அந்த ஊரின் மத்தியிலே ஒரு மலை இருந்தது. அடிவாரத்தைச் சுற்றிவர குடியிருப்பு, வயல்வெளி, வெட்டவெளி என்றிருக்க, நட்ட நடுவிலே இருக்கும் தனி மலை. மலையின் உச்சியில் ஒரு பிள்ளையார் கோயில். கோயில் என்றால், ஒரு சின்ன பனையோலைக் கொட்டில். உள்ளே ஒரு பிள்ளையார் படம். முன்னாலே திருநீறுத் தட்டு. குட்டி உண்டியல். எப்போதாவது தவறிப்போய் ஒதுங்குகின்ற ஆட்டுக்குட்டிகள் போடும் புழுக்கை. அவ்வளவுதான். கோயிலின் வாயிலில் ஒரு மணி கட்டப்பட்டிருந்தது. மணி முழுதும் புறாப்பீ ஒழுகி காய்ந்து ஒட்டியிருக்கும்.
அந்த ஊரில் வசிக்கும் நமசிவாயம். ஒரு ஓய்வுபெற்ற ஓவசியர். அவர் ஒவ்வொருநாளும் அதிகாலை, மூன்றரை மணிக்கு "டாண்" என்று எழும்புவார். எழும்பின நேரம் தொட்டு பதட்டமாகவே இருப்பார். அவரின் பதட்டத்தை மனைவி முதற்கொண்டு பேரப்பிள்ளைகள் வரை எவருமே கணக்கெடுக்க மாட்டார்கள். அவர் தானே எழும்பி, தானே பிளேன்ரீ வைத்துக் குடித்துவிட்டு, ஒரு அரிக்கன் லாம்பை ஏற்றிக்கொண்டு, வீட்டிலிருந்து வெளியேறுவார். முற்றத்தில் படுத்திருக்கும் அவர்கள் வீட்டு நாய், இவரைக்கண்டதும் அடுத்தபக்கம் குறண்டிக்கொண்டு படுக்கும். கூடப்போகாது. வாலைக்கூட ஆட்டாது.
நமசிவாயம் இதையெல்லாம் கணக்கெடுக்காமல் வயல்வேளிக்குச்சென்று, துரவிலே குளிர்தண்ணியில் தலையில் குளிப்பார். பின்னர் ஈர வேட்டியோடு மலை ஏறத்தொடங்குவார். அவர் அப்படி ஏறத்தொடங்கவும், நேரம் நான்கு மணியாகவும் சரியாக இருக்கும். நமசிவாயத்தாருக்கு அப்போது பதட்டம் எகிறிவிடும். விறு விறுவென்று நடக்கத் தொடங்குவார். மலை உச்சியை அவர் அண்மிக்கும்போது நேரம் ஐந்து மணி ஆகியிருக்கும். அவர் முகத்தில் ஒரு இனம்புரியாத கவலை. ஏறத்தாழ ஓடவே தொடங்கியிருப்பார்.
மேலும் வாசிக்க »