“துணிக்கை ஒன்றை ஆரம்ப வேகம் 100m/s இல் செங்குத்தாக மேல்நோக்கி எறிந்தால், அது திரும்பி பூமியை அடையும் வரையிலான பயணத்துக்கான வே...”
இந்த இடத்தில் நிறுத்திவிட்டு குமரன் மாஸ்டர் ஒரு மர்ம புன்னகை ஒன்றை விடுவார்.
“வேக நேர வரைபா சேர்?”
சேர் இப்போது சடக்கென்று கேள்வியை மாற்றிவிடுவார்.
“…இடப்பெயர்ச்சி நேர வரைபை வரைக”
சொல்லி முடித்துவிட்டு இறங்கி நடந்துவருவார். எல்லோரும் அட் எ டைம் குனிவார்கள். போகும் வழியிலேயே முன் வாங்கு யாழ் இந்துக்காரன் கொப்பியை நீட்டுவான். சேர் பார்த்திட்டு ஒரு சிரிப்பு சிரிப்பார். கொஞ்சம் பின்னே வந்தால் இன்னொருத்தன் நீட்டுவான். ஒரு சின்ன யோசனைக்கு பிறகு அதே சிரிப்பு. இன்னும் கொஞ்சம் பின்னே வந்தால், ஏதோ கலியாண வீட்டு ரெஜிஸ்ரேஷனில கையெழுத்து வைக்கிற மாதிரி அத்தனை பெரும் சீரியஸா ரியாக்ஷன் கொடுப்பாங்கள். நிமிரவே மாட்டாங்கள். நம்மட வாங்கு நிலைமை இன்னும் சோகம். பக்கத்தில இருந்த மக்கரின் வரைபை பார்த்தால், பந்தை வானத்தில எறிஞ்சத பார்த்து அப்பிடியே கீறியது போல இருந்தது. கீர்த்தியின் கொப்பியில் வெறும் நேர்கோடு மட்டும் இருக்கும். கேட்டால் புவி ஈர்ப்பு மாறாதென்று விஞ்ஞான விளக்கம் குடுப்பான். மயூ என்கின்ற மயூரதன், நம்ம செட்டிலேயே செம குண்டன். அதே நேரம் செம மண்டையும். அவன் வரைபை பார்த்தால், ஒரு அரைவட்ட வடிவ பரவளைவாக நேர அச்சுக்கு மேலே கிடந்தது. எனக்கென்றால் அது பிழை போல இருந்தது. நாங்களும் மண்டை என்று இந்த உலகுக்கு நிரூபிக்கவேண்டாமா? என்னுடைய வரைபு ஒரு சரிவான நேர்கோடாக இருந்தது. ஒரு டக் டிக் டோஸில் கீறியது தான். காட்டினேன். வாங்கிப்பார்த்துவிட்டு குமரன் மாஸ்டர் சொன்னார்.
“நல்லா….…. தெரியுது”
சொதப்பிவிட்டேன். மயூவின் கொப்பியை அவரே போய் வாங்கிப்பார்த்தார். பார்த்திட்டு ஒரு புன்னகை. “நீ ஒரு மண்டைக்காய்” என்று சொல்லும் புன்னகை அது. அந்த புன்னகைக்காக பலர் தவம் கிடப்பார்கள் அப்போது. இப்போது எங்களை தாண்டி முன்னே போகும் பகுதி தேவதைகளின் கூடாரம். ஒன்றிரன்று பெண்கள் கொப்பி காட்டுவார்கள். மற்றைய பெண்கள் கால் நகத்துக்கு கியூடெக்ஸ் சரியாக அடித்திருக்கா என்று அந்த நேரம் தான் செக் பண்ணுவார்கள். தேவதைகளை நாங்கள் கணக்கு பண்ண வேண்டுமே ஒழிய அவர்களை கணக்கு பண்ண சொல்லக்கூடாது. ஆனால் குமரன் மாஸ்டர் அந்த இரண்டையும் செய்தார்!
இப்படி ஒரு ரவுண்ட் போய்விட்டு, குமரன் மாஸ்டர் மீண்டும் கரும்பலகைக்கு போய் மீண்டும் அதே நக்கல் சிரிப்பு சிரித்துவிட்டு பன்ச் டயலோக் ஒன்று விடுவார்.
“தம்பியவை பௌதீகம் எண்டது ஒரு கடல் பாருங்கோ!”
