Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 501

வியாழமாற்றம் 01-05-2014 : படலையடி மேதினக் கூட்டம்.

$
0
0

 

tamil-raise


அன்பார்ந்த தமிழீழ (உஷ்… ஏர்போர்ட் .. ஏர்போர்ட்), ஓ சொறி, அன்பார்ந்த தமிழ் மக்களே, இன்றைக்கு இந்த படலையடி மேதின கூட்டத்துக்கு வருகை தந்திருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களே, மஹாகவி உருத்திராமூர்த்தி அவர்களே, எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களே, மதன் அவர்களே, கோப்பிரெட் அதிபர்கள், கோம்ரெட் தோழர்கள் மற்றும் சொல்லாமல் கொள்ளாமல் கொப்பி பேஸ்ட் பண்ணும் அனைத்து அன்பு நெஞ்சங்களே. உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

இந்த கூட்டத்தில் முதலாவதாக பேசுவதற்கு, யாருமே இல்லாத படலையில் டீ ஆத்திக்கொண்டிருக்கும் அன்பு இளவல் ஜேகேயை அழைக்கிறோம். ஜேகே தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த மேதின நிகழ்வுகளை இப்போது  நனைவிடை தோய்வார்!


வாருங்கள் தோழர்களே

மேதினம். அதற்கு முதல்நாளே இயக்கவாகனங்கள் கம்பஸ் பக்கம் அலையத்தொடங்கிவிடும். எங்கள் பக்கத்து தோட்டக்காணிக்குள் 50கலிபர் பூட்டுவார்கள். கம்பசுக்கு பின்னாலே டயஸ் வீதியில் 90கலிபர் பூட்டப்படும். கலிபர் பொசிஷனை சுற்றி வட்டமாக பங்கர் வெட்டுவார்கள். ஆனால் பொம்மர் வந்து அவனுக்கு அடித்தால் எங்கள் மேலேயே விழும். அதனால் நாங்களும் வீட்டு பங்கரை துப்பரவாக்கி வைப்போம்.

jaffnauniமே தினத்தன்று பள்ளிக்கூடம் இல்லை. டியூஷன் இல்லை. கடைகள் பூட்டப்பட்டிருக்கும். காலையிலேயே கம்பஸ் வாசலில் ஒலிபெருக்கி “வாருங்கள் தோழர்களே” என்று பாடத் தொடங்கிவிடும். உதயன் பத்திரிகையில் தொழிலாளர் தின ஸ்பெஷல், பத்துப்பக்கத்தில் வெளியாகும். வழமையான கத்தி, அரிவாள், புரட்சிப் படங்கள். மேதின ஊர்வலம் பற்றிய தகவல்கள். ஈழநாதத்தில் புதுவையின் கவிதை. ஏனைய பத்திரிகைகளில் “அடிமை விலங்கு உடைக்குக” ரக பிஸ்கோத்து கவிதைகள்.  முதலாளிகளின் அடக்குமுறை, தொழிலாளர்களின் விடுதலை, லெனின் தொழிலாளர் புரட்சி ஒரு தேசத்தின் விடுதலையாக மலரவேண்டும் என்று எங்கோ சொல்லியதை மையமாக வைத்து ஆசிரியர் தலையங்கங்கள். பலநோக்கு கூட்டுறவு சங்கம் முதல் வெதுப்பக உரிமையாளர் சங்கம் வரை ஆளாளுக்கு வாழ்த்து விளம்பரங்கள் என்று அன்றைய பத்திரிகை பின்னிப் பெடலெடுக்கும்.

