அத்தியாயம் 5
அந்த ஆற்றிலே ஒரு கெண்டை மீன் மட்டும் தனியே எம்பி எம்பி குதித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்த தாமரை பூக்களில் நின்றும் எட்டிப்பார்த்தது. ஒரு அடி அளவுக்கு உயரப்பாய்ந்து பின்னர் ஆற்றிலேயே திரும்பவும் விழுந்தது. எத்தனை முறை முயன்றும் அதனால் மேலே உயரமாக பாய முடியவில்லை. அந்தவழியால் சென்ற தவளையொன்றை மறித்துக் கேட்டது.
“என்னை அந்த வானம் வரைக்கும் அழைத்துச்செல்ல முடியுமா?”
தவளை ஏன் என்று வினவியது.
“அதோ தெரிகிறதே கெண்டை மீன், அதன்மீது எனக்கு காதல் வந்துவிட்டது”
வானத்திலே ஒளிர்ந்த துருவ நட்சத்திரத்தை கெண்டை கை காட்டிச்சொன்னது. “சரி என் முதுகில் ஏறிக்கொள்” என்று தவளை கெண்டையை சுமந்தபடி தாமரை இலையிலிருந்து துருவ நட்சத்திரத்தை நோக்கி தானும் பாய்ந்து பார்த்தது. பாய்ந்த வேகத்திலேயே இரண்டுமே சமனிலை தவறி புளுக்கென ஆற்றில் விழுந்தன. கெண்டைக்கு கோபம் வந்துவிட்டது.
“வானம் ஏறி கெண்டை பிடிக்க முடியாதவன், ஆனா வைகுண்டம் வரைக்கும் கேட்கும்வண்ணம் உவாக்கு உவாக்கு என்று சத்தம் போடத்தெரிகிறது”
என்று அது தவளையை திட்ட, தவளை கோபத்துடன் மீண்டுமொருமுறை எம்பிக்குதித்து, முடியாமல், அவமானத்தோடு அப்பால் போய்விட்டது. கெண்டைக்கு இப்போது இயலாமை. அந்தப்பக்கம் வந்த ஒரு படகை மறித்து நிறுத்தியது.
படகிலிருந்த வெள்ளி கேட்டாள்.
மேலும் வாசிக்க »