**********
டியூஷன் கொட்டில்… யாழ்ப்பாணத்து கல்வியின் இருதயம் இது. இங்கே காலடி எடுத்து வைக்காமல் எந்த ஒரு யாழ்ப்பாண இளைஞனும் ஏஎல் தாண்டியிருக்கமாட்டான். இன்றைக்கு உலகம் பூரா பரந்திருக்கும் கணக்காளர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலை வல்லுனர்கள் முதற்கொண்டு சாதாரண முகநூல் புரட்சியாளர்கள் வரை எவருமே இங்கே படிக்காமல் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள். ஸ்கோலர்ஷிப் பாஸ் பண்ணினால் தான் யாழ் இந்துவுக்கோ வேம்படிக்கோ நுழையலாம். அட்மிஷன் டெஸ்ட் பாஸ் பண்ணினாலும் அப்பன்காரனிடம் ஐயாயிரம் ரூபா இருந்தால் தான் சென்ஜோன்ஸ் சுண்டுக்குளியில் சேரலாம். இப்போது அது ஐம்பதாயிரம் என்கிறார்கள். ஆனால் எங்கள் யாழ்ப்பாணத்து டியூஷன் கொட்டில் அட்மிஷனுக்கு இது ஒன்றுமே தேவையில்லை. மாச மாசம் பீஸ் கட்டினால் போதுமானது. வருகை டாப்பு இல்லை. யூனிபோர்ம் இல்லை. ஒழுங்கான கிளாஸ் ரூம் இல்லை. ஆனால் அங்கே கற்பிக்கும் ஆசிரியர்களும் டூப்பு இல்லை. எங்கள் எல்லோரையும் வழிகாட்டிய, இன்றைக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களை படிப்பித்து சமூகத்துக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்து டியூஷன் கொட்டில் தான் இன்றைக்கு நம்மட கொல்லைப்புறத்து காதலி.
************
“சண் காட்டும் ஆட்கள்” என்று ஒரு பிரிவு இருக்கிறது. எட்டு மணி டியூஷனுக்கு ஆறுமணிக்கே எழுந்து பேபி சோப் போட்டு தேய் தேயென தேய்த்து முகம் கழுவி, பின்னர் தமக்கையின் பெஃயார் அண்ட் லவ்லியை மூஞ்சிக்கு தப்பும் ஆகிருதிகள் இவர்கள். அந்த காலத்தில் ஒரு சீப்பு இருந்தது. தட்டையாக நடுவில் ஒரு சின்ன வளையம், அதற்குள் நடுவிரலை செருகி, அப்படியே உள்ளங்கையில் வைத்து மேவி இழுக்கலாம். இரண்டு காதுப்புற தலைமயிரையும் அப்பிடியும் இப்பிடியுமாக இழுத்து ஒதுக்கலாம். பிடரிப்பக்கம் இரண்டு புறமும் சேர்ந்து நடுவிலே ஒரு நேர்கோடு கீறும். நம்மட ஆளு இத அழகாக செய்வார்.
எங்கள் காலத்தில் பிரபுதேவா baggy ஜீன்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போய், குழாய் ஜீன்ஸ் பாஷன் வந்துவிட்டது. மேலே இருந்து கீழே வரை ஒரே சைஸ் குழாய் தான். டெனிம் எல்லாம் எவனாவது வெளிநாட்டில அண்ணன்காரன் இருப்பவன் மட்டும் போடுவான். இந்த ஜீன்சுக்குள் ஷேர்ட் இன் பண்ணுறது ஒரு லோங் ப்ரோசீஜர். தலைவர் என்ன செய்வார் என்றால், முதலில் பனியனை தன்னுடைய அப்பிள் பெண்டருக்குள் செருகுவார். அது கூட ஓகே. ஆனால் அடுத்ததாக ஷேர்ட்டையும் அங்கேயே செருகுவார். பின்னர் ஜீன்சை இழுத்து பெல்ட் போட, ஷேர்ட் அப்படியே உடம்போடு ஒட்டிக்கிடக்கும். தலைவர் திரும்பி இப்போது பின்பக்க ஷேர்ட்டை கொஞ்சமே வெளியே இழுத்துவிடுவார். பார்த்தால் முன்னுக்கு மட்டும் ஷேர்ட் வண்டியோடு ஒட்டிக்கிடக்க, பின்னுக்கு பொங்கிப்போய் இருக்கும். இது ஸ்டைல். இதே போஸில் கண்ணாடிக்கு முன்னே நின்று இரண்டு கைகளையும் அகட்டி விரித்து, தலையை ஒரு ஆட்டு ஆட்டி, “தத்தளிக்கும் மனமே தத்தை தருவாளோ?” என்று முணுமுணுத்தபடி நான்கு கொப்பிகளையும் தூக்கிக்கொண்டு அண்ணர் புறப்படுவார். வகுப்பிலே முன் வாங்கில் இருப்பார். கடைசி கிளாசில என்ன படிச்சம்? என்று வாத்தி கேட்கும்போது தடாலென்று எழுந்து நோட்ஸ் கொடுப்பார். கொடுக்கும்போது பக்கத்து வரிசையில் இருக்கும் பெட்டைகளை பார்த்து சிரிப்பார். கணக்கு கொடுத்தால் மட்டும் குனிந்த தலை நிமிராமல் ஏதோ ஐன்ஸ்டீன் யோசிக்கிற எபக்ட் குடுத்தபடி அப்பிடியே கொப்பியில் கிண்டிக்கொண்டிருப்பார். இப்படி சண் காட்டுற ஆட்களுக்கு இன்னொரு பெயரும் உண்டு. “பொன்ஸ்!”