மதியத்துக்குப் பின்னர் மருதனார்மடத்திலிருந்து மேதினப் பேரணி ஆரம்பிக்கும். பேரணி நடைபெறும் வீதியோரமாக மக்கள் கூடிவிடுவார்கள். பெடியள் எல்லோரும் மதிலில் ஏறி இருந்து பார்ப்பார்கள். பெட்டைகள் மதிலுக்கு உள்ளே சீமேந்துக்கல்லு அடுக்கி அதில் ஏறி நின்று எட்டிப்பார்ப்பார்கள். சிலர் பந்தல் போட்டு மோர், சர்க்கரைத்தண்ணீர் கொடுப்பார்கள். காவல்துறை மக்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கும். பொறுப்பாளர்கள் கறுப்பு யன்னல்  பதித்த பஜிரோக்களில் வந்தால் வழி அமைத்துக் கொடுப்பார்கள்.

images (1)
ஒவ்வொரு சமாசங்களும் ஆளாளுக்கு அவர்கள் வசதிப்படி ஏதோ ஒரு நிகழ்வைச் செய்வார்கள். எல்லாமே விடுதலைப்போராட்டம், பொருளாதாரத் தடை, பாலியல் வல்லுறவு கொடுமைகள் சார்ந்து இருக்கும். சிலர் கலாச்சார பாண்ட் வாத்தியக்குழு கொண்டு வருவார்கள். சிலர் ட்ரக்டரில் மட்டையால் செய்த கட் அவுட் செய்துவருவார்கள். கட் அவுட்டில் தொழிலாளர் புரட்சி தொட்டு மரம் நடுகை வரைக்கும் விஷயம் இருக்கும். சிலர் வாய்கட்டி வருவார்கள். தெருக்கூத்துகளும் இடம்பெறும். வீதி நாடகங்கள் நடக்கும். ஒவ்வொரு சந்தியிலும் நின்று நடித்துக்காட்டுவார்கள். எல்லாமே குறியீடுகளோடு முகம் முழுக்க கரி பூசி சிறுவர் பெரியோர் எல்லோரும் உணர்ச்சி பூர்வமாக நடிப்பார்கள். என் வயசுக்கு எதுவுமே புரியாது. இராமநாதன் வீதிக்குள் இறங்குவதற்குள் வியர்வையில் கரி ஒழுகி குறியீடு பின்நவீனத்துவமாக மாறிவிடும். பிரேமதாசா, சந்திரிகா, ரத்வத்தை, இந்திய அதிகாரம் என்று பலவித கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு ஒப்பாரி வைக்கப்படும். ஒரு மேதின ஊர்வலத்தில் பிரேமதாஸா தற்கொலை குண்டுத்தாக்குதலில் நிஜமாகவே எரிந்துபோனார். இந்த நிகழ்வுகளில் சிறப்பாக செய்பவர்களுக்கு பரிசுகள்கூட வழங்கப்படுவதுண்டு.

Workers


ஒருமாதிரி ஏழுமணிக்கு கம்பஸ் கிரவுண்டில் அத்தனைபேரும் கூடிவிடுவார்கள்.  கலைநிகழ்ச்சிகள், அவ்வப்போது மேடைப்பேச்சுகள், ஐந்து ரூபாய்க்கு கச்சான், அபிராமியில் கிழங்கு ரொட்டி என்று எங்களுக்கு இரவு பத்து மணி வரைக்கும் கொண்டாட்டம் தொடரும். பின்னர் தமிழீழ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி. சிட்டு, நிரோஜன் என்று பலரும் பாடுவார்கள்.  சிட்டு பாடினால் கண்மூடி லயிக்கலாம்.

இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும் - நாளை
சென்று வீழும் சேதி சொல்ல
இங்கெவரால் முடியும்?
வாழ்க்கை என்னும் பயணம்
இதை மாற்றிடவா முடியும்?

எல்லாமே இயக்கப்பாட்டுகள்தாம். ஒருமுறை சினிமாப்பாட்டு ஒன்றை பாடப்போவதாக அறிவிக்க கரகோஷம் கலட்டிச்சந்தி வரை கேட்டது. அறிவிப்பாளரே “நானாக நானில்லை தாயே” என்று பாடி அழுதார்.

