. எல்லா மாட்டருமே தண்ணிக்குள் செய்ய பழகிக்கொள்வார்கள். எங்கள் வேலை இங்கே பாரு குளம் என்று காட்டுவது தான்.

அதை இம்முறை கொஞ்சம் வெள்ளோட்டம் விடுவதாக இருக்கிறம். இம்முறை Alice In Wonderland சிறுவர் நாவலையே எடுத்து டிஸ்கஸ் பண்ணுவோம். போகிற போக்கில் நிறைய விஷயங்கள் கொட்டலாம். கொட்டும். அதை அள்ளுவதற்கு IT தெரிந்திருக்கவேண்டியதில்லை. தெரிந்திருக்காவிட்டால் தான் நல்லது.

இதை வாசிப்பவர்கள் மாணவர்களாக இருந்தால் வாருங்கள். உங்களுடைய தம்பி தங்கச்சிமார் மண்டைக்காரர், சந்தர்ப்பம் கிடைச்சால் கலக்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் கூட்டிவாருங்கள். எதிர்நீச்சல் ஷோ ஞாயிற்றுகிழமையும் இருப்பதால், Yarl IT Hub இன் சனிக்கிழமை சந்திப்புக்கு வருவது அவ்வளவு சிரமமில்லை என்று நினைக்கிறேன்.

சும்மா சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்தப்பக்கம் தலையை காட்டலாம். எவனாவது மொக்கை போட்டால் எஸ்கேப்பும் ஆகலாம். ஷர்ட் போட்டு யாழ்ப்பாண வெய்யிலில் ஷூ போட்டு அவிய வேண்டிய தேவையில்லை. கழுத்து கொலர் பட்டன் போட்டு டை கட்டி அஜ்மல் கசாப்புக்கு பண்ணியது போல கப்பிடல் பனிஷ்மெண்ட் கொடுக்கமாட்டோம்.  பெண்கள் பிடித்ததை போடலாம். ஆண்களும் தான். ஷோர்ட்ஸ் போட்டுக்கொண்டே வரலாம். சாரம் கூட ஓகே.

பட் மறக்காமல் உள்ளே ஏதாவது போட்டுக்கொண்டு வாருங்கள் ப்ளீஸ்!

meetup3

http://www.yarlithub.org/yarl/community-meet-up/

 

&&&&&&&&&&&&&&&&&&&

நேற்று அவள் இருந்தாள்.

$
0
0

 

185815_10151190737308313_1351057308_n

பாக்கியம் செத்து போனாள்.

மீண்டும் ஒரு முறை சாமி நெஞ்சில் காது வைத்துப்பார்த்தார். அசுமாத்தம் இல்லை. மூச்சுக்கான எந்த சிலமனும் இல்லை. உடல் ஏற்கனவே சில்லிட ஆரம்பித்துவிட்டிருந்தது. பின்னந்தலையில் இருந்து இரத்தம் திட்டு திட்டாக இன்னமும் வழிந்து ஓடியபடியே. தரையில் சுளகு, கொஞ்சம் தாறுமாறாக கிடந்த முருங்கை இலைகள். நிச்சயமாக பாக்கியம் செத்துதான் போனாள். பக்கத்திலேயே ஒரு ஸ்பானர். ஸ்பானரின் முனையில் மாத்திரம் கொஞ்சம் இரத்தம் ஒட்டியிருந்தாற்போல; சாமி அதை எடுத்துப்பார்த்தார். பாக்கியத்தை பார்த்தார். பற்கள் கொஞ்சம் வெளித்தள்ளி சாமியை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல தோன்றியது.

ஓங்கி ஸ்பானரால் மீண்டும் ஒரு அடி. “னங்” என்ற சத்தத்துடன் ஸ்பானர் எகிறியது. இம்முறை இரத்தம் பெரிதாக சீறவில்லை.