அடுத்த கோஷ்டி காவாலி கோஷ்டி. இந்த கோஷ்டிக்கு ஷேர்ட் எல்லாம் இன் பண்ணுற பழக்கமே கிடையாது. ஷேர்ட் போட்டால் பின் பக்க அடிப்பக்கம் சோழமன்னனின் ஓலைச்சுவடி போல சுருண்டு போய் கிடக்கும். இவர்கள் ஏல் படிக்க ஆரம்பிக்கும்போது நான்கு பாடத்துக்கும் நான்கு கொப்பிகள் வாங்குவார்கள். முதல் வருஷம் நான்கு கோப்பி இரண்டு கொப்பியாகும். இரண்டாம் வருடம் எல்லாமே ஒரே கொப்பியில் நடக்கும். நான்கு கட்டு கொப்பி வாங்கினால், முதல் கட்டு பிசிக்ஸுக்கு, இரண்டாம் கட்டு கெமிஸ்ட்ரிக்கு. கடைசி இரண்டு கட்டும் டபிள் மட்ஸுக்கு. நோட்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும்போது ஒற்றை முடிஞ்சுது என்று வையுங்களேன். பக்கத்தில இருக்கிறவனிடம் வெறும் ஒற்றை கேட்பார் நம்மட காவாலி. அவன் நடுவால கிழிச்சு கொடுக்க, அண்ணர் செம சீரியஸாக அதில எழுதுவார். அந்த ஒற்றை கொஞ்ச நேரத்தில் ரொக்கட்டாக மாறி சோதியர் எலக்ட்ரோனிக்ஸ் கணக்கில் மண்டை காய்ந்துகொண்டிருக்கும் சமயம் பார்த்து பின்னாலே போய் விழும். யாழ்ப்பாணத்து “கொசப்பு கதைகள்” பலவற்றை உருவாக்கிய இலக்கியவாதிகள் கூட இந்த காவாலிகள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.
இதிலே மூன்றாவது வகை ஒன்று இருக்கிறது. அது தான் தானும் தன்பாடும் என்று இருக்கின்ற உருப்படாத பயலுகள். “படம் காட்டுதல் நன்றன்று” என்ற வள்ளுவர் மொழிக்கிணங்க நடப்பவர்கள். ஆண்டு பத்தில் தைத்த ஜீன்சை, இயலுமான வரை கீழே இறக்கி ஏஎல் முழுக்க போடுவார்கள். அதுக்கு மேலே ஒரு ஷேர்ட்டையோ டீஷேர்ட்டையோ போட்டபடி, ஒரு பாட்டாவையும் மாட்டிக்கொண்டு அமைதியாக வகுப்புக்கு வருவார்கள். இவர்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. இவர்களில் கெட்டிக்காரர்களும் இருப்பார்கள். கிலோ என்ன விலை கேசும் இருக்கும். யார் என்ன என்று கூட படிக்கிறவனுக்கே ரிசல்ட் வந்தா பிறகு தான் தெரியும். இந்த ஜென்டில்மேன்களுக்கு பெடடைகளை பார்த்தால் பீலிங் இராதா என்று கேட்கலாம். அதெல்லாம் அளவுக்கதிமாக இருக்கும். இருந்தது! பட் எந்த பெட்டைகளு அவர்கள் பீலிங்கை விளங்கிக்கொள்ளுவதில்லை. பொதுவாக பெட்டைகள் “சண் காரரை” கண்டு சிரிக்கும். காவாலிகாரனிடம் விழும். இதை தான் Good men always end up last என்று சொல்வார்களோ தெரியாது.