அடுத்தநாள் வெள்ளன வழமைபோல குளிச்சு, வெளிக்கிட்டு, பள்ளிக்கூட சீருடை போட்டு, பேக்கரிக்கு சுடச்சுட பாண் வாங்கப் போகும் வழியில் இராமநாதன் வீதி, கம்பஸ் மைதானம் முழுதும் குப்பைக் கூடமாய் இருக்கும். ஷொப்பிங் பாக்குகள் பறக்கும். ஒழுங்கை முகப்புகளில் மூத்திரநாற்றம் அடிக்கும். பேக்கரியில் பாணுக்கு நீண்ட கியூ நிற்கும். போரணையில் ஒரு சிறுவன் வெறும்மேலுடன் பாண் எடுத்து தட்டில் அடுக்கிக்கொண்டிருப்பான். விடியக் காலையிலேயே வியர்வை வழிகின்ற முகத்தை, வெறுங்கையால் துடைத்துக்கொண்டிருப்பான்.

முதல் நாள் கரியையும் சேர்த்து.


அடுத்ததாக பேச வருபவர் ஹாய் மதன் என்று நீண்ட காலமாக இவர் ஆனந்தவிகடனில் கேள்வி பதில் பத்தி எழுதிவந்தவர். அமைச்சர் ஒருவர் அம்மா முன்னாலே குனிந்து நின்ற படத்தை அவர் பத்தியில் பிரசுரித்த சர்ச்சையில் அண்ணருக்கு ஆனந்தவிகடன் பாய் சொல்லியது. இன்றைக்கு நமக்கு இவர் தொழிலாளர் தினம் பற்றிய கிமு-கிபி வரலாற்றை சொல்ல வந்திருக்கிறார்.


வைக்கோல் சந்தை கலவரம்

Charu-Niveditas-Book-Exile-Release-Function-25


ஹாய் தொழிலாளிகளே. சாதாரணமாக மேதினம் என்று சொல்லும்போது அதற்குப் பின்னால் இருக்கும் வரலாற்றை நம்ம ஜனங்களோ, இல்ல நம்ம அரசியல்வாதிங்களோ ஈஸியா மறந்துடுறாங்க. இந்த மேதினம் அல்லது தொழிலாளர் தினம் எப்போ ஆரம்பிச்சது என்கிறதில ஒரு ஹிஸ்டரி நம்மகிட்ட இருக்கு.

அமெரிக்காவுல நைன்டீந்த் செஞ்சரி இறுதிவாக்கில உள்நாட்டு சண்டை  ஒருவாறு முடிவுக்கு வந்திருந்தது. அமெரிக்காவுல நிறைய தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்திருந்தன.  ஆனா உலக பொருளாதாரம் ரொம்ப மந்தமா இருந்தது. அதனால ஜெர்மனி உட்பட பல யூரோப்பியன் நாடுகளில இருந்த தொழிலாளர்கள் ரொம்ப குறைச்சல் சம்பளத்துக்கு வரத்தொடங்கினாங்க. அவங்கள நிறுவனங்களும் கசக்கி பிழிய ஆரம்பித்தன. பொதுவாக ஒருநாளைக்கு பன்னிரண்டு தொடக்கம் பதினஞ்சு மணிநேரம் வேலை செய்யணும். சனிக்கிழமை, சமயத்தில சண்டேஸ்ல கூட வேலை செய்யணும். இதனால தொழிலாளர் மத்தியில ஒரு அமைதியின்மை உருவாகிச்சு. அதே சமயம் சோவியத் யூனியன்ல சார் மன்னருக்கு எதிரான தொழிலாளர் அமைப்புகளின் நடவடிக்கைகள் அதிகரித்தது. அனார்கிசம் என்கின்ற அரசாங்கத்துக்கு அடங்காத சுயமரியாதை இயக்கங்கள் உருவாகின. சோஷலிச சிந்தனைகள் ஏனைய நாடுகளுக்கும் பரவத் தொடங்கின. கார்ல்மார்க்ஸின் கருத்துகள் பிரபலமாகின. ஒருநாளில் எட்டு மணி நேர வேலையும், எட்டு மணி நேர தனிப்பட்ட வாழ்க்கையும், எட்டு மணி நேர தூக்கமும் மனிதனுக்கு அவசியம் என்று மார்க்ஸ் எழுதினார். தொழிலாளர்கள் தாம் ஏன் இவ்வளவு கடினமாக வேலை செய்யணும்? என்று கேள்வி கேட்கத்தொடங்கினாங்க. “எட்டு மணி நேர வேலை நாள்” என்ற இயக்கமே ஆரம்பிக்கப்பட்டது. அரசாங்கமும் உளவுத்துறையும் இந்த எழுச்சியை எப்படியாவது அடக்கியே ஆகணும்னு கணக்குப் போட்டாங்க. அந்த நாளும் வந்தது.