குசினிக்குள் போனார். ஸ்பானரை நன்றாக விம் பார் கொண்டு தேய்த்து கழுவினார். பின்னர் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடுப்புத்துணியால் துடைத்துவிட்டு, நிதானமாக கேத்திலை அடுப்பில் ஏற்றி, தேங்காய் மட்டை வச்சு …. தேநீர் கோப்பையுடன் மீண்டும் நடு ஹோலுக்கு வந்தார். பாக்கியம் இன்னமும் அப்படியே கிடக்க இரத்தம் இன்னமும் கொஞ்சம் பரவி, ஈக்கள் மொய்க்க ஆரம்பித்திருந்தன. தேனீரை உறிஞ்சியபடியே சுற்றி சுற்றிப்பார்த்துவிட்டு, கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து ஈ மொய்க்கும் இடத்தில் பீய்ச்சி அடித்தார். மீண்டும் தேநீர் கோப்பையையும் ஸ்பானரையும் கையில் எடுத்துக்கொண்டு, வெளிக்கதவை நன்றாக சாத்தி பூட்டிக்கொண்டு முற்றத்துக்கு வந்தார். அங்கே கழுவிப்பூட்ட கொடுக்கப்பட்டிருந்த ஓவசியர் நாகலிங்கத்தின் பழைய ரலி சைக்கிள் இன்னமும் தலைகீழாக ஒற்றைச்சில்லோடு நின்றது. மற்றைய சில்லை கையில் எடுத்தபடியே நிலத்தில் விரித்துவைத்திருந்த சாரத்தின் மேலே உட்கார்ந்தார் சைக்கிள் கடை சாமி.

பின் சில்லின் நடு அச்சை வெளியே எடுத்து இரண்டு புறமும் கிரீஸ் தடவி போல்ஸ் ஒவ்வொன்றாக அழுத்தியபோது சாமிக்கு கைகள் நடுங்காமல் கவனித்தபோது பார்க்க அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. வருகிற வைகாசியோடு செத்துக்கிடக்கிற பாக்கியத்தை கலியாணம் கட்டி சரியாக முப்பது வருடங்கள். மணவறையில் பக்கத்தில் வந்து நின்ற பாக்கியம் ஞாபகத்துக்கு வந்தாள். இவர் களவாக இடுப்பை கிள்ளியபோது அவள் திருப்பி கிள்ளியதும், அதற்கு பிறகு சாமி பேசாமல் விட்டதும் ஞாபகம் வந்தது. முதலிரவில் மெதுவாக முத்தமிட நெற்றியருகே நெருங்கியபோது அவள் வேகமாக பிடரி மயிரை இரண்டு கைகளாலும் கெட்டியாக பிடித்து ப்ச் பிச் என்று … போல்ஸ் ஒன்று கீழே தவறி விழுந்தது. எடுத்து நிதானமாக மண்ணெண்ணெய் தோய்த்த துண்டால் ஒத்தி மீண்டும் கிரீஸில் அமுக்கினார். முதல் வருடத்திலேயே மூத்தவன் ரமேஷ் பிறந்துவிட்டான்.

“எருமை நாயை கட்டி இத்தினை வருஷத்தில என்ன சுகத்தை கண்டன் … சனியன் சனியன் … இவ்வளவு சொல்லுறன் .. காதுல போடுதா பாரு”

காலையிலேயே ஆரம்பித்துவிட்டாள். வழமையான பாக்கியத்தின் திட்டு என்றே நினைத்துக்கொண்டார். திரும்பி பதில் சொன்னாலும் திட்டுவாள். சொல்லாவிட்டாலும் திட்டுவாள். கொஞ்ச நேரத்தில் தானாகவே அடங்கிவிடுவாள் என்று பேசாமலே இருந்தார். முப்பது வருடமாக பொறுமையாக இருந்தவர். இதுவும் அடங்கிவிடும். சைக்கிள் சில்லில் கவனமானார்.

“லீவு நாளுமா அன்னிக்கு கண்டறியாத ஓவசியரிண்ட கிழிஞ்ச சைக்கிள கழுவிப்பூட்டிறத விட்டிட்டு சிவலிங்கத்திட்ட போய் சீட்டுக்காசை வாங்கியோண்டு வா பார்ப்பம் … “

இன்றைக்கு சீட்டுக்காசு தான் பிரச்சனை என்று புரிந்துவிட்டது. சைக்கிள் கடை சாமி சீட்டும் பிடிப்பார். நூறு ரூபாய் சீட்டில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பத்தாயிரம் ரூபா சீட்டு வரைக்கும் பிடிக்க ஆரம்பித்தார். முதல் தவணை வசூல் சீட்டு மொத்தமாக பாக்கியம் கைக்கு போய்விடும். அப்படி உழைத்த காசில் தான் ரமேஷை இத்தாலிக்கும் அனுப்பினார்கள். அவன் போன இரண்டாம் வருடத்திலேயே பக்கத்துவீட்டு நல்லசிவத்தின் மூத்ததை ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட்டுவிட்டான். காதலாம். வீட்டில் யாருக்கும் தெரியாது. பாக்கியத்துக்கு மகன் மேல் இருந்த கோபம் பூரா சாமி மீது திரும்பியது. அது வரைக்கும் கத்தரிக்காய் புழுவுக்கும், வாழைக்குலை விற்கமுடியாமல் போனதுக்கும் விழுந்த ஏச்சு இப்போது மகன் சொல்லாமல் கொள்ளாமல் காதலித்ததுக்கும் சேர்த்து விழுந்தது. பேத்தி வயிற்றில் இருக்கும்போது மகன் தன்னை கூப்பிடாமல் தன்னோடு ஒன்றாக பங்கு கிணற்றில் கூழான் பிலாப்பழத்துக்கு சண்டை பிடிக்கும் நல்லையாவின் மனைவியை அழைத்தபோது, சாமிக்கு ஏச்சு இன்னமும் கூடியது.