இப்போது பெட்டைகள் செக்ஷனுக்கு போவோம். முதலில் “செடில் காட்டும் பெண்கள்”. அநேகமான அழகு பெண்கள். திமிர்களோடு கூடவே திமிரும் சேரும். இவர்கள் பொதுவாக சுண்டுக்குளி ஆட்களாக இருப்பார்கள். அதற்காக சுண்டுக்குளியின் அத்தனை பெண்களும் தேவதைகள் என்று சொல்வதற்கில்லை. செம மொக்கை பிகரெல்லாம் சுண்டுக்குளியில் படிக்கும். ஆனாலும் அந்த பள்ளிக்கூடத்துக்கு போன அடுத்த நாளே அந்த பிகரும் செடில் காட்ட தொடங்கிவிடும். இவர்களில் சிலர் “போப்ஃட்” அடித்திருப்பார்கள். நடையில் ஒரு நளினம் இருக்கும். நடக்கும் போது உடல் ஒருபக்கம் உலாஞ்சும். முகம் உட்பட எல்லாமே பளிச்சென்று இருக்கும். சின்ன புன்னகை கூட ரெடிமேட்டா குடுப்பாளவை. அந்த அழகு, திமிர் எல்லாமே சேர்ந்து இயல்பாக இவர்களை செடில்காரிகள் ஆக்கிவிடுகிறது என்று நினைக்கிறேன். அதிலும் சிலது கொழும்பில் இருந்து வந்திருந்தால் கதை கம்மாஸ். ஜீன்ஸ் டீஷேர்டோட எங்கட பாட்ச்சில் ஒருத்தி. நம்ம ஜெகன் போய் இங்கிலீஷ்ல கூட கதைச்சு பார்த்தான். ம்ஹூம். செடில் என்றால் அப்பிடி ஒரு செடில். அடியேன் இந்த விஷயத்தில் செம அலெர்ட். நம்மை எல்லாம் பக்கத்து வாங்கில இருக்கிற பார்த்திக்கே சரியா தெரியாது. பெட்டைகளா தெரிஞ்சு வச்சிருக்கபோகுதுங்க? கதைச்சு எல்லாம் நோண்டி ஆகி டைம் வேஸ்ட் பண்ணாம ஸ்டேரயிட்டா காஷ்மீர் போய் டூயட் பாட ஆரம்பிச்சிடுவோம்.
“ச்சா .. அவள் நல்ல பெட்டைடா” என்று ஒரு ரக பெண்கள் இருக்கிறார்கள். சிம்பிளான பெண்கள். முகத்துக்கு பொன்ஸ் பவுடர் மட்டும் போடுவார்கள். அது கூட, காதுப்பக்கம் சரியாக துடைக்க மறந்து போய் வருவார்கள். தலைக்கு இன்னமும் நல்லெண்ணய் தடவுவார்கள். புரட்டாதிசனி, கௌரி காப்பு டைம் என்றால் தலைக்கு முழுகி, வெறும் கிளிப் போட்டு தலைமயிர் ஈரலிப்பாக தொங்கவிட்டு வருவார்கள். நேர் பின்வாங்கில் இருந்தால் சீயாக்காய் வாசம் தூக்கும். இவர்கள் அனேகமாக உடுப்பது பாவாடை சட்டை. இவர்களுக்கென்று அப்போது வலு பேமஸான ஒரு ஸ்டைல் சட்டை இருந்தது. சாதாரண சீத்தை துணியில் தான் சட்டை தைத்திருப்பார்கள். சட்டையின் பாவாடைப்பகுதி குடைவெட்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும். மேற்பகுதி வெறும் ப்ளைய்ன் ப்ளவுஸ் தான். ஆனா அங்கே தான் ஒரு சின்ன ட்விஸ்ட். பிளவுஸின் பின் பக்கம் ஒரு குட்டி துணியாலேயான ரிபனில் கட்டப்பட்டிருக்கும். பின்னுக்கு மட்டும்தான். அணியும் போது அது இடுப்பின் பின்பகுதியில் வந்துநிற்கும். Just imagine. அப்படி இழுத்து கட்டும்போது, ப்ளவுஸ் சிக்கென்று உடலின் வடிவத்தோடு ஒட்டி நிற்க, கீழே குடைவெட்டு பாவாடைகள் காற்றில் பறக்க … அவளுக்கும் பதினெட்டு. பாக்கிற பாவிக்கும் பதினெட்டு. காந்திமதி கூட ஹன்சிகா மாதிரி இருக்கும் பருவம் அது. கமறும்.