images

இந்த இயக்கம் பிரபலமாகி தொழிலாளர் அமைப்புகள் 1886ம் ஆண்டு மே ஒண்ணாம் தேதியன்று எட்டு மணி நேரம் மாத்திரமே வேலை செய்வோம் என்று வேலை நிறுத்தம் அறிவித்தார்கள். அது வெற்றியடைந்தது. பேரணி அறிவித்தார்கள். கூட்டம் அள்ளியது. அதே மே மாசம் மூன்றாம் திகதி ஒரு தொழிற்சாலையில் வன்முறை வெடிக்க, போலீஸ் துப்பாக்கிச்சூடு வைக்க ஆறுபேரு கொல்லப்பட்டாங்க. அவர்களை நினைவுகூரும் முகமாக அடுத்தநாளே மீட்டிங் ஒன்று நடக்கிறது.

மே நான்காம் திகதி, தேதி. சிக்காகோவில ஹே-மார்கட், அதாவது வைக்கோல் சந்தை, அப்படிங்கற ஒரு எடத்தில அந்த கூட்டம் நடக்கிறது. ஒரு சின்ன குதிரை வண்டியை மேடையா பாவிச்சு முக்கிய பேச்சாளர்கள் பேசிக்கிட்டிருக்காங்க. அமைதியாக நடந்த கூட்டம் அது. அந்த வழியால நகர மேயர் போனசமயம்கூட கூட்டம் அமைதியா இருந்திச்சு. போலீஸ்கூட நிக்கிறாங்க. எல்லாமே அமைதியா போய்க்கிட்டிருந்துது. நேரம் போக போக, குளிர் ஏறத்தொடங்கியது. ஜனங்க கலைஞ்சு போகத் தொடங்கினாங்க. இரவு பத்துமணி போல ஓராளு பேசத்தொடங்கினார். பேச்சில சூடு பறந்தது.  நேரம் பத்தரை. அந்தாளோட பேச்சைக்கேட்ட போலீஸ்காரங்க அவரை நிறுத்தச்சொல்லிவிட்டு கூட்டத்தை கலைஞ்சு போகச்சொன்னாங்க. அந்தச்சமயம் பார்த்து எவனோ ஒருத்தன் ஒரு நாட்டு வெடிகுண்ட தூக்கிப்போட, போலீஸ் சூடு நடத்த, ஸ்தலத்தில போலீஸ், தொழிலாளர் என்று பலர் இறந்துபோனார்கள். பின்னர் விசாரணை நடந்தது. மொத்த அமெரிக்காவே எட்டு மணிநேர இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக பார்த்தது. கம்யூனிஸ்ட் the-haymarket-riot-1886-grangerஎழுச்சியோ என்று பயந்தது. விசாரணைக்கு முன்னமேயே கொலையாளிகள் யார் எவர் என்று மக்கள் உறுதியாக முன்முடிபு செய்தார்கள். நீதிபதிகளும் பல சந்தேகநபர்களுக்கு சரியான விசாரணை இல்லாமல் தூக்குத்தண்டனை கொடுத்தார்கள். சிலருக்கு ஆயுள் தண்டனை. சில கைதிகள் தற்கொலை செய்தார்கள். பலர் தண்டனை நிறைவேற்றப்பட முன்னரே தங்கள் சுயசரிதங்களை எழுதினார்கள். விளைவாக தொழிலாளர் மத்தியில் பயத்துக்கு பதிலாக மேலும் போராட்டகுணம் வெடித்தது. ஏக காலத்தில் சோவியத் யூனியனில் லெனினின் புரட்சி. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் எழுச்சி என கொஞ்சம் கொஞ்சமாக தொழிலாளர் கை ஒங்கத் தொடங்கியது. எட்டுமணி நேர வேலை நாள் தொழில்புரட்சி நாடுகளில் சாத்தியமானது. இது தான் தொழிலாளர் தினத்துக்கு பின்னால் இருக்கும் சங்கதி.