“சிவலிங்கம் வீட்டுக்கு கக்கூஸ் உடைச்சு கட்டுறான் .. நீ இங்க இருந்து சில்லை சிரைச்சுக்கொண்டு இரு .. போய் வாங்கிட்டு வாவன் ஆம்பிளை எண்டா”

இரண்டாவது கூறுக்கு மிச்ச சீட்டுக்காரரை மிரட்டி கேட்கவிடாமல் பண்ணி, தான் மட்டும் கேட்டபோது சிவலிங்கம் மீது சாமிக்கு சந்தேகமாக தான் இருந்தது. விதானை ஒருநாளும் அநியாயம் பண்ணமாட்டான் என்ற நம்பிக்கையில் சாமி சீட்டை கொடுத்துவிட்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு அவன் கட்டாமல் உச்ச தொடங்கிவிட்டான். கடைசியாக ஏழு தவணைகள் அவன் சரியாக கட்டவில்லை. கேட்க போகும்போதெல்லாம் சீட்டுப்பிடிக்கிற விஷயத்தை இயக்கத்திடம் சொல்லி மீட்பு நிதி கேட்க வைத்துவிடுவேன் என்று மிரட்டினான். சாமி பொதுவாகவே பயந்த சுபாவம் உள்ளவர். ஏன் வம்பு என்று திரும்பிவிட்டார். அதை வந்து பாக்கியத்திடம் சொன்னதும் தான் தாமதம்.

“மாடு. எருமை செக்கு மாடு. விதானை சொன்னா அதையே கேட்டுக்கொண்டு வருது…”

அவள் சொல்லும்போது முன் சில்லை சைக்கிளில் பூட்டி நேர் பார்த்துக்கொண்டிருந்தார் சாமி.  இடப்பக்கம் நட்டை இழக்கி, ஒருபக்கம் இழுத்தார்.

“இண்டைக்கு சிவலிங்கம் மாட்டன் எண்டுவான் .. நாளைக்கு கனகநாயகம் கள்ளன் மாட்டன் எண்டுவான் … பே எண்டு கேட்டுக்கொண்டு வரும் இந்த சனியன்”

ரிம் இன்னமும் கொஞ்சம் வலப்பக்கம் சாய்ந்திருந்தது போல தெரிந்தது. ஸ்பானரால் நட்டை இறுக்கி இலேசாக்கி கூர்மையாக நேர் பார்த்தார்.

“கிழட்டு வயசில விளக்கணைச்சா பிறகும் மேல வந்து கை போட தெரியுது .. போய் கைநீட்டி சீட்டுக்காசை வாங்கெண்டா அவருக்கு மூக்கு நீண்டிடும்.”

சைக்கிள் சாமி இன்னமும் கூர்மையாக ரிம் நேர் பார்த்தார். இன்னும் கொஞ்சம் தான். இந்த பக்கம் இரு இறுக்கு. அந்தப்பக்கம் ஒரு இறுக்கு. ரெண்டு ரிம் கம்பியையும் கொஞ்சம் இறுக்க.

“ஆம்பிளை எண்டு வெளில சொல்லிடாத .. உன்னை விட உனக்கு உச்சுற சிவலிங்கத்தை கட்டியிருந்தாலும் காரியமா போயிருக்கும்”

சைக்கிள் சாமி நிமிர்ந்து பார்த்தார். கையில் இருந்த ஸ்பானரோடு அவளை நெருங்கினார். நடு ஹோலில் முருக்கை இலையை சுண்டியபடி இவரை பார்க்காமல் பாக்கியம் அவள் இஷ்டத்துக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். சாமி பக்கத்தில் வந்து நின்றதை கவனிக்கவில்லை. குனிந்து இலை சுண்டிக்கொண்டிருந்தவளின் பிடரி நன்றாக தெரிந்தது.

“வீரவான் முக்குற முக்கு ஊருக்கு தெரிஞ்சா சீட்டு காசு கட்டுறவன் கூட உச்சிடுவான் .. அவரும் அவரிண்ட  கொ..”

“னங்” என்று ஒரே அடி. 

