கேப்பையினார் கேதீஸ் நீண்டகாலமாகவே என்னோடு முரண்பட்டுக்கொண்டிருக்கிறான். கத்தி திரைப்பட விவகாரத்திலும் அவனோடு முரண்பாடு. எந்த கிரிக்கட் டீமுக்கு சப்போர்ட் பண்ணவேண்டும் என்ற விசயத்திலும் முரண்பாடு. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவேண்டுமா இல்லையா என்பதிலும் முரண்பாடு. அவன் திட்டமிட்டே என்னை தாக்குவதாக படுகிறது. அவன் பேஸ்புக்கிலோ அல்லது உயிரோடோ இருப்பது நீண்டகாலப்போக்கில் எனக்கு எவ்வித பயனையும் தரப்போவதில்லை. பாதகமே அதிகம்.
கேதீஸை கொல்லுவது என்று எடுத்த முடிவு மண்டைக்குள் குடைகிறது. என்ன இருந்தாலும் கொலை என்பது தவறு என்று தோன்றுகிறது. சகோதரக்கொலைகள்தான் நம்மை நட்டாற்றில் விட்டுவிட்டன.
நான் முதன்முதல் கொலை செய்தபோது எனக்கு பதினாலு வயசு. அண்ணன் சாமியறை பிள்ளையார் படத்துக்கு பின்னாலே ஒளித்து வைத்திருந்த ரிவோல்வரை எடுத்துக்கொண்டு, காக்கைதீவுக்குச் சென்று, குப்பை கிளறிக்கொண்டிருந்த நாயை நன்றாக நெருங்கிக் குறிபார்த்து சுட்டது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. எங்கள் ஊரிலே துப்பாக்கிச் சத்தம் கேட்டால் போதும். அக்கம் பக்கத்திலிருப்பவன் வீடுகளுக்குள் ஒளிந்துவிடுவான். அல்லது சைக்கிளில் பறந்துவிடுவான். நான் சுட்டபோது எவரும் பார்க்கவில்லை. செத்துக்கிடந்த நாயை பார்க்க பாவமாக இருந்தது. குட்டை பிடித்து, குப்பையிலே ஏதாவது நாறிய மீன் துண்டு கிடைக்காதா என்று கிளறிக்கொண்டிருந்தது. கொன்றுவிட்டேன். அன்றைக்கு முழுதும் சரியாக சாப்பிடவில்லை. அம்மா ஏன் என்று கேட்டா. கொத்தமல்லித்தண்ணி ஊத்தித்தந்தா. அந்த நாய்க்கு கத்துவதற்குக்கூட திராணி இருக்கவில்லை. அதற்குப்பின்னர் ரிவோல்வரைக் கண்டாலே பயமாக இருந்தது. இந்தச் சனியனை யார் என்னுடைய நெற்றியில் வைத்தாலும் இனிமேல் அவன் சொல்வதை கேட்டுவிடவேண்டும். சுட்டால் செத்துவிடுவோம். செத்தால் எல்லாமே முடிஞ்சுது. எல்லாமே. அன்றைக்கு வீடு திரும்பையிலே கலுசானுக்குள் அதை வைத்துக்கொண்டு சைக்கிள் உழக்கிய அந்த இருபது நிமிடங்களும் என் வாழ்க்கையின் நரக நிமிடங்கள். நிஜ ரிவோல்வர், நல்லூர்த்திருவிழாவில் வாங்கியதைவிட கனதியாக இருந்தது. எங்கே மாறி அமத்திவிட்டால் வெடித்துவிடுமோ என்கின்ற பயம் வேறு. வீட்டுக்கு வந்து முருகன் படத்துக்கு பின்னால் பத்திரமாக வைத்துவிட்டேன். அடுத்தநாள்தான் ஞாபகம் வந்தது, அண்ணன் வைத்தது பிள்ளையார் படத்துக்கு பின்னால் என்று. மாற்றி வைப்பதற்காக சாமியறைக்கு ஓடினேன். ரிவோல்வரைக் காணவில்லை.