ஒரு கணவன் மனைவி.
எல்லாக் காதலர்களையும்போல, உலகின் அத்தனை காதல்களையும்விட ஒரு படி அதிகமாகக் காதலித்துக் கல்யாணம் முடித்த கணவன் மனைவி. திருமணமாகி ஐந்து வருடங்களாகின்றன. இருவருக்கும் வேலை. வேலை முடிந்து வீடு. வந்ததும் ஆளாளுக்குக் கையில் ஒரு ஐபாட். யார் யாருடனோ சட்டிங். எதுவெதற்கோ சிரிப்பு. இருவருக்கும் பொதுவாக வரவேற்பறையில் ஓடிக்கொண்டிருக்கும் டிவி. இவர்கள் தமக்கிடையில் மனம்விட்டுச் சிரிப்பதும் பேசுவதும் அவ்வப்போதும் சிணுங்கும் தொலைபேசி அழைப்புகளோடுதான். மற்றும்படி டிவியின் விளம்பர இடைவேளைகளில் “மதியம் என்ன சாப்பிட்டாய்?”, “கரண்ட் பில் கட்டியாயிற்றா?”, “வருட இறுதியில் கம்போடியா போவோமா?”, “இரவு உணவுக்கு பிட்ஸா வாங்குவோமா?” என்கின்ற வழமையான அலுத்துப்போனக் கேள்விகள். இரண்டுவாரங்கள் தொடர்ச்சியாகக் கவனித்தால் பதில்கள்கூட மீளச்சுழற்சிக்குள்ளாவது புலப்படும். எப்போதாவது மழைநாள் இரவு, குளிர், டிவியில் ஒளிபரப்பாகும் பதின்மவயதில் ரசித்தப்பாடல், இணையத்தில் இக்கொக்னிட்டோ திரையில் பார்த்த கூசிழிவுப்படம் கொடுத்த எழுச்சி என்ற அற்ப காரணங்களுக்காகக் காமம் மேலிடலாம். காரணங்களைக்கூட சமயத்தில் காமம்தான் தானாகவேத் தேடுகிறதோ என்றுகூடத்தோன்றுகிறது. இல்லாவிட்டால் அன்றைய இரவில் வெறும் பல்லி கொட்டிய உச்சிலேயே எதற்காகச் சம்பவம் நிகழவேண்டும்?
அவர்களின் காமம் தானியங்கிகளாலான இயந்திரத் தொழிற்சாலைபோலவே இயங்குகிறது. எல்லாமே டியூன் செய்யப்பட்ட பொம்மைகள்போல வேலை பார்க்கின்றன. கிரமமாக இயங்கி, சிரித்து, கதைத்து, தழுவி, ஆடை அகற்றி, முத்தம்கொடுத்து என்று உற்பத்திப்பண்டம் ஈற்றில் பொதிசெய்யப்பட்டு சீல் அடிக்கப்படும். தொழிற்சாலை சைரன் ஒலித்ததும் அத்தனை தொழிலாளர்களும் தத்தமது உடை அணிந்தபடியே புற்றீசல்போலப் புறப்பட்டுச்சென்றுவிடுவர். அப்புறம் தொழிற்சாலை வெறிச்சோடிவிடுகிறது.