சின்னதுக்கும் கூப்பாடு போடும் பாக்கியம் எந்த சத்தமும் போடவில்லை. அப்படியே சரிந்தாள். சாமி எந்த சலனமும் இல்லாமல் சுற்றிவந்தார். மூச்சுப்பார்த்தார்.  அந்த ஒரே அடி தான்.

பாக்கியம் செத்து போனாள்.

பின் சில்லை பூட்டி நேர் பார்த்து நட்டு இறுக்கிய பிற்பாடு சைக்கிளை நிமிர்த்தினார் சாமி. டபிள் ஸ்டாண்டில் விட்டுவிட்டு கைகளால் சுழட்டிப்பார்த்தார். எல்லாமே சரியாக இருந்தது போல தோன்றியது. திருப்தியாக இருந்தது. முற்றத்துக்குள்ளேயே ஒரு ரவுண்ட் வந்தார். சீட் உயரம் பதித்து, ப்ரேக் கொஞ்சம் இழக்கி எல்லாமே சரியாக இருந்தது.

உள்ளே போனார். பாக்கியம் அப்படியே கிடந்தாள். தலைப்பக்கம் பூரா இரத்தம் இப்போது கட்டியிருந்தது.  ஈக்கள் மொய்த்திருந்தன. பக்கத்தில் கிடந்த கரப்பான் பூச்சி மருந்து டின்னை எடுத்து பத்திரமாக கப்பேர்டுக்குள் வைத்தார். அலுமாரிக்குள் கிடந்த பாக்கியத்தின் இரண்டு மூன்று சேலைகளை எடுத்தார். தலையிலிருந்து அடிக்கால் வரை உடலை சேலைகளால் சுற்றி சுற்றி கட்டினார். பத்தியில் கிடந்த இரண்டு செத்தமிளகாய் சாக்குகளை கொண்டுவந்து தலைப்பக்கமாக ஒன்று, கால்பக்கமாக ஒன்று செருகி, இடுப்பில் வைத்து இளக்கயிற்றால் நன்றாக இறுக்கி கட்டினார். அயர்ச்சியாய் இருந்தது. வீட்டில் என்றுமில்லாத ஒரு அமைதி. பானசோனிக் ரேடியோவில் வர்த்தக சேவையை திருகிவிட்டு தேநீரை இன்னொரு மிடறு குடித்த படியே சாக்கு மூட்டையை வெறித்து பார்த்தார்.

சாக்கோடு சேர்த்து கால் பகுதியை தர தரவேண்டு இழுத்துக்கொண்டு பின் பத்திவழியாக பிலாமரத்தடியில் கிடத்தினார். பக்கத்தில் பாழடைந்து போய் கிடக்கும் பங்கருக்குள் குப்பைகளை கொஞ்சம் அகற்றிவிட்டு, உள்ளே உடலை போட்டார். பத்தியில் மாட்டியிருந்த புளியம் விறகு தூக்கை இழுத்துக்கொண்டு வந்து பங்கருக்குள் அடுக்கினார். திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவராக மண்வெட்டியை எடுத்து வந்தார். அடுக்கிய விறகை மளமளவென நீக்கிவிட்டு, மண்வெட்டியால் மீண்டும் சாக்கின் தலைப்பகுதியில் தடக் தடக் தடக் தடக்கென்று நாலு தரம் போட்டார். மீண்டும் விறகை அடுக்கி, கிடந்த நான்கைந்து டயர்களை தூக்கி போட்டு, அதற்கு மேல் மீண்டும் குப்பைகளை போட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு பற்றவைக்க, கண்ணை எரிக்கும் புளிச்சம் விறகு, டயர் தீய்ந்த நாற்றத்துடன் எரிய ஆரம்பித்தது.

கொஞ்சநேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவர், கிணற்றடியில் போய், சுத்தமாக லைபோய் போட்டு தேய்த்து குளித்தார். நெருப்பு இப்போது ஜீவாலை விட்டு எரிய ஆரம்பித்து பிலா கொப்பு இலைகளையும் கறுக்க ஆரம்பித்திருந்தது. குளித்து முடிந்து உடுப்பு மாற்றி, வெள்ளை சாரம் சேர்ட்டுக்கு மாறியவர், மீண்டும் இரண்டு டயர்களை நெருப்புக்கு மேலே போட்டுவிட்டு, வீட்டை பூட்டி கேட்டை கொழுவிக்கொண்டு, ஓவசியரின் கழுவிப்பூட்டிய சைக்கிளில் சைக்கிள் கடை சாமி

சிவலிங்கத்தின் வீட்டுக்கு புறப்பட்டார்.

 

&&&&&&&&&&&&&&&&

Viewing all 494 articles
Browse latest View live