இதில் ஒரு விஷயம் இருக்கிறது. இன்றைக்கு தொழிலாளர்களுக்கு ஓரளவுக்கேனும் உரிமைகளைக் கொடுத்து பாதுகாத்து வைத்திருக்கும் அனேகமான நாடுகள் முதலாளித்துவ நாடுகளே. தொழிலாளர் புரட்சி, சமவுடமை, சோஷலிச குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளின் தொழிலாளர் நலன்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சீனாவில்தாம் தொழிலாளர் உரிமை மிகமோசமான அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளின் கண்மூடித்தனமான சோஷலிச பொருளாதாரக் கொள்கை அவற்றின் நிதி ஆதாரங்களையும் கம்பனிகளையும் ஆட்டுவித்திருக்கிறது. ரஷ்யாவின் நிலைமை ஸ்டாலின் காலத்திலிருந்து… “Animal Farm” வாசித்துப்பாருங்கள். புரியும்.

கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவம் ஒருநாள் பூதாகரமாகி தொழிலாளர் புரட்சியாக வெடித்து சிதறும் என்றார். ஆனால் அந்த வெடிப்பு இடம்பெறவேயில்லை. முதலாளித்துவம் அதற்கேயுரிய பலவீனங்களை கொண்ட கொள்கைதான். ஆனால் அதற்கு மாற்றீடு சோஷலிசம் கிடையாது. சோஷலிசம் ஏறக்குறைய காலாவதியான பால்மா. நடைமுறைச் சாத்தியம் அற்றது. முதலாளித்துவம் தொழிலாளர் மத்தியில் ஆசையை தூண்டிவிட்டது. இன்றைக்கு எல்லோரும் தம்மளவில் முதலாளிகளாக வருவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போட்டி உயிரினங்களின் ஆதாரமான போட்டி. இது இருக்கும்வரை சமவுடமை…சோஷலிசம் .. கடல்லயும் கிடைக்காது.

வைக்கோல் சந்தை சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கழித்து, அன்றைக்குப் பேசிய பேச்சாளர்கள் உட்பட ஆறு தொழிற்சங்கவாதிகள்  தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் கல்லறையில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

“ஒருநாள் நீங்கள் அடக்குகின்ற குரல்களை விட எங்கள் மௌனங்களின் வலிமை அதிகமாகும்”


வரலாற்றைச் சொன்னால் டெரராக முழிக்கும் காமுரேடுகளே. உங்களுக்காக சிங்கப்பூரிலிருந்து எங்கள் இளவல் செல்வச்சந்திரன் ஒரு பஞ்ச் டயலாக்கை அனுப்பியிருக்கிறார்.

மனைவியின் மேல் உள்ள கோபத்தை தொழிலாளியிடம் காட்டுபவன் முதலாளி.
முதலாளி மேல் உள்ள கோபத்தை மனைவியிடம் காட்டுபவன் தொழிலாளி!