இவ்வளவு இண்டரஸ்டிங்கான கரக்டர்ஸ் எல்லாம் கூடும் இடம் தான் கொட்டில். அதிலும் நாங்கள் போனது சயன்ஸ் ஹோல். அது விஞ்ஞான மாணவர்களின் மெக்கா. யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதியில் இருந்தது. கஸ்தூரியார் வீதியையும் பெருமாள் கோயில் வீதியையும் இணைக்கும் ஓரளவுக்கு நீண்ட வீதி அது. அந்த வீதி நெடுகவும் இரண்டு புறங்களிலும் சனி ஞாயிறு என்றால் சைக்கிள்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். கிளாஸுக்கு போகும்போது அவசரத்தில் அங்கே இங்கே சைக்கிளை நிறுத்தமுடியாது. செக்கி என்று ஒன்றிரண்டு பேர் நிற்பார்கள். இயக்கப்பிளான் காட்டுவார்கள். சைக்கிளை சரியாக நிறுத்தாவிட்டால் திட்டுவிழும். ஸ்டாண்ட் வேறு ஒழுங்காக நிற்காமல் விழும். அவசரத்தில் சைக்கிளை சரித்துவிட்டால், அப்படியே சீட்டுக்கட்டு போல சைக்கிள்கள் சரியும். பூட்டினால், பூட்டு ஓட்டைக்குள் போகாமல் விலகிப்போகும். பெல் மூடியை கழட்டிக்கொண்டு போகவென்றே ஒரு கூட்டம் அலையும். சில பேர் தன்னோட “சரக்கிண்ட” சைக்கிளுக்கு பக்கத்திலேயே தானும் சைக்கிள் விடோணும் என்று அடம் பிடிப்பான். இந்த விஷயம் அவளுக்கு தெரிந்திருக்காது.
இந்த சிக்கல் எல்லாவற்றையும் தாண்டி டியூஷன் வாசலுக்கு போனால் அங்கே விஸா செக் பண்ணுவார்கள். அதான் டியூஷன் கார்ட். அதுவும் மாச தொடக்கம் என்றால் மோப்பநாய் ரேஞ்சுக்கு நிற்பார்கள். கார்ட் கொண்டுவரவில்லை என்றால் கதை கந்தல். அருள் அண்ணை, கிட்டத்தட்ட கலாநிதி மாறன் போன்று பிஹேவ் பண்ணுவார். இவர்களை தாண்டி வகுப்புக்கு போனால், ஐநூறு பேர் கொள்ளகூடிய கொட்டில் நிறைந்து வழியும். இடம் இருக்காது. ஒரு பக்கம் பத்திருபது கொங்கிரீட் கல்லை அடுக்கி, அதை மேடை என்று சொல்லியபடி வாத்தியார் நிற்பார். வரிசைக்கு வாங்குகள், மனிதத்தலைகள். ஒரு நீண்ட கரும்பலகை, டஸ்டர், சோக்கட்டிகள், நிறைய சுண்ணாம்பு என வகுப்பு ஏற்கனவே ஆரம்பித்திருக்கும். அரக்க பரக்க பின் வாங்கிலே போய் நெருக்கி இருந்து, ஏதோ குத்துதே என்று எழுந்தால் … சர்க்க்க்..
பனஞ்சிராய் வாங்கில் இழுபட்டு ஜீன்ஸ் கிழிந்து போயிருக்கும்.
*************
சயன்ஸ் ஹோலில் யாரிடம் படிப்பது என்பது தான் பெரும் ரிசெர்ச். ஆளாளுக்கு குழப்புவார்கள். சோதியர் சுத்துவார் என்பார்கள். குமரன் பம்மாத்து என்பார்கள். மகாதேவாவிடம் டீப் காணாது என்பார்கள். மணியம் சிம்பிள் அண்ட் ஸ்வீட் என்பார்கள். எண்டர் பண்ணுறவன் எல்லாம் வெக்டரிடம் தான் படிப்பார்கள் என்பார்கள். இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு, மாஸ்டர்மாரை தெரிவு செய்யவேண்டும். சிலவேளைகளில் ஒரே மாஸ்டரிடம் வேறு வேறு டியூஷனில் வேறு வேறு செக்ஷனும் படிப்பதுண்டும். வேறு வேறு பட்சிலும் படிப்பதுண்டு.
முதல் நாள் சோதியரின் வகுப்பு. பிஸிக்ஸ் மண்டைக்காய்களுக்கான பாடம் என்றார். பக்கத்தில் இருந்த கீர்த்தி என்னை பாவமாய் பார்த்தான். திடீரென்று மிக்ஸரை எடுத்து மூடியில போட்டு சாப்பிட்டுக்கொண்டே யோசிக்கோணும் என்று ஒரு கணக்கை எடுத்துவிடுவார். நித்தியானந்தர் சபைல ரெடியா ஒருத்தன் எழுந்து போய் பாய்ஞ்சு பாய்ஞ்சு யோகா செய்யிறது போல, இங்கேயும் ஒரு யாழ் இந்து காரன், ஸ்டைலாக எழுந்து போய் போர்டிலே கணக்கை செய்வான். செய்துவிட்டு ரெண்டு கோடு வேறு கீழே போட்டு கடுப்பேத்துவான். பெட்டைகள் வேறு அவன் பெரும் மண்டை என்று நினைத்திருக்குமோ என்னவோ? எனக்கு செம கடுப்பு. கணக்கு வேற சரி வரேல்ல. ஸோ அன்றையோட சோதியருக்கு ஜூட்.
