காலை பத்து மணி. யாழ்ப்பாணம் பொதுப்பேரூந்து நிலையம். வவுனியா பஸ் புறப்படுவதற்கு இன்னமும் அரை மணிநேரம் இருந்தது. கூட்டம் இல்லை. உள்ளே ஏறி சீட் பிடித்துவைத்துவிட்டு பராக்குப்பார்க்கலாமென வெளியே இறங்கினேன்.
ஒரே சத்தமாகவிருந்தது. எந்தநேரமும் பேரூந்துகள் புழுதியைக் கிளப்பியவாறு வந்துபோய்க்கொண்டிருந்தன. நிலையத்தில் அவ்வப்போது இடம்பெறும் தமிழ் அறிவிப்புகளை வாகன ஹோர்ன்கள் அடக்கிக்கொண்டிருந்தன. பின் வீதியில் மினிபஸ்காரர்கள் குரல்வளை கிழிய கத்திக்கொண்டிருந்தார்கள். நிறைய மோட்டார் சைக்கிள்கள். லொறிகள். அவ்வப்போது கார்கள். ஒரு பி.எம்.டபிள்யூகூட ஹோர்ன் அடித்துக்கொண்டே சென்றது. சைக்கிள்களை காண்பது அரிதாக இருந்தது. தூரத்தே விஜய் கண்டாங்கி கண்டாங்கி என்று பாடிக்கொண்டிருந்தார். காந்தி சிலைக்கு மேல் நின்ற காகமும் விடாமல் கரைந்துகொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் யாரேனும் எவரோடேனும் பேசிக்கொண்டேயிருந்தனர். யாருமே அருகில் இல்லை என்றால் போனோடு சாய்ந்தனர்.சத்தம் எல்லாவிடமும் வியாபித்திருந்தது. பஸ்ஸுக்கு காத்திருப்பவர்கூட பஸ் ஸ்டாண்ட் குந்திலே படுத்து குறட்டைச்சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த்தார்.
துப்பினார்கள். ஆச்சி ஒருவர் வெற்றிலை துப்பியவாறே பஸ்ஸிலிருந்து இறங்கினார். அனேகமாக அனைவருமே பஸ்ஸினுள் ஏறுவதற்கு முன்னர் ஒரு துப்பு துப்பினர். டிரைவர் துப்பினார். நடத்துனர் துப்பினார். ஓட்டோக்காரர் துப்பினார். மோட்டர்சைக்கிளை நிறுத்துபவர் ஹெல்மெட்டை கழட்டியதும் துப்பினார். பொலிஸ்காரர் துப்பினார். சைக்கிளில் செல்பவர் துப்பினார். சப்பாட்டுக்கடைக்குள் போகமுன்னர் துப்பினார்கள். வெளியே வரும்போதும் துப்பினார்கள். பஸ்சுக்குள்ளால் தலையை வெளியே நீட்டி துப்பினார்கள். துப்பிய எச்சில் காற்றில் பறந்து பின் இருக்கையில் இருப்பவரின் முகத்தில் தெறித்தது. அவரும் மூஞ்சியை லேஞ்சியால் துடைத்துவிட்டு தானும் ஒரு துப்பு துப்பினார். சிலர் காறித் தூ என்றனர். சிலர் தலை குனிந்து மெதுவாக உமித்துவிட்டனர். சிலர் பல்லுக்குள் சிக்கியதை து என்று வேகமாக துப்பி வெளியேற்றினர். சிலர் துப்பும்போது வீணி வடிந்து குழந்தைகளாகினர். சிலர் துப்பும்போது சுற்றுப்புறமெல்லாம் குற்றாலம் பறந்தது. எச்சில் கறை எல்லாவிடத்திலும் காணக்கிடைக்கிறது. பஸ் யன்னலின் முழங்கை வைத்தால் எச்சில் ஒட்டுகிறது. செருப்பைத் திருப்பிப்பார்த்தால் ஒட்டிக்கிடக்கிறது. கட்டடங்களின் கரையோரம் கிடக்கிறது. ரோட்டுக்கரையோரங்களில் கிடக்கிறது. கண்ணிவெடி அகற்றுவதுபோல கட்டம் போட்டு தேடினால் ஒரு மீட்டர் சதுரப்பரப்பில் மூன்று நான்கு எச்சில் துப்பல்கள் கசிந்தபடி கிடக்கும்.
மேலும் வாசிக்க »