1

அடுத்ததாக மஹாகவி உருத்திராமூர்த்தியை மேடைக்கு அழைக்கிறேன். ஈழத்தின் முன்னணிக் கவி. சரியாகக் கவனிக்கப் பட்டால் எதிர்காலத்தின் முதன்மைக் கவி. சாதாரண மனிதனின் சரிதத்தை சந்தக்கவிதையில் வடித்தவர். இன்றெமக்கு பாட்டாளி மக்களின் பாட்டினை தன்னுடைய “கண்மணியாள் காதை” யிலிருந்து படித்துக்காட்டுவார்!


ஆருமே உயர்வானவர்.

மூத்தவர் சான்றோர் யாவும்
முறைமையாய்ப் பயின்றோர், பாக்கள்
யாத்தவர் அளித்தோர், “நாளும்
Mahakaviயாகம் வேறில்லை!” என்று
வேர்த்தவர், உழைப்போர் முன்னே
விசரன் போல் எழுந்து பாடும்
நாத்தடிப் புடையேன்; என்னை
நாடு மன்னிக்கு மாக!

துணியினை வெளுக் கின்றோரும்,
துணிந்து தம் நிலத்தில் நெல்லு
மணியினை விளைக் கின்றோரும்,
மருந்துகள் கொடுத்து மக்கள்
பிணியினை ஒழிக்கின்றோரும்
பெருங்கடல் மிசையே சென்றெம்
பணியினைப் புரிந்து மீண்டு
பாரை மீன் அளிக்கின்றோரும்

கோயிலில் பூசை செய்து
கொண்டிருப்பவரும், வெல்லும்
நாயனம் ஊதுவோரும்,
தலைமயிர் நறுக்கு வோரும்
ஆய்மலர்த் தொடைகள் ஆக்கி
அளிப்போரும் பனையில் ஏறித்
தூயதோர் பதநீர் கண்டு
தொடர்ச்சியாய்க் கொடுக் கின்றோரும்

tamil-raiseமண்ணெடுத்துக் குடம்வனை வோரும்
மரம் எடுத்துப் பொருள் புனைவோரும்
வெண்ணிறத் திரையில் நடிப்போரும்
பெண்ணி னத்தை "நகை பண்ணு” வோரும்
பெற்ற பண்டம் பிறகு விற் போரும்
விண் நிலத்தில் விளைப்பவர் ஆவார்-
வீரருக் கிடை வேற்றுமை ஏது?

அவர்கள் தம் முள் மணந்திடலாகும்!
அருகிலே அமர்ந் துண்டிடலாகும்!
சுவர்கள் கட்டி எழுப்பி, இவற்றுட்
சுருங்கி நிற்பது வோ பிசகாகும்!
எவர்கள் மற்றவர் மீதொரு தீங்கும்
எண்ணி டாதுபணி புரிவோரே,
அவர்கள் வையம் அளிக்கிற பேராம்!
அவர்கள் கட்டியதே நமதூராம்!

ஆருமே உயர்வானவர் மக்கள்; எல்
லாருமே உறவானவர் அன்றோ!

நன்றி வணக்கம்.



நன்றி மஹாகவி அவர்களே. “பெண்ணி னத்தை "நகை பண்ணு” வோரும்” … பின்னிட்டீங்க தலைவா! அடுத்ததாக இசைஞானி இளையராஜாவை மேடைக்கு அழைக்கிறேன்.


எத்தனை காலம் இப்படிப்போகும்?

ilayaraaja

என் இசை ரசிகர்களுக்கு அன்பு வணக்கம். என் இசை என்று சொல்வதே தவறு. இசைக்கு எப்படி நான் உரிமை கொண்டாட முடியும்? எனக்கு இசையே தெரியாது. எல்லாம் இறைவன் தந்தது. ஆனா இன்னிக்கு என் இசையை காப்பி பண்ணி இசை அமைக்கிறாங்க. அது வேற மாட்டரு.