மகாதேவா மாஸ்டரின் தமிழே மிரட்டியது. தூய தமிழில் அறுத்துறுத்து தான் பேசுவார். நோட்ஸ் கூட அப்பிடித்தான் இருக்கும். அதிகம் டீப்பாக அலட்டிக்கொள்ள மாட்டார். ஒரு முறை ஓர்கானிக் கெமிஸ்ட்ரி படிப்பித்துக்கொண்டிருக்கிறார். அன்றைக்கு. பென்சீன் பாடம். அதுக்கு ஒரு அறுகோணம் கீறி உள்ளே ஒரு வட்டம் போடவேண்டும். இவர் நோட்ஸ் சொல்லிக்கொண்டிருக்கும்போது முன்னே இருந்த பெண் அறுகோணத்தை கீறிவிட்டு வட்டத்தை மறந்துவிட்டாள். இதைப்பார்த்த மகாதேவா சேர் சொன்னார்.
“ஐசே … நீர் உள்ளே ஒன்றும் போடவில்லை!”
வெக்டரிடம் போனால், எல்லாமே கயிலை காட்சி போன்றே இருக்கும். கணக்கு நிறுவுகிறார் என்று தெரிகிறது. சமப்படுகிறது. ஆனா எப்பிடி நடக்குது என்று மட்டுமே விளங்கேல்ல. இது ஏன் எதற்கு எப்படி என்ற டவுட்டிலேயே ரெண்டு மூன்று கிளாஸ் போயிருக்கும். ஒரு நாள் வெக்டரின் மகனே என்னிடம் வந்தான்.
“ஏதாவது விளங்குதா?”
“கணக்கு மட்டும் சாடையா விளங்குது .. நிறுவல் ஒரு மண்ணுக்கும் விளங்குது இல்ல.. உனக்கெப்பிடி?”
“கணக்கே விளங்குதில்ல .. அப்பர் ஆக மோசம்”
“ஓ .. அப்ப என்ன செய்யுறது?”
“பேசாமா கிளாசை கட் பண்ணி சந்திரன் மாஸ்டரிட்ட போவம் .. ”
“அவரிட்ட விளங்குமா மச்சான்?”
“சும்மா தண்ணி மாதிரி இருக்கும்”
அப்போதும் கூட இந்த டியூப்லைட்டுக்கு விளங்கவில்லை. சந்திரன் மாஸ்டரும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கணித ஆசிரியர் என்றே முதலில் நினைத்தேன். அதன் பிறகு அவர் வகுப்புக்கு போன பின்னர் தான் எல்லா விஷயமும் விளங்கியது. அது வேண்டாம் இங்கே.
நான் எந்த கிளாஸ் கட் பண்ணினாலும் குமரன் மாஸ்டரின் பிஸிக்ஸ் மாத்திரம் கட் பண்ணுவதில்லை. அதற்கொன்றும் பௌதீகத்தின் மீதிருந்த அளப்பரிய காதல் அல்ல காரணம். குமரன் மாஸ்டரிடம் தான் ஊருலகத்தில் உள்ள அத்தனை பெட்டைகளும் படிக்க வரும். அதுவும் கணிதப்பிரிவில் காய்ந்து கிடந்த எங்களுக்கு பயோ பிரிவில் இருந்த தேவதைகள் வந்துசேரும் ஒரே வகுப்பு குமரன் மாஸ்டரின் வகுப்பு தான். நாங்கள் தேவதைகள் இருக்கும் செகஷனுக்கு நேர் பின்னே போய் இருப்போம்.
அதிலும் ஒருத்தி! வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணான மேனகை. நடந்து போனால் என்றால் தூர நின்று பார்க்கும் எங்களுக்கு ஏதோ செய்யும். இடம்பெயர்ந்து சைக்கிள் உருட்டிக்கொண்டு நாவற்குழியால் நடக்கும்போதும் அவளும் பக்கத்தில் உங்களோடே சேர்ந்து சைக்கிள் உருட்டிக்கொண்டு பேசிக்கொண்டு வருகிறாள் என்று நினைத்துப்பாருங்கள். நடக்கும்போது பசியோ பயமோ எதுவுமே தெரியாது. she was like … பார்த்தீர்களா.. ஆ ஊ என்றால் பக்கம் பக்கமாக எழுதும் ஆள் நான். அவள் என்றவுடன் ஸ்டக்காகி நிக்கிறனே. That’s her.. A refreshing beauty. எங்கள் பாட்சில் இருந்த அத்தனை பெடியளும் அவளோடு தான் “தென் மேற்கு பருவக்காற்று” டூயட் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனா பாடின எல்லாருக்குமே கடைசில மாட்டினது என்னவோ கருத்தம்மா தான்! அந்த மேனகை எங்கள் எவருக்கும் சிக்கவே இல்லை. வழமை போல கடைசியில் ஒரு பொன்ஸ் அந்த தேவதையை லவட்டிவிட்டான். நாமளும் வழமை போல தேவதாசுக்கு பக்கத்து வார்டில கொஞ்ச நாளைக்கு அட்மிட் ஆகியிருந்தோம் என்று வையுங்களேன்!
இந்த காதல் விஷயத்தில் நாங்கள் வீக்கு என்றாலும், நம்ம வாத்திமார் எம காதகர்கள். சயன்ஸ்ஹோலில் இப்படி திருவிழா போல வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போது, யூனிவேர்சல் என்று ஒரு சப்பாணி டியூட்டரியும் நடந்தது. அங்கே ஒரு கெமிஸ்ட்ரி வகுப்பு. ஒரு நாற்பது மாணவிகள் சேர்ந்து ஒருவரிடம் படித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாமே கொஞ்ச நாள் நல்லாவே போனது. ஆனால் சில மாதத்தில் ஒருத்தன், அந்த வகுப்பில் தானும் படிக்கப்போகிறேன் என்று அடம்பிடித்துக்கொண்டு போய் சேர்ந்துவிட்டான். நாற்பது மாணவிகள், அதிலே ஒரு இருபது தேவதைகள், பத்து ரம்பை, ஒரு மேனகை கூட தேறும். அந்த செட்டில் இவன் தனியே படிக்கிறான் என்பதில் எங்கள் எல்லோருக்கும் செம கடுப்பு. ஷேர்ட்டை வேறு பெண்டருக்குள் இன் பண்ணும் குரூப்பை சேர்ந்தவன் அவன். நாற்பதில் ஒருத்தியையாவது இவன் மாட்டுவான் என்று நம்பியிருந்தோம். ஆனால் நடந்தது வேறு. இவன் கடைசி வரை ஒரு ஆணியை கூட அசைக்கவில்லை. ஆனால் அந்த வாத்தியார் ஒரு மாணவியை காதலித்து திருமணமும் செய்துவிட்டார். இதே ட்ரெண்டில் இவரை பின்பற்றி இன்னும் இரண்டு வாத்திமார் காதலித்து திருமணம் முடிக்க, லூசு கேசுகளான நாங்கள் படிச்சு எண்டர் பண்ணீட்டு போய் கேட்டுப்பார்ப்பம் என்று ப்ளான் பண்ணிகொண்டிருந்தோம்.
கொட்டிலில் படிப்பு, காதல், கொசப்பு சம்பவங்களுக்கு மத்தியில் பாட்டு கச்சேரியும் இடம்பெறும். ஒரு முறை அதே மேனகையை இம்பரஸ் பண்ணவென்று நானே “பொன் வானில் மீனுறங்க” பாட ஆரம்பித்து, “கார்கால மின்னல்கள் இடியோடு வந்தாலும் மேல் வானம் இரண்டாகுமா?” என்று பாடும்போது மேல் நோட்டில் மூக்கு பிய்ந்து இரண்டாகிவிட்டது! மேனகை எனக்கு அதுக்கு பிறகு சான்ஸே இல்லை என்று நினைத்தேன். ஆனால் குமரன் வாத்தியார் தானும் பாடுவேன் என்று அடம்பிடித்தார். அவருடைய ரெடிமேட் பாட்டு “என்னவளே”, அடுத்தது “நிலா காய்கிறது”. இரண்டையும் மூக்கு புடைக்க பாடுவார். இந்த வீடியோவில் மூக்கு புடைக்கிறது. பாருங்கள்.
&&&&&&&&&
எங்களுக்கு முன்னர், எங்கள் காலத்தில், ஏன் இப்போதும் கூட கொட்டில்களை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். கொட்டில்களில் வெறும் வியாபாரம் தான் என்பார்கள். “இந்த பழமும் புளிக்கும்” ரக விமர்சனங்கள் அவை. கொட்டில்கள் என்னைக்கேட்டால் யாழ்ப்பாண கலாச்சாரத்தின் இன்றைய இன்றியமையாத விஷயம் ஆகிவிட்டன.