எனக்கு முன்னாலே பேசிய சிலோன் கவிஞர் அருமையாக தொழிலாளர் பற்றி ஒரு கவிதை சொன்னாரு. என்னோட பாடல் ஒன்றும் இருக்கு. சிட்டுவேஷன் இதுதான். தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்துகொண்டிருக்கும் சமயம் ஹீரோ வர்றாரு. அவரு பெரிய சங்கீத வித்வானின் பையன். நல்லா பாடுவாரு. அந்த தொழிலாளர்கள் இவரைப் பார்த்து “தம்பி பாடுங்க” என்கிறார்கள். இவரு “சுத்த தன்யாசி” ராகத்தில ஒரு ஆலாபனை பண்ணுறாரு. ஆஅ.. தானனானா…ஆ (பாடிக்காட்டுகிறார்). நம்மாளு குழம்பிட்டான்.(சிரிக்கிறார்) அவனுக்கு எப்படி கர்னாடக சங்கீதம் புரியும்? “புரியுமாப்போல பாடுங்க தம்பி” எங்கிறான்.

இப்போ என்னோட சாலஞ் என்ன என்றால் அதே சுத்த தன்யாசில தொழிலாளர்களுக்கு ஏற்றமாதிரி மெல்லிசை டியூன் போடணும். இப்போ ஆர்மோனியத்தில வாசிச்சு காட்டறேன் பாருங்க. (வாசிக்கிறார்). “தான தான தன்னன்னான … புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு”.

(கை தட்டல் அதிர்கிறது, தொடர்ந்து பாடுகிறார்)


வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது.

எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்.
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு வாழும் வேளை வரும்


ராஜா ராஜாதான். எப்படி சார் முடியுது? தொழிலாளர் சம்பந்தமான பாட்டிலும்அப்படி ஒரு மயக்கும் மெலடி. ப்ச்ச். கேட்டுக்கொண்டே இருக்கலாமே.

அடுத்ததாக எக்சைல்2 மற்றும் எளியமக்கள் வாழ்வுக்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் எழுத்தாளர் தோழர் சாரு நிவேதிதாவை மேடைக்கு அழைக்கிறோம்.


கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

 

mqdefault

அனைவருக்கும் வணக்கம். இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடிக்கும் வணக்கம். நேத்து முழிச்சுக்கிட்டே ஒரு கனவு கண்டேன். அதிலே திமுகவுக்கு இரண்டே இரண்டு சீட்டுதான் கிடைக்கும்னு நித்தியானந்த பரமஹம்ஸ சுவாமிகள் எனக்கு வந்து சொன்னார். அதுசரி,ஹூ இஸ் திஸ் இளையராஜா? என்னோட பிரச்சனையே இதுதான். திருஞானசம்பந்தர் காலத்துக்கு பிறகு நான் தமிழ் இசையே கேட்டதில்ல. எவனையும் தெரியாது. சுப்பர் சிங்கர் ஜட்சு சுஜாதான்னு சொல்லுறாங்க. சுஜாதாதானே செத்துப்போயிட்டாரே? கொழம்பிட்டேன். எனக்கு தமிழில எதுவுமே தெரியாது. எல்லாமே சூபி, போப் மார்லேதான். ஹாஸ்னியை தெரியுமா? (துண்டுக்காகிதம் எடுத்து வாசிக்கிறார்). பார்க் ஷெரட்டன் இசை தெரியுமா? (சார் அது மூசிக் இல்லே, ஒரு பிளேஸ்). ஓ சாரி, கேப்ரியலா பிசாரோ தெரியுமா?

மிஸ்டர் ராஜா, நீங்க என்னோட “கலகம், காதல், இசை” வாசிச்சு பாருங்க. மூசிக் பத்தி புரிஞ்சுக்குவீங்க!

Fifteen

என்னைய பேச அழைத்தபோது அறிவிப்பாளர் “தோழர்” என்றார். அப்போ எனக்கு வள்ளுவர் ஞாபகம் வந்தாரு.  ஒரு குறள் இருக்கு. (மீண்டும் துண்டுக்காகிதம்)

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.