கொட்டில்களில் முதன்மையான விஷயம், யாழ் மாவட்டத்தின் முக்கிய திறமைசாலிகளின் பெரும்பான்மையானோர் அங்கே வருவார்கள். எந்த பாடசாலை என்றில்லை. யாழ் இந்து, கொக்குவில் இந்து, வேம்படி, இந்து மகளிர், சென்றல், சென்ஜோன்ஸ், சுண்டுக்குளி தொடங்கி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி, மகாஜனா மாணவர்கள் கூட வந்து படிப்பார்கள். சாவகச்சேரி, நெல்லியடியில் இருந்து கூட வருபவர்கள் உண்டு. இதனால் படிக்கும்போதே ஓரளவுக்கு எங்கள் நிலைமை என்னவென்று தெரிந்துவிடும். தங்கள் தங்கள் பள்ளிக்கூடங்களில் கடும் “மண்டைக்காய்களாக” இருந்திருப்போம். ஆனால் கொட்டிலுக்கு வந்து ஏனைய மாணவர்களை பார்க்க தான் நம்ம சோகம் நல்லா தெரியும். இந்த ஐநூறு ஆட்களில் இருபது தானே எண்டர் பண்ணும்? எப்பிடி கூட்டிக்கழிச்சாலும் நாம நூறுக்குள்ளே கூட வரமாட்டமோ? என்று அடி வயிற்றில் அலாரம் அடிக்கும். அந்த அலார்மில் தூக்கம் வராமல் இரவு முழுதும் புரள்வீர்கள். நிஜத்தை கொட்டில்கள் ரிசல்ட் வரும் முன்னமேயே முகத்தில் அடித்துவிடும்.
கொட்டில்களில் இருக்கும் இன்னொரு விஷயம், ஆசிரியர்களை நாங்கள் தெரிவு செய்யலாம். அங்கே ஒருவித competition இருக்கிறது. ஆசிரியர்கள் கொஞ்சம் சொதப்பினாலும் மாணவர்கள் இன்னொரு ஆசிரியரை தேடி போய்விடுவார்கள். அதனால் கற்பித்தலில் ஒரு தரம் எப்போதுமே இருக்கும். பாடசாலைகளில் இது முடியாது என்றில்லை. ஆனால் யாழ்ப்பாண சூழலில் எல்லா பாடசாலைகளிலும் இது முடியாத காரியம். அண்மையில் சயன்ஸ் ஹோல் உடைந்து விட்டதாகவும், குமரன் மாஸ்டரும் இன்னும் சிலரும் பிரிந்து புதிதாக ஒரு கொட்டில் ஆரம்பித்து விட்டதாகவும் கேள்விப்பட்டேன். நல்ல விஷயம். போட்டி இருக்கும்போது தான் தரமும் அதிகரிக்கும்.
ஒரு வகுப்பு அனேகமாக ஒரு மணிநேரம் நடக்கும். வாத்தியார் அதுக்கு பத்து நிமிஷம் பிந்தி வருவார். ஐம்பதாவது நிமிஷத்திலேயே பின் வரிசைக்காரன் கொப்பியை அடித்து மூட தொடங்குவான். வாத்தியார் “எழுதுங்கடா .. இன்னும் கொஞ்சம் தான்” என்று தொடருவார்
“வெப்பக்கடத்தாறு என்பது அலகு குறுக்குவெட்டுப்பரப்புள்ள கோலிற்குக் குறுக்கே அலகு ….”
“சேர் … ப்ளீஸ்..”
சொல்வதையும் கேட்காமல் பெடியங்கள் சட சட வென கொப்பிகளை மூடி சத்தம் எழுப்புவார்கள். இதிலே பெண்கள் கூட இணைந்துகொள்வார்கள். சத்தம் பின் வரிசையில் இருந்து ஆரம்பித்து சட சடவென முன்னே கொஞ்சம் கொஞ்சமாக வரும். இந்த இடைவெளியில், வேளைக்கே ஓடினால் சைக்கிளை நெரிசல் இல்லாமல் எடுக்கலாம் என்று பத்து பதினைஞ்சு பேரு பாய்ஞ்சுடுவாங்கள். நம்ம பொன்ஸ்காரன் இன்னமும் புட்ரூலர் வைச்சு தலையங்கத்துக்கு சிவத்த லைன் அடிச்சு நோட்ஸ் எழுதிக்கொண்டிருப்பான். பெட்டைகள் நடராஜா கொம்பாஸ் பெட்டிக்குள் பேனை பென்சில்களை வைத்து மூட தொடங்குவார்கள். “செக்கி” ஒருத்தன் சிதறி அடிச்சு ஓடுறவனை சரிப்படுத்த ரெடியா பின்னாலே நிற்பான். இதுக்கு மேலே வச்சிருக்கேலாது எண்டு வாத்தியார் திரும்பிப்பார்த்து சொல்லுவார்.
“… வெப்பநிலை படித்திறன் என்பதை … “
“சேர் …
“அடுத்த வகுப்பிலே பார்ப்பம் .. ஓடுங்கடா .. ஒடுங்க!”
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மறதிக்கு மருந்து மாஸ்தரிண்ட பிரம்பு
சந்திரன் மாஸ்டர்
ஏனைய கொல்லைப்புறத்து காதலிகள்
படங்கள் மூலம் : Facebook, Google images.