பாருங்க வள்ளுவரே மயிர்னு தெளிவா சொல்லியிருக்கார். நாங்கல்லாம் சிலேயில ஹேர் கட்டிங் செய்யும்போது மயிர் வெட்டுறதுன்னே சொல்லுவோம். அவ்வளவு அழகான தமிழ் வார்த்தை அது. ஆனா இன்னிக்கு அது கெட்ட வார்த்தையாகி ஸீரோ டிகிரில மட்டுமே வாசிக்கமுடியுது. இன்னிக்கு இந்த தோழர்ன வார்த்தையும் அதே போலத்தான் அசிங்கமா போயிட்டிருக்கு. யாரெல்லாம் தோழர்னு ஒரு வெவஸ்தை இல்லையா? நீங்கல்லாம் கியூபாவுல போயி சும்மா கோர்ட்டு சூட்டு போட்டுக்கின்னு தோழர்னு சொல்லிப்பாருங்க. மொகத்தில அறைவான். போராடினாதான் தோழர். காம்ரேட். ஆனா இன்னிக்கு தா. பாண்டியனும் தோழர்னு சொல்லுறாரு. கருணாநிதியுரு சொல்லுறார். ஞானியும் சொல்லுறாரு. புரியல. மண்டை வெடிக்குது. ஷோபாசக்தி சொல்லலாம். ஏன்னா அவரு எனக்கு மொபைல் பில் கட்டினாரு. ஜெயமோகன கேட்டா மித்திரன் என்று சொல்லுவார். எப்போ ஸ்டாலின் ரூஷியாவை ஆளத் தொடங்கினாரோ அப்பவே இந்த தோழர், காம்ரேட் எல்லாம் மயிராப்போச்சு. எப்போ அவர் தமிழ்நாட்ட ஆள தொடங்குவாரோ அப்பவே …

(ஒரு கூழ் முட்டை பறந்துவந்து மூஞ்சியில் அடிக்கிறது. சாரு சாற்றை துடைத்துவிட்டு அசால்ட்டாக தொடருகிறார்)

கேரளாவுல தொழிலாளிங்களுக்கு சோஷல் அவேர்நெஸ் இருக்கு. நம்மாளுக்கு கிடையாது. கொச்சின்ல கொக்ககோலா கம்பனியை எதிர்த்து போராடவென அருந்ததி ராயோட நானும் கூட போயிருந்தேன். அங்கே புரடஸ்ட் பண்ண வந்த அத்தனைபேரும் தொழிலாளிங்க. கூலி வேலை செய்யுறவங்க.

charu01

ஆனா நம்மாளுக்கு ஒண்ணுமே தெரியுதில்ல. இன்னிக்கு ஏழை தொழிலாளிங்களுக்கு முக்கிய பிரச்சனை எதுன்னா மின்வெட்டுதான். கரண்டு இல்லாததால அவனால தாதாவஸ்கியை வாசிக்க முடியுதில்ல. கிம் கிடுக் படங்கள டிவிடில பார்க்க முடியுதில்ல. அவன் என்ன செய்யுறான்னா தினம் தினம் இரவு கரண்டு கட்டானாப்புறம் ஸீரோ டிகிரியை ஸ்ட்ரைட்டா அப்ளை பண்ணுறான்.

இன்னிக்கு சேரிப்பகுதில குழந்தைங்க பிறப்புவீதம் அதிகமாயிருக்கு. ஒருத்தனுக்கு ஆறு வருஷத்தில எட்டு பசங்க பொறந்திருக்கு. என்னடா கன்ட்ரோலா இருக்கவாணாமா?ன்னு கேட்டேன். “கடவுள் கொடுக்குது சார்” எங்கிறான். “அடப்பாவி, காண்டம் பாவிக்கறதே இல்லியா?” ன்னேன். அவன் சொன்னான்.

“கொடுக்கிற தெய்வம் காண்டத்தையும் பிச்சிக்கிட்டு கொடுக்கும் சார்!”

 

**********************


Viewing all articles
Browse latest Browse all 501

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>